
நிலை மறுப்பு
மகனுக்கு முன்னால் அறிமுகமாகி
அனைத்தும் தாண்டிய அவளோடு கலந்து விட்ட
ஒற்றையடி பாதையென அவளோடு மட்டுமே பயணித்து விட்ட
இந்த வாழ்க்கையில்
அழைத்த உடன் சென்று விட்டாள் இரு சக்கர வாகனத்தில் மகனுடன்
சற்றென்று பெய்யும் கோடை மழையென
நொறுங்கிப் பொலபொலத்துப் போனது
நான் என்னும் வாழ்க்கை
உயிரை மறந்த உடலென என்னால் அவளோடு பொய்யாகச் சிரிக்க முடியவில்லை
ஒவ்வொரு இருசக்கர வாகனப் பயணத்திலும்
அனாதையாக உணர்வதில் இருந்து
என்னால் மீள முடியவில்லை
அன்றாட வேலைகளில் சிரித்துக் கொண்டே சுழன்றபடி இருக்கிறாள்
என்னுள் உடைந்த அவள் பிம்பத்தை என்னால் ஒட்ட வைக்கவே முடியவில்லை
ஏனோ, அவள் இருந்தாலும் தனிமையில் நான்
– ராம் ஆனந்த்
அன்புக்குரியவர்களின் துர்மரணம்

நெருக்கமானவர்களின் மரணம் என்றென்றும் ஆறாத வடுவாக இருக்கும்.
அவர்கள் உயிரோடு வரப்போவதில்லை என்ற உண்மையை உணரும் தருணம்
ஒரு நிசப்தமான வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
அவர்களோடு கழித்த பசுமையான காலங்கள் இனி ஒரு போதும் வரப்போவதில்லை
‘அவர்கள் எங்கும் போகவில்லை உங்களோட தான் இருக்கிறார்கள்’ என்று யார் வந்து சமாதானம் சொன்னாலும் அதனை ஏற்க மனம் தயாராக இருக்காது.
அவர்கள் உடுத்திய உடைகளையும் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கும் போது அவர்கள் உயிருடன் இல்லை என்ற உண்மையை அறுதியிட்டு சொல்லிக் கொண்டே இருக்கும்.
.’அப்படி செய்திருக்கலாமோ இப்படி செய்திருக்கலாமோ’ என்ற குற்ற உணர்ச்சி காலம் முழுவதும் நம்மை பிடுங்கித் திண்ணும்.
எல்லாம் விதி என்று மனதைத் தேற்றினாலும் விதி ஏன் எவ்வுளவு கொடியது
என்ற பதிலற்ற கேள்வியே எழும்.
அந்த நிமிடங்களை எப்போதும் நினைத்தாலும் பதைபதைப்போடு
நம்மை உலுக்கி எடுக்கும்
உதிக்கும் கண்ணீர் துளிகள் எப்போதுமே அன்பு காணிக்கையை செலுத்திக் கொண்டே இருக்கும்.
அன்பானவர்களின் மரணம் மனித குலத்திற்கே நிபந்தனையற்ற நிரந்திரமான சாபமாகும்.
– பிரதீப் நீலகண்டன்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

நிலை மாறும் உலகில் நிலைக்கும் செய்தியை நிறைவாய் பதிவு செய்துள்ளார்கள்… அருமையான கவிதை வாழ்த்துகள் ஐயா..