பிடிபடா சலனங்கள்

நிரந்தரமாக ஏதுமில்லாமல் ஒரு அரசியல்வாதிக்கு அடியாள் போல வாழ்வு குறித்து கொஞ்சம் அச்சமாக இருந்தது. தானும் வில்லியம் போல ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என நினைத்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்காவது தேட ஒரு அழகிய மனைவி இருக்கிறாள். நமக்கு என்ன இருக்கிறது? இருக்கும்வரை அம்மா தேடுவாள்? இல்லாதபோது? எனும் கேள்வி ராஜாங்கத்தை இம்சை செய்தது. அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பெயர்கூட அர்த்தமில்லாமல் இருப்பது குறித்து நீண்ட பெருமூச்சு வந்தபோது காவல் நிலையத்தை அடைந்திருந்தான்.

காரியம்

அவனது பேச்சு செய்யும் தொழில் பற்றி தாவியது. மரியாதைக்குக் கூட அவன் என்னைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது எனக்கு துக்கம் தருவதாக இருந்தது. தொழிலில் அவனது சாம்ராஜ்யம் எப்படி நீண்டது என்று குறித்து விளக்கும் போது என்னிடம் இருந்த வெள்ளரி தீர்ந்து போயிருந்தது. இதை எப்படி அவன் கவனித்தான் என்று தெரியவில்லை அவனிடம் இருந்த பொறித்த சிக்கன் துண்டுகளை கொண்ட தட்டை என்னிடம் தள்ளினான். நான் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன் என்று நினைத்துவிடக்கூடாது என்பதால் மறுத்தேன். இதை எடுக்காவிட்டால் நம்மிருவருக்கிடையே இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழ முற்பட்டான். நான் சிக்கனை எடுத்துவிட்டேன் ஆனால் வாயில் வைக்கவில்லை. வெகுநேரம் அப்படியே இருந்ததால் மீண்டும் கோபித்துக்கொண்டான். சிக்கனை எடுத்து வாயில் வைத்ததும்தான் மீண்டும் இயல்பானான்.

வாழ்ந்த இரங்கல்கள்

உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்கிற சாபம் மிக பிரபலம். இறப்பை விடக் கொடியது அது நிகழும் விதம். உறவினர் பேருந்து விபத்தில் இறந்த பொழுது அவருடன் இறந்தவர்கள் எட்டு பேர். உரு தெரியாத அளவிற்கு கோரமான விபத்து அது. தகவல் தெரிவிக்கப்பட்ட போது அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். வாழ்வில் அரசு மருத்துவமனைக்கு செல்லாத அந்த உறவினர் சவக்கிடங்கில் எந்த நிலையில் இருக்கிறாரோ என்று நினைக்கும் போதே மனம் நொந்தது. உடலை அடையாளம் காட்ட ஒருவரை அழைத்தார்கள். சாக அழைத்தது போல் அனைவரும் பின்வாங்கினர்.