மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா? 

மஸ்க் – ஓபன்AI வழக்கின் பின்னணி

உலகெங்கிலும் போர்கள், மாபெரும் போராட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அரசியல் துருவமயமாக்கல் மற்றும் மனிதகுலம் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் முன்னேறி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற அச்சங்கள் வளர்ந்து வரும் காலத்தில், கலிபோர்னியாவில் நடந்த ஒரு நீதிமன்றப் போராட்டமும் தொழில்நுட்ப உலகில் தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் புயலின் மையத்தில் இருப்பது OpenAI நிறுவனம்.

2015ல் OpenAI நிறுவப்பட்டபோது அதன் நோக்கம் உன்னதமானதாகவும் கிட்டத்தட்ட புரட்சிகரமானதாகவும் ஒலித்தது. ஒரு சில பெருநிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதாக அந்த அமைப்பு அன்று உறுதியளித்தது. கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு ஆபத்தானதாக மாறக்கூடும் என்று எலான் மஸ்க் மீண்டும் மீண்டும் எச்சரித்து, சாம் ஆல்ட்மேன் மற்றும் பல செல்வாக்குமிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்து நிறுவனத்தில் தானும் பங்கேற்றார்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு மாற்றாக OpenAI தன்னை ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாக முன்வைத்தது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பப் பேரரசின் தனிச் சொத்தாக மாறக்கூடாது என்ற கொள்கையுடன் அதன் நிறுவனர்கள் அப்பொழுது செயல்பட்டனர்.

ஆனால், சில ஆண்டுகளாக எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மிகவும் செலவு மிக்கதாக மாறியதால், OpenAI ஒரு சிக்கலான “வரையறுக்கப்பட்ட லாப” கட்டமைப்பை உருவாக்கி, மைக்ரோசாஃப்டிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை ஏற்றுக்கொண்டது. அதன் தயாரிப்புகள், குறிப்பாக ChatGPT, OpenAI நிறுவனத்தைத் தொழில்நுட்ப உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக மாற்றிவிட்டன.

இந்த மாற்றம்தான் மஸ்க்-OpenAI வழக்கின் மையமாக இருந்தது.

மனிதகுலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பிலிருந்து லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு பெருநிறுவனம், வல்லமைமிக்க அமைப்பாக மாறியதன் மூலம் OpenAI தனது அசல் நோக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டது. OpenAI லாப நோக்கற்றதாக இருக்கும் என்று நம்பியே தான் பணத்தை நன்கொடையாக அளித்ததாக மஸ்க் வாதிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, குவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சக்தியிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பு, அதற்குப் பதிலாக, அது தடுப்பதாக உறுதியளித்ததையே செய்வதாக மாறிவிட்டது. ஒரு தொண்டு நிறுவனத்தை எடுத்து அதை ஒரு பண இயந்திரமாக மாற்ற முடியாது என்று வாதிட்டார்.

OpenAI இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரித்தது.

OpenAI வணிக ரீதியாக மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று மஸ்க் ஒருமுறை வலியுறுத்தியதாகவும் அந்த அமைப்பின் மீது அதிகக் கட்டுப்பாட்டை விரும்பியதாகவும் அந்நிறுவனம் வாதிட்டது. OpenAI-ன் சட்டக் குழுவின்படி, உள்ளகக் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு மஸ்க் வெளியேறினார். இப்போது தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, OpenAI உடன் நேரடியாகப் போட்டியிடுவதால் நிறுவனத்தைத் தாக்குகிறார் என்று எதிர்வாதம் செய்தது OpenAI.

ChatGPT மூலம் அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிட உதவிய நிறுவனம் இது. ஆனால், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான ஒருமித்த பார்வையை முன்வைப்பதற்குப் பதிலாக, ஒரு காலத்தில் OpenAI-ஐ ஒன்றாகக் கட்டியெழுப்பியவர்கள் இப்போது பொதுவெளியில் ஒருவரையொருவர் கிழித்தெறிகிறார்கள். எக்ஸ் தள நிறுவனர் எலான் மஸ்க்கிற்கும் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேனுக்கும் இடையே அரங்கேறியிருப்பது அதிகாரம், அறநெறி, பணம், நம்பிக்கை ஆகியவற்றின் மீதான ஒரு தீவிரமான மோதல்.

செயற்கை நுண்ணறிவு, நாகரிகத்தையே மாற்றியமைக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்ததாக மாறும்போது அதை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? அந்த அதிகாரத்தை யாரிடமாவது உண்மையிலேயே நம்பி ஒப்படைக்க முடியுமா? என்று யோசிக்க வைத்திருக்கிறது அண்மையில் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள். இந்த விசாரணையில் உழைக்கும் மக்களான நடுவர் குழுவினர் அவர்களின் வாக்குவாதங்களை இரு கோடீஸ்வரர்களின் அகந்தைக்கு எதிரானதாக மட்டுமில்லாமல்

லாப நோக்கற்ற கொள்கைகள் vs. பெருநிறுவன யதார்த்தம்,

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு vs. செயற்கை நுண்ணறிவு வணிகமயமாக்கலாகவும் பார்க்கிறார்கள்.

இதனால் இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எதிர்கால செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதை இது வடிவமைக்கக்கூடும்.

OpenAI-ன் கட்டமைப்பு மாறுமா, லாப நோக்கற்ற நிறுவனங்களிலிருந்து நிர்வாகிகள் லாபம் ஈட்ட முடியுமா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மீது எவ்வளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று நடுவர் குழு இவ்விஷயங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்பதால் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகளும் உரிமைகளும் குறித்த முதல் பெரிய நீதிமன்றப் போராட்டமாக இதைப் பலரும் உற்று நோக்குகின்றனர்.

நீதிமன்றத்திற்குள் செல்வமும் செல்வாக்கும் பெருமளவில் குவிந்திருந்ததும் இந்த வழக்கு விசாரணை பெரும் கவனத்தை ஈர்த்ததற்கு மற்றுமொரு மிக முக்கிய காரணம் ஆகும். சாட்சிகளின் பட்டியலோ சிலிக்கான் பள்ளத்தாக்கின் அதிகார மையத்தைக் காட்டும் ஒரு வரைபடத்தைப் போல இருந்தது. மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, OpenAI இணை நிறுவனர் கிரெக் ப்ராக்மேன், முன்னாள் தலைமை விஞ்ஞானி இல்யா சுட்ஸ்கேவர், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பல உயர்மட்ட முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

சில சமயங்களில் இந்த வழக்கு விசாரணை ஒரு சட்ட நடவடிக்கையாகத் தோன்றாமல், தொழில்நுட்பம், பிரபல கலாச்சாரம், பெருநிறுவனப் போர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மோதலைப் போலவே இருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டரீதியான வாதங்களுக்கு அடியில் இது வெறும் ஒரு நிறுவனப் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் கூட்டணியின் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் சாட்சியங்களும், இரு தரப்பிலிருந்தும் நிலவிய ஆழ்ந்த பதற்றங்கள், தலைமைத்துவம் குறித்த கருத்து வேறுபாடுகள், சூழ்ச்சி குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தின. மனிதகுலத்தைப் பாதுகாக்க OpenAI-ஐ உருவாக்க உதவியவராகவும், பின்னர் மற்றவர்கள் தனது தொலைநோக்குப் பார்வையைப் பணமாக்கியபோது தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் மஸ்க் தன்னைச் சித்தரிக்கிறார். இதற்கிடையில், “மஸ்க் வரலாற்றைத் திருத்தி எழுதுகிறார்” என்று ஆல்ட்மேனின் கூட்டாளிகள் கூறுகின்றனர்.

கருத்தியல் மோதல், நிறுவன அதிகாரம், தனிப்பட்ட அகந்தை, நட்பு பகையாக மாறியது, மனிதகுலத்தின் தொழில்நுட்ப எதிர்காலம் குறித்த அச்சங்கள் குறித்த உணர்ச்சிப்பூர்வமான பரிமாணம்தான் இந்த வழக்கு விசாரணையின் மீது பொதுமக்களும் ஆர்வம் கொள்ள காரணமாகும்.

“இவ்வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தில் கோடீஸ்வர நிர்வாகிகள் நெரிசலான நீதிமன்ற இருக்கைகளில் தோளோடு தோள் உரசியபடி அமர்ந்திருந்தனர். தனிப்பட்ட குறுஞ்செய்திகளும் ரகசியக் குறிப்புகளும் நீதிமன்றத் திரைகளில் காட்டப்பட்டன. பாதுகாப்புக் குழுக்கள் தாழ்வாரங்களில் குவிந்திருந்தன. கோடீஸ்வரர்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் வெளியே குழுமியிருந்தனர். மஸ்க்கை கேலி செய்யும் வகையில் ஊதப்பட்ட ராட்சச கேலிச்சித்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன” என்று செய்தியாளர்களும் காட்சிகளை விவரித்தனர்.

சாட்சியம் அளிப்பதே கூட அசாதாரணமானதாக மாறியது. OpenAI நிறுவனத்தில் சில நிர்வாகிகளின் பங்குகள் எதிர்காலத்தில் எவ்வளவு மதிப்புடையதாக இருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர்கள் வெளிப்படையாக விவாதித்தனர். தனது சொத்துக்களின் மதிப்பு இறுதியில் பல டிரில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று கிரெக் ப்ராக்மேன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது!

பல பார்வையாளர்களுக்கு அந்த நீதிமன்றம் நவீன சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஒரு சின்னமாகவே மாறி, அளவற்ற செல்வம், லட்சியவாதம், அதிகாரம், தனிப்பட்ட போட்டி ஆகிய அனைத்தும் மோதிக்கொள்ளும் ஓர் இடமாகத் திகழ்ந்தது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான விசாரணையில் ரகசிய குறிப்புகள், பதற்றமான குறுஞ்செய்திகள், தனிப்பட்ட நாட்குறிப்புகள், உணர்ச்சிமிக்க ஒப்புதல்கள் யாவும் வெளிச்சத்துக்கு வந்தன. அவை அனைத்தும் AI உலகின் பின்னாலுள்ள அதிகாரப் போட்டி, பேராசை, துரோகம், உடைந்த உறவுகளை உலகிற்குக் காட்டின. மனிதகுலத்தின் நம்பிக்கையை OpenAI துரோகம் செய்துவிட்டதாக மஸ்க் வாதிட்ட நிலையில், உலக AI போட்டியில் நிலைத்திருக்க பெரும் முதலீடும் வணிகமயமாதலும் அவசியம் என OpenAI தரப்பு பதிலளித்தது. விசாரணை முன்னேறிச் செல்லும்போது நீதிமன்றம் வெறும் சட்டப் போர்க்களமாக மட்டும் இல்லாமல் நவீன உலகின் எதிர்காலத்தையே காட்டும் ஒரு சாளரம் போல காட்சியளித்தது. பில்லியன் டாலர் மதிப்பீடுகள், கசிந்த செய்திகள், பகிரங்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், புரட்சிகரமான தொழில்நுட்பம், அளவற்ற செல்வம், மற்றும் கட்டுக்கடங்காத பேராசை ஆகியவை மோதும்போது என்ன நடக்கும் என்பது குறித்த ஒரு ஆழமான எச்சரிக்கை மறைந்துள்ளது. எலான் மஸ்க் ( எதிர்- Vs) சாம் ஆல்ட்மேன் இடையேயான வழக்கு, இனி இரண்டு சக்திவாய்ந்த மனிதர்களுக்கு இடையேயான ஒரு சாதாரண பகை அல்ல. அது, நெறிமுறைகள், பொறுப்புக்கூறல், மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு உலகளாவிய விவாதமாக மாறியுள்ளது.

பல வாரங்கள் நடந்த வழக்கின் நீண்ட விசாரணைக்குப் பிறகு 2026 மே மாதத்தில் கூட்டாட்சி ஜூரி OpenAI மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இது எலான் மஸ்க்கிற்கு பெரிய சட்டத் தோல்வியாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பு முக்கியமாக “statute of limitations” எனப்படும் சட்ட ரீதியான கால வரம்பை அடிப்படையாகக் கொண்டது. OpenAI வணிகமயமாகி மைக்ரோசாஃப்டுடன் நெருக்கமாக இணைந்திருப்பதை மஸ்க் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார். இருந்தும் அவர் மிகவும் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக ஜூரி கருதியது. அதாவது OpenAI தனது அடிப்படை இலட்சியத்தை ஒழுக்கரீதியாக துரோகம் செய்ததா என்பதை நீதிமன்றம் முழுமையாகத் தீர்மானிக்கவில்லை. மாறாக, மஸ்க்கின் சட்டப்பூர்வ புகார் தாமதமாக வந்துவிட்டது என்று மட்டுமே கூறியது. நீதிபதி யுவோன் கொன்சாலஸ் ரோஜர்ஸ் இந்த தீர்ப்பை ஏற்று மஸ்க்கின் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்து OpenAI தனது தற்போதைய அமைப்பில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கினார்.

வழக்கில் தோல்வியடைந்தபோதும் எலான் மஸ்க் உடனடியாக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தார். இந்த தீர்ப்பு லாப நோக்கமற்ற அமைப்புகள் பின்னர் லாப நோக்கமுள்ள நிறுவனங்களாக மாறுவதற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் OpenAI, தனது நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை. உலக AI போட்டியில் நிலைத்திருக்க அவசியமானவை என்பதை நிரூபிக்கும் வெற்றியாக இந்த தீர்ப்பைக் கொண்டாடியது. இந்த வெற்றி OpenAI-யின் எதிர்கால வணிகத் திட்டங்களையும் பாதுகாத்ததுடன், உலகின் மிகச் சக்திவாய்ந்த AI நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இறுதியில் OpenAI – மஸ்க் வழக்கு என்பது முன்னாள் கூட்டாளிகளுக்கிடையிலான ஒரு சாதாரண சட்டப் பிரச்சினையாக மட்டும் இல்லை. அது செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய அதிகாரப் போட்டிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. சாதாரண மக்களுக்கு இந்த வழக்கு எதிர்காலம் குறித்த ஒரு பெரிய கவலையைப் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே கல்வி, வேலைகள், படைப்பாற்றல், அரசியல், மனித தகவல்தொடர்புகளை மறுவடிவமைத்து வருகிறது. இந்த அமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் விரைவில் பல அரசாங்கங்களை விட அதிக செல்வாக்கைப் பெறக்கூடும்.

அதன் சாராம்சத்தில், OpenAI வழக்கு விசாரணை என்பது வெறும் ஒப்பந்தங்கள், முதலீடுகள், பெருநிறுவனக் கட்டமைப்புகள் பற்றியது மட்டுமல்ல. இது சில ஆழமான நவீனக் கேள்விகளையும் முன்வைக்கிறது.

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை யார் கட்டுப்படுத்த வேண்டும்? அரசுகளா, லாப நோக்கமற்ற அமைப்புகளா, மாபெரும் நிறுவனங்களா அல்லது பில்லியனர்களா?

லாப நோக்கற்ற அமைப்புகள் அறநெறிப்படி பெருநிறுவனங்களாக மாற முடியுமா?

செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்க வேண்டும்?

மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் பொதுநலனுக்காக செயல்பட வேண்டுமா அல்லது நிறுவன லாபத்திற்காகவா?

மனிதர்களை விட அதிக சக்தி பெறக்கூடிய AI அமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் பொறுப்புடன் கையாளும் என்று உலகம் நம்பலாமா?


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.