[stextbox id=”info” caption=”பார்வை ஒன்றே போதுமே…”]
நாய்கள் ஏன் மனிதர் பின்னால் வரத் துவங்கின? இந்தக் கேள்வி மேற்கில் பல ஆய்வாளர்களைத் தூண்டுகிறது. ஒருவர் சமீபத்தில் ஒரு சிறு சோதனை செய்து இந்தப் புதிரின் ஒரு துண்டு அம்சத்தை விளங்கிக் கொண்டிருக்கிறார். அது நாய்களும், மனிதரும் கண்ணை நோக்குவதை விரும்புகிற ஜீவன்கள் என்ற உண்மை. நாய்கள் தம்மைப் போஷிப்பவரின் கண்களை நீடித்து நோக்குவது அவற்றுக்கும் அம்மனிதருக்கும் உள்ள உறவை வலுப்படுத்துகிறது என்பது இந்த ஆய்வாளரின் கண்டு பிடிப்பு. அதற்கு நாய்களின் மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்ற ஒரு திரவம் காரணம். இதே ஆக்ஸிடொஸின் மனித மூளையிலும் சுரக்கும், அதே வகை மறுவினையை மனிதரின் புத்தியிலும் தூண்டும். ஆக மனித நாய் மனிதப் பார்வைத் தொடர்ச்சி என்பது பரஸ்பரம் நம்பிக்கை, நட்பு, பாசம் ஆகியவற்றுக்கு அடிப்படையாம். மேலே விவரங்களுக்கு இதைப் படியுங்கள்.
http://well.blogs.nytimes.com/2015/04/16/the-look-of-love-is-in-the-dogs-eyes/
[/stextbox]
[stextbox id=”info” caption=”முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலும் சரியான நேரம்”]
எத்தனையோ கோரமான செய்திகள் பத்திரிகைகளின்/ தொலைக்காட்சித் திரைகளின்/ சமூக ஊடகங்களின் பரப்புகளை ஆக்கிரமிக்கையில் வாழ்க்கை இத்தனை இருளானதா, நிராசைதான் மனிதத்தின் ஒரே கதியா என்று தோன்றும். இத்தகைய சலிப்புக்கு ஒரு நபரின் வயதும் காரணமாக இருக்கக் கூடும். உயிர்ப்பு என்பதே மனித உடலின் சுரப்பிகளின் கிரியை என்று கூடச் சொல்லலாம். இத்தகைய இருள் மனதைக் கவ்வித் தின்றுவிடாமல் இருக்க அவ்வப்போது ஒரு சிறு கீற்று மின்னல் அடித்து புத்தியைத் தட்டி உசுப்புகிறது. இங்கே கிட்டும் ஒரு கீற்று மின்னல் அப்படி ஒரு செய்தி.
தீர்க்க ரேகை என்று முந் நாளில் அழைக்கப்பட்ட உலகப் பரப்பினூடே வரையப்படும் நெடுங்கோடு, அனேகமாக முற்றிலும் கணிதத்தால் தீர்மானிக்கப்படுவது. இதை ஒரு வகையாக கணக்கிட்டு முடித்தது யூரோப்பின் கடிகார அமைப்பின் வல்லுநர்கள். 18ஆம் நூற்றாண்டில், கடலில் அத்துவானத்தில் சஞ்சரிக்கும் மாலுமிகள் தாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிய உதவும் காலக்கணக்கு எந்திரங்களை 18ஆம் நூற்றாண்டின் கடிகாரப் பொறியாளர்கள் தயாரித்துக் கொடுத்து உலகளவில் சஞ்சரிக்க அம்மனிதர்களுக்குப் பெரும் உதவி செய்தனர். ஜான் ஹாரிஸன் என்ற பிரிட்டிஷ் பொறியாளர் இதில் முன்னோடி. இவருடைய எந்திரங்கள் அபாரமான தொழில் நேர்த்தியும், தவறாத காலக்கணக்கும் கொண்டவை. இவர் நெடுங்கோட்டுக் கணக்கை உறுதி செய்யும் போட்டியில் பெரும்பரிசை வென்று ஓரளவு வசதியான வாழ்வைப் பெற்றார். இது குறித்து டேவா ஸொபெல் என்பார் எழுதிய லாஞ்சிட்யூட் என்கிற புத்தகமும் அதை ஒட்டி எடுக்கப்பட்ட லாஞ்சிட்யூட் என்று ஒரு தகவல் படமும் பிரசித்தி அடைந்தவை. இப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சில வருடங்கள் முன்பு வெளி வந்த இந்தப் படம் பல தொலைக்காட்சி அமைப்புகளால் ஒலிபரப்பப்பட்டது. இந்தியாவில் இது ஒலிபரப்பப்பட்டதா என்பது தெரியவில்லை. பிபிஸி நிச்சயம் ஒலிபரப்பி இருக்கும்.
இன்று வெளியான செய்தியில் ஜான் ஹாரிஸனின் இன்னொரு திட்டம் அன்று பரிகசிக்கப்பட்டாலும், ஒன்றரை நூற்றாண்டு கழித்து சமீபத்தில், முற்றிலும் சரியான திட்டம் என்றும், அவர் வடிவமைத்த ஒரு எந்திரம் அவர் சொன்னபடியே மிகக் குறைவான காலக்கசிவையே அடைந்தது என்றும் உறுதி ஆகியிருக்கிறது. ஒவ்வொரு மனித உயர்வும் அதற்கான காலக் களம் கிட்டினால்தான் தக்க பெருமை பெறுகிறது போலும்.
அது குறித்த கட்டுரை இங்கே பிரசுரமாகி இருக்கிறது.
http://www.theguardian.com/science/2015/apr/19/clockmaker-john-harrison-vindicated-250-years-absurd-claims
[/stextbox]
[stextbox id=”info” caption=”சமூக ஊடகம் என்னும் திரிசங்கு சொர்க்கம்”]
செய்தித்தாளுக்கு எது உகந்ததோ, அதெல்லாம் அச்சிடுவதாக ‘நியு யார்க் டைம்ஸ்’ சொல்லிக் கொள்ளும். இன்றைய கூகுள் செய்திகளும் ஃபேஸ்புக் பக்கங்களும், உங்களுக்கு எது உகந்ததோ, அதெல்லாம் மட்டுமே காட்டுவதை இலட்சியமாக வைத்திருக்கிறது. தற்கால இளைஞர்களுக்கு இன்ஸ்டாகிராம் படங்களும் ஸ்னாப்சாட் தகவல்களுமே அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள உதவுகின்றன. இவை போன்ற சமூக ஊடகங்கள், பயனர்களுக்கு எவர் பிடித்திருக்கிறாரோ, அவர்களின் விஷயங்களை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற விஷயங்களை ஒதுக்கி மறைத்துவிடுகிறது. பயனர்களின் மனதிற்கு ரம்மியமாக எவை இருக்கிறதோ, அதை மட்டுமே காண்பிக்கிறது. பூனைகள் குறுகுறுவென ஓடுவதையும், மனதிற்கினிய காபி விளம்பரம் போன்ற விழியங்களையும் மட்டுமே மீண்டும், மீண்டும் தன் வலைவாயிலில் வைத்திருப்பதன் மூலம், நிஜத்தைச் சொல்லாமல் அவர்களின் அனுமானங்களை உரசிப் பார்க்காமல், படுதா போட்டு மாயலோகத்தில் தன்னுடைய உபயோகிப்பாளர்களுக்கு அரணாக இருக்கிறதா என இந்தக் கட்டுரை அலசுகிறது.
[stextbox id=”info” caption=”தவறவிடாதீர்கள்!”]
சக மனிதர்களின் வற்புறுத்தலால் உலக மனிதர்களின் புத்தியே மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நடக்கிறது. சக மனிதர்கள் இத்தனைக்கும் ஒருவரின் அண்டைப் பக்கமோ, அன்றாட வாழ்வின் பல அம்சங்களிலோ பங்கெடுப்பாரே இல்லை. இது வாழ்வில் பெருகி வரும் ஊடக இடையீட்டால் நேர்வது என்றெல்லாம் பேசுகிறது இந்தக் கட்டுரை. இதை எத்தனை தூரம் நாம் பொருட்படுத்த வேண்டும்? வாசகர்களின் கருத்து இந்தக் கட்டுரை பற்றி என்ன என்று சொல்வனத்துக்கு எழுதித் தெரிவிப்பார்களா?
http://www.thebaffler.com/blog/peer-peer-pressure/
[/stextbox]