முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படையில் பணிபுரிய இந்தியர்களைத் திரட்டித் தர முன்வருகிறார் காந்தி. அகிம்சையைப் பயன்படுத்தி இந்தப் போரை நிறுத்தவோ அதன் கோரங்களைத் தணிக்கவோ தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இங்கும் சொல்கிறார். அவர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார். அவரை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்ற சுகவீனம் அவரது உளச் சிக்கலால் நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள்- ஆங்கிலேய ஆட்சியும் அதன் சட்டங்களும் அவருக்குப் பாதுகாப்பளித்தன என்ற நம்பிக்கைக்கும், அகிம்சையில் அவருக்கு இருந்த பிடிப்புக்கும் இடையே எழுந்த முரண்பாடு அவரது உள்ளத்தைப் பிணித்தது என்கிறார்கள் அவர்கள்.