போய்

முன்னொரு காலத்தில் ஹவாய் தீவின்  வடமேற்குப் பகுதியான கோஹலாவிலிருந்து  ஹவாயின் பெருநகரமான கோனாவிற்கு ஒரு மரப்படகில் மீனவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். படகில் மூட்டை மூட்டையாக உலர்ந்த சேம்புக்கிழங்குகள் வைக்கப்பட்டிருந்தன. கோனாவிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுக்கவும், அங்கு சந்தைப்படுத்தவும் அந்தக் கிழங்குகளை மீனவர்கள் கொண்டு சென்றனர்.

அவர்களது படகை ஒரு மாபெரும் சுறா தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. படகிலிருந்த மீனவர்கள் இதே சுறா கடந்த மாதப்பயணத்திலும் படகைத்தொடர்ந்ததை நினைவு கூர்ந்தர்கள். ஒரு மீனவர் கோபமாக சுறாவைப்பார்த்து ‘எதற்கு எங்களைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன வேண்டும் உனக்கு? எங்களிடம் சேம்புக்கிழங்குகள் தான் இருக்கிறது இதோ எடுத்துக்கொள்’ என்று அதை நோக்கி ஒரு சேம்புக்கிழங்கு மூட்டையை வீசினார். சுறா அந்த மூட்டையை தன் மூக்கால் நகர்த்திக்கொண்டு கடற்கரையோரம் சென்றது. இப்படியே தொடர்ந்து அவர்கள் பயணிக்கையில் எல்லாம் நடந்துகொண்டிருந்தது,  மீனவர்களுக்கு பெரும் மர்மமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

மீனவர்களில் ஒருவரான அகாய்க்கு இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த பயணத்தில் கிழங்கு மூட்டையை தள்ளிக்கொண்டு போன சுறாவை அகாய் ஒரு சிறு துடுப்புப் படகில் தொடர்ந்து சென்றான். கரையில் அந்த சுறாவுக்காகக் காத்திருந்த வயதான தம்பதியினரிடம் சுறா அந்த மூட்டையை சேர்ப்பிப்பதை அகாய் பார்த்தான். அவர்களிடம் விசாரித்தபோது வயதாவதால் வேலைக்குச் செல்ல முடியாமல் பட்டினி கிடந்த தங்களுக்கு அந்தச் சுறாதான் உணவுக்காகச் சேம்புக்கிழங்குகளைக் கொண்டு வந்து தந்ததாகவும், அதில் ’போய்’ கஞ்சி தயாரித்து உண்டு தாங்கள் உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு கடவுள்தான் கிழங்குகளை அனுப்புவதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

சுறாவின் இந்தச்செயலால் மகிழ்ந்துபோன மீனவர்கள் அதன்பிறகு வழக்கமாகக் கொடுப்பதைக்காட்டிலும் அதிக அளவு கிழங்கு மூட்டைகளை சுறாவுக்கு தந்தனர். இந்த வழக்கம் அந்த வயதான தம்பதிகள் உயிருடன் இருந்தவரையில் தொடர்ந்தது. அவர்கள் இறந்த பின்னர் சுறாவும் கண்ணிற்கே தெரியாமல் மறைந்து விட்டது.

“The Shark That Came For Poi” என்னும் இந்தக்கதையை  ஹவாய் மக்கள் தலைமுறைகளாக கேட்டும் சொல்லியும் வருகிறார்கள். இந்தப் பிரபலக் கதையே சேம்புக்கிழங்குக்கும் ஹவாய்க் கலாச்சாரத்துக்குமான ஆயிரமாண்டுகளைக் கடந்தும் தொடரும் உறவைச் சொல்லி விடுகிறது. இந்தக்கதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே போய் மற்றும் சேம்புக்கிழங்கு ஹவாய்த்தீவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக  மனிதர்களை அன்பினால் ஒன்றிணைத்துக் கொண்டிருகிறது.

இன்றும் ஹவாய் மரபுகளைச் சிறப்புப்பாடமாகப் பயிலும் காமேஹமேஹா பள்ளி மாணவர்கள் சேம்புச்செடிகளை வளர்த்தி, அறுவடை செய்து, அதன் கிழங்குகளை வேகவைத்து, தொன்மையான முறையில் அவற்றைப் பொடித்து ’போய்’ உணவை தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப்பள்ளி மாணவர்கள், சேம்பு பயிரிடுவதற்கு நிலத்தைத் தயார் செய்வது, ’போய்’ உணவுடன் உறவுகளை ஒன்றிணைப்பது, மேலும் போய் உணவைக் கொண்டு சிகிச்சையளிப்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். 

’போய்’ உணவு தொல் காலத்திலிருந்து இன்று வரையிலுமே நிலத்துக்கும் மனிதர்களுக்கும் கடவுளுக்குமான பாலமாக இருந்து வருகிறது. ’போய்’ சேம்பின் தரையடித் தண்டுக் கிழங்குகளிலிருந்து தயாரிக்கப்படும்  போலினேசியாவின் மிக முக்கியமான  பாரம்பரிய உணவு.

பசிபிக் கடற்தீவுகளில் வசிப்பதற்கான இடம்தேடிக் தேடல் பயணம் மேற்கொண்டிருந்த பாலிநேசிய மாலுமிகள்  வளமான எரிமலைக் குழம்பு மண்ணிருந்த ஹவாய் தீவைச் செழிப்பான வாழிடமாக அடையாளம் கண்டார்கள். அவர்கள் கொண்டுவந்த சேம்பு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை உணவுக்காக அங்கே பயிரிட்டார்கள். அவர்களுடன் கோழி, பன்றி, நாய் மற்றும் வாழை, கரும்புப்பயிர்களும் அங்கே அறிமுகமாயின. அப்போதிலிருந்து சேம்பின் தரையடிக்கிழங்குகளை வேகவைத்து  மாவாக்கி நீர் மட்டும் கலந்து  சத்தான சுவையான ’போய்’ உணவை தயாரித்து உண்டார்கள். அகழ்வாய்வுகள் ஹவாய்த்தீவுகளில்  ’போய்’ தயாரிப்பு  ஹவாயில் மக்கள் வசிக்கத்தொடங்கிய 1000-1200 AD-யிலிருந்தே நடந்திருப்பதற்கான சான்றுகளை  காட்டுகிறது.

ஆங்கிலத்தில் டாரோ (Taro) எனப்படும் சேம்பு பெரிய யானைக் காதுகளைப் போன்ற இதய வடிவ இலைகளைக் கொண்டிருக்கும் ஏரேசியே குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடி.

வெப்பமண்டல பசிபிக் கடல்சார் பகுதிகளின் மிக முக்கியமான உணவுத்தாவரம் சேம்பு.   ஹவாயில் இதன் பெயர்  Kalo, ஃபிஜித் தீவில் Dalo. இயற்கையாக வளருகையில் வெளிறிய பச்சைநிறத்தில் சதைப்பற்றான மஞ்சரிகளை அளிக்கும் சேம்பு, சாகுபடி செய்யப்படும்போது  அரிதாகவே மஞ்சரியை உருவாக்கும். மஞ்சரி உருவாகும் போது  இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவில் இலைகள் உருவாகும். இலைகள் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களைப் பொருத்தும் மரபணுக்கட்டமைப்பைப் பொருத்தும் வேறுபடும். 

இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுக்களும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.

அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் சேம்பு மிக அதிக நீர் தேவை கொண்ட தாவரம். இவை தனித்தும், வாழையுடன் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.

 ஆசியாவைப் பூர்வீகமாக்கொண்ட சேம்பு, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் பசிபிக்பகுதிகளின் தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மில்லியன் மக்களின் பிரதான உணவாக இருக்கிறது. மத்திய தரைக்கடலின் தெற்குப் பகுதிகளில் உருளைக்கிழங்கை விட மிக அதிக அளவில் சேம்பு உண்ணப்படுகிறது.

சேம்பு அதன் கிழங்குகளுக்காகப் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. பயிரிட்ட 6-10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் சேம்பு ஒரு ஹெக்டேருக்கு 5-லிருந்து 10 டன் வரை விளைச்சல் தரும்.  சேம்பு பிரேஸில் பகுதிகளில் சேனைக்கிழங்கு  (yam) என்று அழைக்கப்படுவதால் உலகின் பல நாடுகளில் சேனைக்கிழங்கும் சேம்பு கிழங்கும் ஒன்றென நினைக்கப்படுகிறது. 

இயற்கையான வாழிடங்களில் உலகெங்கும் இருக்கும் உண்ணப்படும் கிழங்குகளைக்கொண்ட சேம்பின் காட்டு மூதாதைகள் மொத்தம் 12 எனக் கண்டறியப்பட்டிருக்கின்றன.  அவற்றில் 6 வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்றன. 

சேம்பு ஏரேசி குடும்பத்தின் 106 பேரினங்களில் ஒன்றான கோலகேஷியா பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் சுமார் 2500 சிற்றினங்கள் உள்ளன. உண்ணத்தகுந்த கிழங்குகளைக் கொண்டிருக்கும் அலகேஷியா, அமொர்போபேலஸ் மற்றும் சேந்தோசோமா ஆகிய தாவரங்களும் இந்தப் பேரினத்தைச் சேர்ந்தவையே. (Alocasia, Amorphophallus & Xanthosoma).

Colocasia esculenta என்னும் அறிவியல் பெயர் கொண்ட சேம்பு இதன் தரையடித் தண்டுக் கிழங்குக்காகவே  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகமெங்கிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தண்டுக் கிழங்குகளிருந்தும்  நறுக்கப்பட்ட முற்றிய தண்டுகளிருந்தும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பசிபிக் கடல்சார் பகுதிகளில் குறிப்பாக ஹவாய் நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் சேம்பு வரலாற்றுக் காலத்திலிருந்தே பிரதான உணவாக இருந்து வருகிறது. சேம்பின் ஆயிரக்கணக்கான வகைகள் உலகெங்கிலும் இருந்தாலும்  அதிகம் சாகுபடியாவது : 

எடோ வகை எனப்படும்

 (1) “eddoe” , Colocasia esculenta var. antiquorum (syn. Colocasia esculenta var. globulifera )

மற்றும்  டஷீன் வகையான

 (2) “dasheen” ,Colocasia esculenta var. esculenta. இவையிரண்டும்  தான்.

தரையடிக்கிழங்கின் அளவு மற்றும் வடிவங்களின்  கொண்டுதான் இந்த இரு வகைகளும்  வேறுபடுத்தப் படுகின்றன.    esculenta வகை பெரிய நடுக்கிழங்கையும்  சிறிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும்,     antiquorum வகை சிறிய நடுக்கிழங்கையும் பெரிய பெரிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும். 

இரண்டு வகைகளுக்கும் மரபணுக் கட்டமைபிலும் வேறுபாடுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

C. esculenta வகைச்சேம்புதான் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில்  பயிராகிறது. சேம்பு உருளைவடிவக் கிழங்குகளும் மிக நீண்ட சதைப்பற்றான் இலைக்காம்பையும் கொண்டிருக்கும் 

1.5 அடி உயரம் வரை வளரும் சேம்பில் மலர்கள் உருவாகும் போது இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவிலான இலைகள் உருவாகும். இலைகளின் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களளைப் பொருத்தும், மரபணுக்கட்டமைப்பைப்பொருத்தும் வேறுபடும்.

இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுகக்ளும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.  

சேம்பின் உண்ணக்கூடிய பகுதியானது  வெண்ணிற உட்பகுதியைக் கொண்ட தண்டடிக்கிழங்குதான் (underground stem) என்றாலும், நிலத்தடியில் இருப்பதால், சேம்புக்கிழங்கு வேர்க்காய்கறியாகவே கருதப்படுகிறது. சில வகைசேம்பில் கிழங்கின் உள்ளே ஊதா நிறம் காணப்படும். கிழங்கின் தோல் மண்ணிறத்திலிருக்கும்.

ஏரேசி (Araceae) குடும்பத்தின் பிற உண்ணக்கூடிய வேர்க்கிழங்குகளைத் தரும் தாவரங்களைப் போலவே சேம்பும் வேர்க்காய்கறிகளில் ஒன்றுதான் எனினும் இதன்கிழங்குகளில் இருக்கும்  கால்சியம் ஆக்ஸலேட்  குருணைகள் உண்டபின்னர் நாக்கில் நமைச்சலை உண்டாக்குவதாலும், இதில்  நீரில் கரையும் ஊட்டச்சத்து எதிர்ப்பியான டேனின்கள் இருப்பதாலும் இந்தக்கிழங்கு  பக்குவமாகச் சமைத்தபின்னரே உண்ணப்படும் காய்கறியாக இருக்கிறது.

ஆவியில் அல்லது நீரில் வேகவைத்த கிழங்குகளோடு   விரியாத இளம் இலைகளும், நீண்ட சதைப்பற்றான இலைக்காம்பும் கீரையைப் போலச் சமைத்து உண்ணப்படுகிறது..  

ஒருவருடப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது என்றாலும் சேம்பு ஒரு பல்லாண்டுப் பயிர். பிற வேர்க்காய்கறிகளைக் காட்டிலும் சேம்புக்கிழங்கு அதிகச் சத்துக்கள் கொண்டது

சேம்புக் கிழங்குகளின் மாவுச்சத்தின் அளவானது 12-லிருந்து 20 சதவீதம் வரை இருக்கும். சேம்புக்கிழங்கில் மாவுச்சத்துடன் ஏராளமான புரதம் வழவழப்பான பசைத்திரவமாக  இருக்கிறது. நீரில் கரையும் தன்மை கொண்டிருக்கும் இந்த புரதங்கள்தான் சேம்பின் சுவைக்கு காரணமாகின்றன. சேம்பில்    சாம்பல் சத்து, எண்ணெய்ச் சத்து,  நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து, சோடியம்,  வைட்டமின் B, உள்ளிட்ட பல வைட்டமின்கள்,  கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் பலவகையான தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறது.,  ஹவாயில் குழந்தைகளின் முதல்  திட உணவு எப்போதுமே ’போய்’தான் 

இந்தக்கிழங்கு சமைத்தபின் மிகவும் மிருதுவாகிவிடுகிறது என்பதால் விரும்பத்தக்கஉணவாக இருக்கிறது. 

ஹவாயில்  kalo என்றழைக்கப்படும் சேம்பு ஹவாய் மக்களின் கடவுள்களுடனும் முன்னோர்களுடனும் தொடர்பிலிருக்கும் மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கும்  ஒரு உணவுத்தாவரம். ஹவாயில் சேம்புக் கிழக்கு பல மருத்துவ உபயோகங்களையும் கொண்டிருக்கிறது 

சேம்பு ஹவாயின்  கனகா மோலி (Kanaka Maoli) பழங்குடியினருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இப்பழங்குடியினர் சேம்பு மற்ற அனைத்து  உணவுகளைக் காட்டிலும் வாழ்வதற்கு மிக அதிக சக்தியைக் கொடுப்பது என நம்புகிறார்கள்.

சேம்புக்கிழங்கிலிருந்துதான் பாலிநேசியாவின் பிரதான உணவான ’போய்’ (Poi) தயாரிக்கப்படுகிறது. ஹவாய் மக்களின் வாழ்வாதாரமாகவும் அடையாளமாகவும் சேம்பும், போய் உணவும் விளங்குகிறது. 

போய் உணவு மக்களை ஒன்றிணைத்து, அதன் நெருங்கி அமைந்திருக்கும் இலைகளைபோல ஒஹானா (ohana) எனும் குடும்ப அமைப்பை உறுதிசெய்து,  அமாக்குவா (aumakua) என்னும் மூதாதையரின் ஆசியைப் பெற்றுத்தருவதாக ஹவாய் மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களின் கலாச்சாரத்திலிருந்து பிரிக்கவே முடியாத உணவுப் பொருளாகச் சேம்புக்கிழங்கு இருக்கிறது.

ஹவாய்ப் பழங்குடியினரான கனகா மாலிகளின் தொன்மங்களில் வான் தந்தைக்கும் பூமித்தாய்க்கும் பிறந்த பெண் கருவுற்று, அவளது  இறந்து பிறந்த முதல் குழந்தையாக சேம்பு கருதப்படுகிறது. இறந்து பிறந்த  Haloa-naka என்னும் அந்த ஆண்குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டு அது  சேம்புத்தாவரமாக வளர்ந்தது என்கிறது அவர்களின் தொன்மம். இரண்டாவதாகப்பிறந்து ஆரோக்கியமாக வளர்ந்த Hāloa தான் ஹவாயின் முதல்  மனிதன் என ஹவாய் தொன்மங்கள் குறி[ப்பிடுகின்றன. சேம்புச்செடிக்கு ஹவாயில் Haloa என்றும் வழங்கு பெயருண்டு. Haloa என்றால் நீடித்திருக்கும் சுவாசம் என்று பொருள்.

இந்தத்தொன்மத்தினால்தான் சேம்புச்செடியும் அதன் கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் போய் உணவும் ஹவாய் கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களாகி விட்டிருக்கிண்றன

போய் உணவு தயாரிப்பது மிக மிக எளிது. சேம்புக்கிழங்கு சுத்தமாக்கப்பட்டு நீராவியில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் தோல் நீக்கி சுத்தமாக்கப்பட்டு, மென்மையாகிவிட்டிருக்கும் கிழங்குகள் மரத்தொட்டி அல்லது  கல்தொட்டிகளில் சிறிதளவு நீர் விட்டு பசையாக அரைக்கப்பட்டு சற்று இனிப்பாக இருக்கையில் அப்போதே உண்ணப்படுகின்றன அல்லது சிறிதுநாட்கள் நொதிக்க வைக்கபட்டு  புளிப்புச்சுவையுடன் உண்ணப்படுகின்றன.

சாம்பல் கலந்த ஊதா நிறத்திலிருக்கும் போய் உணவு ஆழம் குறைவான தட்டையான சிறு கிண்ணங்களில் நறுக்கிய தக்காளி வெங்காயத் துண்டுகளுடன்  பரிமாறப்படுகிறது. ஹவாய் மக்கள் போய் உணவை வெறும் நீரும்  நிறைய அன்பும் சேர்த்துச் சமைக்கப்பட்ட சுவையான உணவு என்னும் பொருளில் அதை ‘ஓனோ’ என்பார்கள்.   

பட்டமளிப்பு விழா, பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் போய் உணவு கட்டாயமாக இடம்பெறும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. கூழ் போலவோ அல்லது கஞ்சியாகவோ தயாரிக்கப்படும் போய் உணவு பன்றிக்கறி, சால்மன் மீன் கறி அல்லது கோழிக்கறி போன்ற உப்புசேர்க்கப்பட்ட  உணவுகளுடனோ அல்லது தனியாகவோ  உண்ணப்படுகிறது.

போய் உணவில் சேர்க்கப்படும் நீரின் அளவானது வேறுபடும். போய் உணவை எத்தனை விரல்களால் எடுத்து வாய்க்கருகில் கொண்டு செல்லமுடியும் என்பதைக் கொண்டு அதன் திரவ நிலை 3 விரல் போய், 2 விரல் போய் அல்லது 1 விரல் போய் என வகைப்படுத்தபப்டுகிறது.

சற்று கெட்டியான கூழ் போன்ற பதத்தில் இருக்கும் 1-விரல்போய் என்பது செல்வந்தர்களுக்கானதென்றும், நன்கு நீர்த்த 3- விரல்போய் என்பது ஏழைகளுக்கானதென்றும் பொதுவில் சொல்லப்படுகிறது.  

  
ஹவாயில் 1970-களிலிருந்தே  சுற்றுலாப்யணிகளுக்கென ’போய்’ தினமும் புத்தம் புதிதாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேம்பு இலையில் பொதியப்பட்ட இமு எனப்படும் நிலத்தடி அடுப்பில் சமைக்கப்பட்ட  பன்றி இறைச்சியுடன் ’போய்’ உணவைச் சுவைப்பதற்கென்றே உலகெங்கிலும் இருந்து ஹவாய்க்கு சுற்றுலாப்பயணியர் வருகைதருகிறார்கள்.   

முதன் முதலில் போய் உணவைச்சுவைக்கும் வெளிநாட்டிஅன்ர் அதை போஸ்டர் ஒட்டும் பசைபோலிருப்பதாக கருதுவார்கள் என்றும்   விருந்து முடியும்போது ஏராளமான போய்க் காலிக்கிண்ணங்கள் இருப்பது அங்கே வாடிக்கை எனவும் சொல்லப்படுகிறது. 

ஹவாயில் Waiahole எனப்படும் உணவகம் இதற்குப் பிரபலமானது. சுற்றுலாப்பயணிகள் ’போய்’ உணவைச் சுவைக்க அங்கே வரிசையில் காத்திருப்பார்கள்.

இப்போது போய் புத்தம் புதிதாகத் தோண்டி எடுக்கப்பட்ட கிழங்குகளாகவும், கேக்குகள், தகடுகளாகச் சீவி வறுக்கப்பட்ட சிப்ஸ்கள் அல்லது தேங்காய்ப்பாலுடன் கலந்து அருந்தும் பானமாக, ரொட்டி அல்லது கஞ்சியாகவும் ஹவாயில் கிடைக்கிறது. உடனடி உணவாகவும் , ஒரு சிலநாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்ணும் வகையிலும் போய் உணவு சந்தைப்படுத்தப்படுகிறது.

மருத்துவக் காரணங்களுக்காகவும் போய் அங்கு உண்ணப்படுகிறது. போய் உணவு சார்ந்த ஒவ்வாமைகளை குணப்படுத்துகிறது. ரத்தச் சர்க்கரை அளைவை, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உடலெடையைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கவும், சருமப் பொலிவிற்கும் போய் உணவு இங்கே வழக்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  குடல் புற்றுநோயெதிர்ப்புக்கும் போய் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

முன்காலத்தில் வேகவைக்கப்பட்ட கிழங்கு தோலுரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு கல் அல்லது மரப்பலகைகளில்  இடிக்கப்பட்டு  மாவாக்கப்பட்டது. இப்போது ப்ரெஷர் குக்கர்களில் வேகவைக்கப்பட்டு மிக்ஸியில் அரைத்து கூழாக்கபடுகிறது  .

சமைக்காத சேம்புக்கிழங்கை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்பதை  எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பண்டைய ஹவாய் மக்களின் பிரதான உணவாக தானியங்களோ, பால்பொருட்களோ, இறைச்சியோ அல்லாது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேம்புக் கிழங்கு, மீன், தேங்காய் ஆகியவையே அவர்களின் உணவாக இருந்தது. 

உலகில் சுமார் 100 மில்லியனுக்குமதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் ’போய்’ மிக முக்கியமான  உணவாக கருதப்படுகிறது.

உலகின் அதிகமாகப்பயிரடப்படுபவைகளில் 14 -வது பயிராக இருக்கும் சேம்பின் நோய் எதிர்ப்புச்சக்திகொண்ட வகைகளை இப்போது பயிரிடும் ஹவாய் விவசாயிகள், அமெரிக்கச் சந்தைகளில் சேம்புக்கு தொடர்ந்த தேவை இருப்பதை உறுதி செய்கிறார்கள். 

ஹவாய் மட்டுமல்லாமல்  ஃபிஜி, சமோவா மற்றும் டோங்கா தீவுகளின் மிக முக்கியமான ஏற்றுமதி செய்யப்டும் தாவரப்பொருட்களில் ஒன்றாக  சேம்புக்கிழங்குகள் இருக்கின்றன. 

 தலைமுறைகளாக போய் உணவு ஹவாய்  மக்களின் ஆன்மாவுக்கும் உடலுக்கும் புத்துயுரூட்டிக்கொண்டிருக்கிறது.  

ஹவாய் கலாச்சாரத்தில் சேம்புக்கிழங்குப் பயன்பாடு மற்றும் போய் உணவுத் தயாரிப்பு என்பது வெறும் விவசாயப்பலன்களுக்காக மாத்திரமல்ல, எரிமலைகுழ்மபு படிந்த அந்தத் தீவைச் செழிப்பாக்கி தலைமுறைகளின்  வாழிடமாக மாற்றிய அவர்களின் முன்னோர்களின் மரபைக்காப்பற்றும் பொருட்டும் தான் தொடர்கிறது.

முதன்முதலாக பாலினேசியாவிலிருந்து ஹவாய்க்கு வந்த குடியேறிகள் அந்தத் தீவை அன்பிற்கான நிலம் என்று குறிப்பிட்டார்கள்.  சேம்பு விவசாயிகளின் பாதுகாப்பான கரங்கள், ஹவாய் கலாச்சாரத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள், துடிப்பான புதியதலைமுறை ஆகிய மூன்றும் இணைந்து சேம்பு மற்றும் போய் உணவைப் பாதுகாத்து ஹவாய் தீவு என்றென்றைக்குமே அன்புக்கான நிலமென்பதை அழியாத உண்மையாக்கிக்கொண்டிருகிறார்கள்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.