வெள்ளைக் குழந்தை

மலையாளம் : உரூப்
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஏ ஜே தாமஸ்
ஆங்கிலம் வழி தமிழில் : தி.இரா.மீனா

அது மதிய நேரம். பூமியிலிருந்து ஜூவாலைகள் வெளிப்படுவது போல மீன மாதச் [ மார்ச் பிற்பகுதியிலிருந்து ஏப்ரல் பிற்பகுதி வரை ] சூரியன் கொதித்துக் கொண்டிருந்தான். மண்ணில் யாராவது வெறும் கால்களை வைத்தால் அவை நெய்யில் பொரிக்கப்பட்ட நெய்யப்பம் போல உப்பி விடும். யாரும் அந்த நேரத்தில் நடக்க முடியாதென்றாலும், குஞ்சிமோன் அந்த நீண்ட பாதையில் நடந்து கொண்டிருந்தான்.
குழந்தைகளருகே வரும் போது, சூரியன் லேசான குளிர்ச்சி காட்டுவான். ஆனால் எவ்வளவு நேரம் அவனால் அப்படி குளிர்ச்சி காட்ட முடியும்?

குஞ்சிமோன் ஒரு வழி கண்டு பிடித்தான். வயல்களினூடே நெளிந்து கொண்டிருந்த ஓர் ஓடையைப் பார்த்தான். மழைக் காலங்களில், பழுப்பு நிறமான காளைக் கன்றுகள் அந்தப் பாதையினூடே போவதைப் பார்த்திருக்கிறான். அவைகளின் பின்புறத்தில் நுரை போல வெள்ளைத் திட்டுக்கள் தெரியும். இடியொலி கேட்டுப் பித்துப் பிடித்தவையாக கிழக்கத்தியக் காடுகளிலிருந்து அவை ஓடைக்கு விரைந்து வருவது
போலத் தெரியும். எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்காமல் விரையும்.தாவிக்
குதித்து, ஏதாவது ஒரு கன்றின் பின் பக்கத்தில் ஏறி ஓர் ஆரவாரமான சவாரி செய்ய வேண்டுமென அவன் பல தடவை விளையாட்டாய் யோசித்திருக்கிறான். ஆனால் அவை ஒரு நொடி கூட நிற்காது. இருபுறக்கரைகளிலுமுள்ள அழுத்தமான கொடிகளில் தம் கழுத்து மடிப்புகளை உரசிக் கொண்டு, மிக வேகமாகக் கடந்து விடும். அருகிலுள்ள அடர்ந்த புதர் மண்டிய இடத்திலிருந்து ஒரு மீன் கொத்தி ’அண்ணன்களே, வேகமாக
எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்கும். அதைக் கேட்டவுடன் கன்றுகள் ஒரு கரட்டொலியை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடரும். இப்போது இந்தக் கூட்டத்தில் ஒரு காளைக் கன்று கூட இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு, மன்னாதிப் பாராவில் ஆழமில்லாத குழியில் ஒரு
காளைக் கன்று உலவிக் கொண்டிருந்ததை குஞ்சிமோன் பார்த்திருக்கிறான்
’அந்தி சாய்ந்து விட்டது; வா போகலாம்’ என்று அம்மா அவனைத் திட்டியதால் அவனால் அதைச் சரியாகக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்போது மட்டும் கன்றுகள், ஓடைக்குள் வேகமாகப் பாய்ந்தால்! அவன் ஏதாவது செய்ய முயற்சிப்பான். யாராலும் அவனைத் தடுக்க முடியாது.

இந்த மாதிரியான யோசனையோடு அவன் ஓடையின் கரையை நோக்கிச் சோகமாக நடந்தான். ஓடையின் முதுகில் ஒரு புதிய தென்னம் பாளை கிடப்பது போலத் தெரிந்தது. குஞ்சிமோன் ஓடையைப் பார்த்தான். அம்மாவின் பெருமூச்சு போல அங்கிருந்து இளங்காற்று எழ ஆறுதலாக உணர்ந்தான். கரையை ஒட்டிய முழுவதுமாகக் காய்ந்து விடாத புல்வெளியில் அவனால் நடக்க முடிந்தது. அது கொஞ்சம் சுற்றான பாதையென்றாலும் பரவாயில்லை. அவன் தாமதமாகப் போனால் ஆசிரியர் கோபித்துக் கொள்வார் என்ற ஞாபகமும் வந்தது. உள்ளுக்குள் நடுக்கம் என்றாலும் அவனுக்கு ஓடையின் கரையை விட்டுப் போக மனமில்லை. யோசித்துக் கொண்டே நடந்தான் : ஆசிரியர் ஏன் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறார்? என்னுடன் பேசும் போது அவர் என்னைத் திட்ட, வீட்டின் எஜமானியம்மா அம்மாவைத் திட்டுவார்.அது தேவைதானா? ’ஏதோ நாம் அவர்களுக்கு எதிரானவர்கள் போல!’ குஞ்சுமோன் முணு முணுத்துக் கொண்டான்.

அந்தக் குடும்பத்திற்காக அவன் அம்மா எவ்வளவோ செய்திருக்கிறாள்! வானத்தைத் தொடுமளவிற்கு உயரமாக இருக்கிற தாமிரக் குடத்தில் தண்ணீர் நிரப்பி, இடுப்பில் சுமந்து கொண்டு வீட்டிற்கும், சமையல் அறைக்கும், குளியலறைக்குமாய் ஒரு நாளில் எத்தனை தடவைகள் நடந்திருக்கிறாள்! பெரிய அண்டாவில் ஒவ்வொரு குடம் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து கொட்டும் போது அம்மாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதை அவன் கவனித்திருக்கிறான். 

சில சமயங்களில், ’போதும் அம்மா!’ என்று வாய் விட்டுக் கூடச் சொல்லி இருக்கிறான்.

’மாஸ்டர் குளிக்க வேண்டாமா?’ என்று அம்மா கேட்பாள். மழை பெய்யும் போது கூட அம்மா குடத்தைத் தூக்கிக் கொண்டு வருவாள். மாஸ்டருக்கு அவ்வளவு தண்ணீர் வேண்டுமென்றால், ஏன் அவர் மழையில் இறங்கிப் போய்ப் பிடித்துக் கொண்டு வரக் கூடாது! ஆனால் அவர் அதைச் செய்ய மாட்டார். எவ்வளவு விறகுகள் உடைப்பது, எவ்வளவு துணிகள் தோய்ப்பது! முற்றத்தைப் பெருக்கித், தரையைச் சாணி போட்டு மெழுகுவாள். அவன் அம்மாதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் ! இருப்பினும் மாஸ்டர் அம்மாவோடு ஏன் அப்படிச் சண்டையிட வேண்டும்? எல்லா வேலைகளும் முடிந்த பிறகும், திணறும் பட்டம் போல் அம்மா குழப்பமாக அங்கு நின்றிருப்பாள். சமையலறையின் சுவற்றில் சாய்ந்து, கைகளை மடக்கி அவள் நிற்கும் விதத்தை அவன் வருத்தமாய்ப் பார்ப்பான். அவள் அப்படித் திணறி நிற்கும் போது, காய்ந்த வாழைப் பழத்தோல்களாய் அவள் மார்புகள் ஏறியிறங்கும். அம்மாதிரியான தருணங்களில் கைகளால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொண்டு,’ என் அம்மா!’ என்று கூவத் தோன்றும்.

ஆமாம், குஞ்சுமோன் அப்படிச் செய்ததேயில்லை. அவர்களிருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதை எஜமானியம்மாள் பார்த்து விட்டால் ’இந்தக் கொஞ்சல் வேலையெல்லாம் இங்கே வேண்டாம்’ என்று வெறிப் பிடித்துக் கத்துவாள். அடுத்து அந்தச் செய்தி மாஸ்டரிடம் போகும். அம்மாவின் கையை அவன் பிடித்துக் கொண்டிருந்தது பெரிய குற்றம் போல ஒரு விசாரணை தொடருமென்பதால், தன் அம்மா மூச்சுத் திணறி நின்று கொண்டிருப்பதை வெறித்தவாறு பார்த்துக் கொண்டிருப்பான். அந்த மாதிரி அம்மாவின் திணறலை இன்று அவன் பார்த்துக் கொண்டிருந்த போது, ’இப்போதே சலவைக்காரனிடம் போ, சலவை செய்யக் கொடுத்த துணிகளையெல்லாம் உடனே கொண்டு வந்து தரும்படி சொல்’ என்று ஓர் ஆணை பிறந்தது. எஜமானியம்மாவின் கண்ணுக்குப் படாத தூரம் வரை ஒடி விட்டு நின்றான். இனிமேல் அவனால் ஓட முடியாது. 

குஞ்சுமோன் ஓடையின் கரையை ஒட்டி மிக மெதுவாக நடந்தான். எரிக்கிற, பொசுக்குகிற சூரிய வெளிச்சம் ; காற்று கூட வெம்மையாக இருந்தது. இருப்பினும் அவன் மிக மெதுவாக நடந்தான். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பசிக்கவும் செய்தது. கஞ்சி கேட்டுக் குடிக்கலாம் என்று அடுப்படிப் பக்கம் போன போதுதான் சலவைத் தொழிலாளியிடம் போகச் சொல்லும் கட்டளை வந்தது. கஞ்சியைப் பற்றி நினைத்த போதே அவன் பசி இரட்டிப்பானது. எனினும் ஒன்றும் செய்ய முடியாமல் மேலே  நடந்தான்.

ஓடைக் கரையையொட்டி அப்பாக்காடுகள் இருந்தன. பசும் பூக்களின் புதர்கள் .’இனி மேல் என்னால் நிற்க முடியாது’ என்று சொல்வது போல தொங்கித், தாழ்ந்து கிடந்தன. ஒரு சிறிய செடியின் கழுத்தைத் தொட்டு நிமிர்த்தி விட்டு ,சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மென்மையாகப் பாடத் தொடங்கினான்.

    ’அப்பாவிடம் அப்பன் இருந்தது.
அப்பன் பாகலைப் போல வளைந்து இருந்தது.
அப்பன் ஓணம் பூக்களைச் சூடி வந்தான்
பனையோலைக் குடை அவனிடம் இல்லையாதலால்,
எரி கடவுள் அவனைப் பிடித்துக் கொண்டது’
உடம்பில் வந்த அம்மையால் அவன் இறந்து போனான்

இந்தப் பாடலைக் கேட்டதும் அப்பாக்காடு வெட்கப்பட்டுத் தலை குனிய, குஞ்சுமோன் சிரித்துக் கொண்டே ஓடி விட்டான்.

ஓடை மூன்று வளைவுகளோடு ஒப்பந்தம் வைத்திருந்தது. மூன்றாவது வளைவில் காளியால் ஆக்கிரமிக்கப்பட்ட, கட்டுக்கடங்காத ஓர் அரசமரம் இருந்தது. குஞ்சிமோனுக்கு திடீரென்று ஏதோ  ஞாபகம் வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த வேலத் திருவிழாவிற்குப் பிறகு அரசமரத்தின் முன்னால்  இருந்த கோவில் மூடப்பட்டிருந்தது. ஏழு நாட்களுக்குக் கோவிலைத் திறக்க மாட்டார்கள். இன்று மூன்றாம் நாள். இந்த ஏழுநாளில் தேவி தன் கட்டுப்பாட்டிலுள்ள தீய சக்திகளை தாராளமாகப் புழங்க விட்டிருப்பாள். 

அந்த நினைப்பு அவனை பயமுறுத்த, சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமே கண்ணில் படவில்லை. இந்த மதிய நேரத்தில் ராட்சசர்கள் இங்குமங்கும் அலைவார்களா? நாளின் எந்த நேரத்தில் அவர்களின் நடமாட்டம் நிகழும்? அவனுக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அவர்கள் நடமாடும் சமயம் என்றால்? 

அந்த இடத்தை விட்டுப் போக அவன் விரும்பவில்லை. அவன் போனால்? எஜமானியம்மாள் அவனை அடித்து நொறுக்கி விடுவாள். யாராவது இந்தப் பக்கம் வந்தால்,அவன் அவர்களுடன் சேர்ந்து மாஸ்டர் வீட்டுக்குப் போய் விடுவான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தான். ஒருவர் கூட கண்ணில் படவில்லை. அவன் மேலே போக வேண்டுமா? திரும்பிப் போக வேண்டுமா? எதுவும் செய்ய வேண்டாமென முடிவு செய்தான். யாராவது அந்தப் பக்கம் வரும்வரை அவன் அரசமரத்தடியில் உட்கார்ந்திருப்பான்.

அரசமரத்தைச் சுற்றிக் கட்டியிருந்த நீலமும், பொன்னிறமும் கலந்து பரவியிருந்த மேடையின் மீது ஏறினான். எஜமானியம்மாவின் படுக்கையறைக் கூடம் கூட இவ்வளவு அருமையான பரவலில் இல்லை என்று குஞ்சிமோன் நினைத்தான்.அதில் உட்காரத் தான் தகுதியுடையவனா என்று கூட அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனாலும்  உட்கார்ந்தான். என்ன ஒய்யாரமான உணர்வு! தன் உடல் முழுவதையும் யாரோ நீவி விடுவது போல உணர்ந்தான். அவன் அம்மாவின் வருடல் போல!

மரத்தின் அடிப்பகுதியில் சாய்ந்து கொண்டான். கண்கள் தாமாக மூடிக் கொண்டன. நீலமும், பொன்னிறமும் கலந்து பரவியிருந்த படுகை எழுந்து, நடந்து, இன்னும் மேலே சொல்லப் போனால் நீந்தியது. கண் முன்னால் வரிசையாகப் பொன் வண்ணப் படகுகள் வருவதும்,போவதுமாய் இருந்தன. முடிவேயில்லாத ஓர் ஊர்வலம்! இவை பறக்கும் படகுகளா? அவை மேலே எழுந்து, மேகத்தோடு சேர்ந்து, பின் மறைந்தன. குஞ்சிமோன் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று தான் சாய்ந்திருந்த அரச மரத்தின் பட்டை நெகிழ்வாக, மென்மையாக இருப்பதை உணர்ந்தான். மரப்பட்டையில் இன்னும் அழுத்தமாகச் சாய்ந்து கொண்டான். சதைப்பற்றுள்ள உடலோடு சாய்ந்திருப்பது போலப் பட்டது. தலையையும் சாய்த்தான். என்ன இன்பம்! எங்கேயோ மேலேயிருந்து இசை பரவுவதை மிகக் கவனமாகக் கேட்டான். 

ஓ,காற்று பாடுகிறது. ஸ்வரம் மேலே போய், கீழிறங்கி அலையலையாய் படர்ந்தது. தன் நரம்புகளில் அது ஊடுருவது போல உணர்ந்தான். அந்த விஷேச ஸ்வரங்கள் வெள்ளி இழையாய்ப் பயணித்தன. நிம்.. நிம்.. நிம்.. எவ்வளவு ஈர்ப்புச் சக்தி!

திடீரென்று மேலேயிருந்து ஓர் உறுமல் கேட்டது. குஞ்சுமோன் நடுங்கிப் போய் மேலே பார்த்தான்! பார்க்கவே பயங்கரமாக இருந்தது. இரண்டு கோரைப் பற்கள் தந்தம் போன்று வெண்மையாக, கொடுவாள் போல வளைந்தும்! அவற்றின் கனம் வாயின் இரண்டு முனைகளையும் இழுத்திருந்தது. கனமான நெல் கட்டுகள் போல உதட்டின் மேல் கனத்த மீசை இருந்தது. எரிக்கும் கண்கள் தீப்பந்தங்கள்! முடி இருக்குமிடத்தில் ஜூவாலைகள் குவிந்திருந்தன. குஞ்சுமோன் அவனை ஒரு முறை பார்த்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டான். அவன் ஓர் அரக்கன். ஓர் அரக்கனின் காலில் தான் சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான். தன் உடலை இழுக்கவும் முடியாமல்,அழுத்தவும் முடியாமல் திணறினான். அங்கேயே உறைந்து, ஒரு சடலம் போல அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

ஆரவாரமான சிரிப்பு திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அது குஞ்சுமோனின் உடலோடு உறைந்தது. கோடிக்கணக்கான ஊசிகள் தன்னைக் குத்துவது போல உணர்ந்தான். சிரிப்பின் முழக்கம் முள் உறையாய் உடலிலிறங்கியது.

திடீரென அரக்கன் தன் கால்களை விலக்கிக் கொண்டான். குஞ்சுமோன் குப்புற விழுந்திருக்க வேண்டும்: அதற்குப் பதிலாக அவன் எழுந்தான். அரக்கன் அவனைக் கால்பந்தை உதைப்பது போல உதைத்தான். குஞ்சிமோன் மேலே எழும்பினான். மாறி, மாறி உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் உணர்ந்தான். மேகங்களிலிருந்து மழைத்துளிகள் அவன் உடலில் விழுந்தன. அதே நேரத்தில்,சூரியனின் கடும் கதிர்கள் அவற்றைக் காய வைத்தன. அவன் மூக்கை உரசிக் கொண்டு பறவைகள் அவனைக் கடந்தன. ஆனால் அவன் ஒரு கணமும் நின்று விடாமல் எழும்பிக் கொண்டேயிருந்தான். திரும்பவும் ஓர் பெரிய உறுமல்! குஞ்சுமோன் உடனடியாகக் கீழே சரிந்தான். அந்தக் கருப்புக் குழந்தை ஒரு மாங்காய் போல விழுந்து கொண்டிருந்தது. தன் நெஞ்சிலிருந்து ஒரு ஜூவாலை எழுவது போல உணர்ந்தான்.

தான் இறந்து விட்டது போலக் கற்பனை செய்து கொண்டான். ஆனால் அவன் நிலத்தில் விழவில்லை. அதற்குப் பதிலாக, ஏதோ மென்மையான ஒன்றின் மீது இறங்கினான். மூச்சிரைக்கச் சுற்றுமுற்றும் பார்த்தான். அரக்கனின் திறந்த உள்ளங்கையில் அவன் உட்கார்ந்திருந்தான். கல்லின் மேல் புகைந்து கொண்டிருக்கும் ஒரு விளக்குப் போலத் தன்னை உணர்ந்தான். அரக்கனின் ஒளிப்பிழம்பான கண்கள் அவனை நோக்கித் திரும்பின. அவற்றிலிருந்து எழுந்த ஜூவாலைகள் அவன் முகத்தைத் தொட்டன. அரக்கன் திரும்பவும் ஒரு முறை உறுமி விட்டு, ’நீ யார் என்று கேட்டான்?’

“நான்…’ குஞ்சுமோன் பேச முடியாமல் தடுமாறினான். கையால் ஏதோ சைகை காட்டினான். அதைப் பார்த்து விட்டு, அரக்கன் தன்னால் முடிந்த வரையிலான மென்மையான தொனியில் ’குழந்தையே, யார் நீ?’ என்று திரும்பவும் கேட்டான்.

’நான் குஞ்சுமோன்.’

’எதற்காக இங்கே வந்திருக்கிறாய் குஞ்சுமோன்?’

’நான் சலவைத் தொழிலாளியைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தேன்.’

’இது எங்களின் இடமென்று உனக்குத் தெரியாதா?’

’எனக்குத் தெரியும்.’

’சரி. தெரிந்தே நீ இங்கு வந்திருக்கிறாய் என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.’ ஒரு விளையாட்டுச் சாமானைத் தரையில் வைப்பது போலத் தரையில் குஞ்சுமோனைத் நிறுத்தி விட்டு அரக்கன் தொடர்ந்தான்,’ நீ என்னுடன் வா.’

’ஐயோ! என்னால் முடியாது.’

’ஏன்?’

’நான்..’

’உன்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் எனக்குச் சொல்.’

’நான்…எனக்கு பயமாக இருக்கிறது,’ மெலிந்த குரலில் குஞ்சுமோன் 

சொன்னான்.

’என் தோற்றத்தைப் பார்த்து நீ பயப்படுகிறாயா? நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். நீ என்னுடன் இருக்கலாம். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நான் தருவேன்.’

’எனக்கு எதுவும் வேண்டாம்.’

’முட்டாள்! நான் சொல்வதை கவனமாகக் கேள். இந்த உலகத்திலிருக்கிற அனைத்துப் பூக்களின் தேனையும் சேகரித்து உனக்குத் தருவேன். அணிகலன்களாலான ஆடைகளை உனக்கு அணிவிப்பேன். பாதாள உலகத்திலிருந்து பாம்புகளால் பாதுகாக்கப்பட்டு வரும் நட்சத்திரங்களைப் போன்ற வைரங்களை விளையாடத் தருவேன்.என்ன சொல்கிறாய்?’

’எனக்கு அவையெதுவுமே வேண்டாம். எனக்காகக் காத்திருக்கும் என் அம்மாவிடம் நான் போக வேண்டும்’

’ஞாபகம் வைத்திருப்பதை விட ஜனங்களுக்கு மறதிதான் அதிகமிருக்கும். பத்து நாட்களுக்குப் பிறகு அம்மா உன்னை மறந்து விடுவாள்.’

’இல்லை. என் அம்மா எனக்காக மட்டுமே வாழ்கிறாள்.’

’அதெல்லாம் ஜனங்கள் சும்மா சொல்வதுதான். அப்பா இருக்கிறாரா?’

’இல்லை.’

’உன் அப்பாவை அம்மா அதிகம் நேசித்திருப்பாள்?’

’ஆமாம்.’

’இருந்த போதிலும், அப்பா இறந்த பிறகு ,அம்மா வாழ்கிறாள் அல்லவா?’

’நான் என் அப்பாவின் மறுவுருவம். என்னைப் பார்ப்பது அப்பாவின் இழப்பை ஓரளவு ஈடு செய்கிறது என்று அம்மா சொல்கிறாள்.’

’அப்படியானால் உன் அம்மா இன்னொரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டு அவனில் உன்னைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்.’

’அப்படி முடியாது.’

ஏன்?’

’நான்தான் அம்மாவின் பாலைக் குடித்து வளர்ந்தேன்.’

’அது ஒன்றும் அப்படி விசேஷமானதில்லை.அங்கே பார்.’

அரக்கன் காட்டிய திசையைக் குஞ்சுமோன் பார்த்தான். அந்தக் காட்டிலுள்ள மரத்தினடியில் ஒரு பெண் சிங்கம் குட்டிகளை நீவிக் கொண்டிருந்தது. ’இந்தக் குட்டி எப்போதும் தன் அம்மாவுடன் இருக்குமா? குட்டிகள் வளர்ந்தவுடன், அவை தன் வழியைப் பார்த்துக் கொண்டு போய் விடும். இந்தச் சிங்கத்தின் தாயை எனக்குத் தெரியும். ஆனால் தன் தாய் எங்கே இருக்கிறாளென்று இதற்குத் தெரியாது. அது தன் தாயை மறந்து விட்டது. உன் அம்மாவும் உன்னை மறந்து விடுவாள்.’

’என் அம்மா இந்த சிங்கத்தைப் போன்றவள் இல்லை. அவள் ஒரு நாளும் என்னை மறக்க மாட்டாள்.’

’இந்த மாதிரியான நம்பிக்கைதான் மனிதர்களைச் சக்தியற்றவர்கள் ஆக்குகிறது.’

’என் அம்மாவை நினைத்தாலே நான் சக்தி மிகுந்தவனாகி விடுவேன்.’

அரக்கன் சிரித்தான். அது குகையிலிருந்து எதிரொலிப்பது போல இருந்தது.

’தயவுசெய்து என்னை விட்டுவிடு.’ குஞ்சுமோன் கெஞ்சினான்.

’நீ சக்தி வாய்ந்தவன். இல்லையா? உன் அம்மாவைப் பற்றி நினை.உனக்கு அதிக சக்தி கிடைக்கும்.பிறகு என்னைத் தோற்கடித்து விட்டு நீ போகலாம்.’

’ஏன் என்னைப் பிடித்து வைத்திருக்கிறாய்?’குஞ்சுமோன் கேட்டான்.

’ஏனெனில் குஞ்சுமோனை எனக்குப் பிடித்திருக்கிறது. தயவுசெய்து என்னுடன் வா.’

’தயவுசெய்து என்னைக் கூட்டிக் கொண்டு போகாதே. உன்னை விட நான்பலத்தில் குறைந்தவன் என்பதற்காக அப்படிச் செய்வது சரியா?’

அரக்கன் சில கணங்கள் யோசித்தான். அந்தக் குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தான்.சிறிது நேரத்திற்கு முன்னால் கண்களில் வெளிப்பட்ட அந்த உஷ்ணம் இப்போது இல்லை.

’என் பலத்தை உபயோகித்து உன்னைத் தோற்கடிப்பது என் திட்டமில்லை.. என்னைப் போல பலசாலியாக உன்னை உருவாக்குவேன். அப்போது நீ என்னை வெல்ல முடியும். அப்படிச் செய்து விட்டால் நீ போய் விடலாம்.’

’ஓர் அரக்கனை என்னால் வெல்ல முடியுமா?’

’முயற்சி செய்து பார். நீ என்னை வென்றால் நான் உன் அடிமை. நான் வென்று விட்டால், நீ என் அடிமையாக வேண்டிய அவசியமில்லை. நீ என்னுடன் இருக்க வேண்டும், அவ்வளவுதான். என்ன சொல்கிறாய்?

’வேண்டாமே!’

’உனக்கு வேண்டியதையெல்லாம் செய்து விட்டேன். இனிமேல் உனக்கு விருப்பமானதைச் செய்.’ என்று சொல்லி விட்டு அருகிலிருந்த புதரைத் தடவினான். அது கரும்பாறையாக மாறியது. அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, ’நீ முடிவு செய்’ என்று அரக்கன் சொன்னான்.

எங்கிருந்து இனிய பழங்கள் மண்ணில் விழுகின்றன என்று அவனுக்குத் தெரியவில்லை. பிறகு காட்டெருமையின் தொடைகளும் விழுந்தன. பழங்களைக் குஞ்சிமோன் பக்கத்தில் நகர்த்தி விட்டுச்,’சாப்பிடு!’ என்று அரக்கன் சொன்னான். பிறகு அவன் காட்டெருமையின் தொடைகளைத் தன் கோரைப் பற்களால் கிழித்தான்.

குஞ்சுமோன் பழங்களைத் தொடவில்லை. தலையைக் குனிந்து கொண்டு, தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். மீதமிருந்த எலும்புகளைச் சதுப்பு நிலத்திற்கப்பால் எறிந்தான். அவை சேற்றில் கலந்தன. ஒரு கணத்திற்குப் பிறகு, அந்த எலும்புகள் மரக்கிளைகளாக மாறி மலர்ந்தன. பூக்கள் இரத்தத் துளிகள் போல! ’ஏன் எதையும் நீ சாப்பிடவில்லை?’ என்று அரக்கன் கேட்டான்.

’நான் திரும்பிப் போன பிறகுதான் அம்மாவுடன் சாப்பிடுவேன்.’குஞ்சுமோன் இறுதியாகச் சொன்னான். அரக்கன் சிரித்தான். அப்போது அவன் தொந்தி, ஒரு மலைச் சரிவு போல இருந்தது.

’அப்படியானால் என்னைத் தோற்கடித்து விட்டு, உன் அம்மாவிடம் போ. அதற்கு, நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்லித் தருகிறேன். சரியா?’

வேறு எதுவும் வழியில்லை என்பதால் குஞ்சுமோன் சமாதானமானான். அரக்கனின் மிகப் பெரிய கோரைப் பற்களால் அவன் வாயோரங்கள் அகன்றிருந்ததை குஞ்சுமோன் பார்த்தான்.’ சரி, என்னை பலமானவனாக்கு.’ என்றான்.

’இப்போதுதான் நீ அறிவோடு பேசுகிறாய்.’ அரக்கன் பாறையிலிருந்து 

எழுந்தான். பாறை புதராக மாறிக் காற்றில் கலந்தது. குஞ்சுமோனைத் தன்னருகே இழுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் அரக்கன் விளக்கினான். ஆகாயத்திலோ அல்லது பூமியிலோ எங்கேயும் அவனால் போக முடியும். தனக்கு வேண்டிய உருவத்தை அவனால் பெற முடியும். இடம்,காலம் ஆகியவற்றை எந்தத் தடையுமின்றி அவனால் கடக்க முடியும். இப்படி அவன் எல்லாவற்றையும் கற்ற பிறகு, ’இப்போது நாம் இருவரும் சமமான பலசாலிகள். நாமிருவரும் போட்டி போடலாம். நீ தப்பிக்க முயற்சி செய், நான் உன்னைத் தடுக்க முயலுவேன்.’

’சரி.’

குஞ்சுமோன் திடீரெனப் புகையாக மாறி ,மேலே எழுந்தான். வானத்தை அடைந்து, நீந்தத் தொடங்கி, மேகத் திரளாக மாறினான். அரக்கன் சிரித்தான். பிறகு அவன் ஊதினான். மேகத் திரளிலிருந்து எழுந்த புயல் பூமிக்குத் திரும்பியது. அது நிலத்தைத் தொட்ட போது, குஞ்சுமோனுக்கு அவன் பழைய உருவம் வந்தது. திடீரென குஞ்சுமோன் எரியும் தீக்கதிராக மாறி, அரக்கனின் மீசைக்குள் விழ, அரக்கன் அழுதான். அவன் அழுகை மழையாகப் பொழிந்தது. தீக்கதிர்கள் அணைந்தன. குஞ்சுமோன் புயலைப் போல வேகமானான். அரக்கன் ஒரு பெரிய மலையாக மாறி அவனைத் தடுத்தான். குஞ்சுமோன் பல உருவங்கள் எடுத்து, தப்பித்து, ஒளிய முயன்றான். ஆனால் ஒவ்வொரு தடவையும், அரக்கன் தடைகளை ஏற்படுத்தினான். ஒரு போரே நடந்தது. இரண்டு பேருமே பெரிய மலைகளாக மாறினார்கள். குஞ்சுமோன் தோற்றுப் போனான். அவனுடைய தலையிலிருந்து ரத்தம் கொட்டி, சதுப்பு வெளியிலும் பரவியது. கடைசியில்’ நான் உன்னுடன் வருகிறேன்.’ என்று குஞ்சுமோன் அரக்கனிடம் சொன்னான்.

அரக்கனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவன் அந்தக் குழந்தையைத் தூக்கி, தோளின் மேல் வைத்துக் கொண்டு வானத்தில் பறந்தான். ’நீ நல்ல பையன். புத்திசாலி, இப்போது பலமானவனாகவும் ஆகிவிட்டாய். நீ எதிலெல்லாம் ஜெயிக்க விரும்புகிறாயோ, அதிலெல்லாம் வெற்றி பெறுவாய். நான் உனக்குதவி செய்வேன்,’என்று அரக்கன் சந்தோஷமாகச் சொன்னான்.

’ஹும்ம்..’ அரக்கனின் காதைப் பிடித்து ஹம் செய்தபடி சிரித்தான். 

’எப்போது நீ என்னைத் தோற்கடிக்கிறாயோ, அப்போதே நீ உன் அம்மாவிடம் போய் விடலாம்.’

’சத்தியமாக?’

’ஆமாம், சத்தியமாக.’

அதற்குப் பிறகு குஞ்சுமோன் பேசவில்லை. அரக்கனின் தோளில் உட்கார்ந்து கொண்டு ,அவனுடைய வட்டமான காதுகளைப் பிடித்துக் கொண்டான். கீழே ஆறுகள், சதுப்பு நிலங்கள், மலைகள் என்று எல்லாமும் கண்ணில் பட்டு வேகமாகக் கடந்தன. பெரிய ஆறுகளில் காண்டா மிருகங்கள்,  பெரிய கடல்களில் சுறாக்கள், அழகான வேலைப்பாட்டுடன் குவி மாடங்கள், நச்சான காற்றினால் பாம்புகளின் இருப்பிடம் நீல நிறத்துடன் ––அவன் பறக்க அவைகளும் அவனைக் கடந்து பறந்தன. அந்தப் பயணம் சந்தோஷமாக இல்லை என்று அவனால் சொல்ல முடியாது. இருப்பினும் அம்மாவைப் பற்றிய நினைவு வந்த போது பெருமூச்சு வந்தது. அம்மாவின் உருவம், புருவங்களில் கை வைத்தபடி ஓய்வெடுக்கும் அம்மா, தொலைவிலுள்ள பயிர்களைப் பார்க்கும் வகையில் அவள் தன் கண்களுக்குப் பயிற்சி தரும் விதம், தன் மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் அம்மா ஆகியவை அவன் மனதில் விரிந்தன.. திடீரென அவன் கீழே குதிக்க வேண்டுமென்று நினைத்தான். ஆனால் எங்கே? அரக்கன் அவனைப் போக விடுவானா? அது இயலாத காரியம். அவன் அமைதியாக உட்கார்ந்தான். திடீரென அவர்கள் மேகக் கூட்டத்திற்குள் நீந்தினர். 

’அரக்கனே!’ குஞ்சுமோன் கூப்பிட்டான்.

’என்ன குஞ்சுமோனே?’

’நாம் எங்கே போகிறோம்?’

’பிரபஞ்சத்தின் மையத்திற்கு.’

’நாம் ஏன் அங்கே போகிறோம்?’

’அங்கேதான் நான் வசிக்கிறேன்.’

’ஏன் இப்படி மூடுபனியாக இருக்கிறது?’

’இதுதான் எல்லாவற்றின் இருப்பையும் உருவாக்குகிறது.’ சொல்லியபடி அரக்கன் தன் தோளை ஒரு தடவை சுழற்றினான். அந்தப் பகுதியின் மூடுபனி பிரிய, அவர்கள் பனியால் மூடிய குழாயை ஊடுருவிக் கடந்தனர்.

’எதற்காக இந்த மூடுபனி என்று உனக்குத் தெரியுமா?’

’எனக்கு எப்படித் தெரியும்?’

’நீ ஓர் அரசனாக விரும்பவில்லையா?’

’என் விருப்பம் என் அம்மாவிடம் போவதுதான்.’

’உன் அம்மாவுடன் இருக்கும் போது நீ அரசனாக முடியுமெனில்?’

’அப்படியானால் நான் ஓர் அரசனாக விரும்புகிறேன்.’

’அந்த ஆசையை உருவாக்குவது இந்த மூடுபனிதான். மோட்ச உலகின் கன்னிப் பெண்கள் அழைக்கப்பட்டு, இதன் மீது அழுதபடி நிறுத்தப் படுவார்கள். அவர்களின் கண்ணீர்தான் மழையாகப் பெய்யும். இந்த மூடுபனியால் உருவாக்கப்படும் விருப்பம் அந்த கண்ணீர்த் துளிகளுடன் முழுவதுமாகச் சேரும். இது இல்லையன்றால் மனிதர்களுக்கு ஆசைகளே இருக்காது.  

’அற்புதம் !’ குஞ்சுமோன் ஆச்சர்யத்தால் வாயைப் பிளந்தான். விமானம் வேகமாகப் பறக்கும் போது எழுந்த காற்று அவனுடைய திறந்த வாயின் வழியாகப்  புகுந்த போதுதான் வாயை மூடினான்..

உட்கார்ந்தபடியே தொலை தூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று வானத்தில் ஒரு தங்க மோதிரத்தைப் பார்த்தான். அதனருகே போன போது அது பெரிதானது. ஒரு வெண்கலக் கொப்பரையின் பெரிய வாய் போல அந்த மோதிரம் பெரிதாக இருந்தது; தற்போது ஒரு சிகரத்தின் குவிமாடம் போலப் பெரிதாகவும்,பின்பு  ஒரு குளத்தை விடப் பெரிதாகவும் இருந்தது. பூமியைச் சுற்றிய பட்டாலான பட்டை போல இருந்தது.

’அது என்ன?’ 

’அது நெருப்புக்கான வளையம்.’

’நாம் அதைக் கடந்து போவோமா?’

’ஆமாம்.’

’ஐயோ! நமக்குத் தீக்காயம் வருமே?’

’பயப்படாதே. அது எதற்குப் பயன்படுகிறதென்று உனக்குத் தெரியுமா? புலிகளின் கண்களும், ஓநாய்களின் நச்சுப் பற்களும் இதனால்தான் உருவாகின்றன. காண்டாமிருகத்தின் ஒற்றைக் கொம்பும் இதனால்தான் உருவாகிறது.’

அரக்கன் இதை விளக்கிக் கொண்டிருந்த போதே, அவர்கள் அந்த நெருப்பு வளையத்தைக் கடந்திருந்தனர். குஞ்சமோன் இன்னொரு முறை திரும்பிப் பார்த்தான். அது எரிந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு ஒரு மலை  தனது சிறகுகளை விரித்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். சில அருவிகள் மலையின் அடிவாரத்தை நோக்கி வழிந்து கொண்டிருந்தன.

’அங்கே பார்! அருவிகளின் தண்ணீர் யானைகளின் தலை மேல் கொட்டுவதால் அவைகளுக்கு மதம் பிடிக்கிறது.’

’ஓ! அப்படியா?’

அதன் பிறகு இரு புறங்களிலும் இணைக்கப்பட்ட இரு மிகப் பெரிய சேவல்களின் அலகுகளான வளைவுகளைக் கடந்தார்கள். அவைகளின்  கால் விரல்கள் பூமியைத் தொட்ட போது, சின்னக் கிணறுகள் உருவாகின. குஞ்சுமோனும், அரக்கனும் அவைகளின் கழுத்துகள் வழியாகக் கடந்தனர்.

;அந்தச் சேவல்கள் எப்போதும் ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டிருக்கும்.’

அரக்கன் சொல்வதை குஞ்சுமோன் கேட்டு முடிப்பதற்குள்ளாக அவர்கள் சேவல்களைக் கடந்து விட்டனர். இருட்டு எங்கும் பரவியிருந்தது.

’என்னால் எதையும் பார்க்க முடியவில்லை.’

’கொஞ்ச நேரம் அமைதியாக இரு.’

அவன் அமைதியாக இருந்தான்.அவர்கள் கிழே இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் சிறிது நேரத்தில் இருட்டைக் கடந்து, இறங்கி வெளிச்சம் நிறைந்த தோட்டத்தை அடைந்தனர்.

’இப்போது நீ இறங்கலாம்.’

குஞ்சுமோன் அரக்கனின் தோளிலிருந்து இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். அது மிக அழகான தோட்டம்.

’நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம். இது என்னுடைய இடம்.’

முழுவதுமாக மலர்ந்திருந்த ஒரு மரத்தை நோக்கி நடந்தான். திடீரென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. மரம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது! அது இப்போது எலும்புக் கூடாகத் தெரிந்தது. தலையில் ஒரு கிரீடம் இருந்தது.

’ஐயோ!’ குஞ்சுமோன் அலறிக் கொண்டே ஓடி விட்டான். அரக்கன் அவனை நிறுத்திச் சமாதானப் படுத்தினான்.

’அவர்தானே ராஜா? அவர் என் நீண்ட கால நண்பர். அவருக்காக நான் முழு கண்டத்தை வென்றேன். கடைசியில்,அவர் என்னுடன் வந்தார். எலும்புக் கூட்டைப் பார்த்து, அரக்கன், ’இது என்ன பேரரசே?’ என்று கேட்டான். அந்த எலும்புக் கூடு ,இன்னொரு முறை சிரித்து விட்டு, தன்னிடத்திற்குப் போய், மீண்டும் மரமாகியது.

அரக்கன் நடக்க, குஞ்சுமோன் அவனைத் தொடர்ந்தான். வழயில் ஒரு பெரிய குன்று இருந்தது. அதன் சரிவில் அவர்கள் நடக்க வேண்டியிருந்தது

’இது என்னவென்று உனக்குத் தெரியுமா?’

’தெரியாது.’

அந்தக் குன்றை நோக்கி அரக்கன் கையை நீட்டினான்.அது மனித மண்டை  ஓடுகளின் குவியல்.’ இவை பல போர்கள் செய்த கதாநாயகர்களின் தலைகள்..’

குஞ்சுமோன் கண்ணிமைக்காமல் பார்த்தான்.

’என் கூட வா.’

அவன் நடந்து கொண்டிருந்த போது அரக்கன் ஒரு மல்லிகைக் கொடியைத் தொட்டான். அங்கு, ஓர் எலும்புக் கூடு தலையில் பூக்களை வைத்துக் கொண்டிருந்ததை குஞ்சுமோன் பார்த்தான்!

’அவள் அரசவை நாட்டிய மங்கை. அவள் ஒன்பது அரசர்களை வெற்றி கொண்டவள்.’ 

இப்படியான காட்சிகளைப் பார்த்த பிறகு அவர்கள் ஒரு பெரிய பாறை உருவாக்கத்தைப் பார்த்தனர். திடீரென ஒரு கதவு திறந்தது. இருவரும் உள்ளே போனார்கள். சாப்பிடுதல், குடித்தல், நடனமாடுதல் ஆகியவை அங்கு நடந்து கொண்டிருந்தன. அனைவரும் நிர்வாண நிலையில்…

’இதுதான் என் வீடு.’

அந்த வெளிச்சமான வீட்டில் ,போதை எழுப்பும் மணம் வெளிப்பட்டது. குஞ்சுமோன் தன் மூக்குத் துவாரங்களை அகலப் படுத்த வேண்டும் என்பது போல உணர்ந்தான்.

’உனக்கு என்ன வேண்டுமென்றாலும் உன் கையை நீட்டு, உனக்குக் கிடைத்து விடும்.’ சொல்லி விட்டு அரக்கன், மலர்கள் நிறைந்த பாறையில் முதுகைச் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டான். அவனுடைய கோரைப் பற்கள் மின்னுவதை குஞ்சுமோன் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் மிகக் களைத்திருந்தான். தரையில் படுக்க நினைத்த போது, ஒரு பூப்படுக்கை நிலத்திலிருந்து எழுந்தது. அவன் படுத்துக் கொண்டான். ஒளி குறைந்து இருள் பரவியது. குஞ்சுமோன் தூங்கி விட்டான். மனதில் நினைவுகள் ஒட்டமெடுத்துக் கொண்டிருந்தன. அம்மா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? அவனைத் தேடி வயல்வெளிகளுக்குப் போயிருப்பாளா? அந்த வயல்வெளிகளில், இருட்டிலிருந்து ஒரு குரல் வானத்தைப் பார்த்தபடி ’குஞ்சுமோன்…ஏ..குஞ்சுமோன் என்று எழுந்து கொண்டிருக்கும்!

அம்மாவின் குரல் தன் காதுகளில் எதிரொலிப்பது போல அவன் உணர்ந்தான்.எழுந்து உட்கார்ந்து காதுகளைத் தேய்த்துக் கொண்டு விட்டு மீண்டும் படுத்தான். வீடு, சுற்றுப்புறம், மாஸ்டர், எஜமானி என்று அவர்கள் மனதில் வந்துபோய்க் கொண்டிருந்தனர். மனம் போராடிக் கொண்டிருந்தது. எப்படித் தப்பிப்பது என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு வழியும் கிடைக்கவில்லை.

விடியற்காலைக் கதிர்கள் குகைக்குள் எட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்தன, குஞ்சுமோன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான் கிழக்கை நோக்கிய படிகளின் ஏற்றத்தில் ஊடுருவிய வெளிச்சம்— வெளிச்சத் தாழ்வாரம். குஞ்சுமோன் எழுந்து தாழ்வாரம் வழியில் நடந்து படிகளில் ஏறினான். அந்தப் பகுதியில் தாமரை மலர்களின் மணத்தை ஏந்திய மென்மையான காற்று வீசியது. உற்சாகமாக உணர்ந்து, படிகளில் வேகமாக ஏறினான்.      

அந்தப் படிகள் அகன்ற ஒரு முற்றத்திற்கு அழைத்துச் சென்றன. அங்கு மையத்தில் ஒரு தாமரைக் குளம். அதில் அரை மொட்டான தாமரை பூக்கள். முற்றத்திற்கு மேல் கூரையில்லை. தூரத்தில் சூரியனின் கதிர்களைத் தழுவியபடி மிகப் பெரிய குன்றுகள்.

வெளிச்சம் முன்னால் வந்து இருட்டுத் திரையை விலக்கியது. தாமரைக் குளமருகே நின்று குஞ்சுமோன் பார்த்தான். இப்படியொரு அழகான காலைப் பொழுதை அவன் இதுவரை பார்த்ததில்லை. நெஞ்சு கொதிப்பது போல உணர்ந்தான். பிரபஞ்சம் அவனைப் பார்த்துச் சிரித்தது. 

திடீரெனத் தன் தலைக்குள் ஏதோ வெளிச்சம் நுழைந்தது போல உணர்ந்து சிரித்தான். தன்னையறியாமலே ’ நான் இதைக் கடந்து விடுவேன்! என்று சத்தமாகச் சொன்னான்.

’என்ன?’

திடீரென பின்னாலிருந்து ஒரு கேள்வி. அவன் திரும்பிப் பார்த்த போது–தந்தம் போன்ற வெண்மை, அரிவாள் போன்ற வளைவு—காலைச் சூரியனில் அந்த நச்சுப் பற்கள் மின்னின.

’அரக்கனே! நீ என்னிடம் சொன்ன சொல்லில் இருந்து மாறுவாயா?’ குஞ்சுமோன் கேட்டான்.

’ஒரு போதும் மாட்டேன். இன்னொரு முறை பலத்தைச் சோதிக்க விரும்புகிறயா?’

’ஆமாம்.’

அரக்கன் சிரிக்க, அவன் வயிறு குலுங்கியது.

’சரி, நாம் ஆரம்பிக்கலாம்.’

’இங்கே பார்! அரக்கன் பார்த்தான்.

’நான் ஒரு முறை சிரிப்பேன். உன்னால் அப்படிச் சிரிக்க முடிந்தால், நான் தோல்வியை ஒப்புக் கொள்வேன். இல்லை என்றால்…அதன் அர்த்தம் உனக்குத் தெரியுமல்லவா?’

சொல்லி விட்டு குஞ்சுமோன் அழகாகச் சிரித்தான். கண்கள் ஒளியைக் கக்கின.

’இப்போது அந்த மாதிரி நீ சிரி, அரக்கனே!’

அரக்கன் ஒரு முறை சிரித்தான். ஆனால் அது கர்ஜனையாக மாறியது.

’நீ இதைச் சிரிப்பு என்று சொல்வாயா?’ குஞ்சுமோன் கேலி செய்தான்.

அரக்கன் மறுபடியும் முயற்சி செய்து பார்த்துத் தோற்றான். பல முறை முயற்சி செய்து தன் பிம்பத்தை தாமரைக் குளத்தில் கவனித்தான்.

வாயை நிறைத்திருந்த அவனுடைய கோரைப் பற்கள் அவனைச் சிரிக்க விடவில்லை. நீண்ட நேரமாகப் பல முறை முயற்சி செய்தும், அரக்கனால் அந்தச் சாதனையைச் செய்ய முடியவில்லை. தோல்வியுணர்வு அவனுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. அவன் பற்களைப் பிடுங்கியெறிய நினைத்தான். ஆனால் அது நிச்சயமாக வாழ்வின் முடிவிற்கான அர்த்தம்தான். குழப்பம் ஏற்பட, மேலும் கீழும் நடந்தான்.

’ஓ..அரக்கனே, இப்போது நீ தோல்வியை ஒப்புக் கொள்கிறாயா?’ குஞ்சுமோன் கேட்டான்.

மனச்சோர்வான தொனியில் அரக்கன் ’ நான் இப்போது உன் அடிமை’ என்றான்.

’அப்படியானால், உன் தோளில் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு என் அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போ.’

அரக்கனின் தோள்களில் உட்கார்ந்து அவனுடைய வட்டமான காதுகளைப் பிடித்துக் கொண்டான் குஞ்சுமோன். பாறையின் உச்சி திறந்தது. தோட்டத்தைக் கடந்த போது, சேவலின் கழுத்து வளைவு, நெருப்பு வளையம், பனி ஆகியவை வானினூடே பறந்து கொண்டிருந்தன.

’ஓ,அரக்கனே!’ குஞ்சுமோன் கூப்பிட்டான்.

’ஹூம்?’

’நீ வருத்தப்படுகிறாயா?’ 

’இல்லை.’

சிறிய பொழுதில் அருவிக் கரையிலிருந்த அரச மரத்தின் அடிப்பகுதியை அடைந்தார்கள்.

’ஓ,அரக்கனே, என் அம்மாவுக்கும், எனக்கும் மட்டுமே நீ தெரிய வேண்டும்.’

’சரி.’

அவர்கள் நடக்கத் தொடங்கினார்கள். அவர்கள் வீட்டை அடைந்த போது. அவன் அம்மா தரையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். குஞ்சுமோன்  அம்மாவைத் தழுவிக் கொண்டான்.

’எங்கே போயிருந்தாய் மகனே?’

’உனக்காக நான் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன் அம்மா.’ அவன் அரக்கனைக் காட்டினான். அம்மா திடுக்கிட்டாள்.

’பயப்படாதே, அம்மா. அவன் என் அடிமை. நீ என் அடிமைதானே?’

’ஆமாம்.’

அந்த நாள் முதல் அம்மாவையும்,மகனையும் பார்த்துக் கொள்ளும் சுமை அரக்கனின் மீது விழுந்தது. சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது— என்று எல்லா வேலைகளையும் எந்தச் சிரமுமில்லாமல் அரக்கன் செய்தான். ஆனால் இரவு நேரத்தில் அவர்களுக்குப் பாதுகாவலாக இருப்பதுதான் மிகக் கடுமையாக இருந்தது. அரக்கன் நாயாக மாறிக் குரைக்க வேண்டும் என்று குஞ்சுமோன் கட்டளையிட, அரக்கனும் அதைச் செய்தான். அதைக் கேட்ட மற்ற அரக்கர்கள் ’ மனிதர்களின் நாய் ’என்று அழைத்து அவனை ஏளனம் செய்தார்கள்.

வெட்கத்தில் தலை குனிந்த அரக்கன் ஒரு மூலைக்குப் போய் வருத்தமாக  அழுதான். கோயிலுக்குப் போய் விட்டு வந்த குஞ்சுமோனின் அம்மா அதைப் பார்த்துக் குழம்பிப் போய், அவனருகில் வந்து ’ஏன் அழுகிறாய்?’ 

என்று கேட்டாள்.

’ஒன்றுமில்லை.’

’ஒ,மகனே! ’ஏன் அழுகிறாய்?’

மற்ற அரக்கர்கள் எப்படியெல்லாம் தன்னைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே திரும்பவும் அழுதான். அரக்கனின் அகன்ற முதுகை நீவிக் கொண்டே, ’ வருத்தப்படாதே. நான் குஞ்சுமோனிடம் சொல்கிறேன்.’ என்றாள் அம்மா.

மகனிடம் பேசினாள். ’சிரிப்புப் போட்டியில் அவன் ஜெயித்து விட்டால், அவன் சுதந்திரமாகப் போய் விடலாம்.’ என்று மகன் ஒரே பதிலைச் சொன்னான் .நாட்கள் இப்படியே கடந்தன. அரக்கன் சோகத்துடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அம்மா அவனிடம் ’மகனே, ஏன் உன்னால் சிரிக்க முடியவில்லை?’ என்று கேட்டாள்.

’நீண்ட என் பற்கள்தான் காரணம்.’

’அவைகளை நீ பிடுங்கி விட முடியாதா?’

’அது என்னைச் சாக அடித்து விடும்.’

’ஒரு வேளை அவைகள் தாமாகவே விழுந்து விட்டால்?’

’எப்படி விழும்?’

சிறிது யோசனைக்குப் பிறகு, ’ உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஒரு வழியிருக்கிறது.’ என்று அம்மா சொன்னாள்.

’அது என்ன?’

’நீ ஒரு மனிதக் குழந்தையாக உருமாற வேண்டும். பிறகு சில காலம் என் மார்பில் பால் குடிக்கவேண்டும். உனக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கிறதா?’

’நான் மகிழ்ச்சியாக அதைச் செய்வேன்’ என்றான் அரக்கன்.

அரக்கன் சிறு குழந்தையாக மாறினான். வெள்ளையான,குண்டான, அழகான குழந்தை. வராந்தாவிலிருந்த தூணில் சாய்ந்து கொண்டு, அம்மா குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். பிறகு தன் மார்பை குழந்தை வாயில் வைக்க, அது சப்பியது. 

முதல்நாள் பால் வரவில்லை.இரண்டாம் நாளில் பால் பெருகியது. நான்கு நாட்கள் கடந்த பிறகு, கோரைப் பற்கள் இலகுவாகின. ஐந்தாம் நாளில் ஒரு பல்லும் ஏழாம் நாளில் மற்றொன்றும் விழுந்து விட்டன. அந்த வெள்ளைக் குழந்தை மடியிலிருந்து எழுந்து சிரித்தது.

’இப்போது நீ சுதந்திரமானவனாகி விட்டாய்.’ என்றான் குஞ்சுமோன்.

’நீ இப்போது போகலாம் மகனே!.சரியான பாதையில் போ. எதைப் பார்த்தும் பயப்படாதே அரச மரத்தினடியில் நின்று கொண்டு நான் உன்னைக் கவனித்துக் கொண்டிருப்பேன்.’ என்றாள் அம்மா.

வெள்ளைக் குழந்தை அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உருண்டு விழுந்தது. ’அம்மா, தயவுசெய்து என்னை அனுப்பி விடாதீர்கள். நான் உங்களுடனும், அண்ணனுடனும் இங்கேயே இருக்கிறேன். எனக்கு ஒரு பெயர் வையுங்கள்.’ விம்மிக் கொண்டே சொன்னது.

அம்மா இரண்டு குழந்தைகளின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தாள்.

நெஞ்சில் பால் சுரந்தது. கருப்பு நிறக் குழந்தையையும், வெள்ளை நிறக் குழந்தையையும் தன்னருகே இழுத்து, மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, சந்தோஷத்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ’ஓ, என் வெள்ளைக் குழந்தையே!’என்று பரவசத்தோடு அழைத்தாள்.

***

பின் குறிப்பு:

அப்பாக்காடுகள் [ சில தாவரங்களுக்கான பொதுவான மலையாளப் பெயர்] 

மூல ஆசிரியர் பற்றி:
உரூப்:
பருத்தோலி சாலப்புரத்து குட்டி கிருஷ்ணன்– உரூப் என்னும் புனைப்
பெயரில் மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில்
ஒருவராக விளங்குபவர். முற்போக்கு இலக்கியம் ,மற்றும் குழந்தை
இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்குரியவர்.
அமினா, சுந்தரிகளும் சுந்தரன்மாரும் , உம்மாச்சு, மின்டப்பென்னு,
ராச்சியாமா, உருபினின்ட்டே குட்டிக் கதைகள்,வெளுத்த குட்டி
ஆகியவை அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.
சாகித்ய அகாதெமி விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது, ஆசான்
நூற்றாண்டு விருது, எம்.பி.பவுல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப்
பெற்றவர்.


[நன்றி : The Greatest Malayalam Stories Ever Told A.J.Thomas , Aleph
Company, India 2023]


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.