[stextbox id=”info” caption=”மதியிறுக்கக் குறைபாடைக் கண்டடைய எளிய வழி”]
மதியிறுக்கக் (ஆட்டிசம்) குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிய சில சுலபமான வழிமுறைகளை இஸ்ரேலின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இஸ்ரேல் நாட்டின் வெயிஸ்மென் அறிவியல் கூடத்தின் விஞ்ஞானிகள் நுகர்வு முறைகளைக் கொண்டு குழந்தைகளின் மதியிறுக்க அளவைக் கண்டறிய முனைந்துள்ளனர். மதியிறுக்கக் குறைபாடு இல்லாத குழந்தைகள் துர்வாடைகளிலிருந்து விலகுவதோடு அவற்றை மீண்டும் அணுகுவதில்லை. மதியிறுக்கக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் துர்வாடைக்கும் இனிமையான வாடைக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை என அவர்களது ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் சில மாதங்களேயான குழந்தைகளிடம் மதியிறுக்கத்தின் அளவைக் கண்டறிய முடியும் என்கிறார்கள்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”தெற்கு கரோலினாவின் இன வெறுப்பு”]
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதி எமானுவெல் தேவாலையத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஏழு கருப்பின மக்களின் தேவாலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பைபிள் ஸ்டடி குழுவில் இருந்த ஒன்பது கருப்பின அமெரிக்கர்களை சுட்டுக் கொண்ட டிலன் ஸ்றாம் ரூஃபின் வாக்குமூலத்தின்படி இது திட்டமிடப்பட்ட இனவெறித் தாக்குதல் எனத் தெரியவந்திருக்கிறது. தண்டனைக்காகக் காத்திருக்கும் வேளையில் மேலும் பல தேவாலையங்கள் தீக்கிரையாகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு தெற்கு கரோலினா போலீசார் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றிய செய்தியை இந்த சுட்டியில் பார்க்கலாம்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”சவுதி அரேபியாவில் பெண்களின் நிலை”]
ஒரு அடிப்படை வாத அரசின் கீழ் அவதியுற்றாலும், தம்மளவிலும் பழமைவாதமும், ஆணாதிக்கமும் ஊறிய பண்பாட்டையே கொண்ட சமூகத்தினரின் நாடு நவீன வாழ்க்கை முறையை எப்படி எதிர்கொள்ளும்? மேற்காசியாவிலும், கிழக்காசியாவிலும் பல நாடுகளில் இன்றுள்ள மிகப் பெரிய சவால் இது. குறிப்பாக சவுதி அரேபியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக அடிப்படைவாதமும் நவீன வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய மதமும் அதன் முல்லாக்களும் வற்புறுத்தும் சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளிவர முடியாத இளையதலைமுறையினர் பலரும் கிடைக்கும் சிறு இடைவெளியிலும் தப்பி ஓடி ஒரு புது வழி அமைப்பதற்காகப் பாடுபடுகிறார்கள். குறிப்பாக பெண்களின் நிலைமை இன்றும் கவலைக்கிடம் தான். 2012 வரை கடைக்குச் சென்று உள்ளாடைகளை வாங்கும்போது அணிந்துபார்க்கும் அறை இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள், ஆண்களும் பெண்களும் அலுவலங்களுக்கு உள்ளே நுழைவதற்கு வெவ்வேறு வழிகள், திரையரங்குகள் இல்லை, பெண்களுடன் தனியறையில் ஒன்றாக இருக்க முடியாது.
எப்படிப்பட்ட பழமைவாதம் அங்கு ஊறி வருகிறது? ஒரு உதாரணம்:
https://m.youtube.com/watch?v=s4PbPbPKJIQ
[/stextbox]
[stextbox id=”info” caption=”75வது இதழ்”]
சென்ஸஸ் ஆஃப் சினிமா ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானாலும் ஃபிரெஞ்சுப் படங்களைப் பற்றிக் கூட பேசும் பத்திரிகை. அவர்களின் எழுபத்தைந்தாவது இதழை தடபுடலாக வெளியிட்டிருக்கிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமௌலி போல் ஹாலிவுட்டில் ஆர்ப்பாட்டமான படங்கள் எடுக்கும் மைக்கேல் பே குறித்த அலசல்களையும் போடுகிறார்கள். கேன்ஸ் திரைப்பட விழா குறித்தும் எழுதுகிறார்கள். புத்தக விமர்சனங்கள், நேர்காணல்கள், கருப்பு-வெள்ளை படங்கள், மாற்று சினிமா என எதையும் விட்டுவைக்காமல் வெளியிட்டு இருக்கிறார்கள்.
http://sensesofcinema.com/issues/issue-75/
[/stextbox]
[stextbox id=”info” caption=”இந்தியாவின் இளம் கணித ஆய்வாளர்கள்”]
நன்றி: லைவ்மிண்ட்
மகரந்தம் பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய குறிப்பா இது? தனிக் கட்டுரையாகவே வர வேண்டியது. ஆனால் வாசகர்களில் யாராவது இந்தச் சுட்டியில் கிட்டும் கட்டுரையைப் படித்து விட்டு, ஊக்கம் பெற்று, எழுத முற்பட்டு, இந்தியாவின் இளைய தலைமுறை கணித ஆய்வாளர்களைப் பற்றி ஒரு சில கட்டுரைகளை சொல்வனத்துக்கு எழுதிக் கொடுப்பார்களா என்று பார்க்கவே இதை மகரந்தக் குறிப்பாகக் கொடுக்கிறோம்.
திலிப் டி ஸூஸா என்பவர் இந்திய கணித ஆய்வாளர்களைப் பற்றி எழுதி வருவதாகத் தெரிகிறது. அவர் சமீபத்தில் இளைய தலைமுறையினரைப் பற்றி எழுதிய கட்டுரை இது. இதில் தெரிய வருகிற பலரும் எண் கோட்பாடு எனப்படும் துறை சார்ந்த ஆய்வுகளைச் செய்கிறார்கள் என்றும், அது ராமானுஜனின் அபிமானத் துறை என்றும் கட்டுரையாளர் சொல்கிறார். இவர் சுட்டுகிற பலரில் சிலர் சென்னை வாசிகள், அல்லது தமிழர் என்று தெரிகிறது.
ஆனந்தவர்த்தனன், அமிர்தான்ஷு பிரசாத் ஆகியோர் கற்றுக் கொடுப்பதில் நிறைய கவனம் செலுத்துகிறார்கள், சிறப்பான ஆசிரியர்கள் என்பது கட்டுரையில் சுட்டப்படுகிறது. தவிர கணிதம் என்ற துறையின் கவனம் அழகு சார்ந்ததும் கூட என்பதையும் துவக்கத்திலேயே சுட்டுவது, கணிதத்துக்கு இளம் வாசகர்களை ஈர்க்கும் முயற்சி எனபறு நமக்குப் புரிகிறது, ஒரு புன்முறுவலையாவது இது தூண்டும்.
இந்தியாவில் இத்தனை இடங்களில் கணித ஆய்வு மையங்கள் உள்ளன என்று இப்படிச் சில கட்டுரைகளைப் பார்த்தால்தான் நமக்குத் தெரிய வருகிறது. இந்த மாதிரி ஆய்வாளர்களின் பேட்டிகள் ஏன் பரவலாக ஊடகங்களில் வெளி வருவதில்லை? இக்கட்டுரையை வெளியிட்ட லைவ் மிண்ட் பத்திரிகைக்கு ஒரு சபாஷ் அவசியம்.
http://mintonsunday.livemint.com/news/meet-the-heirs-to-ramanujans-genius/2.3.3593071363.html
[/stextbox]