நாட்டுப் பற்று

சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்
மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?
பத்ம கலைமணி போர்த்தப் பெறாத
தாரகை உண்டா நம் தேயத்து?
சாகித்யக் குழுமம் நஞ்சென ஒதுக்கிப்
பகையெனச் செற்றுக் கொழு முறிபட்ட
முன்னேர் எத்தனை?
கலையும் மொழியும் உறவும் பெருக்கப்
பன்னாடு சென்ற அறிஞரும் கலைஞரும்
அரசியலாரின் அடிப்பொடி தானோ?
நாட்டை நடத்தும் மேன்மையர் மக்களில்
காவலர் எழுத்தர் அஞ்சல் ஊழியர்
பூ காய் கனியெனக் கூவி விற்பவர்
தள்ளு வண்டியில் சிற்றுண்டி செய்பவர்
புவனத்துண்டா?
இளமையின் வறுமையை மேடையில் பரப்பி
முட்டி உயர்த்தி முக்கிப் பேசி
இராப்பகலாகக் கடின உழைப்பால்
வியர்வை பெருக்கி மூத்திரம் சிந்தி
ஈட்டிய விமானம் கப்பல் மலைகள்
சுரங்கம் தீவு கடற்கரை காடு
சோலை அருவி பொன்னின் குவியல்
என்பனவற்றின் ஐந்தொகை என்ன?
அறம் ஒழுக்கம் பண்பு நேர்மை
உண்மை மரபென மொழியும்
மாட்சிமை யாவும் கனவில் வந்து
விந்து பீய்ச்சும் திரைக் காவியக்
காதல் காட்சியா?
வந்தே மாதரம் தேசீய கீதம்
ஜெய்ஹிந்த் மொழித்தாய் வாழ்த்து
சுதந்திரம் குடியரசுத் தினம்
என்பன எல்லாம் எம்மனோர் மட்டும்
நாட்டுப் பற்றைத் திறந்து காட்டவா?
02/02/2022


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.