“உள்ளங்கையில் உலகம். நுனிவிரலில் தகவல்கள்” என இணைய உலகின் வருகைக்குப் பின் தரவுகளுக்குக் குறைவில்லை. ஆனால், பெறப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. பின்பு, சமூக வலைத்தளங்களின் வரவில் யார் எழுதிய பதிவை யார் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு அடுத்தவர் கருத்துக்களை, படங்களைத் திருடும் ஒரு மர்ம உலகம் தோன்றியது. மெய்யோ, பொய்யோ யார் வேண்டுமானாலும் ஒரு செய்தியை, புகைப்படத்தை, காணொளியைப் பகிரலாம், வெளியிடலாம் என்ற நிலையில், கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். எதையும் நம்பாமல் தீர விசாரிப்பதே மெய் என்று factcheck செய்யும் நிலைக்கு ஆளானோம்.
இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில், ஒரு பதிவை எழுதியது, படத்தை எடுத்தது, ஓவியத்தை வரைந்தது மனிதர்களா அல்லது செயற்கை நுண்ணறிவு அமைப்புகளா என்று குழம்பிப் போய் நிற்கிறது சமூகம்.
சமீபத்தில் கல்லூரிப் பேராசிரிய நண்பர் ஒருவர், “இந்த தலைமுறை மாணவர்கள் பெரும்பாலோர் பாடங்களுக்கான திறந்த புத்தக தேர்வாகட்டும், அசைன்மெண்ட் ஆகட்டும் அப்படியே chatgptல் போட்டு அதை ஒருமுறை கூட வாசித்துப் பார்க்காமல் சமர்ப்பிக்கிறார்கள். பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது இது அவர்கள் எழுதியது அல்ல என்று. தவறுகள் ஏதும் இல்லாததால் முழு மதிப்பெண்கள் கொடுத்தே ஆக வேண்டும். உண்மையில் படித்து எழுதிய மாணவனுக்குச் செய்யும் துரோகம் இது. தவறு என்றாலும் எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. AIன் வரவினால் மாணவர் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது” என்று வருத்தமாகக் கூறினார். இப்படி மொத்தமாக AIன் மேல் பழியைப் போட முடியுமா என்ற கேள்வி தான் தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.
ஏஐ உருவாக்கிய போலியான காணொளியையோ, ஒருவர் சொல்லாததைச் சொன்னதாகக் காட்டும் காணொலியையோ உண்மை என்று மக்கள் நம்பினால் அதன் விளைவுகள் பேராபத்தில்தான் முடியும். இது ஒருவித மோசடியும் கூட!
அதனால் தான் AI வெளியிட்டதா அல்லது மனிதர்களின் வேலையா என்ற வெளிப்படைத்தன்மை தேவை என்று கருதிய ஐரோப்பிய ஒன்றியம், தனது ‘AI Act’ல் அதற்கான விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, AI உருவாக்கிய அல்லது மாற்றிய உள்ளடக்கங்கள்(Contents) அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற transparency விதியை கட்டயாமாக்கியுள்ளது. உடனே Google, OpenAI, Meta போன்ற நிறுவனங்கள் “AI-generated images, content” என்று உள்ளடக்கங்களுக்கு(content) அடையாளம் வழங்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதைப் படங்கள், பதிவுகளில் நாம் பார்க்கவும் முடிகிறது.
OpenAIன் ChatGPT போன்ற ‘கிளாட்'(Claude), ஆன்த்ராபிக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஆகும். உரைகளை எழுத, மொழிபெயர்க்க, இலக்கணப் பிழைகள் இன்றி மேம்படுத்த, தொகுத்து வழங்க, மென்பொருட்கள், கணினி நிரலாக்க மொழியில் எழுத என்று மனிதர்களை மிஞ்சும் வகையில் செயல்படும் ஒரு ‘Generative AI System’. பலராலும் இன்று பயன்படுத்தப்படுகிறது. மற்ற போட்டி நிறுவனங்கள் இது AIஆல் உருவாக்கப்பட்ட உரை, படங்கள் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் அதே வேளையில் ஆன்த்ராபிக் நிறுவனமோ தங்களுடைய ‘கிளாட் மாதிரி'(Model)யில் கண்ணுக்குத் தெரியாத, machine-readable watermark ஒன்றைச் சேர்க்கும் அணுகுமுறையை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ‘AI watermarking’.
“Watermark”, நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வார்த்தை தான். உதாரணமாக, பணத்தாளை வெளிச்சத்தில் பார்த்தால் அதற்குள் இருக்கும் சில அடையாளங்கள், ஒரு புகைப்படத்தின் மீது இருக்கும் புகைப்படக்காரரின் பெயர் போன்றவை ஆகும். ஒரு ஆவணம் உண்மையானதா? போலியா? அதன் மூலத்தை அடையாளம் காண முடியுமா என்பதற்கு இத்தகைய குறியீடுகள் பயன்படுகின்றன.
இன்று இணையத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள், கட்டுரைகள் பெருமளவில் பெருகிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் எடுத்த புகைப்படங்களைப் போலவே தத்ரூபமாக, உண்மையாகவே நடந்த நிகழ்வுகளைப் போல காணொளிகள், அச்சு அசலாக ஒருவர் பேசுவதைப் போலவே காணொலிகள் என்று பல போலியான தகவல்களால் புதிய சிக்கல்கள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதனால் ஒரு ‘கண்டெண்ட்’ உண்மையானதா என்பதோடு, அது எங்கிருந்து வந்தது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
அதற்கான ஒரு முயற்சிதான் ஆன்த்ராபிக்கின் ‘AI watermarking’.

உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் பொழுதே வார்த்தைகளை வடிவமைக்கும் முறையைக் கொண்டு ஒரு குறியீட்டை/முத்திரையை அதற்குள் கிளாட் பதித்து விடுவதால் படிப்பவர்களால் கண்டுபிடிக்க இயலாது. உரையை ஆய்வு செய்யும் ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தால் மட்டுமே அந்த குறியீட்டைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் இதை ஒரு வகையில் “டிஜிட்டல் கைரேகை” என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஒரு கதையோ, கட்டுரையோ, மென்பொருளோ கிளாட் மூலம் எழுதப்பட்டதா என்று கண்டறிவதே இதன் நோக்கம் என்றாலும் கிளாட் ‘பயன்படுத்தப்பட்டது’ என்பதற்கும் கிளாட் ‘எழுதியது’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டறிவது என்பது தான் சமீபத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஒரு மாணவர் ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்து, தரவுகளைச் சேர்த்து எழுதிய கட்டுரையை கிளாட் மூலம் மேம்படுத்தியிருக்கலாம். இறுதியில் அதில் பதிந்திருக்கும் குறியீட்டின் மூலம் “இந்தக் கட்டுரையை Claude எழுதியது” என்று முடிவு செய்ய முடியுமா?
ஆக, ‘Watermark’ ஒரு ஆதாரத்தை வழங்கினாலும் ஆரம்பக் கருத்து யாருடையது? யார் முதலில் எழுதியது, AI எவ்வளவு மாற்றியது, மனிதனின் பங்களிப்பு எவ்வளவு? என்பதைத் தனியாகச் சொல்ல முடியாது. இங்கேதான் AI-generated மற்றும் AI-assisted என்ற இரண்டு சொற்களுக்கு இடையிலான வித்தியாசம் முக்கியமாகிறது.
AI-generated – AI பெரும்பகுதியை உருவாக்கியது.
AI-assisted – மனிதர் உருவாக்கிய பணியில் AI உதவியது.
AI-edited – மனிதர் எழுதியதை AI திருத்தியது.
AI-translated – மனிதர் எழுதியதை AI மொழிபெயர்த்தது.
AI-summarized – ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை AI சுருக்கியது.
இவை அனைத்தையும் “AI-generated” என்ற ஒரே அடைமொழிக்குள் குறிப்பிடுவது நியாயமற்றது.
இதுதான் watermark-ன் மிகப்பெரிய வரம்பு. ஒரு மனிதனின் உழைப்பின் மூலம் உருவான ஒன்றை கிளாட்-ஐ பயன்படுத்தியதன் மூலம் AI-generated என்று தவறாக மதிப்பிடப்பட்டுவிடுமோ என்பது தான் ஆன்த்ராபிக்கின் watermark-ஐப் பற்றிய உண்மையான கவலை.
ஆன்த்ராபிக் தனது வாட்டர்மார்க்கிங் நடவடிக்கையை EU AI Actன் வெளிப்படைத்தன்மையை நிறைவேற்றுவதற்கான ஒரு பகுதியாக விளக்கியுள்ளது. சட்டம் ஐரோப்பாவுக்கானது என்றாலும் தனது புதிய குறியீட்டு அணுகுமுறையை ஆகஸ்ட் 2026ல் உலகளவில் அறிமுகப்படுத்தியது. August 2, 2026 அல்லது அதற்குப் பிறகு வெளியிடப்படும் புதிய கிளாட் மாதிரிகள் (Claude models) இந்த வாட்டர்மார்க் தொழில்நுட்பத்துடன் வெளிவரத் தொடங்கியுள்ளன. பழைய கிளாட் மாதிரிகளிலும் குறியீட்டு தொழில்நுட்பத்தைச் சேர்க்கும் பணியில் இருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. அதனால் இது என்றோ ஒருநாள் எதிர்காலத்தில் வரக்கூடிய தொழில்நுட்பம் அல்ல. தற்பொழுது நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ள புதிய தொழில்நுட்பம். மேலும் இதை ஒரு குறிப்பிட்ட app-க்கு மட்டும் என கட்டுப்படுத்தவில்லை. இதில் ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றின தகவல்கள் சேமிக்கப்படவில்லை என்பதால் ‘பிரைவசி’ பிரச்சினைகள் கிடையாது. ஆனால், ஒருவர் AI பயன்படுத்தியதை மறைக்க விரும்பினால், உரையை வேறு மாதிரிகளின்(AI Models) மூலம் மாற்றுமுறையில் எழுதி குறியீட்டை நீக்கிவிட முடியும் என்பதால்தான் இது ஐரோப்பிய சட்டத்தைத் தாண்டிய ஒரு உலகளாவிய தொழில்நுட்ப பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
சரி, வாட்டர்மார்க் இருந்தால் தானே பிரச்சினை. அதை நீக்கி விட்டால் யாருக்கும் சந்தேகம் வராதே என்று குறுக்குவழியில் யோசிக்கும் மனிதர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க நிறுவனங்கள் இந்நேரத்திற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும். அந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அப்படியிருக்க, இந்தக் குறியீடு அவசியமா என்று கேட்டால் அவசியம் தான். AI watermark கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் AI உடன் வாழப் போகும் மனித சமூகம் தன்னுடைய புதிய விதிகளை எப்படி உருவாக்கப் போகிறது என்ற கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இனி மனித படைப்பாற்றல், அதன் நம்பகத்தன்மை, ஆசிரியத்துவம் போன்றவற்றிற்கு இந்த குறியீட்டின் மூலம் ஒரு தடயமோ, எச்சரிக்கையோ கொடுக்கலாம். சட்டம், உள்ளடக்கங்களின் வெளிப்படைத்தன்மையைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால் எந்த watermark-ம் “இந்தப் படைப்பில் உண்மையில் மனிதன் என்ன செய்தான்? AI-ன் உதவி எவ்வளவு? “போன்ற கேள்விகளுக்கு முழுமையான பதிலைத் தர முடியாது என்பதே நிதர்சனம். அதுதான் AI உலகத்தின் அடுத்த பெரிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.
ஆக, Claude watermark இருந்தால் கிளாட் எழுதியது என்று பொருளல்ல. அந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதில் அதனுடைய பங்கு இருந்திருக்கலாம் என்பதைக் கண்டறிய உதவும் ஒரு தொழில்நுட்பத் தடயம். அவ்வளவு தான்.
அந்தத் தடயத்தை வைத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது மனிதர்களாகிய நம் கைகளில் தான் இருக்கிறது. அதற்கு நமக்குத் தேவையான அறிவும் பொறுப்பும் இருக்கிறதா?
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
