ஸாம்பா

லோஸர் எனப்படும்  திபெத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிகத்தொன்மையான சடங்குகளுடன் ஒரு வாரம்வரை நடைபெறும். திபெத் மக்கள் பல நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குவார்கள். வீட்டுச்சுவர்களுக்கு வர்ணம் அடித்து வீடெங்கும் மலர்களால் அலங்காரம் செய்து சுவர்களில் சூரியன், சந்திரன், தலைகீழ் ஸ்வஸ்திக் வடிவம் ஆகியவற்றை  வரைந்து வைப்பார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது ஊதுவர்த்திபோல எரிகையில்  வாசனைப்புகை தரும் செடார், ரோடோடென்ரான் மற்றும் ஜுனிபர் மரங்களின் சிறுகிளைகள் ஒடிக்கப்பட்டுச் சேகரித்து வைக்கப்படும்

புத்தாண்டுக்கு முன்பே கடன்கள் அடைக்கப்பட்டு, குடும்பத் தகராறுகள் பெரியவர்களால் பேசித் தீர்த்து வைக்கப்படும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மட்டும் உண்ணப்படும், கடலைமாவில் வெண்ணெயும் சர்க்கரையும் கலந்து, கழுதைக்காது வடிவில் பொறித்தெடுக்கப்பட்டு, மீண்டும் சர்க்கரை தூவி உருவாக்கப்படும் காப்ஷே (Khapse) எனப்படும் பிஸ்கட்  போன்ற ஒரு பலகாரம்  ஏராளமாக செய்து வைக்கப்படும்.  சாங் (chang) எனப்படும் பார்லி மதுவும்  தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும். ஆட்டுத்தலை என்னும் சொல்லும் புதுவருடத்துவக்கம் என்னும் சொல்லும் திபெத்திய மொழியில் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்குமென்பதால் வீடுகளில் வெண்ணையால் ஆட்டுத்தலைபோல உருவம் செய்து வைக்கப்படும். 

வாளி போன்ற பாரம்பரிய மரத்தொட்டியான,  ஒரு மரக்கட்டையால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும்     ஐந்து தானியம் எனப்பொருள்படும் ஃபைமெரில் (phyemar)  ஒரு பாதியில் அரிசியும் மறுபாதியில் வறுத்த பார்லியைப் பொடித்த ஸாம்பாவும், பார்லி தானியங்களும், பார்லி தானியக்கதிரும், வர்ணமேற்றப்பட்ட வெண்ணெயும் நிறைத்து வீட்டுக்கு முன்பாக வைக்கப்படும். ஐந்து பொருட்களை நிறைத்து வைக்கப்படும் இந்த வாளி நல்ல அறுவடைக்கும் கடவுளின் ஆசிக்கும் அடையாளமாகக்  கருதப்படுகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அந்த வாளியிலிருந்து  கொஞ்சம் ஸாம்பாவை எடுத்து காற்றில் மூன்று முறை சுண்டி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் ஸாம்பாவை வாயிலிட்டுச் சுவைத்த பின்னர் ‘’தாஷி டெலெக்’’  ( Tashi delek.) என்று உரக்கச் சொல்லி ஆசியளிப்பார்கள். ’’தாஷி’’ என்றால் நல்ல விஷயங்கள் ’’டெலெக்’’ என்றால் ’’ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ’’என்று பொருள்

இந்த ஸாம்பா திபெத்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. திபெத்தியர்களின் வலிமை அவர்களின் வாழ்வு, பிரார்த்தனை எல்லாவற்றிலும் ஸாம்பாவின் பங்கு பெருமளவில் உள்ளது. ஸாம்பாவை அறிந்துகொள்வது திபெத்தை அறிந்து கொள்வது தான். 

ஸாம்பா  என்னும் திபெத்தியர்களின் பிரதான உணவைக் குறித்த பல நூறு நாட்டுப்புறக்கதைகள் திபெத்தில் பலநூறு ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன. இது வெறும் உணவல்ல, திபெத்தின் வரலாறு, கலாச்சாரம், திபெத்தில் இதுநாள் வரை வாழ்ந்து மறைந்த மூதாதையைருடனான திபெத்தியர்களின் தொடர்பு என அனைத்துமே ஸாம்பாதான். ஸாம்பாவின் சுவைதான் திபெத்தின் சுவை   என்கிறார்கள் திபெத்தியர்கள்

திபெத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக  பிரதான உணவாக இருந்து வரும் மிக எளிமையான இந்த  ஸாம்பா என்னும் உணவு பார்லியை  வறுத்துப் பொடித்து செய்யப்படுகிறது. ஸாம்பா  எப்போதிலிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருக்கிறது என்பதற்கான எழுத்துபூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும் புத்த மதம் அங்கு அறிமுகமாகும் முன்பே ஸாம்பா உருவாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது. 7-ம் நூற்றாண்டில் ஸாம்பாவை காற்றில் வீசி எறியும் வழக்கம்  அரசர் முடிசூடிக்கொள்கையிலும்  அமைச்சர்கள் பதவி ஏற்கையிலும், திருமண விழாக்களிலும் நடந்தது. 13-ம் நூற்றாண்டிலிருந்து  பிறந்த நாள், புத்தாண்டு போன்ற  எல்லா முக்கியத்தருணங்களிலும்  ஸாம்பா பொடி தூவுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

திபெத்தில் இறைச்சி உணவு மிகக் குறைவாகவே  புழக்கத்தில் இருக்கிறது.  1993-லிருந்து வேட்டை தடை செய்யப்பட்டிருப்பதால், மிக குறைவான யாக் எனப்படும் இமயக்காளையின் இறைச்சியுடன் பெரும்பாலும் தானியங்களும் காய்கறிகளும் பால், நெய், வெண்ணெயுடன் சேர்ந்த உணவுதான் உண்ணப்படுகிறது. 

திபெத்தின் தாழ்வான நிலங்களில் உருளைக்கிழங்கு, பட்டாணி, கோதுமை, டர்னிப், ஆப்ரிகாட் ஆகியவையும், மேட்டு நிலங்களில் பார்லி சாகுபடியும் நடைபெறும், இவற்றோடு திபெத் எங்கும் அபரிமிதமாக வளரும் Argentina anserina என்னும் பிரகாசமான மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும் செடியின் கிழங்குகளும் உண்ணப்படுகிறது.

திபெத்தில் ஸாம்பா என்னும் சொல் பார்லி தானியத்தையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. சுமார் 5600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருந்துவரும் ஸாம்பா,  பார்லி சாகுபடியின் வரலாற்றையும் உடன் கொண்டிருக்கிறது. திபெத்தில் ஸ்பிடி, சன்ஸ்கார்,  புராங், லடாக் மற்றும் பிர் பகுதிகளில்   மேட்டு நிலப்பயிராக பார்லி அதிகமாக சாகுபடியாகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கில் கிரேக்க தீவுகளிலும் கிழக்கில் திபெத் வரையிலும் பரவி இயற்கையாகவே வளர்ந்திருந்த   காட்டுபார்லியான Hordeum vulgare ssp. spontaneum தான் கிமு 9000-த்தில் மனிதர்களால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்ட தானியமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப்பயிரின் பூர்வீகம் மற்றும் பரவலுக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை எனினும் பாகிஸ்தான் இந்தியா, நேபாளம் வழியாக பார்லி திபெத்தின் தெற்குப் பகுதியில் அறிமுகமாகி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

திபெத்தில் மனிதக் குடியிருப்புகளுக்கருகே காட்டுபார்லி சாகுபடி செய்யப்பட்டது.  அப்போதிலிருந்தே திபெத் பார்லி சாகுபடியின் மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  மேட்டு நிலத்தில் நன்கு வளரத்துவங்கிய பார்லியோடு மனிதர்களும் திபெத்தின் உயரமான நிலங்களில் வாழத்துவங்கினார்கள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக  பார்லியின் காட்டு மூதாதையில் தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளுக்குப்பிறகு கிடைத்த திபெத்திய மேட்டுநிலப்பார்லிதான் (Hordeum vulgare L., qingke)  மனிதனின் தேவைக்காக மாற்றியமைத்துப் பயிரிட்டவைகளில் மிக முக்கியமானதென்று வேளாண் வரலாறு குறிப்பிடுகிறது. தொல்லியலாளர்களால் திபெத்தின் கடல்மட்டத்துக்கு மேல் 3400 மீ உயரத்தில் இந்த வகை பார்லியின் எச்சங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன. திபெத்தின் மனிதக்குடியேற்றத்தை பார்லியின் சாகுபடிதான் தீர்மானித்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.  

தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சாகுபடியும் கலப்பின உருவாக்கமும் செய்யப்பட்டதால் பார்லியின் காட்டுமூதாதைச் செடிகளின்  நீள் முட்டை வடிவ தானியங்கள் இப்போது உருண்டை வடிவமாகிவிட்டிருக்கிறது.

திபெத்தில் விளையும் பயிர்களில் 70% இருக்கும் இந்த மேட்டு நில பார்லிதான் திபெத்தின் தேசியபப்யிர். திபெத்தில் பயிராகும் அரிசி கோதுமை மற்றும் சோளப்யிர்களின் விளைச்சலைக் காட்டிலும் மேட்டுநில பார்லியின் விளைச்சல் சற்றுக்குறைவுதான் எனினும் சாகுபடியாகும் நிலபப்ரப்பு பார்லிக்குத்தான் மிக அதிகம். 

மிக அதிகக் குளிரையும் தாங்கும், ஐந்து மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் இந்த திபெத்திய மேட்டு நிலப் பார்லி  கடல் மட்டதிலிருந்து 4200- 4500-மீ உயரத்தில் மிகச் செழிப்பாக  வளர்கிறது. கதிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, கதிர்மணிகளின் ஈரப்பதம்   20% to 22%. இருக்கையில்  அறுவடை செய்யப்படுகிறது. 

 திபெத்தின்  ஐந்து முக்கிய நிலப்பரப்புகளில்   பயிராகும் மேட்டு நிலப்பார்லி, திபெத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புராங் நிலப்பரப்பில் மிக அதிக அளவில் பயிராகிறது.   தெற்கு இமாலயப் பகுதியைச் சேர்ந்த இந்தப் பிரதேசத்தில் கடல் மட்டத்திற்கு மேலான உயரம் திபெத்தின் மற்ற  பகுதிகளை விட குறைவாக  3900-மீ தான் இருக்கிறது என்றாலும் இங்குதான்  மிக உயர் ரக பார்லி பயிராகிறது. பனியற்ற  100 நாட்களும் ஆண்டுக்கு 3270 மணிநேர சூரியஒளியும் கிடைப்பதால் இங்கு விளையும் முதல் தர பார்லி  அரசகுடும்பத்தினருக்கும் மேட்டுக்குடியினருக்குமானதாக்க கருதப்படுகிறது.

ஸாம்பா தயாரிக்கும் முறை:

மேட்டுநில பார்லி முதிர்ந்த பின்னர் அறுவடை செய்யப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறது

பார்லி  தானியம் சுடு மணலில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கப்படும்.

கல்செக்குகளில் வறுக்கபட்ட பார்லி உடைத்து மாவாக்காப்படும்

திபெத்திய காலநிலையில் இந்த உலர் மாவு கெட்டுப்போகாதென்பதால்  வருடக்கணக்காக  பிரத்யேகமான துணிப்பைகளில் சேமித்து வைக்கப்பட்டு தேவையானபோது ஸாம்பா தயாரிக்கப்படுகிறது.

ஸாம்பா மலையேறுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்துணவாக இருக்கிறது. உலர் ஸாம்பாவை எடுத்துச் செல்பவர்கள் எளிதாக இதனுடன் பாலோ நீரோ  கலந்து உண்ணலாம். சூடாகவோ குளிர்ந்தோ அப்படியே உண்ணலாம். 

ஸாம்பா பெரும்பாலும் தேநீருடன்தான் உண்ணப்படுகிறது. உலர்பொடியான ஸாம்பாவை தேநீரில்லாமல்  விழுங்கச் சிரமமாக இருக்கும் என்பதாலும், திபெத்தியர்கள் தேநீர் பிரியர்களென்பதாலும் ஸாம்பாவுடன் தேநீரைக்கலந்து உண்பது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் அனுபவம் ஆகிவிடுகிறது.

அதிலும் வெண்ணெய்த் தேநீர் ஸாம்பாவுக்கு பொருத்தமான இணை உணவாகிறது.  ட்ரீ (dri) எனப்படும் இமயப்பசுவின்    பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் கலந்த தேநீரும் திபெத்தின் சிறப்பு உணவுகளில் ஒன்று. வெண்ணெய்த் தேநீருக்கென்றே இருக்கும் ஒரு கிண்ணத்தில் சிறிது வெண்ணெய்  விட்டு உப்புக்கலந்து அதில் தேநீரை ஊற்றி மரக் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கி வெண்ணெயும் தேநீரும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்தபின்னர் சிறிது சர்க்கரை சேர்த்து  வெறும் தேநீராகவோ அல்லது  ஸாம்பாப் பொடியுடன் சேர்த்தோ இந்தப்பானம் அருந்தப்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகளுக்கு இந்த வெண்ணெய்த் தேநீர்   மருந்தாகவும் அமைந்துவிடுகிறது. திபெத்திய யாக் வெண்ணெய் நல்ல புளித்த வாடையும், சுவையும் கொண்டிருக்குமென்பதால் ஸாம்பா வெண்ணெய்த் தேநீரின் சுவை பிரத்யேகமாக இருக்கும். திபெத்துக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் 8-10 யுவானுக்கு கிடைக்கும் இந்த தேநீரை அவசியம் சுவைத்துப் பார்க்க வேண்டும். ட்ரியின் வெண்ணெயுடன் ஸாம்பாப் பொடியைக் கலந்த உலர் கட்டிகளும் திபெத்தில் விற்பனையாகின்றன. கொதிக்கும் தேநீரில்  அல்லது பாலில் கட்டிகளைப் போட்டு கலக்கி, உப்போ சர்க்கரையோ கலந்தால் ஸாம்பா தேநீர் தயரகிவிடும்

உலர் ஸாம்பாப் பொடியை சரி பாதி அளவுக்கு நீர் அல்லது பால் சேர்த்து  கைகளால் மெதுவாக கட்டியில்லாமல் கலக்கி  கொதிக்க வைத்தும் அருந்தலாம். அல்லது உலர் மாவைக் கொதிநீரில் மெல்ல மெல்லக் கலக்கி சர்க்கரை அல்லது உப்பு சேர்ந்து சிறு உருண்டைகளாகவும் உருவாக்கலாம்.

 ஸாம்பாவின் சுவை எப்படி இருக்கும்? சாதா தேநீருடன் கலந்த ஸாம்பா தனிச்சுவையுடனும் யாக்கின் வெண்ணய்த்தேநீருடன் அருந்துகையில் பிறிதொரு சுவையுடனும் இருக்கும். எனவே ஸாம்பாவின் சுவையை இப்படித்தான் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்போது ஸாம்பா, நெய், பால்வண்டல், மசாலா பொருட்கள் கலந்து பல்வேறு சுவைகளிலும் கிடைக்கிறது.

ஸாம்பா திபெத்தின் கலாச்சார அடுக்குகளில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறது. புத்த மத விழாக்களில் படையலாக ஸாம்பா படைக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் காற்றில் தூவப்பட்டு ஆசியளிக்கப் பயன்படுகிறது. இறந்தவரின் ஆன்மா பயணப்பட துணையாகிறது என்று நம்பப்படுவதால் தவறாமல் ஸம்பா உணவு இறப்புச் சடங்குகளில் இடம்பெறுகிறது. பிராந்திய வேறுபாடுகள் மற்றும் பேச்சுவழக்கு வேறுபாடுகளைக் கடந்து திபெத்தை ஒன்றிணைக்கிறது ஸாம்பா. 

திபெத்திய அரசியலில் ஸம்பாவின் பங்கு மிக முக்கியமானது. உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களின் ஒற்றை அடையாளமாக ஸாம்பா இருக்கிறது. ’’ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் அழைப்பு திபெத்திய எழுச்சிப் போராட்டங்களின் போது அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு மந்திரச் சொல்லாக இருந்தது.

 1950-களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டபோது,  சீனா திபெத்தின் கலாச்சாரத்தை மாற்ற முனைந்தது. அப்போது திபெத்தியர்கள் ஒண்றிணைந்து ஸாம்பாவை தங்கள்  அடையாளமாகக் கொண்டு போராடினார்கள். சீன உணவுகளில் அரிசியே பிரதானமாக இருந்ததால்  ’’நாங்கள் ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் முழக்கம் திபெத்தியர்களின் தனித்த அடையாளமாக இருந்தது. போராட்டத்தின் போது நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களுடன் ஸாம்பாவை எடுத்துச் சென்றார்கள், எங்கிருந்தாலும் ஸாம்பாவையே  உண்டார்கள் 

 1957-ல் திபெத்தின் மிரர் நாளிதழ் (Mirror of News) ’’ஸாம்பா உண்பவர்கள் அனைவரும்! வாருங்கள்!’’ என அறைகூவியது. 1959 -ல் நிகழ்ந்த  திபெத்திய எழுச்சியின் போது, ​​”சாம்பா-உண்பவர்கள்” என்ற பதாகையின் கீழ் புரட்சியாளர்கள் அணிவகுத்துச் சென்றதன் மூலம், திபெத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக ஸாம்பா மாறியது. 2008-லும் 2012-லும் நடந்த எழுச்சிப் போராட்டங்களின் போது ’’எழுந்திருங்கள் ஸாம்பா உண்னும் திபெத்தியர்களே’’ என்னும் முழக்கத்துடன் போராட்ட அணிவகுப்பில் உலர் ஸாம்பாப்பொடியை தூவிக்கொண்டே சென்றதும் ஸாம்பாவின் இன்றியமையை உலகிற்குக் காட்டியது. திபெத்திய எழுச்சிப் போராட்டங்கள் அனைத்துமே ஸாம்பாபோராட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

புரட்சியாளர்கள்’’ நாங்கள் ’’ஸாம்பா உண்பவர்கள் எங்கள் வேர்களை மறக்கமாட்டோம்’’ என்று முழக்கமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நவீன திபெத்திய  புரட்சி இயக்கங்களும் திபெத்தின் அடையாளமாக ஸாம்பாவையே குறிப்பிடுகிறது. வெகுவாக மாறிவிட்டிருக்கும் இன்றைய திபெத்திலும் ஸாம்பா  மையப்புள்ளியாக இருக்கிறது .

 தலாய் லாமா தனது உரையொன்றில்  ’’நாம் ஸாம்பா உண்பவர்கள், நம் எங்கு சென்றாலும், வாழ்வு நமக்கு எத்தனை கடினமாக இருந்தாலும் நம்முடன் எப்போதும் ஸாம்பாவைக் கொண்டுசெல்வோம்’’ எனக் குறிப்பிட்டார்.

 இப்போதும் திபெத்திய அரசியல் விவாதங்களில் ’’நான் ஸாம்பா உண்பவன்’’ என்று சொல்வது, எத்தனை எதிர்ப்பு வந்தாலும் திபெத்திய விழுமியங்கள் மீது மாறாத பற்றுக்கொண்டிருப்பதன் குறியீடாகச் சொல்லப்படுகிறது. 

புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ஸாம்பாச் சண்டை எனப்படும் ஒருவர் மீது ஒருவர் ஸாம்பா உலர்பொடியை எறிந்து விளையாடும் நிகழ்வு நல்ல அறுவடையின் வேண்டுதலாக நடைபெறும். விருந்தினர்கள் வருகையின் போது அளிக்கப்படும் முதல் உணவும் ஸாம்பாதான்.

ஸாம்பா உலர்பொடியைத் தயாரித்து அதன் தேநீரை அல்லது உருணடைகளை தயாரிப்பது ஒரு தியானம் போல் புத்த துறவிகளால் கவனம் சிதறாமல் மனதை ஒன்றுபடுத்தி ஒரு சடங்காகவே  செய்யப்படும். ஸாம்பாவின் எளிமையும் தூய்மையும் புத்தமதத்தின்  குறியீடாகவும் திபெத்தில் கருதப்படுகிறது. செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் கருதப்படும் பார்லிதான் குருதட்சணையாகவும் அளிக்கப்படுகிறது. 

.இங்கு விளையும் பார்லியில் புரதம் கூடுதலாக இருக்கிறது எனவே அதிலிருந்து சங் பீர் தயாரிக்கப்படுகிறது. ஸாம்பாவில் மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள்களோடு பல நுண்சத்துக்களும் நார்சத்தும் நிரம்பி இருக்கிறது.மிக அதிக அளவில் பீட்டா குளுக்கான் இருப்பதும் பார்லியில்தான்.

ஸாம்பா பார்லியின் ஏராளமான சத்துக்களால் இந்த எளிய உணவு இப்போது ஒரு Prebiotic உணவாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Prebiotic உணவுகள் நம் வயிற்றில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை மேலும் பலமடங்காக்கும் இயல்புடையவை . மேலும் ஸாம்பா குறைந்த க்ளைசீமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இருக்கிறது. தொடர்ந்து பார்லி உண்ணுவது ரத்தச் சர்க்கரை அளவையும் ரத்தக் கொழுப்பு அளவையும் குறைப்பது ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.  உலகின் எந்த நாட்டையும் விட பார்லியின் தனி நபர் பயன்பாடு திபெத்தில் தான் அதிகமாக இருக்கிறது.  திபெத்தியர்களின் அசாதாரண உடல் வலிமைக்கும் ஸாம்பாதான் காரணமாக இருக்கிற நவீன மயமாகி விட்டிருக்கும் இன்றைய திபெத்தியர்களுக்கும் ஸாம்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. உலகின் அனைத்துப்பகுதிகளையும் போலவே திபெத்திலும்  வாழ்க்கையின் போக்கிற்கு ஏற்ப உணவுக்கலாச்சாரமும்   மாறிவிட்டிருந்தாலும் ஸாம்பா திபெத்திய உணவில் காலத்தைக்கடந்தும் அப்படியே மையப்புள்ளியாக  நிலைத்து நின்றிருக்கிறது. 

ஸாம்பா திபெத்தின் பிரதான உணவு மட்டுமல்ல திபெத்திய நாகரீகத்தின் அடித்தளமும் ஸாம்பாதான். இன்றும் ஸாம்பா உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களை ஒண்றினைத்து  அவர்களின் வேர்கள் இருக்கும் நிலப்பரப்பை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.