இரண்டாம் சூரியன்
வானில் உதிக்கும் தினமணியான ஆதவன் உயிர்க்குலங்களுக்கு ஒளி தரும் அற்புதமான இயற்கையின் முக்கிய கூறாகும்.ஐம்பெரும் சக்திகள் அனைத்தும் நியதிகளின் படி செயல்பட, மனிதர்கள் தங்கள் அறியாமையாலும், ஆணவத்தாலும் அனுமதிப்பதில்லை என்பதை கெட்டு வரும் சுற்றுச் சூழல் பாதிப்புகளால் உணர்கிறோம்; எனவேதான் ‘தூய சக்தி’ என்பதை நோக்கிச் செல்லத் துவங்குகிறோம். மாசற்ற காற்று,கசடற்ற குடி நீர்,வேதிப் பொருட்களால் பாழாகாத நிலம்,கட்டுக்குள் அடங்கும் நெருப்பு,வான் வெளியில் நாம் நம் பேதமையால் சுழலவிட்ட ஆயுள் முடிந்த செயற்கைக் கோள் துகள்கள் அகற்றல் என்று எத்தனையோ செய்ய வேண்டிய கடமைகள் நம் முன் உள்ளன.

தூய சக்தியை உற்பத்தி செய்வதற்காக சீனாவில்’இரண்டாம் சூரியன்’ உதயமாகிவிட்டது.HL- 2M TOKAMAK என்ற செயற்கைச் சூரியன் அது.ஹைட்ரஜன் தூத்தேரியம் என்ற இரு வாயுக்களின் கட்டுப்படுத்தப்பட்ட அணு இணைவின் மூலம் ,அணு இணைவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணு உலை இயங்கி சுத்தமான, சூழல் கேடற்ற சக்தியைத் தரும் என அதன் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.சூரியன் எப்படி அந்த இரு வாயுக்களின் ப்ஃயூஷன் மூலம் ஒளி தருகிறதோ,அதைப் போல செயற்கை முறையில் இந்த அணு சக்தி வெள்ளம் நிகழப்போகிறது.இதில் முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு- சூரியன் அணுக்களின் இணைவால் ஒளி தருகிறான்;அணுக்களின் சிதைவால் இவ் உலைகளில் ஏற்படுத்தப்படும் சக்தியானது தூய்மையாகவும், ஆபத்துக்கள் இல்லாததாகவும், அமைவதற்கான ந்யூக்ளியர் ப்ஃயூசன் இது.இவை சூரிய ஒளி போன்றவை அல்ல-ஆனால் சக்தி போன்றவை.
‘ஈஸ்ட்’ Experimental Advanced Superconducting Tokamak (EAST) என்ற உலை சி சுவான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ‘டோனட்’ வடிவிலானது.2017-ல் 50 மில்லியன் டிகிரி வெப்பம்தான் உருவாக்க முடிந்தது;2018-ல் நடந்த பரிசோதனையில் அதில் 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸிற்கும் மேலாக வெப்பம் கிடைத்தது.செப்புக் கம்பிச் சுருள்கள் செறிவான காந்த மண்டலத்தின் மூலம் அதிக அளவில் ‘எலெக்ட்ரான்’ வெப்பத்தை தக்க வைத்தது இதில் ஒரு முக்கிய திருப்புமுனை.இயற்கைச் சூரியனின் உட்புறத்திலேயே 15 மில்லியன் டிகிரிதான் வெப்பம் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
22.5 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்தியா, அமெரிக்கா, சீனா,ஜப்பான், ரஷ்யா,தென் கொரியா,ஃப்ரான்ஸ் உட்பட 35 நாடுகளின் நிதியில் International Thermonuclear Experimental Reactor (ITER) செயல்படுகிறது; மிகப் பெரிய அணு வெப்ப சோதனைக் கலத்திற்கு இந்தப் பரிசோதனையின் தொழில் நுட்பப் பங்களிப்பு முக்கியமானது.
இது 2020-ல் செயல்படத் துவங்கும்,பெரும் ஆலை முன்மாதிரிகள் 2035-ல் உருவாகும், 2050-ல் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ‘சிங்குவா’ செய்தியறிக்கை சொல்கிறது.சீனா கடலிலிருந்து தூத்தேரியத்தை எடுத்துப் பயன்படுத்துகிறது.
செயற்கை சக்தி- தூயதாக, பக்க விளைவுகளற்ற,உலை வெடித்து உயிர்க்குலங்களை அழிக்காததாக,வேற்றுக் கழிவுகளை ஏற்படுத்ததாக இருக்கட்டும்.நிதி அளிப்பதைத் தவிர இந்தியா இந்தத் துறையில் இன்னமும் ஈடுபட்டு செலவு குறைந்த வசதிகளை விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் கிடைக்குமாறு செய்தல் நலம்.
குறிப்பு: பானுமதி ந.
An article in HT by Sutirtho Patranobis,Associate Editor, Beijing in its issue dt 29-11-2019.
South China Morning Post
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
