பசியையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வியர்க்க, விறுவிறுக்க தங்கள் வகுப்பறைகளுக்குள் வந்தனர். கஞ்சி அல்லது சோறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த அதிர்ஷ்டவசமான குழந்தைகள், வீட்டில் எதுவும் அன்று சமைக்கவில்லை என்று தெரிந்தே வந்திருந்த அதிர்ஷ்டமற்ற குழந்தைகள் என்று எல்லோரும் உட்கார, பெஞ்சுகள் நிரம்பின. சோற்றுப் பொட்டலங்களச் சாப்பிட்ட குழந்தைகள் திருப்தியாகவும், சாப்பாடு இல்லாத குழந்தைகள் பக்கத்திலுள்ள கிணற்றுத் தண்ணீரில் வயிற்றை நிரப்பிக் கொண்டும், தங்களிடத்தில் உட்கார்ந்து கொண்டனர்.
