இரு ராஜஸ்தானி கவிதைகள்

இந்தியக் கவிதைகள் பெரும்பாலும் தமிழ் குஜராத்தி தவிர மற்ற மொழிகளில் எதிர்க்குரல்கள் நிரம்பியவையாகவே உள்ளன. கவிதையின் குரல் உரத்ததாயிருக்கிறது. இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். கிஷோர் கல்பனாகாந்த், நாம்தேவ் தாசல் பைராகி, நாராயணரெட்டி(நகைச்சுவையோடு), கோபாலகிஷ்ண அடிகா,ஜகன்னாத ப்ரசாத தாஸ்(ஒரியா), ஸ்ரீகாந்த் வர்மா, ஜெயந்த் ரெவ்லானி(சிந்தி). இந்தப் பின்னணியில் பின்வரும் இரு கவிதைகளும்.

இந்த இரு கவிதைகளும் ராஜஸ்தானி கவிஞர் ப்ரேம்ஜி ப்ரேமின் ‘வேர்களும் இதர கவிதைகளும்’ (Roots and other poems) என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து அருண் ஸெட்வால் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. இது சாகித்ய அகாதமியால் 2007ல் பிரசுரிக்கப்பட்டது. ப்ரேம்ஜி ப்ரேம் (1943-1993) ராஜஸ்தானி(ஹடோடி) மொழியின் முக்கியமான கவிஞர். 12 கவிதைத்தொகுப்புகள்,புதினங்கள், நாடகம் என விரிவானது இவரின் படைப்புலகம்.’சத்ரங் சமால்’ என்ற ஹடோடி மொழியின் முதல் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரராயிருந்தவர். ‘என் கவிதைகள்’ என்ற நூலுக்காக 1991ல் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்.

800-600-800-532

வலிமை

தொங்கிக் கொண்டிரு
என்னைப்போல
தலைகீழாக
பின்னங்கால்கள்
கசாப்புக் கடைக்காரனால்
கயிறால் கட்டப்பட்டு
மிருதுவான உன் தோல்
உரிக்கப்பட

பார்க்காதே
ஊதாநிற சதையை
வீணாக்காதே
உன் எச்சிலை
கசாப்புக்கடைக்காரனை
சுற்றிவந்து
உன் வாலை ஆட்டாதே
எப்படியும்
மிச்சங்களைப் பெறவே
நீ விதிக்கப்பட்டாய்

வெட்டப்படுவது
தலை தனியாக்கப்படுவது
தேவலாம்
குழைந்து
உன் வாலையாட்டுவதைவிட

இல்லையேல்
துணிவிருந்தால்
உன் கொம்புகளால்
குடல்களை
குத்தி வெளியே எடு

ஆடாகவோ
நாயாகவோ இரு
சூட்சும்மென்னவெனில்
வலிமை.

tree-neem

காலம்

பேசாதே
மௌனமாயிரு
காலத்தைப் பார்
நிகழ்பவைகளைக் கவனி

உனக்குத் தெரியும்
எப்படிப் பேசுவதென்று
ஆனால்
பேசுவதற்கு
ஒரு நேரமுண்டு
பேசு
உன் முறை வரும்போது

என்னைப் பார்
நான் மௌனமாயிருந்தேன்
தலைமுறைகளாக
காத்திருந்தேன்
என் முறை வரவில்லையென்று
என் முறை வரும்
எனக்குத் தெரியும்

இன்று
ஆணையிடுபவர்களின் சொல்
பலவீனமடையத்
துவங்குகிறது

அங்கே நிற்கிறது ஒரு வேப்பமரம்
கோயிலுகககெதிரில்
கூடுகட்டவருகின்றன பறவைகள்
அவை நிறைய சளசளக்கின்றன
நீ அவற்றைக் கேட்கிறாய்
விடியலில் விழிக்கையில்
மீண்டும்
படுக்கைக்குச் செல்கையில்.

வேப்பமரம் பேசாமலிருக்கிறது
அது துளிர்க்கிறது
வளர்கிறது
பூக்கிறது
பழங்களால் நிறைகிறது
காய்ந்து போகிறது

உலர்ந்த வேப்பமரம்
டக்-டக்-டக்-டக்கென
சப்திக்கிறது
விறகுவெட்டி
இடைவிடாது கொத்தினாலும்
கசப்பை விடாது

மரணம்
தவிர்க்கவியலாது
பட்சிகளுக்கு
வேம்புக்கு
சலிப்பூட்டுமளவு
அது பேசுவதில்லை
ஆனால்
எவராலேனும்
வெட்டப்படும்பொழுது
அது குரலெழுப்புகிறது
டக்-டக்-டக்-டக்

வா
பேசுவதை நிறுத்து
என்னைப்போல
இப்போது
உன் முறையல்ல

பிறகு பேசு
கசப்பான பேச்சை
உன் அடுத்த பிறவியில்
டக்-டக்-டக்-டக்

ஒருபோதும் விட்டுவிடாதே
உன் மரபணுவின இயல்பை
கோடாரி
கூரிழக்கும் போதும்

ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.