ஈராக் எனும் குருக்ஷேத்திரம்

எங்கே செல்லும் இந்தப்பாதை… ஐ எஸ் ஸை முன்வைத்து

iraq-5.ISIS_ISIL_Islamic_State_Flags_Caliphate

முதலில் சிலநூறுபேர் கொடியுடன் வந்தனர். மாலைக்குள் ஆயிரக்கணக்கில். முதலில் சொல்லப்பட்ட எண்ணிக்கை 1500 பேர். ஒரு மாதத்துக்குள் 5000 பேர். தற்போது 15 ஆயிரத்துக்கும் மேல் என நம்பப்படுகிறது.
தாஷ் என்றும், ஐ எஸ் ஐ எஸ், ஐ எஸ், ஐ எஸ் ஐ எல் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஐ எஸ் ஐ எஸ் என்பதே எல்லோருக்கும் தெரிந்த பெயராய் இருக்கிறது. இந்த ‘தெரிந்த பெயர்’ பெரிய சாதனைகளைச் செய்ததாலோ அல்லது ஈராக்கின் ஒரு பகுதியை வளமான ஒன்றாக மாற்றியதாலோ வந்ததல்ல.
குரூரம் மூலமும், காட்டுமிராண்டித்தனத்தின் மூலமும் மக்களை மிரட்டிப் பணிய வைத்து இவர்கள் தங்களுக்கென அரசாங்கம் போன்ற ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். ஈராக்கின் வடக்கில் கொஞ்சமும், சிரியாவின் ஒரு பகுதியையும் சேர்த்து இப்படி உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
ஜி எம் ஸி வண்டியின் ஜன்னலைத் திறந்துகொண்டு, இரு பக்கமும் துப்பாக்கியால் சாலையில் போவோர் வருவோரையெல்லாம் சுட்டுக்கொண்டே செல்வதும், சுடப்பட்டவன் இறந்துவிட்டானா என அருகில் சென்று பார்த்துவிட்டு, சாகவில்லை எனில் இன்னும் இரண்டு தோட்டாக்களைப் பாய்ச்சிச் செல்வதும், எதிரே வரும் காரை நோக்கிச் சுடுவதும் அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்களா என அருகில் சென்று பார்ப்பதும் போன்ற காட்சிகள் இருந்த ஒரு வீடியோவை முதன்முதலில் பார்த்தபோது இதைவிடக் கொடூரம் இனி நடக்கப்போவதில்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.
அடுத்தடுத்து அவர்களின் கொடூரத்தின் எல்லைகள் விரிந்துகொண்டே போனது. ஒரே நாளில் 2000 பேரை பின் மண்டையில் சுட்டு ஓடையில் தள்ளிவிட்டனர். மக்கள் பலியாடுகள் போல கூட்டம் கூட்டமாக வரிசையாக நடத்திச் சென்று ஐ எஸ் ஐ எஸ்ஸால் கொல்லப்பட்டனர். அதில் ஈராக்கிய போலிஸ், ஷியாக்களாகப் பிறந்துவிட்ட பொதுமக்கள், ராணுவ வீரர்கள், கிறிஸ்தவர்கள் எனப் பலருண்டு.
அடுத்த கட்டக் கொடூரமாக ஸுன்னி இனத்தைச் சாராத இஸ்லாமியர்கள் முதல் கிறிஸ்தவர்கள், யசிதிகள் என, தன்னைத்தவிர பிற ஜாதியை சேர்ந்த அனைவரையும் கூட்டம் கூட்டமாகக் கொன்றழித்தனர். இஸ்லாம் தோன்றிய காலத்தில் எப்படி இஸ்லாமிய ஆட்சி நடந்ததோ அதைப் போன்றதொரு ஒரு ஆட்சியை உருவாக்கப்போவதாகச் சொல்லி, குரானின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களுக்கு எப்படி சரியெனப்படுகிறதோ அப்படி ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை ஆரம்பித்தனர்.
கை தெரியும்படி உடையணிந்த பெண்ணுக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை…
இரு ஆண்கள் நடந்து சென்றால் நீங்கள் ஹோமோ எனச் சொல்லி சுட்டுக்கொல்வது.
ஹோமோக்கள் என சந்தேகப்படுவோரை உயரமான கட்டடங்களுக்குக் கொண்டு சென்று மேலிருந்து கீழே தள்ளிக் கொல்வது.
எல்லா மரண தண்டனைகளையும் பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று பார்க்க நிறைவேற்றுவது.
கிறிஸ்தவர்களைச் சிலுவையில் அறைந்து கொல்வது, அதுவும் மிகக் கொடூரமாக கொஞ்சம் கொஞ்சமாக ரத்தமெல்லாம் வடிந்து சாகவைப்பது. அவர்கள் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் கல்லெறியலாம் என்பது. இது அத்தனையும் மொசுல் நகரத்திலும், சிரியாவின் ரக்கா நகரிலுமாக அரங்கேற்றினர்.
ஷியாக்களை குடும்பம் குடும்பமாக கொன்றழித்தது, கல்யாணம் ஆகாத பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்வது.
ஸுன்னி மற்றும் வஹாபி இனத்தைச் சாராத பிற மதப் பெண்களைக் கவர்ந்துசென்று அடிமைச் சந்தையை உருவாக்கி, அந்தப் பெண்களை அடிமைகள் எனச் சொல்லி 10 டாலருக்கு விற்பனை செய்வது, ஐ எஸ்ஸின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பது என மோசுல் நகரத்தில் நுழைந்ததும் ஆரம்பித்த வெறியாட்டம் முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்தது.
மோசுல் நகரத்தின் மத்திய வங்கியைக் கொள்ளையடித்து தங்களுக்கென ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக்கொண்டு இனிமேல் இது இஸ்லாமிய நாடு என்ற பெயரில் அழைக்கப்படும் எனச் சொல்லியது, ஐ எஸ் ஐ எஸ்ஸின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியை உலக இஸ்லாமியர்களின் தலைவனாக அறிவித்துக்கொண்டது எனத் தீயாய்ப் பரவிக்கொண்டிருந்தது இந்தக் கூட்டம்.

Abu-Bakr-al-Baghdadi_Iraq_Caliphate_IS_Islamic_State_ISIL_Leaders_ISIS

முறையான பயிற்சிகளுடன் இருந்த ஈராக்கிய ராணுவமும், அதிரடிப்படையினரும் இவர்களை எப்படி எதிர்கொள்வது என யோசிப்பதற்குள் சில ஆயிரம் பேரை இழந்துவிட்டது.
அப்போது பிரதமராக இருந்த நூர் அல் மாலிக்கி யார் உதவியைக் கேட்போம் என நினைத்துக்கொண்டே இருந்துவிட்டாரே தவிர அமெரிக்கா தவிர வேறெங்கும் உதவி கேட்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஐ எஸ் ஐ எஸ், பாக்தாதின் எல்லைக்கு 40 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வந்து பாக்தாத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது. இனிமேலும் நூர் அல் மாலிக்கியை நம்பினால் இமாம் ஹுசைனையும், (கெர்பலா) நஜஃப் போன்ற ஷியாக்களின் வழிபாட்டுத்தலங்களையும் இந்த மத வெறியர்கள் தகர்ப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு ஷியா மிலிட்டரி என்ற ஒரு படையும், ஈராக்கிய ராணுவமும் சேர்ந்து ஐ எஸ் ஐ எஸெஸுக்கு எதிராக ஆயுதங்களை முழுவீச்சில் எடுத்தனர். அதன் பின்னரே பிடித்த இடங்களை விரிவு செய்யாமல், இருப்பதைக் காப்பாற்றப் போராட ஆரம்பித்தது ஐ எஸ் ஐ எஸ்.
தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் குறுக்கு வழியாக பாக்தாத் நகரம் முழுக்க தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தி மக்களுக்கு பயங்கரத்தை தினமும் கொடுத்துக்கொண்டிருந்தது. கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்தும் ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள், சவுதி, ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து உதவுவதாகச் சொல்லி தாக்குதலைத் தொடர்ந்தாலும் ஐ எஸ் ஐ எஸ் கையில் இருக்கும் ஆயுதங்களில் பெரும்பாலானவை சவுதி அரேபியா வழங்கியதாகத் தெரிகிறது. ஈராக்கியப் படைகள் கைப்பற்றிய இடங்களில் கிடைத்த ஆயுதங்கள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் சவுதியிலிருந்தே வந்திருப்பதை ஈராக்கிய தொலைக்காட்சி காட்டியது. இத்தனைக்கும் தற்போதைய பிரதமரான லப்பாதி சவுதிக்கு சென்று நட்பு அழைப்பும், உதவியும் கோரினார். ஈராக்கியர்களுக்கு ஆதரவாக ஐ எஸ் மீதான வான்வழித்தாக்குதலும், ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்புவதுமாக இரட்டை நிலையை எடுத்துக்கொண்டுள்ளது சவுதி அரேபியா.
ஜோர்டான் படைகளும் ஐ எஸ் ஐ எஸ் மீதான தாக்குதலுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியது. ஒரு விமானப்படை பைலட் ஐ எஸ் ஐ எஸ் கட்டுப்பாட்டின் இருக்கும் பகுதியில் தெரியாத்தனமாக இறங்கிவிட அவரை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி கொடுமைப்படுத்தியது என்பதையும் கடைசியில் அந்த விமானியைக் கூண்டுக்குள் அடைத்து உயிரோடு எரித்துக்கொன்றது என்பதையும் உலகம் பார்த்தது.
இந்தச் சிறிய படையை அழிக்க முடியாதவர்களா நம் உலக நாடுகள்? மனித நாகரீகத்துக்கே சவால்விடும் இவர்களை அழிக்க ஏன் உலக நாடுகள் ஈராக்குக்கு முழு ஆதரவும் தரவில்லை என்பதும், இன்னும் எதற்காக உலகம் காத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை.
ஐ எஸ் ஐ எஸ்ஸின் கிறுக்குத்தனத்தின் உச்சமாக மோசுல் நகரத்தில் இருக்கும் மனித நாகரீகத்தின் வரலாற்றைச் சொல்லும் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை உடைத்துத் தள்ளியது
உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டோர் அனைவரும் அணி அணியாக தங்களை ஐ எஸ் ஐ எஸ்ஸில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் சேர்பவர்கள் உலகின் இந்தப் பகுதியில்தான் என்றில்லாமல் உலகம் முழுக்க இருந்து வந்து சேர்கிறார்கள். இந்தியாவிலிருந்தும்கூட ஆட்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மும்பை கல்யானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது, இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் அங்கு நடக்கும் அக்கிரமங்களைக் காணச் சகியாமல் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியிருக்கிறார்.
சிறு சிறு முனகல்களை வெளியிட்டு விட்டு,  உலகம் இதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டு வேறு வேலையை பார்க்கப்போய்விட்டது. இன்று உலகின் தாதாவான அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவு வளர்ந்திருக்கிறது இந்த ஐஎஸ் ஐஎஸ். ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் கிடைத்துக்கொண்டிருந்தாலும், அவர்களை வேரோடு அழிப்பது மட்டுமே உலகுக்கும், ஈராக்குக்கும் நலம் பயக்கும். மனிதகுல விரோதிகளான இவர்களின் செய்கைகள், வன்முறை மற்றும் கொடூரம் எல்லாம் வெறும் செய்திகள் என்ற அளவுக்கு மரத்துப்போகச் செய்துவிட்டன.
இந்தப் பயங்கரவாதிகளால் இன்றுவரை ஈராக்கின் பொருளாதாரம் எழ முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையாக ஈராக்கில் போர் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது. நம் தலைமுறையில் ஈரான் x ஈராக் போரில் ஆரம்பித்து, குவைத் போர், பின்னர் அமெரிக்கர்களின் வருகை, பின்னர் அமெரிக்கர்களை வெளியேற்றப் போர், பின்னர் ஷியா மற்றும் ஸுன்னிகளுக்கு இடையேயான போர், தற்போது ஐ எஸ் ஐ எஸ்ஸுடன் போர் என விடாமல் போர் மட்டுமே செய்துகொண்டிருப்பதால் வருமானத்தின் பெரும்பகுதி சண்டைக்கே செல்கிறது. சதாம் இறக்கும் முன்னர்வரைகூட ஒரு ஈராக்கிய தினாருக்கு 10 ரூபாய் என்ற நிலையில் இருந்த பொருளாதாரம் இன்றைக்கு ஒரு இந்திய ரூபாய்க்கு 25 ஈராக்கிய தினார் என்ற அளவில் போய் நிற்கிறது. ஒரு டாலருக்கு 1200 ஈராக்கிய தினார்.
இந்தப் பொருளாதார வீழ்ச்சியும், போருக்கென வாங்கிய கடன்களும், கிடைக்கும் எண்ணெய் வளத்தையெல்லாம் கடன் கொடுத்தவர்கள் கொண்டு செல்லும் நிலையில்தான் இருக்கிறது. மொத்த உற்பத்தியில் 30 சதவீதம்கூட ஈராக்கிய அரசாங்கத்துக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாக சாதாரண ஈராக்கிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர் போன்ற எதுவுமே கால்வாசிகூட ஈராக்கிகளுக்கு போய்ச் சேரவில்லை. பயங்கரவாதத்தை முழுதும் வேரறுக்காமல் ஈராக் இனி எப்போதும் மேலெழ வாய்ப்பில்லை. அத்தனைக்கு அவர்கள் பயங்கரவாதத்துக்கும், அடிப்படைவாதத்துக்கும் தங்கள் மக்களை பலிகொண்டாயிற்று / கொடுத்தாயிற்று.
ஈராக் தற்போது ஐ ஸ் ஐ எஸ்ஸை முழுவீச்சில் அழிக்கத் திட்டமிட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஈரானின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி திக்ரித் நகரை மீட்டுள்ளது. இன்னும் முழுதாக திக்ரித் நகரைச் சுத்தம் செய்துவிட்டு முழுபலத்துடன் மோசுல் நகரையும் விடுவிப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த வெற்றியால், ஈராக்கியர்களுக்கு தங்கள் ராணுவத்தின் மீது நம்பிக்கையும், ஐ எஸ் ஐ எஸ் ஒழிவதற்கான வாய்ப்பு உண்டு என்ற எண்ணமும், கொஞ்சம் நிமிர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்திருக்கின்றன. இது தொடருமா, இல்லை மீண்டும் முதல் கட்டத்துக்கே வருவார்களா என்பது அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்.
அதிகமாக ஈரானைச் சார்ந்திருப்பதும், உள்நாட்டில் முனகல்களையும், ஈரானின் கிண்டலுடன் கூடிய சில கமெண்ட்டுகளும் ஈராக்கைக் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போதைக்கு நம்பக்கூடிய அளவு இருக்கும் ஒரே நாடு ஈரான் மட்டுமே. ஈரானும் ஈராக்கும் மத அடிப்படையில் ஷியா பிரிவு இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த முனகல்கள் ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிரான போரின் வேகத்தைக் குறைக்காது என நம்பலாம்.
இதே வேகமும், தாக்குதலும் தொடருமானால் எனது கணிப்பில் இன்னும் 6 மாதங்களுக்குள் மொசுல் நகரத்தையும் ஈராக்கிய ராணுவம் கைப்பற்றும் என்றே நம்புகிறேன்.

0 Replies to “ஈராக் எனும் குருக்ஷேத்திரம்”

  1. ஸ்ரீமத் பகவத்கீதை – 1
    அத்தியாயம் – 1
    திருதிராஷ்டிர உவாச:
    தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே சமவேதா யுயுத்ஸ்வ:
    மாமகா: பாண்டவாஷ் சைவ கிம் அகுர்வத சஞ்ஜய
    அருஞ்சொற் பொருள்:
    உவாச – கூறுகிறார் அல்லது சொல்கிறார்.
    ஷேத்திரம் – இடம்.
    பாண்டவா – பாண்டுவின் புதல்வர்களான யுதிஷ்டிரன் முதலான ஐவர்.
    கிம் – என்ன அல்லது ஏது.
    யுயுத்ஸவ – போரிடும் விருப்பம் கொண்டு.
    விளக்கம்:
    குருக்ஷேத்திரப் போர்க்களமானது மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த இடமாகும். தர்ம சடங்குகள் செய்யப்படும் இடமாகும். தேவலோகத்தில் இருப்பவர்களுக்குக் கூட இது வணங்கக்கூடிய தளம் என்று வேதத்தில் உரைக்கப் பட்டிடுக்கும் புனிதத்தன்மை வாய்ந்த க்ஷேத்திரம், குருக்ஷேத்திரம். அத்தகைய புனிதத்தன்மை வாய்ந்த குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், யுத்தம் புரியும் விருப்பத்தோடு சென்ற தம்முடைய புதல்வர்களும் பாண்டுவின் புதல்வர்களும் என்ன செய்தனர் என்று சஞ்சயனிடம் வினவினார் திருதிராஷ்டிரர்.
    =============================
    குருக்ஷேத்ரம் என்பது :
    1) தர்மத்தை நிலைநாட்ட
    2) போரின் முடிவு, கதி எல்லாவற்றையும் கருதியும் தானே உவந்து போருக்கு வந்தவர்களால், தங்கள் இனம், குலம் மட்டுமே அழியும் என்றரிந்தவர்களால்
    3) தேவர்களே வந்து சடங்குகள் செய்யும் பவித்ரமான இடத்தில்
    இதில் ஏதாவது ஒன்று குருக்ஷேத்திரத்துக்குப் பொருந்துமா?
    -Kargil Jay

  2. //இது தொடருமா, இல்லை மீண்டும் முதல் கட்டத்துக்கே வருவார்களா என்பது அந்த அல்லாவுக்குத்தான் தெரியும். – See more at: http://solvanam.com/?p=38987#sthash.AheMYevh.dpuf //
    From a field report, the above line made it as a literature. well done jeyakumar.

Leave a Reply to kargil JayCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.