கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு

தருக்க மனம் சென்று சேரமுடியாத இடத்தைச் சென்று தீண்ட முடிவதாலேயே சில சாதாரண கதைகள் அசாதாரண கதைகளாகின்றன. தருக்கம் எனும்போது நாம் அறிந்த திட்டவட்டமான புற எதார்த்தம் எனும் அளவுகோலைப் பயன்படுத்தலாம். இதனாலேயே  நாம் புனைவுக்கான காரணங்களையும், முடிவுகளையும், புனைவின் இயல்புக்கு வெளியே வைத்து ஆராய முடியாது. சாதாரணமாக நாம் இகவாழ்வில் எடுக்கும் முடிவுகளை புனைவில் வரும் கதாபாத்திரங்கள் எடுக்காமல் போகலாம். அதை நாம் பிறரது நடவடிக்கைகளை அளக்கும் அளவுகோல்களைக் கொண்டு கணக்கிட முடியாது.
மேற்சொன்ன வரையறையைக் கொடுத்ததும் நம்மில் பலருக்கும் புனைவின் தேவைதான் என்ன எனும் குழப்பம் ஏற்பட்டுவிடும். நாம் தினந்தோறும் உண்டு களித்து உயிர்த்து வாழும் உலகை மதிப்பிட எடுத்துக்கொள்ளும் கருவிகளின் வல்லமையில் புனைவு நிற்பதில்லை. அதேபோல புனைவின் மறைபொருள்களில் வாழ்வின் புதிர்கள் அவிழ்வதில்லை. பின்னர் புனைவின் அழகியலுக்கு என்ன மதிப்பு? கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், அவர்களின் அலைக்கழிப்புகளுக்கும் அர்த்தம் என்ன?
நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு கணம் கண்டடைய முடிவதே புனைவை விசேசமாக்குகிறது. அதில் நாம் அறிந்ததைத் தாண்டிய ஒரு அறிதல் இருக்கிறது. நம் தின வாழ்வில் சல்லிசாகத் தெரிகிற முடிவுகள் அங்கு புது அர்த்தத்தை அளிக்கும். அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுக்க நேர்ந்தால் அவரை விட மூடன் யாருமில்லை என நாம் சொல்லக்கூடும். ஆனால் மொழியும், புனைவு தருக்கமும் நம்முன் திறக்கும் உண்மையைவிட அக்கணத்தில் எதுவும் அழகு கிடையாது. அதை நாம் அறியும்போது வேறொரு அனுபவமாக மாற்றி நம்முடையது என சொந்தம் கொண்டாடத் தொடங்குகிறோம். பிற அனுபவங்களோடு அதைத் தொடர்புப்படுத்திப் பார்க்கிறோம். மு.தளையசிங்கம் “மூல அனுபவங்களை அளிக்காதது கலை,” என்கிறார்.
கு.ப.ரா.வின் “சிறிது வெளிச்சம்” கதை எளிமையாக நம் புற அனுபவ எல்லைகளைக் கடக்கிறது. பாதிக் கதை இயல்பாக இயங்குகிறது என்றால் மீதி யதார்த்தத்தை மீறிய தருக்கத்தோடு கட்டமைக்கப்படுகின்றது. கதையில் வரும் சாவித்திரிக்கு பதினெட்டு வயதுக்குள் அத்தனை அனுபவம். ஆண்களைப் பற்றியல்ல, மனிதர்களைப் பற்றி. அதில் ஆணும் பெண்ணும் அடக்கம். அதாவது மனிதனுக்கு நிரந்தர திருப்தி எதிலும் இருக்காது எனும் தீர்க்க தரிசனம். அதில் பெண்ணும் சேர்த்திதான். அவள் எதிர்பார்க்கும் திருப்தியும் நிரந்தரம் இல்லை எனும் நிலைபாட்டுக்கு வந்தவள் ‘போதுமடி,’ என்கிறாள். அது அவள் தனக்கு இட்டுக்கொள்ளும் கோடுதான்.
கதைசொல்லியின் அரவணைப்பில் ஒரு ஆதரவு கிடைக்கும் என எண்ணிய மறுநொடியே அவளுக்கு இந்த நிச்சயமின்மை உறைத்துவிட்டது. குறும்படம் லட்சுமி போல, “சும்மா ஜாலியா ஒருநாள் விடுதலையில் தளர்த்திக் கொள்வோம்,” என்றில்லாமல் சாவித்திரி இகவாழ்வில் ஆன்மிக விடுதலையான நித்திய சுகத்தை அடையமுடியாது எனும் தீர்க்கமான எண்ணத்தை அடைகிறாள். இதில் இன்னொன்றும் உள்ளது – நம் விடுதலை எப்போதும் நாம் பிறர் மீது சுமத்தும் உணர்வுகளை நம்பி உள்ளது. அதீத பாசம் வைப்பதும் காதல் வயப்படுவதும் கட்டுப்படுத்தும் இயல்புகள். ஆண்டாள் உத்தேசித்த நித்திய சுக காதல் நிலை விடுதலைக்கு பின்னான பிணைப்பு.  இகவாழ்வில் அதற்கு இடமில்லை. அம்மாடி போதுமடி என்பது  தன்னால் எழுத்தாளனுக்கு உருவாகியிருக்கும் உணர்வுக்கான உடைப்பும்கூட. அதை உடைக்காமல் அவனிடம் பச்சாதாபம் தேடினால் அவளுக்கு முழு விடுதலை இல்லை. பச்சை ஒளிரும் அவள் உடல் இளமைக்கு மட்டுமல்ல, அவளது ஆன்மிக உந்துதலுக்கான அடையாளமும்கூட. அந்தச் சுதந்திர விழைவு உடல் விழைவைத் தாண்டிய ஒன்று. அப்படிப்பட்டவளுக்கு வெளிச்சமே வேண்டாம். அணையா விளக்காகும் விவேகம் கொண்டவள்.
கு.ப.ரா இங்கு செய்வது என்ன? யதார்த்தமான பெண்ணாக வலம் வரும் சாவித்திரியின் அசாதாரண அகத்தெளிவின் மீது சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார், முழு வெளிச்சத்தை உலகம் தாங்காது என்பது போல். அந்தச் சிறு வெளிச்சத்தைக் கொண்டு கதைசொல்லி தெளிவு பெறுகிறாரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. அவள் இறந்தபின், அவளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக தங்களுக்குள் நடந்ததைச் சொல்லத் தொடங்குகிறார். ஆனால் அவள் மனதுக்குள் இன்னும் என்னென்ன குழப்பங்கள் இருந்தனவோ, அவை அவளது மார்பை எப்படி அடைத்துக் கொண்டனவோ, அவள்தான் என்னிடம் எதையும் முழுவதுமாகச் சொல்லவில்லையே, எனவும் குறைபட்டுக் கொள்கிறார்.
ஆனால் கதைசொல்லிக்கு இல்லாத தெளிவு ஆசிரியரான கு.ப.ரா படைத்த சாவித்திரிக்கு இருக்கிறது.
***

Series Navigation<< போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து. >>

One Reply to “கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு”

  1. “சிறிது வெளிச்சம்”

    எதார்த்தமான கற்பனை கதை இது.
    கதைக்கான தர்க்கத்தில் கதாநாயகி சாவித்திரியின் ஆளுமையும் சென்ற பாதையும் அடைந்த தெளிவையும் வரைந்து எடுக்கும் முயற்சி.

    சாவித்திரியின் திடீர் மரணத்தில் சந்தேகங்கள் இருந்தது.

    திருப்தி என்பது ஒருவர் தான் நினைத்த மாதிரியானத் தரத்துக்கு நிகர் கொண்டதை அடைந்தால்தான்
    மனநிறைவு கொள்வேன் என்பதாகும். இவர்களது மனம் சதா ஒவ்வொரு விஷயத்திலும் ,நுகர்விலும் , உறவுகளிலும் தரத்தை அளந்து கொண்டே ஒரு முடிவெடுக்கும் திறன் இல்லாமல் அலைக்கழிக்கப் படுவார்கள்.

    சாவித்திரிக்கு பொய் சொல்லாமலும் கேட்காமலும் இருப்பது முக்கியமான ஒழுக்க நெறி. சாவித்திரி மண வாழ்வில் இருந்ததோ மூன்று ஆண்டுகள். அவள் புகுந்த வீட்டில் கணவனைத் தவிர மற்றவர்கள் யாரும் இல்லை.பிறந்த வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதும் அது குடும்ப சமூக நீதிக்கு ஒத்ததல்ல என்பதும் அவளது நியாயம்.
    தாங்கும் உறவுகள் அற்று உதவிகள் அற்று நாதிகளற்று இருந்தாள் .அவள் பதினெட்டு வயதான சோக சோபையாக அறிமுகம் கொடுத்துள்ளார். வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறாள்.
    பிறருடன் பேசுவதும் பழகுவதும் இல்லை.

    அவள் உடலின் மீதும் மனத்தின் மீதும் தாம்பத்திய உறவின் மீதும் பெரும் வன்முறையைச் செலுத்தியப் பெண் பித்தனான கணவனால் தினமும் அவமதிக்கப் பட்டாள், அலட்சியப் படுத்தப் பட்டாள், தன்மானமும் பாதிக்கப்பட்டாள். கணவனின் மிருகத்தனமான இச்சைக்கு ஈடு கொடுத்தும் , சுகம் கிட்ட வில்லையெனவும் , அதுனால் அவளுடைய நெஞ்சம் புண்ணாகி , ஆவி குலைந்தது என்றும் புலம்புகிறாள்.

    வாழ்க்கை வாழ தகுந்தது அல்ல, மண உறவுகளும் நம்பிக்கைக்கு உரியதல்ல, மனிதர்களால் உபயோகித்து , அனுபவித்து விட்டு தூக்கி எறியப்படுவோம் எனத் தன் அனுபவத்திலிருந்து அசையா நம்பிக்கைக் கொள்கிறாள்.
    சிதைவுறும் அழகையும் மூப்பையும் ஏற்க மறுத்து ஆண்கள் அதிருப்தி கொள்ளுகிறார்கள்.‌ இந்த காரணத்தினால் தான் கணவன்மார்கள் சலித்து போய் மனைவிமார்களை நிராகரிக்கிறார்கள் . மற்ற இளம் அழகிய பெண்களை நாடுகிறார்கள் என எண்ணுகிறாள்.

    அவளது சொந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளாலும் திருப்தியற்ற சூழலாலும் உற்ற துயரத்தாலும் அடைந்த மனச்சோர்வின் ஒரு உச்சத்தில் தற்கொலைக்கு முயன்று தோல்வியும் அடைந்தாள்.

    முதல் சந்திப்பிலேயே தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஏற்கும் எழுத்தாளனிடம் மிகவும் நெருக்கமாகி சாவித்திரி தன் அந்தரங்கங்களை வெளிப் படுத்துகிறாள். தன் உடல் இச் சோகத்தை இனிமேல் தாங்காது என்று கண்டடைந்த உடன் ஏதோ ஒரு திருப்தி அடைந்ததாக எண்ணுகிறாள். கற்பனை உலகில் தான் எண்ணியது போல் தரமான இன்பம் கண்டாளோ?

    அதீதமான மனச்சோர்வடன் ,எதையும் முடிவெடுக்க முடியாத சிந்தனைக் குழப்பத்துடன் எழுத்தாளனின் படுக்கையில் கிடந்தபோது “அம்மா ! இது போது மடி ” என்று முனகிய பின் , முகத்துக்கு மேல் முகம் வைத்திருக்கையில், மீண்டும் “போதும்” என்று எழுந்து சென்றாள். இது போன்று பளிச்சிடும் தெளிந்த கருத்தை “கருத்து மனச்சோர்வு யதார்த்தவாதம்” என்பர் உளவியல் வல்லுநர்கள்.

    ஒழுக்க சீலி ஊஞ்சலாடும் மனம் கொண்டவள் . இவ்விடம் தன் மனதை ஏற்றவர் அருகே இருந்ததே அவளது கணவனின் மீது கொண்ட வஞ்சத்தை தீர்க்க “இது போதும்”என்று நிறைவடைந்துளா.

    “இது போது மடி” என்பது அவள் உள்ளத்தில் பாய்ந்த “சிறு வெளிச்சம்.” அதில் அவள் கண்டதோ பெரிய தத்துவ வெளிச்சம். அவள் உள்ளத்தை திறந்து அவனிடம் காட்டியதும் , தன் இன்பம் துன்பங்களை அவனிடம் கொட்டியதுமே இச் “சிறிய வெளிச்சத்தை” அடைவதற்கு உதவியதும் கூட..

    இக்கவிதை வரிகளின்நீட்சியாக
    ” ‘இது போதுமடி’ நீ எனக்கு,
    இனிப் போகவேண்டுமடி பேரின்பவாழ்வுக்கு” என்பதது தான்.

    சாவித்திரி, தன் சிறிய அனுபவத்திலிருந்து ‘திருப்தி’என்பது அடைய முடியாத ஒன்றெனவும் , இது யாவருக்குமான அனுபவமே என்றாள். யாயாதி முதல் அருணகிரிநாதர் வரை கண்ட உண்மை என உணர்ந்தாளோ. இது வரை அனுபவித்த இவ்வுலக சிற்றின்பங்கள் போது மென்றும் தரமிகுந்த அவ்வுலக பேரின்ப வாழ்வை நோக்கினாள் போலும். ஒரே வருடத்தில் காலன் அவளை நகர்த்த பேரின்ப பெருவாழ்வு என்ற பெருவெள்ளத்தில் கலந்தாள்.

Leave a Reply to முத்துகிருஷ்ணன் வேCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.