வருடக்கணக்காக ல.ச.வும், கு.அ.வும் ஒன்றாக இருந்து எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை விவாதித்தும் ஆராய்ந்தும் அனுபவித்தும் இருந்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, ஒரு வேளை, பலகாரம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பொழுது போவதே தெரியாமல் உயர்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சில நாட்கள், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்கு மேல் வாழைப்பழமாவது கிடைக்காதா, இல்லை வெற்றிலை பாக்காவது கிடைக்காதா என்று சென்னைப் பட்டிணத்துக் கடை வீதிகளில் தேடி அலைந்திருக்கிறார்கள்.
