அப்போது அவனுக்கு இருபத்திரண்டு வயசு இருக்கும்போலும்! சம்பங்கி நறுமணம் நிறைந்த நிலவின் ஒளி போன்று மயக்கத்தை தருகின்ற அழகு அவனுடையது. வட்டமான முகத்தில் எனக்கென்ன வேலை என்று பின்னால் ஓடி ஒளிந்துகொண்ட கிராப்பு. எடுப்பாகத் தெரியும் மூக்கு. நடுவில் குழி விழுந்த மோவாய்க்கட்டை. பெயருக்கேற்றபடி மனோகரமாக இருக்கிறான் என்று தான் நினைத்தது, பார்த்தது தனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. “பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அப்படி கண்ணிமைக்காமல் பார்த்தால் அவன் என்னவாகிப் போவான்?” என்று தாய் மாமன் கிண்டல் செய்தபோது, பத்து பேருக்கு நடுவில் சொல்ல முடியாத வெட்கம் சூழ்த்து கொண்டது.
