குழந்தைகளோடு ஒரு புகைப்படம், நீர்ம உருண்டை

குழந்தைகளோடு ஒரு புகைப்படம்

kids_children_play_young_youth_two_eyes_closed_river_water

ஒரு குழந்தை ஒரு திசையை நோக்கியிருக்கும்.
அதைச் சரி செய்வதற்குள் இன்னொரு குழந்தை இன்னொரு திசையை நோக்கிய படி இருக்கும்.
ஒரு குழந்தை அழும்.
அதனைச் சமாதானப்படுத்துவதற்குள் இன்னொரு குழந்தை அழும்.
ஒரு குழந்தை கோணல் மாணலாய் நிற்கும்.
அதை நிமிர்த்துவதற்குள், அடுத்து ஒரு குழந்தை வரிசையை விட்டு ஓடிப் போகும்.
ஒரு குழந்தை விழிகளை மூடிக் கொண்டிருக்கும்.
எங்கே தூங்கி விடுமோ என்று அதை எழுப்ப வேண்டியிருக்கும்.
ஒரு குழந்தை மறைந்திருக்கும் ஒரு குழந்தையின் பின்.
மற்றொன்று மறைத்திருக்கும் இன்னொன்றை.
குழந்தைகளை வரிசையில் நிறுத்தி புகைப்படம் எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.
ஒரு வகையாய் குழந்தைகளோடு சேர்ந்தெடுத்த புகைப்படத்தைப் பார்த்த போது குழந்தைகள் குழந்தைகளாய்த் தெரியும்.
யாரும் வரிசையில் முன் நிறுத்தியது போல் நிற்பது போல் இல்லை.
நல்ல வேளை!
(நினைத்திருந்தாலும் நினைத்திருக்கலாம் நான்)
புகைப்படம் எடுக்கும் சமயத்திற்குள் குழந்தைகள் பெரியவர்களாய் வளர்ந்து விடவில்லை!
கு.அழகர்சாமி

extreme-bubbles

நீர்ம உருண்டை

அவருடனான
எங்களது பரிச்சயத்தின்
முதல் உள்ளங்கைப் பற்றுதலில்
கசியத் தொடங்கியது
அவர் கை வழியே.
தரை பெருகி
கால்கள் நனைந்து
கைகள் நனைந்து
வாய் மூக்கு கண் உச்சந்தலை
எல்லாமும் நனைந்து
எங்களைச் சுற்றிலும்
ஒரு நீர்ம உருண்டை
மண்ணொட்டா நீர்ம உருண்டை
மூச்சு முட்டா நீர்ம உருண்டை
ஒளி பாயும் நீர்ம உருண்டை
அதனுள்ளிருந்தபடி
நாங்கள் குதிக்கிறோம்
பாய்கிறோம் தாவுகிறோம்
குட்டிக்கரணம் செய்கிறோம்
கருவிலிருக்கும்
சிசுவைச் சுற்றியுள்ள
அம்னியாட்டிக் திரவம் போல
எப்போதும்
எங்களைச் சுற்றியிருக்கிறது
நீர்ம உருண்டை
பொடியர்களுக்கு
குட்டி சைக்கிள்களை
வாடகைக்கு விடும் கடைக்காரர்
தெருமுனையில் நின்றுகொண்டு
அவர்கள் பழகுவதைப் பார்த்து
சிரிப்பதைப் போல
எங்களுக்குப் பின்னே
தொலைவிலிருந்து
முழங்கையைச் சொறிந்தபடி
சிரிக்கிறார் அவர்

அருண் காந்தி


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.