பிளாஸம் என்கிற வேக்கா!

இங்கிலாந்த்தின்  கிளாஸ்டுஷா* மாகாணத்தில் அமைந்திருக்கும் பார்க் லீ கோட்டையின் விரிந்த மைதானத்தில்  நண்பர்கள் பலர் இணைந்து வெப்பக்காற்று பலூன்களை உயரப் பறக்கவிட்டும், அது எத்தனை எடை தாங்கும் என்பதை கணக்கிட்டுக் கொண்டுமிருந்தார்கள். அது 1784-ன் செப்டம்பர் மாதம்.

ஃப்ரஞ்ச் சகோதரர்களான  ஜோசப் மற்றும் எட்டியன் இருவரும் எடையற்ற ஒரு பொருளுக்குள் வெப்பக்காற்றை நிறைத்தால் அது உயரே பறக்கும், அதில் பயணம் செய்யலாம் என்பதை பல சோதனைகள் மூலம் 1782- ல் தான் நிரூபித்திருந்தார்கள். வைக்கோல் மற்றும் கம்பளியை எரித்து ஒரு பலூனுக்குள் வெப்பக்காற்றைச் செலுத்தி அந்தப் பலூனை 3000 அடி உயரத்தில் 10 நிமிடம் வானில் நிற்க வைத்த முதல் சோதனைக்குப் பிறகு 1783-ல் அந்த வெப்பக்காற்று பலூனில் ஒரு ஆடு, சேவல் மற்றும் வாத்து ஆகியவற்றையும் அனுப்பி  8 நிமிடம் பறந்த பலூன் 10 மைல் தொலைவில் தரையிறங்கிய சோதனையையும் வெற்றிகரமாகச் செய்தனர். 

அதே வருடம் நவம்பர் மாதம் மனிதர்கள் வானில் பயணம் செய்த  உலகின் முதல்  வெப்பக்காற்று பலூனையும் அவர்கள் பறக்கச் செய்தனர். 3 பயணிகளுடன் அந்த  ஹைட்ரஜன் வெப்பக்காற்று பலூன் சுமார் 10 கி மீ பயணித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு உலகின் பல பாகங்களிலும் இந்தச் சோதனைகள் செய்து பார்க்கப்பட்டது.

கேலப் ஹில்லியர் பாரி (Caleb Hillier Parry) என்பவர் ஆளில்லா வெப்பக் காற்று பலூனைப் பட்டுத்துணியில் உருவாக்கி  ஹைட்ரஜன் வெப்பமூட்டி 1784- ஜனவரியில் 19 மைல் தொலைவுக்குப் பறக்கக் செய்தார். பாரியின் நெருங்கிய நண்பரான எட்வர்ட் ஜென்னெரும் அந்தச் சோதனையில் ஆர்வம் கொண்டார்.

இன்றைக்கு சரியாக 240 வருடங்களுக்கு முன்பாக 1784-ன் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு  வெப்பக்காற்று பலூன்களின் சோதனையில் எட்வர் ஜென்னரும் பாரியும் பார்க் லீ கோட்டை மைதானத்தில்   இருந்தனர். ஜென்னரின் பலூன் உயரப் பறந்து  10 மைல் தொலைவில் இருந்த ஆண்டனி கிங்ஸ் காட் என்பவருக்குச் சொந்தமான மாபெரும் எஸ்டேட்டில் தரையிறங்கியது.  அங்கு தோட்ட வேலையில் இருந்தவர்கள் அந்தப் பலூனைக்கண்டு பயந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில் ஜென்னர்  பலூனைத் தேடிக்கொண்டு அங்கே சென்றார்.  

பலூனைக் காண்பதற்கு முன்னர் எஸ்டேட் உரிமையாளரின் மகளான கேத்தரினை  கண்டதும் காதல் கொண்டார் எட்வர்ட் ஜென்னெர். அவர்களிருவரும் 1788-ல் மணம் புரிந்து கொண்டனர்.அவர்களின் திருமணத்தின் போது இருவரின் காதலைக் குறித்த கவிதைகள் எழுதப்பட்ட வெப்பக் காற்று பலூன்   திருமணம் நடந்த தேவாலத்திலிருந்து பறக்கவிடப்பட்டது. அந்த பலூன் சென்று தரையிறங்கிய 20 மைல் தொலைவில் இருந்த இடம் இன்றும் அவர்களின் காதலின் நினைவுச்சின்னமாக “Air Balloon Inn”. என்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பொழுதுபோக்கும் இடமாக இருக்கிறது.

ஜென்னர் வெப்பக்காற்று பலூன்களிலும், விலங்கு மற்றும் பறவைகளிலும், இயற்கையை அணுகி ஆராய்வதிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஜென்னர்தான் பறவைக்கூடுகளில் வைக்கப்படும் குயில் முட்டைகளில் இருந்து வெளிவந்த குயில் குஞ்சுகள் பிற பறவைகளின் முட்டைகளை கூட்டிற்கு வெளியே தள்ளி விடும் brood parasitism என்பதை கண்டறிந்தவர்.

மருத்துவரான ஜென்னர் angina pectoris என்கிற மார்பு நெரிப்பு, கண் அழற்சி, போன்ற பலவற்றைக் குறித்து ஆராய்ந்து கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.  பறவைகள் வலசை போவதையும் ஆராய்ந்திருக்கிறார் ஜென்னெர்.

கோவிட் பெருந்தொற்றிலிருந்து பலகோடிப்பேர் பிழைத்திருப்பதற்கும் எட்வர்ட் ஜென்னர்தான் காரணம். நவீன நோய் எதிர்ப்பு அறிவியலுக்கான அடித்தளத்தை அமைத்தவரான ஜென்னரே உலகின் முதல் அதிகாரபூர்வமான தடுப்பூசியை உருவாக்கியவர்.அவர் அமைத்துக்கொடுத்த பாதையில் சென்றவர்களால்தான் கோவிட்-19 தடுப்பூசிகள் விரைவாக உருவாக்கப்பட்டு, உலகளவில் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது.

நோயெதிர்ப்பறிவியலின் (Immunology) தந்தை எனக் கருதப்படும் ஜென்னெர் 1796 மே மாதம் 14-ம் தேதி மருத்துவ அறிவியல் வரலாற்றின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைத்தார். அன்றுதான் பெரியம்மை நோய்க்கு எதிராக,  மாட்டம்மையிலிருந்து உருவாக்கப்பட்ட  உலகின் முதல் தடுப்பூசி வெற்றிகரமாக அவரால் அளிக்கப்பட்டது.

ஜென்னருக்கு இருபது ஆண்டுகள் முன்பே  இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் ஐந்து ஆய்வாளர்கள் (Sevel, Jensen, Jesty, Rendell & Plett) பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசியை மாட்டம்மைக் கொப்புளங்களிலிருந்து கண்டுபிடித்திருந்தார்கள் 

1774-ல் இங்கிலாந்தின் டார்செட் பகுதியைச் சேர்ந்த  விவசாயி பெஞ்சமின் ஜெஸ்டிக்கும், நிறைய  மாடுகள் வளர்ந்த அவரது பண்ணையில் வேலை செய்தவர்களுக்கும் மாட்டம்மை தொற்று உண்டாகி இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மாட்டமைத் தொற்று உண்டாகி இருக்கவில்லை. நகரில் பெரியம்மைத்தொற்று விரைவாகப் பரவியபோது அக்கம்பக்கம் இருந்தவர்களின்  பலத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஜெஸ்டி தன் குடும்பத்தினரின் கைகளில் சருமத்துக்கடியில் மாட்டம்மைச்சீழை  ஊசியால் குத்திச்  செலுத்தினார், அவர்களுக்கு பெரியம்மை வரவில்லை. இப்படி ஜென்னெருக்கு முன்பே பலர் இந்த சோதனையை செய்திருந்தார்கள்.

ஆனாலும் பொதுவெளியில் பலருக்கு முன்பு இந்தச் சோதனையைச் செய்து அதன் முடிவுகளை மேலும் பல முறை சரிபார்த்து தடுப்பூசியின் செயல்பாட்டு குறித்தான ஆய்வறிக்கைகளையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டவர் என்னும் வகையில் எட்வர்ட் ஜென்னரே இந்த நோயெதிர்ப்பறிவியல் துறையை உருவாக்கியவராகிறார். 

தொற்றுநோய்த் தடுப்புமுறைகளின் வரலாறு

பெரியம்மை நோய் வரலாற்றுக் காலத்திலிருந்தே ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் சீனாவில் இருந்தது. பெரியம்மையினால் இறப்பு, கண் பார்வை இழப்பு மற்றும் தழும்புகளால் முகம் விகாரமாவது ஆகியவை உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்தது. இதற்கான ஆதரங்கள் கிமு 1200-த் தைச்சேர்ந்த எகிப்திய மம்மிகளிலிருந்து கிடைத்தன.

நூற்றாண்டுகளாக சீனாவிலும் இந்தியாவிலும் காய்ந்த அம்மைப்பொருக்குகளை  உலர்த்தித் தூளாக்கி மூக்குப்பொடி போல உறிஞ்சி நோயெதிர்ப்பைப் பெறும் வேரியோலேஷன் என்னும் வழக்கம் இருந்தது. கொப்புளப்பொடியை மூக்கில் ஊத வெள்ளியாலான சிறு ஊது குழல்கள் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய சீனாவில் இந்தக் கொப்புளப் பொருக்குத்துகள்கள் உலோகக்கூடைகளில் வைத்து தெருக்களில் விற்கப்பட்டன.

16-ம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியாவில் வங்காள பிராமணர்கள் மத்தியில் இந்த தடுப்பு முறை புழக்கத்தில் இருந்தது என்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்த அது குறித்த ஆவணங்கள் காலனியாதிக்கத்தின் போது மறைக்கப்பட்டு ஜென்னரின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த பொருக்குப்பொடியை பிறருக்கு தடுப்பு மருந்தாக அளித்த மருத்துவர்கள் ’திக்காதர்கள்’ (Tikadars) என அழைக்கப்பட்டனர். இன்றும் பல இந்திய மொழிகளில்  தடுப்பூசி போட்டுக் கொள்வது  திக்கா’’ (tika) என்று அழைக்கப்படுகிறது.

கான்ஸ்டண்டினோபிலில் கொப்புளப்  பொருக்குகளை நோய்த் தடுப்புக்காக நுகரும் முறை புழக்கத்தில் இருந்தது. அதை அறிந்த ஒட்டமான் பேரரசின் அரசவை மருத்துவர் இம்மானுவேல் (Emmanuel Timoni) அந்த முறையை  1714-ல் விளக்கமாக எழுதி ராயல் சொசைட்டிக்கு சமர்ப்பித்திருந்தார்.

1720-களில்  கான்ஸ்டண்டினோபிலின் பிரிடிஷ் தூதரின் மனைவி மேரி (Lady Mary Wortley Montegue) இந்தியாவிலும் சீனாவிலும், கான்ஸ்டண்டினோபிலிலும் பரவலாக அப்போது  புழக்கத்தில் இருந்த  பெரியம்மைக்கெதிராக மாட்டம்மைக் கொப்புளங்களின் உலர்ந்த பொடியை மூக்கில் உறிஞ்சும் தடுப்பு முறையைக் கற்றுக்கொண்டு இங்கிலாந்து வந்தார்.1717-ல் மேரி  இதை எழுத்துப்பூர்வமாக அவரது தோழி சாராவுக்கு கடிதமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேரியின் சகோதரர்   1713-ல் பெரியம்மையினால் இறந்தார், இறப்பதற்கு முன்னர் அவரிடமிருந்து மேரிக்கும் அம்மைத்தொற்று உண்டானது எனினும் உடலிலும் முகத்திலும் விகாரமான, நிரந்தரமான தழும்புகளுடன்  மேரி பிழைத்துக்கொண்டார். (அவரது உருவச்சித்திரங்கள் வரையப்படுகையில் அந்தத் தழும்புகள் கவனமாக தவிர்க்கப்பட்டன.) 

1721-ல் லண்டனில் பெரியம்மை நோய்த்தொற்று பரவியபோது  மேரி தனது 4 வயதுமகளுக்கும், 5 வயது மகனுக்கும்  அரசவை மருத்துவரும் அறுவைச்சிகிச்சை நிபுணருமாகிய சார்லஸைக் (Charles Maitland) கொண்டு  மாட்டம்மைக் கொப்புளங்களின் உல்ர்பொடியை உறிஞ்சச்செய்தார். அவரது குழந்தைகளுக்கு பெரியம்மைத் தொற்று உண்டாகவில்லை. அதன்பின்னர் ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதுமே  சிறைக்கைதிகளுக்கும் அனாதைக்குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக சார்லஸால் அந்தச்சோதனை செய்து பார்க்கப்பட்டது, பின்னர் அந்த பெரியம்மை நோய்த்தடுப்பு முறை உலகெங்கிலுமே  பரவலாகியது.

ராணுவ வீரர்களுக்கும் குழந்தைகளுக்கும் உலகெங்கிலும் இந்த வேரியோலேஷன் என அழைக்கப்ட்ட தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. 1757-ல் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது அச்சிறுவர்களில் 8 வயது எட்வர்ட் ஜென்னரும் இருந்தார்.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் சூடானில் அம்மை நோய்கண்ட குழந்தை இருக்கும் வீட்டுக்குச் செல்லும் தாய்மார்கள், கொப்புளங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக கட்டணம் செலுத்தி நோயுற்ற குழந்தையின் கைகளில் கட்டப்பட்ட துணியை கொண்டு வந்து தங்களின் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கு கட்டிவிடும் வழக்கம் பரவலாக இருந்தது. இதன் நவீன வடிவமாகத்தான் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  அம்மை நோயுற்ற குழந்தைகளின் வீட்டுக்கு பலர் குழந்தைகளை அழைத்துவந்து கூடும் அம்மைப் பார்ட்டிகள் 2010 வரையிலுமே நடந்தன.(Pox party)*

இந்த தடுப்பு முறைக்கு உலகெங்கிலும் கண்டனங்களும் எதிர்ப்புமிருந்தது, அரச குடும்பத்தினர் உள்ளிட்ட சிலருக்கு இந்த தடுப்பு முறைக்குப் பிறகு இறப்பும் உண்டானது எனினும் உலகெங்கிலுமே  பரவலாக இந்த நுகரும் முறை புழக்கத்தில் இருந்தது. பெரியம்மை நோயினால் உண்டான இறப்பு வெகுவாக குறைந்தும் இருந்தது.

1779-களிலிருந்தே பலரும் மாட்டம்மைக்கொப்புளங்களின் தொற்று நோயெதிர்ப்புத்திறனைச் சோதிக்கும் ஆய்வுகளை மனிதர்களில் செய்யத்தொடங்கினர் என்றாலும், 20 ஆண்டுகள் கழித்து ஜென்னர் அதை நிரூபிக்கும் வரை அந்த தடுப்பூசி  அதிகாரபூர்வமாக புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை.  

ஜென்னர்

ஸ்டீஃபன் ஜென்னருக்கும் சாரா ஜென்னருக்கும் 1749,  மே 17 அன்று அவர்களின் 9 குழந்தைகளில், எட்டாவதாகப் பிறந்தார் எட்வர்ட் ஜென்னர். 

ஜென்னர் பிறந்த சமயத்தில் பிரிடிஷ் மருத்துவப் பயிற்சி மற்றும் கல்வி பெரும் மாற்றம் கண்டிருந்தது. ஆக்ஸ்ஃபோர்டிலும் கேம்பிரிட்ஜிலும் பயின்று வந்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள்  ஆகியோர் உடனே தொழிலை தொடங்காமல் அனுபவத்தின் பொருட்டு அவரவர் துறைகளில் பிரபலமானவர்களிடம் உதவியாளர்களாக சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகே தனியே தொழிலைத் தொடங்கினார்கள். பலர் பயிற்சிக்குப் பின்னரே மருத்துவப்படிப்புக்குச் சென்றார்கள். தொற்றுநோய்களின் பரவலால் மருத்துவச்சேவை அப்போது உச்சகட்ட  தேவையான தொழிலாக இருந்தது 

ஜென்னரின் தந்தை மதகுருவாக இருந்தவர், ஜென்னரின் மிக இளம் வயதிலேயே 1754-ல் அவரது  தந்தையும் தாயும்  மறைந்தனர்.அவரை அவரது மூத்த சகோதரர் அன்னையும் தந்தையுமாக இருந்து வளர்த்தார். ஜென்னருக்கு இளமையிலிருந்தே இயற்கையை கூர்ந்து கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அடிப்படைக் கல்வியை வீட்டுக்கு  அருகில் இருந்த பள்ளியில் படித்த ஜென்னர், 13 வயதில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் ஜார்ஜிடம் (George Harwicke). உதவியாளராக பணியில் இணைந்தார்.அடுத்த 8 வருடங்களில் ஜென்னர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையின் அடிப்படைக்கல்வியைப் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் தனது  21-ம் வயதில் லண்டனுக்குச் சென்று செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில்  பணியிலிருந்த லண்டனின் புகழ்பெற்ற  அறுவை சிகிச்சை நிபுணரான  திரு ஜான் ஹண்டரின் மாணவராக ஜென்னர் இணைந்தார். ஜான் ஹண்டர் லண்டனின் முதன்மையான  உடற்கூறாய்வாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

ஹண்டருக்கும் ஜென்னருக்கும் இடையே நல்ல புரிதலும் நட்பும் உண்டானது. அந்தப் பிணைப்பு ஹண்டர் 1793-ல் மரணமடையும் வரை தொடர்ந்தது. ஹண்டரிடமிருந்து ஜென்னர் இயறகையை மேலும் அணுகி ஆராய்வது, எந்தக் கருத்தானாலும் அதற்கான அறிவியல் அடிப்படையை தேடிக்கண்டடைவதன் அவசியம், இயற்கை உயிரியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். 

ஹண்டர் சொல்லித்தான் குயில் குஞ்சுகளின் ’ஒட்டுண்ணியை அடைகாத்தல்’ என்னும் வழக்கத்தை ஜென்னெர் கண்டறிந்தார். அந்தக் கண்டுபிடிப்புக்காகத்தான் ஜென்னருக்கு ராயல் சொசைட்டியின் அங்கத்தினர் என்னும் அந்தஸ்து கிடைத்தது.

ஹண்டருடன் பணிபுரிகையில்தான் ஜென்னருக்கு கேப்டன் குக்கின் கடற்பயணத்தில் உடனிருந்த ஜோசப் பேங்க்ஸ் அறிமுகமானார். கடற்பயணத்திலிருந்து பேங்க்ஸ் கொண்டு வந்திருந்த பல உயிரினங்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களை வகைபிரித்து அடுக்கிவைக்கும் பணியை ஜென்னர் செய்து கொடுத்தார். 

ராயல் சொசைட்டியின் தலைவராக 40 வருடங்கள் பணியாற்றிய பேங்க்ஸினால் தான் ஜென்னருக்கு உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களின் , மருத்துவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.  கேப்டன் குக் தனது இரண்டாம் உலகப்பயணத்தில் இணைந்துகொள்ளும் படி விடுத்த அழைப்பை ஜென்னெர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பறவையியலில், நிலவியலில், இயற்கை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவற்றில் கவனம் செலுத்தினார். புதைபடிவங்களான ஃபாஸில்களை தேடுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.  வெப்பக்காற்று பலூன்களிலும் சோதனை செய்து இரண்டு முறை சுமார் 12 மைல் தொலைவுக்கு அவரே உருவாக்கிய பலூன்களை ஜென்னர் பறக்கச்செய்தார்.

ஹண்டருடன் 20 வருட தீவிரமான மருத்துவப் பணிக்குப் பிறகு ஜென்னர் தனது மருத்துவ மேற்படிப்பை ஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் 1792-ல் முடித்துப் பட்டம் பெற்றார். தனது பெயருக்குப் பின்னே  MD, FRS, என்னும் பட்டங்களை குறிப்பிட்ட பிறகே தனது தனிப்பட்ட மருத்துவத் தொழிலை ஜென்னர் தொடங்கினார். 

ஜென்னருக்கு அப்போது டைஃபஸ் பாக்டீரியாக் காய்ச்சல் உண்டானது. அதிலிருந்து குணமாக  ஏராளமான கனிம நீரூற்றுக்கள் இருக்கும் இங்கிலாந்தின் பிரபல நகரமாகிய செல்டென்ஹாமிற்கு கோடைக்காலங்களில் நீரூற்றுக்குளியலின் பொருட்டுச் செல்லத்துவங்கினார். அங்கு ஜென்னருக்கு மேல்தட்டு மக்களுடனான அறிமுகம் கிடைத்தது. அங்கு அவர் வயலினும் புல்லாங்குழலும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். கவிதைகள் எழுதினார்.அங்கு ஓய்வில் இருக்கையில் எல்லாம் சீனாவிலும் இந்தியாவிலும் புழக்கத்திலிருந்த  வேரியோலாஷன் எனப்படும் அம்மைக்கொப்புளங்களின் உலர்பொடியை நுகரும் நோய்த்தடுப்புப் முறையைக் குறித்த  கட்டுரைகளை வாசித்து குறிப்பெடுத்துக்கொண்டார். தனது மருத்துவ அனுபவங்களையும் வாசித்த மருத்துவக்கட்டுரைகளையும்  பிரசுரிக்கத்தகுந்தபடி   ஒழுங்கமைத்துக்கொண்டார்.

ஜென்னர் மருத்துவப்பணியில் இருந்த நகரின் பால்காரப் பெண்மணிகளுக்கு மாடுகளின் மடியிலிருந்து பரவிய மாட்டமையினால் மிக லேசான பாதிப்புகள் மட்டுமே உருவானதையும் அவர்களுக்கெல்லாம் பெரியம்மைக்கு எதிரான நோயெதிர்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட கதைகளை அவர் ஹண்டருடன் பணிபுரிகையிலேயே அறிந்திருந்தார்.  பால்காரப்பெண்மணிகள் கர்வத்துடன் “எங்களின் முக அழகு ஒருபோதும் தழும்புகளால் கெட்டுப்போகாது ஏனென்றால் எங்களுக்கு மாட்டம்மைதான் வரும் பெரியம்மை வராது“ என்று சொல்வது கிராமப்புறங்களில்  வாடிக்கையாக இருந்தது. 

அப்போது பெரியம்மையினால் இறப்பு, குறிப்பாக குழந்தைகளின் இறப்பு மிக அதிகமாக இருந்தது.  எனவே ஜென்னர் அதற்கெதிரான தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு செய்யத்தொடங்கினார்.

1796-ல் ஜென்னர் 13 மனிதர்களுக்கு மாட்டம்மைக் கொப்புளங்களின் பொருக்குத் துகள்கள் முகரச்செய்யப்பட்டு பெரியம்மைக்கெதிரான நோயெதிர்ப்பை உருவாக்கிய தகவலை அறிகையாக  ராயல் சொசைட்டிக்கு அனுப்பினார். ஆனால் அக்கட்டுரையின் முக்கியத்துவம் அப்போது சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் அந்த ஆய்வறிக்கை ஜென்னருக்கே திரும்ப அனுப்பப்பட்டது.

ஜென்னர் மீண்டும் மீண்டும் அந்த ஆய்விலேயே மூழ்கி இருந்தார். மாட்டம்மை (Cowpox) மாடுகளின் மடிக்காம்புகளில் பெரிய கொப்புளங்களை உருவாக்கியது. பால் கறப்பவர்களுக்கு கைகளில் கொப்புளங்களையும் லேசான காய்ச்சலையும் மட்டுமே உருவாக்கிய மாட்டம்மை வேறு சிக்கல்கள் எதையும் உருவாக்கவில்லை, எனவே மாட்டம்மை மிக லேசான அறிகுறிகள் கொண்ட ஆபத்தில்லாத ஒரு நோயென்பதை அறிந்த ஜென்னர்   மாட்டம்மைக் கொப்புளங்களின் சீழை  மிகக்குறைந்த அளவு உடலில் செலுத்துவதன் மூலம் பெரியமைக்கான் நோய் எதிர்ப்பைப் பெற முடியும் எனக் கருதினார். 

ஜென்னரின் சோதனையும் தடுப்பூசி உருவாக்கமும்

1796-ல் 50 வயதை நெருங்கி கொண்டிருந்த ஜென்னரின் வீட்டுக்கு பால்கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்த  சாராவின் (Sarah Nelmes) பிளாஸம் (Blossom) என்னும் பசுமாட்டிற்கு மாட்டம்மை உண்டாகி இருந்தது. அந்தப் பசுவிடமிருந்து சாராவுக்கும் மாட்டம்மை தொற்றி அவரது புறங்கைகளில் பெரிய கொப்புளங்கள் உருவாகி இருந்தன,

அப்போதுதான் ஜென்னர் மிகச்சவாலானதும்  நவீன அறிவியலின்படி அறமற்றதுமான ஒரு சோதனையைச் செய்ய முற்பட்டார். 

சாராவின் கைகளில் இருந்த மாட்டம்மைக் கொப்புளங்களின் சீழிலிருந்து உலர்ந்த பொடியைத் தயாரித்த ஜென்னர் 1796 மே மாதம் 4-ம் தேதி அவரது தோட்டக்காரரின் 8 வயது பேரன் ஜேம்ஸ் பிப்ஸின் இரு கைகளிலும் லேசான கீறல்களை உருவாக்கி அவற்றின் மீது அந்தப் பொடியை லேசாகத் தேய்த்துவிட்டார். 

சிலநாட்களில் ஜேம்ஸுக்கு மிக லேசான மாட்டம்மை அறிகுறிகளும் காய்ச்சலும் உண்டானது. எனவே மாட்டம்மை ஒரு தொற்றுநோய் என்பதை ஜென்னர் நிரூபித்தார்.அடுத்தகட்டமாக மாட்டம்மை நோய் எப்படி பெரியம்மைக்கெதிரான எதிர்ப்பைக் கொடுக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டி இருந்தது. பிப்ஸுக்கு லேசான காய்ச்சல் பசியின்மை ஆகியவற்றைத் தவிர வேறு சிக்கல்கள் எழவில்லை, 10ம் நாள் பிப்ஸ் முழுக்க நலமடைந்தான்.

அந்தச் சிறுவனுக்கு ஜென்னர் பெரியம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்பட்ட  சீழ் ஊசியை ஜூலை 1-ம் தேதி அளித்தார். அவனுக்கு பெரியம்மை நோய்த்தொற்று  உண்டாகவே இல்லை.

அதன்பிறகு வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்தத் தடுப்பூசியை தனது மகன்  உள்ளிட்ட மேலும் 25 மனிதர்களுக்கு செலுத்தி அவர்களுக்கும் பெரியம்மை உண்டாகவில்லை என்பதை நிரூபித்து,ஆய்வு முடிவுகளை லண்டனில் தனது சொந்தச்செலவில் `An Inquiry into the Causes and Effects of the Variolae Vaccinae` என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலாக  ஜென்னர் பிரசுரித்தார். அதன்பின்னரே ராயல் சொசைட்டிக்கு அந்த அறிக்கை குறித்த தகவல்கள் தெரியவந்தது.மூன்று பாகங்களாக அமைக்கப்பட்டிருந்த அந்த நூலில் ஜென்னர் மாடு என்பதற்கான லத்தீனச்சொல்லான வேக்கா(vacca) என்பதை உபயோகித்து அந்த தடுப்பூசி செலுத்தும் முறைக்கு வேக்ஸினேஷன்-vaccination என பெயரிட்டிருந்தார்.

பின்னர் ஜென்னெர் லண்டனுக்குச் சென்று இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ள தன்னார்வலர்களைத் தேடிக்கண்டு பிடித்தார். ஜென்னரிடமிருந்து சீழ் மருந்தை வாங்கி இருந்த  ஜார்ஜ் பியர்சன், ஹென்றி மற்றும் வில்லியம் ஆகியோரும் லண்டனில் அந்த ஊசியை செலுத்திக் கொண்டிருந்தார்கள். George Pearson , William Woodville &  Henry Cline 

அதிலும் ஜென்னெருக்கு பல பிரச்சனைகள் உருவாகின. பியர்சன் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஜென்னருக்கு எந்தத் தொடர்பும் இல்லை தானே அதைக் கண்டறிந்ததாக லண்டனில் சொல்லிக்கொண்டிருந்தார்.

வில்லியம் மாட்டம்மைச்சீழுடன் பெரியம்மை சீழை கலந்து நோய்த்தடுப்பை சிக்கலாக்கியிருந்தார்.

பலரும் ஜென்னர் காட்டிய வழியிலேயே தடுப்பூசி தயாரித்து உபயோகித்தார்கள் எனினும் ஜென்னர் தயாரித்தது போல மிகச்சரியாக பலர் தயாரிக்கவில்லை எனவே அதன் செயல்பாடுகள் சில இடங்களில் திருப்தியளிக்கவில்லை.

மாட்டம்மை உலகின் எல்லா பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை. எனவே தூய மாட்டம்மைச் சீழ் கிடைப்பதும் அதைப் பாதுகாத்து வைப்பதும், ஊசியாக உபயோகிப்பதும் அனைவருக்கும் எளிதாக இல்லை. மேலும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த அறிவியல் அடிப்படை அப்போது பலருக்கும் தெளிவாக இல்லாததும் கூடுதல் சிக்கலை உருவாக்கியது. 

மாட்டம்மைக் கொப்புளங்களின் சீழ் தேவைப்படுவோர் ஜென்னரையே நாடவேண்டி இருந்தது.   மாட்டம்மைச் சீழை  உலர்த்தி பத்திரப்படுத்தி உலகின் பல பாகங்களுக்கும் எந்தச்  சலிப்புமின்றி ஜென்னர் தொடர்ந்து அனுப்பி வைத்துகொண்டிருந்தார். அவரே அவரை உலகின் தடுப்பூசி அலுவலர் என்றழைத்துக்கொண்டார்.  

ஆங்காங்கே சில தவறுகள் நடந்தாலும் ஜென்னரின் அந்தத் தடுப்பூசி முறை வேகமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும்  பின்னர் அங்கிருந்து  உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.   பெரியம்மை இறப்பு வெகுவாகக் குறைந்தது. 

ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது. எனினும் ஜென்னர் இந்த பாராட்டுகளில் அதிக ஆர்வம் காட்டாமல் பெரியம்மையை உருவாக்கும் காரணிகளை கண்டுபிடிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். அவரது மருத்துவத்தொழிலும் குடும்ப நிர்வாகமும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் ஜென்னர் பெரியம்மை நோய்க்கிருமியை கண்டுபிடிப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினார். 

அப்போது வைரஸ் என்னும் நுண்ணுயிர் கண்டுபிடிக்க பட்டிருக்கவில்லை எனவே ஜென்னருக்குப் பெரியம்மை எப்படி எதனால் உருவானது என்பது தெரிந்திருக்கவில்லை ஆனால் உலகெங்கிலும் பெரியம்மை நோயால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க இந்த மாட்டம்மைத் தடுப்பூசியை பிரபலமாக்கினார். அவரது Chantry என்னும்  பெரிய வீட்டின் ஒரு பகுதியில் ஒரு சிறு குடிசையை உருவாக்கிய ஜென்னர் அதற்கு தடுப்பூசிக் கோவில் (“Temple of Vaccinia”) என்று பெயரிட்டு அங்கே அன்றாடம் ஏராளமான ஏழைகளுக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை அளித்துக் கொண்டிருந்தார்.    அவரது சேமிப்பு கரைந்துகொண்டே இருந்தது.

எனவே அரசு  அவருக்கு முதல்தவணையாக 10ஆயிரம் பிரிட்ஷ் பவுண்டு நிதியையும் இரண்டாவது தவணையாக 20 ஆயிரம் பவுண்டு நிதியையும் பரிசாக அளித்து அவரது ஆராய்ச்சியையும் மக்களுக்குத் தடுப்பூசி தொடர்ந்து அளிக்கப்படுவதையும் ஊக்குவித்தது. 

உலகெங்கும் ஜென்னரின் புகழ் வேகமாகப் பரவியது. ஜென்னர் பல மருத்துவர்களுக்கு அந்தத் தடுப்பூசியை உருவாக்கி செலுத்தும் முறையை பயிற்றுவித்தார்.ஜென்னர்  உருவாக்கிய அதே பாதையில் தான் 100 வருடங்கள் கழித்து லூயி பாஸ்டரும்  பயணித்து ரேபிஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்தார், ஜென்னரை பெருமைப்படுத்தும் விதமாக லூயி அந்த முறைக்கு ஜென்னர் உபயோகப்படுத்திய அதே  வேக்ஸினேஷன் என்னும் பெயரையே வைத்துக்கொண்டார்.

ஜென்னருக்கு ஏராளமான விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தன.1821-ல் நான்காம் ஜார்ஜ் மன்னரின் பிரத்யேக மருத்துவராக  ஜென்னர் நியமனம் செய்யப்பட்டார். 

ஜென்னருக்கு அளிக்கப்பட்ட விருதுகளில் மிகச் சிறப்பானதாக நெப்போலியன் 1804-ல் அளித்த ஒரு பதக்கமும், ரஷ்யப்பேரரசி அளித்த ஒரு மோதிரமும் கருதப்படுகிறது. டோக்கியோவிலும் லண்டனிலும் ஜென்னரின் உருவச்சிலை நிறுவப்பட்டது.  

ஜென்னர் அவரது சொந்த ஊரின் மேயராகவும் அமைதிக்கான நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்

பெயரும் புகழும் விருதுகளும் இருந்த அளவுக்கே ஜென்னருக்கெதிரான  கண்டனங்களும்,  அந்த தடுப்பூசிக்கு எதிர்ப்புகளும்  இருந்தன. அவரைக் குறித்த அவதூறுகள் பரப்பப்பட்டன ஆனால் ஜென்னர் அவற்றை சற்றும் பொருட்படுத்தவில்லை.

ஜென்னரை கடுமையாக விமர்சித்தவர்களில்  சமயகுருக்கள் அதிகம்பேர் இருந்தனர்.  நோயுற்ற உடலிலிருந்து எடுத்தவற்றை ஆரோக்கியமானவர்களின் உடலில் செலுத்துவது இயற்கைக்கும் கடவுளுக்கும் எதிரானது என்னும் கண்டனத்தை வலுவாக ஜென்னருக்கெதிரே அவர்கள் முன்வைத்தார்கள். 

1802-ல் ஜென்னரின்  மாட்டம்மை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு மாட்டுத்தலை முளைப்பதாகவும், குளம்புகள்  உருவாவதாகவும் கேலிச்சித்திரங்கள். நாளிதழ்களில் வெளியாகின. ஆனால் மாட்டம்மைத் தடுப்பூசியின்   பெரியம்மைகெதிரான   வெற்றிகரமான செயல்பாட்டினால் ஜென்னரின் புகழ்  அப்படியான கேலி, கண்டனங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் வெகுவாகப்பரவியது. 

ஜென்னர் தடுப்பூசியை மேம்படுத்துவதிலும் பெரியம்மை நோய்க்கான காரணத்தை அறிந்துகொள்வதிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார். அவரது காதல் மனைவி கேதரின் காசநோயால் 1815-ல் மரணிக்கும் வரை தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த ஜென்னர் மனைவியின் மரணத்குப்பிறகு முற்றிலும் அவற்றிலிருந்து விலகினார்.எட்வர்ட் ஜென்னர்  1823-ல் மரணமடைந்தார்   

அவரது வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.அந்தப் பூங்காவில் ஜென்னர் அரண்மனையில் மருத்துவராகப் பணியிலிருக்கையில் அங்கிருந்து கொண்டு வந்த திராட்சைக்கொடியின் தண்டுகளிலிருந்து உருவாகிய  ஏராளமான திராட்சைகொடிகள் தோட்டத்தில் வளர்கின்றன.

ஜென்னரின் இந்தக் கண்டுபிடிப்பில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மருத்துவ வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவர்களில் ஜென்னர் முதன்மையானவராக கருதப்படுகிறார்.  

1967-லிருந்து உலக சுகாதார  நிறுவனம் பெரியம்மை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.  70-களில் நான் பள்ளிச்சிறுமியாக இருக்கையில் சுவர்களில் பெரியம்மை இருப்பதாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு என்றெழுதப்பட்ட வாசகங்களை கண்டிருக்கிறேன். என் பள்ளித்தோழன் மணிகண்டனுக்கு பெரியம்மை கண்டு அவன் பார்வையிழந்ததையும் அறிந்திருக்கிறேன்.

உலக சுகாதார நிறுவனத்தின் பணியாளர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரியம்மை கொப்புளச்சீழ் உலர்பொடிகளை தேடிக் கண்டறிந்து அழித்தார்கள்.

உலகின் கடைசி பெரியம்மைத்தொற்று சோமாலியாவில் 1977-ல் கண்டறியப்பட்டது. 1980-ல் உலக சுகாதார நிறுவனம் பெரியம்மை உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று அறிவித்தது.   உலகின் மிக அபாயகரமான தொற்று நோய்களில் முதலில் ஒழிக்கப்பட்டது பெரியம்மைதான்.

பெரியம்மையை உருவாக்கும்  வேரியோலா வைரஸின் மாதிரிகள் தற்போது சைபீரியா மற்றும் அமெரிக்காவின் இரு ஆய்வகங்களில் பல அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.  

சாராவின் பசுமாடு பிளாஸம் இறந்த பின்னர் அதன்  பதப்படுத்தப்பட்ட தோல் ஜென்னரால்  லண்டன் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவ அருங்காட்சியகத்துக்கு பரிசளிக்கப்பட்டது.  நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெருநோய்த் தொற்று ஒன்றிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்க ஜென்னர் ஈடுபட்டிருந்த பெரும் போராட்டமொன்றின் சாட்சியாக அந்த பசுமாட்டின் தோல் இன்றும் மிகப் பத்திரமாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது .

ஜென்னர் வெப்பக்காற்று பலூன் சோதனையில் ஈடுபட்ட நாளின் 240 வது நினைவு தினம் 2024. செப்டம்பரில் அதுபோலவே வெப்பக்காற்று பலூன்களைப் பறக்கவிட்டு கொண்டாடப்பட்டது.  

அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜென்னரின் கண்டுபிடிப்பிலிருந்து சமீபத்திய கோவிட் பெருந்தொற்று வரையிலான மருத்துவ வரலாற்றின் சங்கிலியில் கோவிட் தடுப்பூசியினால் பிழைத்து இந்தக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் நாமும் கண்ணிகள்தான்.

 பிரான்ஸிஸ் கால்டன் (Francis Galton)

’’In science credit goes to the man who convinces the world, not the man to whom the idea first occurs’’ 

என்று சொல்லி இருக்கிறார். இதற்கு ஜென்னரைத் தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாக இருக்க மாட்டார்கள்

மேலதிகத் தகவல்களுக்கு:

  1. https://www.who.int/news-room/spotlight/history-of-vaccination/a-brief-history-of-vaccination
  2. https://www.nlm.nih.gov/exhibition/smallpox/sp_vaccination.html
  3. How One Daring Woman Introduced the Idea of Smallpox Inoculation to England‘, 
  4.  ‘Edward Jenner and the history of smallpox and vaccination‘, 
  5. https://www.jameslindlibrary.org/wp-data/uploads/2010/05/J-R-Soc-Med-2018-07-Morabia-255-257.pdf  6.https://artuk.org/discover/stories/the-smallpox-vaccine-edward-jenner-and-a-cow-called-blossom
  6. * The TV series South Park (“Chickenpox“) and The Simpsons (“Milhouse of Sand and Fog“) each aired an episode featuring a pox party intended to spread varicella.
  7. *Gloucestershire.

Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “பிளாஸம் என்கிற வேக்கா!”

  1. தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் அறிவுபூர்வமான தேடலுள்ளவர்களுக்கான, பொதுவாக தெரிந்து கொள்ள கூடிய தெளிவை அளித்த வரலாற்று பார்வைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.