(அல்லது) மூட்டை நிறைய நெல்லிக்காய்கள்!
சமூகக் குழுக்களை இணைத்து ஒருங்குபடுத்தி ஒரு நாடாக்குவது, ஒரு பெருஞ்சமுதாயமாக்குவது எத்தனை கடினம் என்பது நமக்கு இன்று தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒருங்குபட்ட தேசத்தை ஒரு பெரிய தடை, துன்பம், ஒழிக்க வேண்டியது என்று ’வேலையற்ற வீணர்கள்’ செய்யும் பிரச்சாரங்களை நம்பி சிறு குழுமையச் சமூகங்களாக உடையவும், உடைக்கவும், குறுங்குழு வெறிநோக்கை ஆதரிக்கவும் நாடெங்கும் முட்டாள்கள் கூட்டங்கள் பெருகி வருகின்றன. இது இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை. உலகெங்குமே பற்பல நாடுகளிலும் இத்தகைய அற்பத்தனமான இயக்கங்கள் அதிகரிக்கின்றன. உடையாத கோட்டை என்று கருதப்பட்ட மேலை நாகரீகங்கள் கூட இன்று பல சிறு குழுச் சமுதாயங்களாக உடையத் தலைப்பட்டிருக்கின்றன.
குர்துகள் என்றழைக்கப்படும் ஒரு மேற்காசியச் சமூகக் குழுவினர், தமக்கு ஒரு தாய்நாடு எனக் கனவு காணும் குர்துஸ்தான் என்ற நிலப்பகுதி பல நாடுகளிடையே பிரிக்கப்பட்டு சிதறிக் கிடக்கிறது. அந்நாடுகளிடமிருந்து இந்த நிலப்பகுதிகளைப் பிடுங்கி ஒன்று சேர்த்து ஒரு நாடாக்கும் கனவு பல பத்தாண்டுகளாக, ஏன் சில நூறாண்டுகளாக அவர்களிடம் புழக்கத்தில் இருக்கிறது. இது எந்த அளவுக்கு அவர்களைப் பொருளாதார வளங்களை அடையவிடாமல் தடுக்கும் ஒரு கனவு என்று இந்தப் பகுதிகளின் சமூக அமைப்பு, மேலும் வாய்ப்புகளை எல்லாம் ஆய்ந்தால்தான் நமக்குப் புலப்படும். இங்கொருவர், குர்துதான், கனடாவில் ஆய்வு செய்யப் போனவர் தம் மக்களின் ஒருங்குபடலுக்கு அவர்களுடைய பல மொழிக் குழுப் பிரிவுகளே காரணமாக இருக்கும் என்று தெரிவித்திருப்பதைப் பேசுகிற கட்டுரை கிட்டுகிறது.
http://chronicle.com/article/Professor-Youre-Dividing-My/139893/
oOo
பதவிக்குப் பாதகம் தரும் பதினைந்து பாதைகள்
பல்கலையாளர்கள் நம் போன்ற சாதாரணர்களிடம் பேச வருகையில் தாம் மேதாவிகள் போலவும், நம்மை அறியாதவர்கள் போலவும் பாவிப்பது கொஞ்சம் சகஜமாகவே காணக் கிட்டும். முனைவர் பட்டம் வாங்கியவர்களே எதையும் பற்றி ‘அறிவோடு’ எழுதக் கூடியவர்கள் என்பதாகவும், மற்றவர்களுக்கு அடிப்படை கூடத் தெரியவில்லை என்றும் சொல்பவர்களை நீங்கள் நிறையவே பார்க்க முடியும். முப்பது பேரே படிக்கக் கூடிய வெத்துக் கட்டுரைகளை யாருக்கும் தெரியாத ஒரு பல்கலை சஞ்சிகையில் பிரசுரித்து விட்டதாலேயே தான் மேதை என்று நினைக்கும் அரியவர்கள் பல்கலைகளில் உண்டு.
அவர்கள் தம்மிடையே எத்தனை அறிவார்ந்த தளங்களில் பழகி எதையும் கண்டடைகிறார்கள்? அப்படி ஒரு கருக்கான புத்தியும், தரம் மட்டுமே பார்த்தறியும் அறிவும் அவர்களுக்கு உண்டா என்று பார்த்தால் அப்படி ஏதும் இராது. ‘சாமானியர்’களான நம்மிடையே உலவும் அத்தனை அற்பத்தனங்களும் அங்கும் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில் ஒரு துவக்க நிலை விரிவுரையாளர் என்ன செய்தால் பணி நிரந்தரமாகாது போகும் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார், இன்னொரு மூத்த பேராசிரியர். படித்துப் பார்த்து இப்படி ஒரு அரசியல் வாதிகளா இவர்கள் என்று வியந்திருங்கள்.
http://chronicle.com/article/Self-Sabotage-in-the-Academic/138875/
oOo
நைஜீரியா: இஸ்லாமியப் போராளிகள்
அமைதி மார்க்கத்தின் இன்னொரு சாதனை. நைஜீரியாவில் குழந்தைகள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளிக்குத் தீ வைத்துக் கொளுத்திய போகோ ஹராம் என்கிற ஒரு தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகள் கூட்டம், 30 குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறது. நைஜீரியாவில் பல தங்கிப் படிக்கும் பள்ளிகளைத் தொடர்ந்து தாக்கி வரும் இந்தப் பயங்கரன்களின் கும்பல், இதுவரை 1200 பேரைக் கொன்றிருக்கிறது. குறிப்பாகப் பல நூறு குழந்தைகளைக் கொன்றிருக்கிறது. அமைதியென்றால் இதுவல்லவா அமைதி, மயான அமைதி. படிப்பில்லாத அமைதி. முட்டாள்தனமே வழி என்னும் பேரமைதி. தம் துப்பாக்கிகளையும் கத்திகளையும் தவிர வேறெந்த மனிதப் பேச்சும் எழவொட்டாத பேரமைதி.
http://www.huffingtonpost.com/2013/07/06/nigeria-school_n_554393.html
oOo
உலகம் முழுதும் புதுப் பேய் உலவுகிறது. அதுதான் ஒரு பக்கம் சீனாவின் ‘வெட்டர் படை’யின் தாக்குதல்கள், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ‘தோண்டுவார் படையின்’ தாக்குதல்கள். இதற்குத் துணை போகும் ரஷ்ய அரசின் உளவு நிறுவனங்கள், ரஷ்யாவின் பிரத்தியேக அளிப்பு- உலகுக்கு- குற்றக்கும்பல்களும் அவற்றுக்கு வேலை செய்யும் டெக்கி கும்பல்களும், பின் பிரிட்டிஷ், யூரோப்பிய உளவு நிறுவனங்கள், கொரியாவின் உளவு அமைப்புகள், ஏன் இந்தியாவின் சொத்தை அரசு கூட உளவு பார்க்கிறதாமே? இந்தியாவில் குற்றக் கும்பல்கள், கொலைகார இயக்கங்கள், அன்னியக் கைக்கூலி இயக்கங்கள் வேறு இதிலெல்லாம் கூட்டு.
ஆக எல்லாருமாகச் சேர்ந்து வேட்டையாடுவது யாரை என்றால் உலகெங்கும் ஓரளவு வளர்ந்து எண்ணிக்கையில் அதிகரித்துள்ள நடுத்தர மக்கள் கூட்டத்தை. இந்தக் கூட்டத்துக்குத்தான் கணனிப் பயன்பாடு நன்கு தெரியும், அதன் அன்றாட வாழ்வில் கணனிகள் இன்றியமையாதவையாகக் கூட ஆகிக் கொண்டிருக்கின்றன. உலக முதலியம் ஏற்கனவே இவர்களைப் பலிகடாவாக்கிக் கொண்டிருக்கிறது என்றாலும் அதுவாவது இந்தக் கூட்டத்தின் தேவைக்கதிகமான நுகர்வு மோகமே அப்படி ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று ஒரு சாக்கு இருக்கிறது. மற்ற உளவு பார்க்கும் கூட்டங்களுக்குப் பற்பல சாக்குகள்- அனேகமாக எல்லாமே அதில் பொய்களும் புனைசுருட்டுகளும் நிறைந்த சாக்குகள்.
மத்திய ரக மக்களின் ஜனநாயக விழைவுகள் இத்தனை நாட்களாக உலகையும், மக்களையும் எத்தி வாழ்ந்து, கொள்ளை அடித்துச் சுரண்டி அரசுகளையும், சமுதாய அமைப்புகளையும் செயலிழக்கச் செய்து வந்த பெருந்தனக்காரர்கள், அரசு அதிகாரிகளின் கூட்டணியை எதிர்க்கவும், அந்தக் கும்பலைக் கட்டுப்படுத்தவும் முயற்சி எடுக்கவும் துவங்கி இருக்கின்றன. இதற்குக் கணனிகள் குறிப்பாக ஒரு வலிவான ஆயுதமாகவும், ஜனநாயகப்படுத்தலுக்கு உதவும் அரும் ஊடகமாகவும் இருக்கின்றன.
எனவே அந்த வெளியை, தகவல் கிட்டும் வாய்ப்பை எப்படி அடைக்கலாம், எப்படி மக்களுக்குக் கிட்டாமல் அடிக்கலாம் என்று திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துகின்றன இந்தக் குற்றக் கும்பல்க்ள், உளவு அமைப்புகள்.
இதில் ஒரு விசித்திரச் செய்தி. உலகில் இந்தத் தாக்குதல்களை நிறைய நடத்திய ஒரு நாடு ரஷ்யா. அது இப்போது தன் ரகசியங்கள் உலகுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, தன் அரசு அமைப்புகளைத் தட்டச்சு எந்திரங்களைப் பயன்படுத்தத் தூண்டி வருகிறதாம்.
யார் சொன்னது வரலாறு முன்னேதான் செல்லும் என்று. செம் புரட்சிக்குப் பிறகு வரலாறு பல மடங்கு பின்னேயும் போகும்.