அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு

(கோன்ராட் எல்ஸ்ட்: ஹிந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – தொடர்)

தமிழ்ச் சுருக்கம்: கடலூர் வாசு

The School of  Oriental and African Studies (SOAS), அண்மையில் உள்ள British museum இவை இரண்டும்  கீழை நாடுகளின் நாகரிகத்தை பயிலும்  ஒரு மையமாக இருந்து வருகிறது. சரியாக 100  வருடங்களுக்கு முன், “ கீழைத்துவம் “(Orientalism) என்ற துறைக்கு தலைமையகமாக மாறியது. எட்வர்ட் சயீத் (Edward Said) இப்பதத்திற்கு கொடுத்த விளக்கம்,” காலனிய பேராட்சி கீழை கலாச்சாரங்களின் மீது தனது  ஆதிக்கத்தை செலுத்தும் திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அஞ்சறைப் பெட்டி” என்பதாகும்.

இதே சமயம், முதல் உலகப் போரில் எதிரி நாடான ஜெர்மனியின் அறிஞர் மாக்ஸ்வேபர், கீழைநாடுகளைப் பற்றிய மிக செல்வாக்கு அடைந்த புத்தகத்தை பதித்தார். இப்புத்தகம் உலக சமயங்களில் குறிப்பாக ஹிந்து, புத்த மதங்களின்  பொருளாதார நோக்குகளையும்  அதன் விளைவுகளையும் விளக்கும் புத்தககம். எவ்வாறு, பிராடஸ்டன்ட் பிரிவு,  இவ்விரண்டு சமயங்களுக்கு மாறாக, தொழில் நுட்பம், பொருளாதாரம் அறிவியல் ஆகியவற்றின் மூலம் தொழில் துறையின்  முதலாளித்துவத்திற்கும் நவீன சகாப்தத்திற்கும்  திருப்பு முனையாக அமைந்தது என்பதை புரிந்து கொள்வதற்கான தேடல்.

சுமார் 50 நபர்கள், S.O.A.S.ன் நூற்றாண்டையும், மாக்ஸ்வேபரின் படைப்புகளையும் கொண்டாடுவதற்காக ப்ரூனி காட்சிக் கூடத்தின் பேச்சரங்கில் கூடினர். கூட்டத் தலைவர் பீட்டர் ஃப்ளுகல், வைஸ்ராய் லார்ட் கர்சன் இத்தகைய பயிலகத்தை பேரரசின் பாக்கியதையான கீழைத்துவத்தை பயிலத்  தேவையான அறைக்கலன் எனக் கூறியதை நினைவுபடுத்தினார். இதுதான் எட்வர்ட் சயீத் அவர்களின் “கீழைத்துவம்” என்ற ஆய்வுக் கட்டுரையின் தலையாய மேற்கோள். அதாவது கீழை நாடுகளின் பாண்டித்யம் போர்திறனுக்கேற்ற  உபகரணம் என்பதாகும். 

மாக்ஸ்வேபரின் நோக்கு பொதுவாக மேற்கத்தியர்களின் எண்ணத்தைத்தான்  பிரதிபலிக்கின்றது. ஏனென்றால், இந்து புத்த சமயங்களை போலல்லாமல், உழைப்பை நன்னெறிப்படுத்தியது பிராட்டஸ்டன்ட் சமயம்தான் என்ற கருத்தை ஊன்றியதே இவர்கள்தான். வேபர், கீழை நாட்டினர் வாணியத்தில் முதலாளித்துவத்தை(Mercantile capitalism) துவங்கி வெற்றிகரமாக நடத்திய போதும், அவர்களின் சமய நோக்கு இவ்வுலகிற்கு அப்பால்  இருந்ததால் நவீன தொழில் சார்ந்த முதலாளித்துவத்தை (Industrial Capitalism) துவங்குவதில் தோல்வியடைந்து விட்டனர் என்ற முடிவை தேர்ந்தெடுத்தார். ஆனால் 1916ல் முதல் உலக யுத்தத்தின் மத்தியில் அவரே ஹிந்து-புத்த சமயங்களின் உலக நோக்கை பற்றி நான் பயின்றது உற்சாகமூட்டுவதாக உள்ளது என சான்றளித்துள்ளார். 

பேராசிரியர் ரொமிலா தாப்பர்:

இவ்வரங்கில் சிறப்புரை அளித்தவர் எண்பதைக் கடந்த பேராசிரியர் ரொமிலா தாப்பர் அவர்கள். அவ்வயதிலும் சேலையில் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் விளங்கினார். சமயச்சார்பற்ற ஹிந்துக்கள் பாரம்பரிய ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்ற சீதாராம் கோயலின் நோக்கீட்டிற்கு உதாரணமாக திகழ்ந்தார்.  இதற்கு எதிர்மாறாக, ஹிந்துத்துவ  போராளிகள் மேற்கத்திய நாகரீகத்தில் ஊறியுள்ளனர் என்பதை அவர்களது  ஆர் .எஸ்.எஸ். அணியின் ஆங்கிலேய பாணி சீருடை, பித்தளை இசைக்குழு போன்றவையும் தற்போதைய பா.ஜ .க. வினரின் அமெரிக்க பொருளாதார கலாச்சார கடைபிடிப்புகளும் வெளிப்படுத்துகிறது. சமயச்சார்பற்ற பழைய தலைமுறையினர் இந்திய கலாச்சாரத்தில் நன்கு ஊன்றியுள்ளவர்கள். இந்த தலை முறை மேற்கத்தியர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை போலல்லாமல்  ஒரு மாறுதலான அடையாளத்தை  அடக்கமாக வெளிப்படுத்துவதன்  மூலம் தங்கள் பாரம்பரியத்தின் மேலுள்ள பெருமையை உணர்த்துகிறார்கள்.  இவரது சக பேராசிரியர் இர்ஃபான் இக்பால் அமெரிக்க ஆதரவை நிராகரித்து தனது மார்க்சிய பெருமையை காட்டிக் கொண்டடதை  நினைவூட்டுகிறது. இதற்கு எதிர்பதமாக இன்றைய சமயச்சார்பற்ற இளைஞர்களும்  அம்பேத்காரர்களும்  கருத்துக்களிலும் வெளி உடுப்புகளிலும் கூட  அமெரிக்கர்களை தழுவியுள்ளனர்.

ரொமிலா தாப்பர்  மாக்ஸ்வேபர் இந்தியாவை பற்றி எழுதியதை 40 வருடங்களுக்கு முன் படித்த பின்  அவர் எழுத்துகளில் மிகுந்த ஆர்வம்  கொண்டிருந்தார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. இளைய இந்திய வித்யார்த்திகள் அந்த அளவு ஆர்வம் கொள்ளவில்லை என்பதால் S.O.A.S. விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த இடம் அவருக்கு மிகவும் பழக்கமான ஒன்றுதான். இந்த அமைப்புதான் அசோகரின் கல்வெட்டெழுத்துகளை பற்றிய ஆய்விற்காக இவருக்கு முனைவர் பட்டத்தை அளித்தது. இதுவே 1961ல் புத்தகமாக பிரசுரமானது. இக்கல்வெட்டெழுத்துகள் அசோகரின் சமயச்சார்பற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன்ன என்னும் ரொமிலா தாபரின்  நோக்கு தவறானது; அக்கல்வெட்டுகள் புத்த மதத்தின் உலக நோக்கை உயர்த்துவதற்காக அசோகர் பதித்த  கல்வெட்டுகள் என்று அடித்துக் கூறியுள்ள, ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற புத்த மத ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கோம்பிரிக் (Gombrich) அவர்களும் மேடையில் இருந்தார். ரொமிலா தாப்பர்  பேராசியர்களுக்கே உரிய பாணியில் மெதுவான, அதே சமயம் உறுதியான தெளிவான நடையின் மூலம் அவையோரை தன்னிடம் ஈர்த்துக் கொண்டார். 

ஆரம்பத்தில்  எல்லோரும் பொதுவாக  அறிந்ததை கூறினார். மாக்ஸ் வேபரின் இந்திய வரலாற்றையும் சமூகத்தையும் பற்றிய ஆராய்ச்சி காலniயர்கள் எழுதியதை வைத்துதான் எழுதப்பட்டதால் தற்போதைய கருத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளது. காலனிய நோக்கில் பிடிபட்டு இருந்ததால் காலனித்துவத்தின் விளைவுகளை தனது படைப்புகளில் சேர்க்கவில்லை. (மாறாக, கார்ல் மார்க்ஸ் இந்தியா அயர்லாந்து நாடுகளின் காலனித்துவத்தை பற்றி எழுதியுள்ளார்).வேபர், ‘“கீழை நாடுகளின் கொடுங்கோலாட்சி “ எனும் காலனிய கருத்திற்கு  புதிய உருவேற்றி அதற்கு மெருகுமேற்றினார். இக்கொள்கை தனியார் உரிமைகளையும் மக்கள் இடம் விட்டு இடம் பெயர்வதையும் பறிப்பதன் மூலம் நவீன முதலாளித்துவம் மலர விடாமல் போராடுகிறது என்கிறார்.

மதங்களும்  அவைகளின் பணி  நெறிமுறைகளும்

பிரிட்டிஷ் கூட்டரசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஆகிய மேலைநாடுகளின் தொழில் சார்ந்த முதலாளித்துவ எழுச்சிக்கு பிராடஸ்டண்ட் பணி  நெறிமுறைகள்தான் காரணம் என்ற ஆய்வுக் கட்டுரைதான்  மாக்ஸ்வேபர் இன்றும் பிரபலமாயிருப்பதற்கு காரணம். தொழிற் பிரிவுகளிடையே (குறிப்பாக, பணிப்பயிற்சி சமயம் இந்திய மாணவர்கள் ஜாதி வாரியாகப்பிரிக்கப்பட்டதாலும்) சகோதரத்துவம் நிலவாததாலும், சமூக முன்னேற்றத் தடைகளினாலும், வணிகத்திற்கு கலாச்சார மதிப்பின்மையாலும், மேலுலக நோக்கினாலும் இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றுவதற்கு வழியேயில்லை என வாதாடினார். இவர் ஜைனர்களின் வியாபார நடவடிக்கைகள்,  கடன் கொடுத்து வட்டி ஈட்டுவது, இது போன்றவைகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை  அனுபவிப்பதில் பற்றில்லாமை ஆகியவை  பிராடஸ்டண்ட் பிரிவினரை ஒத்ததாக உள்ளது என்பதை விரிவாக விளக்காமல் அவர்களுக்கும் இவ்வாற்றல் உள்ளது என்று மேலெழுந்தவாரியாக  சொல்வதோடு நிறுத்தி விடுகிறார். காலனி ஆட்சிக்கு முன் சீனாவும் யூரேசியாவும்தான் வணிக முதலாளித்துவத்தில் முதன்மையாக இருந்தாலும் அது ஐரோப்பா தொழிலக முதலாளித்துவமாக மாறுவதை உணரவில்லை. 

ஆனால்,வேபர், 18-19 நூற்றாண்டுகளின் இந்திய வரலாற்றையும், அச்சமயம், முதலாளித்துவத்தில் இந்தியர்கள், காலனியர்கள் இருவரின் பங்கையும்,புறக்கணித்து விட்டார். அது மட்டுமல்லாமல், ஹிந்து கலாச்சாரத்தை ஒற்றைக்கல்லாக வருணித்து, அதன் உட்பிரிவுகளிலும்,  நாட்டுப்  பகுதிகளிலும்,, வெவேறு காலங்களில் நடந்த மாற்றங்களிலும் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டார்.  மற்ற கீழைநாட்டு ஆய்வினர்களை போலவே  இவரும், மற்ற புத்தகங்களிருந்து கடன் வாங்கிய கருத்துகளிலிருந்து அவராக புரிந்து கொண்டதை வைத்துக்கொண்டு  இந்து மதத்தை உருக்குலைக்கிறார். முக்கியமாக, வேதத் தொகுப்பிற்கு,  பல்வேறு இடங்களில் பல நூற்றாண்டுகளாக உதட்டளவில் மரியாதை செய்தவர்களிடையே ஏற்பட்டுள்ள  மாறுபாடுகளையும்,  மாற்றங்களையும் நினைவில் கொள்ளவில்லை. இதனால்தான், தற்போதுள்ள பல்லாயிரக்கணக்கான ஜாதிகளை தவிர்த்து, வேதங்களில் காணப்படும் நான்கு வர்ண அமைப்பே   மேற்கத்தியர்களின் மனதில் இன்றும் பதிந்துள்ளது.

ஹிந்து சமூகம் மாறாத ஒன்று என்றே பார்க்கப்படுகிறது என்று ரொமிலா தாப்பர்  சொன்னதுதான் இவரது பேச்சிலேயே மிக முக்கியமானதாகும். அது மிக அற்பமாக மனதிற்கு பட்டாலும், ஹிந்துக்களுக்கும்,  கீழைநாட்டு ஆய்வில் இறங்கியுள்ள மேற்கத்தியர்களிடையேயும்  முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. காலனிய காலத்து கீழைநாட்டு ஆய்வாளர்களும், அடுத்து வந்த மாக்ஸ்வேபரும் ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய இத்தகைய அசைக்க முடியாத தீவிர நோக்கிற்கு ஹிந்துக்களே காரணம். ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.  

ஹிந்து ஜாதி அமைப்பு

அம்பேத்காரியர்களும் அவர்களை உற்சாகப்படுத்தும் மேலைநாட்டினரும் ஜாதி அமைப்பையும் தீண்டாமையையும் மாட்டும்  கொக்கியாக  ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தை உபயோகிப்பது தவறான ஒன்றாகும். ஆனால் அவர்கள் ஒரு சில நூற்றாண்டுகளாக நடமாடிவரும் பாரம்பரிய ஹிந்துக்களின் கருத்தைத்தான் திரும்பத் தொடர்கின்றனர். புராண காலத்திலும் ஆதி நவீன காலத்திலும் பெட்டிக்குள் அடைக்கப்பட்டது  போலிருந்த ஜாதி ஒதுக்கமும் சுய குல திருமணங்களும்  ரிக் வேதத்தில் எங்குமே காணப்படவில்லை.   பழங்காலத்து குடும்ப நூல்களிலும் ஒரு சுவடு கூட இல்லை. பின்னால் வந்த ரிக் வேத புத்தகமும்  (Book 10) சிக்கல்கள் மிகுந்த ஒருசமூகத்தின் 4 விதமான செயற்பாடுகளைதான் அறிவிக்கிறது. 

      இதன் பிறகு, ஜாதி அமைப்பு சிறிது சிறிதாக இறுகியது. ஒருகட்டத்தில் ஒருவரின் ஜாதி தந்தையின் ஜாதியால் நிர்ணயிக்கப்பட்டது. (வேத வியாசர் பராசரர் என்ற பிராமணருக்கும்  மத்ஸ்யகந்தி என்ற செம்படவ பெண்ணுக்கும் பிறந்தாலும் பிராமணராக கருதப்பட்டார். தாசிகளுக்கும் பிராம்மணர்களுக்கும் பிறந்த ஆண் மக்கள் பிராம்மண வம்சத்தினராயினர். பேராசிரியர் இதை அவர்  உரையில் குறிப்பிட்டுள்ளார்). இறுதியில், இம்மாற்றங்கள் ஒரு குல திருமணத்திற்கு எடுத்துச் சென்றன. ஹிந்து மதத்தை பண்டைய ஜாதி அமைப்புடன் சமமாக மத போதகர்களும், அம்பேத்காரர்களும், பல கீழை நாட்டும் ஆய்வாளர்களும் கருதக் காரணம் ஜாதி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றிய ஹிந்து வரலாற்றை புறக்கணித்தலே ஆகும். இந்த தவற்றிக்கு காரணம் ஹிந்துக்களும் இதே தவற்றை செய்ததுதான். முழு வளர்ச்சி பெற்ற  ஹிந்து ஜாதி அமைப்பைப் பற்றி அறிய எவராவது அத்துமீறி நுழைந்தாலோ சந்தேகத்தை கிளப்பினாலோ, ரிக் வேதத்தை மேற்கோளாக காட்டி கண்டிக்கப்படுகின்றனர். புருஷ சூக்தம் பிற்கால ஹிந்துக்களுக்கு மிகவும் பழக்கமான ஜாதி அமைப்பை வருணிப்பதாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

(இவ்விடத்தில், பேராசிரியர் தாப்பர், ஹிந்து சமூகக் கட்டமைப்பு அடைந்துள்ள மாற்றங்களை பற்றிய நம் விழிப்புணர்ச்சிக்கு அவரது பங்கு பற்றி  சொல்லியே ஆக வேண்டும். தாப்பர்,1906ல் வெளிவந்த India : Historical Beginnings and the Concepts of Aryan புத்தகத்தின் பதிப்பாசிரியை. இப்புத்தகத்தில், மார்க்சிய வரலாற்றாசிரியர் ஷெரீன் ரத்னாகர் உறுதியாகக் கூறுகிறார்( பக்கம் 166):

“ ஆதி வேதகாலத்தை போல், நிலம் தனியார் சொந்தமாகவோ, பரம்பரை சொத்தாக அடுத்தடுத்த தலைமுறைக்கு கைமாறாமலோ இருந்திருந்தால், நிலவுரிமை,உறவினர்கள் கூட்டுசேர்ந்து கொள்வதில்  பங்கேற்றிருக்காது; இளைய தலைமுறையினர் பெற்றோர் வசத்திலிருந்து வெளியேறுவதையும் தடுத்திருக்காது. அத்தகைய சமூகங்களில் தந்தைவழி முறையோ  பழங்குடி பிரிவுகளோ திடமான குழுமங்களாக இல்லை. எனவே, நிலப்பகுதி விரிவடைந்தபோது இடம் பெயர்வதும் சுலபமானது. ஜாதி அமைப்பு நன்னெறிக்கு முரணானது;  தீய பிராம்மணர்கள்  ஜாதி முறையை கண்டு பிடித்ததோடல்லாமல் அதை  மற்றவர்களிடையேயும் திணித்து விட்டார்கள் என்று  நினைப்பது  நாகரீகமாகி விட்டது. ஆனால் யதார்த்த கம்யூனிஸவாதிகள் இந்த சதிக் கொள்கையை நம்ப மாட்டார்கள். சமத்துவம் அல்லது  படிநிலை(Hierarchy) செல்வாக்கிற்கு  சமூகப் பொருளாதார நிலைமை எத்தகைய விளக்கத்தை கொடுக்கிறது என்றுதான் பார்ப்பர். ஆதி வேத காலத்திய கிராமிய வாழ்க்கை, பிற்காலத்திய சிக்கல்கள் நிறைந்த ஹிந்து சமூகத்ததை  போலல்லாமல், மனிதர்களிடையே  உறவு முறை சமமானதாக விளங்குவதற்கு உகந்ததாக இருந்தது”. 

மாக்ஸ் வேபரின் எழுத்தில் பல பிழைகள் நுழைந்துள்ளன. ஒரு பிழை, இந்தியாவில் இஸ்லாமிய மதத்தின் இருப்பையும் சீனாவில் புத்த மதத்தின் இருப்பையும் முழுவதுமாக புறக்கணித்ததாகும். ஏனென்றால், இவ்விரு மதங்களின் அந்நியத்தன்மை, இந்தியாவின் பொருளாதார செயலாக்கம் இந்திய மதங்களிலிருந்து கிளம்பியதே எனும் விளக்கத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லா மதங்களையும்  ஓட்டைகள் இல்லாத டப்பியில் அடைந்துள்ளதாக காட்டியுள்ளார்.   இந்தியாவை விவசாய நாடாக சித்தரித்துள்ளார். சமீபத்திய ஆய்வுகள் இந்த தவறான கணிப்பை சரிசெய்துள்ளன. இந்தியாவில் கடற்வணிகமும் மற்ற வணிகங்களும் நிறைவாகவே இருந்தன. 11ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியா நகர்மயமான பின் வணிகம் மேலும் அதிகரித்தது. மேலும், கர்மாவினுடைய சக்தியின் மேல்  வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலம் தங்கள் துரதிருஷ்டத்தை சமரசம் செய்துகொள்கிறார்கள் என்பதை மிகைப்படுத்தி கூறுகிறார். உழவர்கள் கஷ்டங்கள் வந்தபோது இடம் பெயர்ந்தோ சில சமயம் இந்தியர்களின் நடத்தையுடன் ஒத்து வராத வன்கிளர்ச்சிகளிலும்  இறங்கினார்கள். 

வர்த்தகங்களை எவரும் வெறுக்கவில்லை. பிராம்மணர்களும் துறவிகளும் கூட குதிரை விற்றல் போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டார்கள். ஜாதிகளுக்கிடையே  வேலைப் பிரிவுகளும் வளைந்து கொடுப்பதாகத்தான் இருந்தது. பலர் நினைப்பது போல் உடைக்க முடியாத ஒன்றாக இல்லை.வேபர் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி அசைக்க முடியாதது என்ற கருத்தை பிராம்மணரல்லாதவர்களின் இயக்கங்களும், மேல் ஜாதி சீர்திருத்த இயக்கங்களும் எதிர்த்தன. இத்துறையில் நிபுணரல்லாதவர்கள் கூட இந்த முன்னேற்றங்களை அறிந்திருந்தார்கள்.

முடிவுரை

இதுவரை விரித்ததை சுருக்கி சொல்கிறேன்; மாக்ஸ்வேபருடைய உலகம் மறைந்து விட்டது. விவாதத்தின் விதிகளும் மாறிவிட்டன.வேபரும் மார்க்ஸும் கூறிய சமய வகைகள் தற்போது செல்லுபடியாகுமா? ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து பார்த்தால் சூழ்நிலைக்கு ஒத்து வராததாகவும் வெகுளித்தனமாகவும் உள்ளது. இன்றைய தினத்தில், மாறுபடாதது என்ற கருத்தே வரலாற்றிற்கு இணக்கமில்லை.வேபர் அவர்கள்  சமகாலத்து கிழக்கையும் மேற்கையும் ஒப்பிட்டிருக்கலாம்.  மாறாக, ஆப்பிளையும் பேரிக்காயையும் ஒப்பிடுவதை போல பண்டைய காலத்தின்  ‘மாற்றமில்லாத’ சமூகங்களை சமீபத்திய மேற்கு சமுதாயத்துடன் ஒப்பிட்டுள்ளார். 

நாம் இப்போதும் ஒரு பெரிய கேள்வியில் சிக்கியுள்ளோம். அறிவுத்  தேடலில்  ஆசியா ஏன் முந்தவில்லை? எதனால் அதுவரை பின்தங்கியிருந்த ஐரோப்பா எவ்வாறு முதலிடத்தை பறித்துக் கொண்டது? பிராடஸ்டண்ட் வகுப்பினரின் உழைப்பு நன்னெறி முறைகள் என்ற விளக்கம் மட்டும் போதாது. மற்றொரு கேள்வி? அற்பமானதாக தோன்றினாலும் பொருத்தமான ஒன்று. மாக்ஸ்வேபர் நூறு வருடங்களுக்கு பிறகு இந்தியாவின்  மதங்களை எவ்வாறு பார்த்திருப்பார்?

பிற்சிந்தனை

வேபர் விரிவுரையை வேண்டிய அளவு பார்த்து விட்டோம். அயோத்தி சர்ச்சையை பற்றி சிறிது அறிந்தவர்கள் அதன் பிறகு நான் பேராசிரியர் தாபருடன் சில சுமுகமான உறவாடல்களில் கலந்து கொண்டேன் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவர். . ஆரிய மூலம் என்பது பற்றிய கருத்தில் எனது எதிராளியான மைக்கேல் விட்சலின்   Global Mythology(2013) புத்தக வெளியீட்டிற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சையில் அவரது பக்கத்திற்கு ஆதரவளித்ததற்காக இந்து தேசியவாதிகளிடம் வாங்கி கட்டிக்கொண்டதும் இங்கு நினைவிற்கு வருகிறது. சரி! நான் சொல்ல விரும்புவதை விளக்க முயல்கிறேன். 

முதலாவதாக, 25 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது பேராசிரியர்  தாப்பர், அயோத்தியில் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ஹிந்து ஆலயம் இருந்தது என்ற வரலாற்று நிபுணர்களின் நம்பிக்கை  அடிப்படையற்றது என்று கூறிக்கொண்டிருந்த சமயச்சார்பற்றவர்களின் குழுத்  தலைமையை ஏற்றுக் கொண்டிருந்தார். கை ஓங்கியிருந்த அரசியல் மற்றும் கல்வித்துறைகளில் எல்லோரும் இக்கொள்கைக்கு இசைந்தனர். நான் இந்த கொள்கையை எதிர்த்தேன். 2003ல் நீதிமன்றத்தின் உத்தரவு பேரில் நடந்த அகழாய்வு கீழே புதைத்திருந்த ஹிந்து ஆலயத்தை வெளிக்கொண்டு வந்ததால் என் விவாதத்திற்கு  முற்றுப்புள்ளி வைத்து விட்டது. யுத்தம் முடிந்த  பின் வீரர்கள் வீடு திரும்போதே தங்களது யுத்த களத்தில் இருந்த மனப்பான்மையை மெதுவாக துறந்து விடுகின்றனர். அது போல்தான் பிரச்சினைகளும்.

சில ஹிந்து அறிவாளிகளும் ஹிந்துக்களை எதிர்க்கும் அறிவாளிகளும் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டதையே குறிப்பாக, ஆரிய மூலத்தைப் பற்றிய விவாதத்தில், திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்போது விவாதித்தாலும், இவர்கள் வாயில் நுரை ததும்புகிறது.  நல்லதோ  கெட்டதோ,  நான் அவர்களைப்  போலில்லை. இரண்டாவது காரணம், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை விவாதிக்கும் சமயம் விவாதிப்பவர்களையே தனிப்படுத்தி தாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது இளமை பருவத்தில் அந்த மனப்போக்கு என்னிடம் இல்லாமல் இல்லை. ஆனால் சிறிது சிறிதாக முதலில் கொள்கையிலும் பின் நடைமுறையிலும் சர்ச்சைகள் மனித உறவுகளை  பாதிக்கக் கூடாது என்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். நான் தற்போது ஈடுபட்டுள்ள சர்ச்சைகளிலும் எனது எதிராளிகளிடம் நட்புறவையே வளர்த்துக் கொண்டுள்ளேன். 

மூன்றாவதாக, இனிமேல் எதிராளிகளுடன் நடக்கும்  உறவாடல்களில் ஒரு கொள்கையை  என்னை வழிநடத்துவதற்காக ஏற்றுக் கொண்டுள்ளேன். அது, சாக்ரடிஸ் சொன்ன தீமை  என்று நாம் கருதும் அனைத்திற்கும் அடிப்படை காரணம் அறியாமைதான்  என்ற கொள்கையாகும். தீமை செய்வதில் ஈடுபட்டுள்ள  அனைவருமே தாங்கள் நன்மை செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், எது நன்மை பயக்கும் என்பதைப் பற்றி தவறான என்னத்தையோ அல்லது என்ன செய்கின்றோம் என்பதை அறியாதவர்களாகவோ  இருக்கின்றனர். அவர்கள் தீயவர்கள் என்ற எண்ணத்தை மேலும் தீவிரப்படுத்தாமல், நியாயமான கொள்கையையோ நடத்தையையோ எடுத்து கூறினால், அவர்களது இருப்பை சரிசெய்து கொள்ள உதவியாயிருக்கும். நல்லதை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் விரும்பாமல் இல்லை. நமது உள்நோக்கம் நமக்கு நியாயமாக தோன்றினாலும் எதிராளியை பொறுத்தவரை நாம் தவறான பக்கத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் இருத்திக் கொள்வது நமக்குதவும். அனைத்து இருப்புகளும் சமமானது என்றோ நமது திட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்றோ அர்த்தமில்லை. ஆனால், ஒருவர் எதனால் நமக்கு எதிரான எண்ணங்களை கொண்டுள்ளார் என்பதை புரிந்து கொள்வது நமக்கு உதவி செய்யும்.. 

இடைநேரத்தில், S.O.A.S. நுழைவாயிலுக்கு வெளியே இருந்த புல்வெளியில், தமிழ்க்கவி திருவள்ளுவரின் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே ஆங்கிலத்தில் அவரது குறள்  ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. எனது விடைகூறலாக அதை இங்கு தருகிறேன். 

‘Meet with joy, with pleasant thoughts part,
Such is the learned scholar’s art.’ 

Max Weber’s afterglow
(Pragyata, 11 September 2016)

இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்

ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.