சொல்

மௌனமான அறையினுள்
வௌவால் போல சுவரெங்கும்
மோதி மோதிக் களிக்கிறது…
மூளை நரம்புகளில்
சிறிது நேரம் பல்லாங்குழி ஆடுகிறது…
அதுவும் கழிந்த பொழுதொன்றில்
நெஞ்சுக்குழி
அடைத்து உவகையடைகிறது…
விக்கித்து ஏங்கும் கணத்தில்
மார்தட்டி மயங்குகிறது…
மூர்ச்சையற்று
களைப்படைந்த போதும்
என்புதோல் கேட்கிறது …
வாதை போதுமென்று
வெளித் தள்ளி
கதவடைத்த பிறகு
தூக்கிலிட்டு கொள்வேனென
பெருங்குரலெடுத்து இரைகிறது …
தாழிடப்பட்ட சாளரத்தின்
சன்ன இடுக்கில் நுழைந்து
மீண்டும் மடியினில்
தஞ்சமடைகிறது…
துக்கம் தின்றே வளர்கிறது
கடைசியாய் நீ
உதிர்த்துச் சென்ற
சொல் !
நின் பெயர் தாங்கிய பலகை !
கடலின் விலாசத்தை
நதிகள் தொலைத்துவிட்ட
கரையினில் தான்
நிற்கிறேன் நான்…
ஆழிப்பேரலையில்
நேசத்தின் கொடிகள்
அறுபட்ட கரையில்
நினைவின் தடங்கள்
மெல்ல மெல்ல அழிய
முன்பு போல
சலசலப்பில்லை
சமுத்திரத்தில்…
இப்போதெல்லாம்
சடலத்தை துக்கமின்றி
அணுகும் மருத்துவனைப்
போல் சலனமின்றி
கடக்க முடிகிறது
நின் பெயர்
தாங்கிய
பலகையை !
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
