மிளகு அத்தியாயம் முப்பத்தாறு

வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.