த்ருஷ்டி

பூமியின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களில் தேர்ந்த அதி தீவிர தகவமைப்புத் திறன் பெற்ற ஜீன்களைக் கொண்டுள்ள மனிதர்களுள் முதல் முப்பது மனிதர்களை தெரிவு செய்து, அவர்களை விண்கலம் மூலம் வானத்தில் ஏவி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியில் அவர்களை குடி அமர்த்த முடிவெடுக்கப்பட்டு இருந்தது. அத்தகைய மனிதர்களை அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரபணு மாற்றத்தில் ஈடுபடுத்தி வம்சாவளிகளாக பேணிக்காத்து வந்திருந்தனர். அவர்களின் மரபணுக்கள் அதீத கதிரியக்கங்களை தாங்குவதற்காகவும், குறைந்த ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி சுவாசிப்பதற்காகவும் சேர்ப்பனவற்றைச் சேர்த்தும் கழிப்பன வற்றை கழித்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட மரபணுக்களால் உடனடியாக எந்த விளைவுகளும் இருக்காது. மந்த நிலையில் இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும்போது தூண்டப்பட்டு விழித்துக்கொண்டு, மனித பரிணாமத்தின் அடுத்த படிநிலையை எட்டும்.



குருடு

“சந்தேகி. சந்தேகித்தலே அறிதலெனும் தேரின் வடம். தேர் நகர்வது சக்கரத்தினால். நகர்த்தப்படுவது அதன் வடத்தினால் தான்” என்றார் கிழவர்.

அவன் உச்சிவானில் எழுந்த கதிரவனின் அலைகள் ஆற்று நீரில் நெளிவதைச் சற்று நேரம் பார்த்தான். பின்னர் கேட்டான். “நான் இப்போது உங்களைக் காண்கிறேன். நீங்கள் என்முன் அழிந்தழிந்து தோன்றுகிறீர்களா என்ன?’

“ஆம்” என்றார் குரு. “‘உனக்கு தெரியும் நான்’ என்பது, உன் புலன்களின் வழியே உன் அறிதலாகி நீ உருவகிப்பது. ‘உனக்கு தெரியும் நானும்’, ‘உலகிற்குத் தெரியும் நானும்’ வேறுவேறானவை. உன் அறிதலை வைத்து இவ்வுலகிற்கும் அதுவே ‘நான்’ என என்னைப் பொதுமைப்படுத்துவது உன் வறட்டு ஆணவம் மட்டுமே” என்றார் குரு.