ஒவ்வொரு வருடமும் ‘தேங்க்ஸ்கிவ்விங் டே’ கொண்டாட்டத்தின் பொழுது அமெரிக்க அரசு ஒரு விநோதமான நடைமுறையைக் கையாளும். அதாவது, வெள்ளை மாளிகையில் ஒன்று அல்லது இரண்டு வான்கோழிகளுக்கு அதிபர் ‘மன்னிப்பு’ வழங்குவார். எதற்கு மன்னிப்பு? பறவை என்ன தப்பு செய்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதிபர் மன்னிப்பு வழங்கினால் எஞ்சிய நாட்களைச் சிரமமின்றி உயிர்பயமின்றி வான்கோழி(கள்) வாழலாம். அருகிலுள்ள பூங்காவிலோ, பண்ணையிலோ சுதந்திரமாக வாழும் அதிர்ஷ்டம் அந்தப் பறவைகளுக்குக் கிட்டும்.
இந்த வருடம் கூடுதலாக வெள்ளை மாளிகையில் இருந்து மற்றொரு “மன்னிப்பு” செய்தியும் வெளியாக, ஆளும் கட்சியினரிடமும் அதிருப்தி அலைகள்! வரி ஏய்ப்பு மற்றும் உண்மையை மறைத்து துப்பாக்கி வாங்கியது தொடர்பான இரண்டு கிரிமினல் வழக்குகளில் தண்டனையை எதிர்கொண்டிருந்தார் ‘ஹண்டர் பைடன்’. அவருக்கு அதிபர் ‘ஜோ பைடன்’ டிசம்பர் 1, 2024 அன்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
யார் இந்த ‘ஹண்டர் பைடன்’?

அதிபர் பைடனுக்கும் முதல் மனைவி ‘நீலியா ஹண்ட’ருக்கும் பிறந்தவர்கள் போ பைடன், ஹண்டர் பைடன் மற்றும் நவோமி கிறிஸ்டினா பைடன். இதில் 54 வயதான ‘ஹண்டர் பைடன்’ தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுச் சிறைக்குச் செல்லவிருந்த நிலையில் இந்த அதிரடியான மன்னிப்புப் படலம் நிகழ்ந்துள்ளது.
இன்னும் ஒரு மாதமே அதிபராகப் பதவியில் நீடித்திருக்கும் நிலையில் தன் கட்சியினரிடையே பெரிய விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளார் அதிபர். இதன் மூலம், சிறப்பு ஆலோசகர் ‘டேவிட் வெயிஸ்’ ஹண்டர் மீது கொண்டு வந்த இரண்டு கூட்டாட்சி வழக்குகளின் தண்டனையிலிருந்து மகனை காப்பாற்றியிருக்கிறார். வரிக் குற்றச்சாட்டுகளுக்காக, 17 ஆண்டுகள் வரை ஃபெடரல் சிறைத் தண்டனையையும் $1.35 மில்லியன் அபராதத்தையும் அதே நேரத்தில் உண்மையை மறைத்து துப்பாக்கி வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டில் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றிருந்த நிலையில் இந்த மன்னிப்பின் மூலம் இவற்றிலிருந்து தப்பித்திருக்கிறார் ஹண்டர் பைடன்.
2021ஆம் ஆண்டு குறிப்பில், தான் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் சிகிச்சைப் பெற்று போதை பழக்கத்திலிருந்து மீண்டு விட்டதாகவும் கூறியுள்ளார் ஹண்டர். துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் வரி மோசடி தொடர்பான பல குற்றச்சாட்டுகள் காரணமாக சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு, சிறைக்குச் செல்லவிருந்தார். டெலவேர் மாநிலத்தில் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக டிசம்பர் 12 அன்றும், கலிஃபோர்னியாவில் வரிக் கட்டணங்களுக்காக டிசம்பர் 16 அன்றும் தண்டனையை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
வரி விசாரணை 2018ல் தொடங்கி, அப்போதைய அதிபர் ட்ரம்ப் அதைப் பற்றிப் பேசி பைடனுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அதிபர் தேர்தலை முன்னிட்டுச் செய்திகள் வெளிவராமல் வெற்றிகரமாக மறைத்திருக்கிறார்கள். புலனாய்வாளர்கள் சீனாவிலும் பிற இடங்களிலும் ஹண்டரின் வணிகப் பரிவர்த்தனைகள் மூலம் வரிக்குற்றங்களைச் செய்திருக்கலாமோ என்று ஆராய்ந்திருக்கின்றனர்.
2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, டெலவேரில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்கள் அவரது “வரி விவகாரங்களை” விசாரித்து வருவதாக ஹண்டர் பைடன் அறிவித்தார்.
ஜோ பைடன் துணை அதிபராக இருந்த பொழுது ஹண்டர் பைடனின் போதைப் பழக்கம், சீனாவில் அவரது நடவடிக்கைகள், உக்ரேனிய எண்ணெய் மற்றும் எரிவாயு வாரியத்தில் அவரது பதவியில் நடந்த சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் அனைத்தும் 2020 தேர்தலின் பேசுபொருளாக இருந்தாலும் உண்மையை வெளிவராமல் ஜனநாயகக் கட்சியினர் பார்த்துக் கொண்டனர். அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உக்கிரமாக ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பரித்த அதே நேரத்தில் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குழுவில் ஹண்டர் பைடனின் நிலைப்பாட்டை விசாரிக்க அதிபர் ட்ரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாக, “பதவி நீக்க” விசாரணையிலிருந்து ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.
மார்ச் 2022ல் ஹண்டர் பைடனின் வரி விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உக்ரேனிய இயற்கை எரிவாயு நிறுவனமான ‘பரிஸ்மா’வின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றிய போது ஹண்டர் பைடன் பெற்ற பணம், அதற்கான வரிகள் குறித்து விசாரணை நடந்தது. நவம்பர் 2022 இடைக்காலத் தேர்தல்களில் செனட்டின் கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சி மீண்டும் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து, ஹண்டர் பைடன் உட்பட ஜோ பைடனின் குடும்பத்தினர் மீதான விசாரணையை முன்னெடுத்துச் செல்லத் தயாராயினர்.
ஒபாமாவின் ஆட்சியில் ஜோ பைடன் துணை அதிபராக பதவி வகித்த காலத்தில் உக்ரைன் மீதான அமெரிக்கக் கொள்கையில் முக்கிய நபராகவும் இருந்தார். அப்பொழுது உக்ரேனிய எரிசக்தி நிறுவனத்தின் சார்பாக அவரது மகன் ஹண்டர் பைடன் இயக்குநர்கள் குழுவில் அங்கம் வகித்தார். அப்பொழுது நடந்த பண பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்புகள், தந்தையின் பதவியைத் துஷ்பிரயோகம் செய்தது 2020 தேர்தலில் புதிய கவனத்தைப் பெற்றது. ஹண்டர் பைடன் மீது உக்ரைன் விசாரணையை நடத்த ட்ரம்ப் கட்சியினர் தீவிரமாக, தன்னுடைய அதிகாரத்தால் உக்ரேனிய அரசைத் தடுத்து நிறுத்தியதாக பைடன் மீது குற்றம் சாட்டினர் குடியரசுக்கட்சியினர். உக்ரைன் அரசிற்கும் அதிபர் ஜோ பைடனுடக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தத்திற்குத் தொடர்புடையதாகக் கருதும் FD-1023 ஆவணத்தை காங்கிரசில் சமர்ப்பிக்க எஃப்பிஐக்கு அழுத்தம் கொடுத்தனர்.
மார்ச் 2023ல் சிறப்பு வழக்கறிஞர் டேவிட் வெயிஸ் ஹண்டரின் வழக்குகள் மீதான விசாரணையைத் துவங்கினார். ஏப்ரல் 2023ல், ஹண்டர் பைடன் மீதான விசாரணையை ஆளும் பைடன் நிர்வாகம் தவறாகக் கையாளக்கூடும். அதன் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக IRSன் மேற்பார்வையாளர் சட்டமியற்றுபவர்களிடம் கூறியதாக ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம், பைடனுக்கும் இந்த வரி ஏய்ப்பில் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தது.
மே 2023ல் IRSன் மேற்பார்வையாளர் ஹண்டர் மீதான விசாரணையில் இருந்து நீக்கப்பட்டார். ஜூன் 5, 2023 அன்று ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் காமர், அதிபர் ஜோ பைடனுடன் தொடர்புடையதாகக் கருதும் FD-1023 ஆவணத்தை காங்கிரசில் சமர்ப்பிக்க எஃப்பிஐ இயக்குநர் கிரிஸ் ரே மறுத்ததற்காக அவர்மீது அவமதிப்பு விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்தார்.
ஜூன் 20, 2023 அன்று ஹண்டர் பைடன் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டார். ஜூன் 22, 2023 அன்று இரண்டு IRS அதிகாரிகள் இந்த வழக்குகளில் ஆளும் அரசின் இடையூறு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கினர். அதிபர் பைடன் மீது பதவி நீக்க விசாரணை கொண்டுவர குடியரசுக்கட்சியினர் தீர்மானித்தனர். அதிபர் பைடனுக்கும் ஹண்டரின் நிறுவனங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நிரூபணம் செய்தாலும், தந்தையின் பெயரை வைத்து தன்னுடைய அலுவல் வேலைகளை முடித்துக் கொண்டதாக ஹண்டரின் மேல் குற்றங்கள் சுமத்தப்பட்டது.
இப்படியே தொடர்ந்த விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்துபவராக இருந்தபோது சட்டவிரோதமாக துப்பாக்கியை வாங்கி வைத்திருந்ததற்காக ஜூன் மாதம் ஜூரியால் தண்டிக்கப்பட்டார் ஹண்டர். அவருடைய வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, துப்பாக்கியை அவர் பயன்படுத்தவில்லை. “நான் நடுவர் மன்றத்தின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். அதிபராக அவரை மன்னிக்க மாட்டேன் ” என்று பைடன் தனது மகனுக்கு மன்னிப்பு வழங்குவதை அன்று நிராகரித்தார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் ‘கரீன் ஜீன்-பியர்’ குறைந்தது ஏழு முறையாவது அதிபர் பைடன் தனது மகனை மன்னிக்க மாட்டார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பரில், குறைந்தபட்சம் $1.4 மில்லியன் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கான திட்டத்தின் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஹண்டர். வரி வழக்கில், 17 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொண்டார். மேலும் துப்பாக்கி குற்றச்சாட்டுகளுக்கு 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலையில் ஹண்டர் குறுகிய கால தண்டனையைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் சிறை நேரத்தை முழுவதுமாகத் தவிர்த்திருக்கும் சாத்தியங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 12, 2024 அன்று டெலவேரில் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டிலும், டிசம்பர் 16, 2024 அன்று கலிஃபோர்னியாவில் வரி ஏய்ப்புக்கான குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்படவிருந்தது.
அதிபராக இருந்தபோது ட்ரம்ப் செய்த அனைத்து சட்ட மீறல்களுக்கும் பரந்த விலக்கு அளிக்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ,”யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்று ஜூலை மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பைடன். அதை மேடைகள்தோறும் பேசியும் வந்தார். திடீரென, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வெள்ளை மாளிகையின் அறிக்கையில், தனது மகன் ஹண்டர் பைடனுக்கு “நிர்வாக கருணை” வழங்குவதற்கான தனது அதிரடி முடிவை அறிவித்தார்.
இப்பொழுது தனது நிலைப்பாட்டின் மாற்றத்தை எவ்வாறு அதிபர் நியாயப்படுத்துவார்?
“காங்கிரஸில் உள்ள எனது அரசியல் எதிரிகள் பலர் என்னைத் தாக்கவும், தேர்தலில் எதிர்க்கவும் குற்றச்சாட்டுகளைத் தூண்டினர். வழக்குகளின் உண்மைகளை ஆராயாமல் ஹண்டர் என் மகன் என்பதால் மட்டுமே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அது தவறு. எனது நற்பெயருக்குச் சேதம் விளைவிப்பதற்காக அரசியல் எதிரிகளால் என் மகன் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் இது. நீதி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன் நான். ஆனால், அதனுடன் போராடியதால் அநீதிக்கு வழிவகுத்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தையாவும் அதிபராகவும் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை அமெரிக்கர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அதிபர் பைடன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினரின் தண்டனையை மன்னிக்கவோ, மாற்றுவதோ ஒன்றும் புதிதல்ல. பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது.
2021ல் பதவியிலிருந்த தனது இறுதி வாரங்களில், ட்ரம்ப் சுமார் 100 மன்னிப்புகளையும் மாற்றங்களையும் வழங்கினார். அவர் மன்னிப்பு வழங்கியவர்களில் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னரின் தந்தை சார்லஸ் குஷ்னரும் அடங்குவார். 2005ல், குஷ்னருக்கு வரி ஏய்ப்பு, சட்டவிரோத பிரச்சார நன்கொடைகள் மற்றும் சாட்சிகளைச் சேதப்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதிலிருந்து மன்னிக்கப்பட்டவர், வரவிருக்கும் நிர்வாகத்தில் பிரான்சுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றுவதற்காக ட்ரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவதற்குள், தனது ஒன்றுவிட்ட சகோதரர் ரோஜரை மன்னித்தார். 1985ம் ஆண்டில், ரோஜர் கிளிண்டன் ஜூனியர் போதைமருந்து தொடர்பான குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு விலக்கு அளித்தார் பில் கிளிண்டன்.
| Presidential Pardons Through the Years | ||
|---|---|---|
| President | Years in Office | Pardons |
| Franklin D. Roosevelt | 1933-1945 | 2,819 |
| Harry S. Truman | 1945-1953 | 1,913 |
| Dwight D. Eisenhower | 1953-1961 | 1,110 |
| Woodrow Wilson | 1913-1921 | 1,087 |
| Lyndon B. Johnson | 1963-1969 | 960 |
| Richard Nixon | 1969-1974 | 863 |
| Calvin Coolidge | 1923-1929 | 773 |
| Herbert Hoover | 1929-1933 | 672 |
| Theodore Roosevelt | 1901-1909 | 668 |
| Jimmy Carter | 1977-1981 | 534 |
| John F. Kennedy | 1961-1963 | 472 |
| Bill Clinton | 1993-2001 | 396 |
| Ronald Reagan | 1981-1989 | 393 |
| William H. Taft | 1909-1913 | 383 |
| Gerald Ford | 1974-1977 | 382 |
| Warren G. Harding | 1921-1923 | 383 |
| William McKinley | 1897-1901 | 291 |
| Barack Obama | 2009-2017 | 212 |
| George W. Bush | 2001-2009 | 189 |
| Donald J. Trump | 2017-2021 | 143 |
| George H.W. Bush | 1989-1993 | 74 |
“அரசியல் விளையாட்டிற்காக என்னையும் எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக அவமானப்படுத்த, எனது அடிமைத்தனத்தின் இருண்ட நாட்களில் நான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டேன். எனக்கு வழங்கப்பட்டிற்கும் மன்னிப்பை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் என் வாழ்க்கையை நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுபவர்களுக்கு உதவ அர்ப்பணிப்பதாக” ஹண்டர் பைடன் கூறியுள்ளார்.
“இந்த மன்னிப்பு அமெரிக்க ஜனநாயக அமைப்பின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். மேலும், சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்ற கருத்து பொய்த்து விட்டது. தேர்தலும் முடிந்து விட்ட நிலையில் இனி பைடனின் அரசியல் வாழ்க்கையும் முற்றுப் பெற்று விடும். இங்கே அவர் ஒரு தந்தையாகத் தன் கடமையைச் செய்திருக்கிறார். ஆனால், சட்டங்களின் தேசமாக அமெரிக்கா இப்போது எங்கே நிற்கிறது என்ற மிகப் பெரிய கேள்வியை இது எழுப்புகிறது.
ஜனவரி 6 கிளர்ச்சியாளர்களை மன்னிக்கும் ட்ரம்ப்பின் தொடர்ச்சியான நகர்வுகளைப் பார்க்கும்போது, சட்டம் சில நபர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது அல்லது வேலை செய்யாது” என்று அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ‘எரிக் ஹாம்’ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கர்கள் தங்கள் அரசியல்வாதிகள் சரியானவர்களாக, குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தரத்தைப் பூர்த்தி செய்யத் தவறியதன் மூலம், நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் நம்பிக்கையை வளர்ப்பதற்கான வாய்ப்பை பைடன் தவறவிட்டு விட்டார்.
அடுத்த வருடம் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் மன்னிப்பு நடக்கும். அதைக் கேட்கும் துணிவோ, எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட சந்தர்ப்பம் அளிக்காமல் அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார் பைடன்.
சட்டம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல. சாமானியனுக்கு மட்டுமே. குற்றம் செய்தவர்களைப் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டிய நீதி தேவதையின் கண்களை இறுக மூடி, அதிபரானாலும் தான் ஒரு தந்தை என்று நிரூபித்து விட்டார்.
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று தான் கடந்து செல்ல வேண்டும் போல!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
