மிகச்சிறிய மகாநதி
மிகச் சிறிய
ஆனால் அத்தனையும்
அழகாக மிளிரும்
மலரைக் கட்டி சரமாக்குவதான
நடனமொன்றை
நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய்
பித்தனால் தாள முடியவில்லை
ஒரு அதிகாலையை
அதன் நிறப்பெருக்கை
ஒவ்வொரு மலராகக் கோர்க்கும்
ஒளிக்கரங்களைக்
காணக் காண
இந்த அறைக்குள்
இத்தனை மெல்லிய
உன் விரலின் அழகை
பாடுகையில்
அவ்வொளிக்கரங்களை
பாடுபவனாக ஆகிறேனா?
சிறியவற்றை மாபெரும் சுழற்சியில்
கோர்க்கும் மாயம்
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
குடத்தினுள் அமர்ந்து
வந்துவிடுகிறது மகாநதி
இச்சிறு இல்லத்தினுள்
அத்தனை அசைவு
இக்கணத்தில் நீ அமர்ந்திருக்கிறாய்
இக்கணமென்பது எத்தனை பெரியது
ஒரே ஒரு கணம் ஓய்ந்து கண்டுகொள்
இந்த ஒரு கணத்துள்
அத்தனைப் பிரபஞ்சமும் அசைவதை
சுடரின் மையம்
நாம் இதற்கு மேல் பேசிக்கொள்ளவேண்டாம்
மௌனங்கள் தேரும் இசைக்கு நம்மை விட்டுவிடுவோம்
எதைக் காரணமாக்கியும் பறவைகளை
அதன் பறத்தலான இயல்பை முறிக்கவேண்டாம்
தன் தன் போக்கில்தான் உலகின்
நதியெல்லாம் கடல் சேர்கிறது
இத்தனை செய்த கரங்களுக்கு
ஒரு சுடரை ஏற்றத் தெரியாதா என்ன?
அணுவுக்கு ஒரு கரு உண்டு தெரியும்தானே?
கிரகங்ககளின் மையமான சூரியனுக்கு ஒரு கருமையம் உண்டு தெரியும்தானே?
பால்வெளிக்கு ஒரு மையம் உண்டு தெரியும்தானே?
அண்டங்களுக்கு ஒரு மையம் உண்டு தெரியும்தானே?
இம்மையங்களுக்கெல்லாம் ஒரு மையமுண்டு தெரியும்தானே?
இத்தனை செய்த கரங்களுக்கு
ஒரு சுடரை ஏற்றத் தெரியாதா என்ன?
சுடர் ஒளிரும்
நாம் மேலும் மேலும் மௌனம் சூடுவோம்
உத்தரணி நீர்
இது யோசிக்கிறது
இது இன்ப துன்ப சுழலில் சிக்கியுள்ளது
இது உற்றுப் பார்க்கிறது
இது இதனுள் விரித்துள்ளது ஓரு மாபெரும் மூடுபனியை
இதன் உத்தரணி நீர் கடலை நினைக்கிறது
எத்தனை உத்தரணிகளால் ஆனது கடல்?
திசை

சரிந்து சரிந்து
விழுவதற்கு
வெளியில் சரிவுகள் இல்லை
வெளியில் மேல் கீழ் இல்லை
காலத்தினுள் இருப்பு மட்டுமே
இரு கண்கள் காண்கிறது
சிறு விழி வட்டத்தினுள்
மேலசைந்து மேல் என்றது
கீழேநோக்கி கவிந்து கீழ் என்றது
வெளியில் இப்படியாகப் பிறந்தது
மேல் வானமும் கீழ் வானமும்
உதிர்ந்து செல்லும் சொல்
சுற்றி சுற்றி
உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன்
இத்தனை தனிமையான இரவில்
காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்
முழுதும் அமைதிகொண்டுள்ளேன்
இவ்வமைதி என்னை எதை நோக்கி இட்டுச்செல்லுமோ?
உன் இருப்புகளின் பெருவெளியில் தேவதைகள் உண்டெனில்
ஒளியை சிறகாய் கொண்டுள்ள ஒரு தேவதையை
அனுப்பி வை
என் காதுகளில் நான் கேட்க விரும்புவது எல்லாம்
நதி கூழாங்கற்களிடம் சொல்லும் அச்சொல்லைத்தான்
இருப்புகளின் பெருக்கில் இயல்பாக
உதிர்ந்து போகும் ஒரு சொல்
மொட்டைமாடி
நான் விழுந்தால்
மண் எனக்காக குழைந்துவிடும்
நான் விழுந்தால்
நதி ஏந்திக்கொள்ளும்
நான் விழுந்தால்
காலம் என் மேல் போர்வையாக படரும்
பூமியின் விளிம்புக்கு வந்தாயிற்று
அடிமுடியற்ற அகாதத்திலிருந்து
நோக்கிற்று இரு கண்கள்
நான் சிமிட்ட சிமிட்ட சிமிட்ட
சிமிட்டிற்று அக்கண்கள்
பூமியின் மொட்டைமாடியிலிருந்து விழுந்தால்
எது என்னை ஏந்திக்கொள்ளும்?
நீ மட்டுமேயான
அன்னையே
மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன்
ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான்
எத்தனை எத்தனை அழகு
கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள்
அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது
சுடரேற்றும் வளைக்கரங்கள்
விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை
ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில்
என் இசையின் காலங்கள் கழிகிறது.
நானில்லாத ஒரு சொல்!
நானில்லாத ஒரு சுடர்!
நீ மட்டுமேயான ஒரு கணம்!
அன்னையே!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
