ராஜாஜி பாரதியை குறுகிய நோக்கில் அன்றி, விரிவான தளத்தில் புரிந்து கொண்டிருப்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. எனினும், ராஜாஜியின் முதலில் சொல்லப்பட்ட கூற்று தொடர்பாக நாம் எழுப்பக்கூடிய இன்னொரு எதிர்கேள்வி உண்டு: ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா என்ன? இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, ‘வேதாந்தி’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்னை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்.