மகன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த போது அவள் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகப் போகிறாள் என்று நினைத்த அவனுக்கு அவளுடைய நடத்தை இயற்கைக்கு விரோதமாக தோன்றுவது இயல்பு. இங்கு பிரசாதின் கண்ணோட்டம் சாதாரண ஆணின் பார்வையை முன்வைக்கிறது. அது ஆண்களின் கண்ணோட்டம் என்று மாலதி சந்தூருக்குத் தெரியும். அதற்கு மாறாக பெண்கள் நடந்து கொண்டால் ஆணாதிக்கம் அடிபட்டு போகும் என்று கூட அவருக்கு தெரியும். அதனை அவர் பிரசாதின் வாய்வழியே விமரிசனம், சுய பரிசோதனை என்ற விதமாக, மூர்த்தியோடு நடந்த உரையாடலில் ஒரு பகுதியாகக் காட்டுகிறார். கற்பு, தாய்மை என்னும் மாயத் திரைகளை கிழித்துக் கொண்டு பெண்கள் சைதன்யம் உள்ளவர்களாகும் இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்களும் தம் அதிகார, அகங்கார இயல்புகளை விட்டு விட வேண்டும் என்ற எச்சரிக்கை அதில் தெரிகிறது.
