முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது. ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.
