பாவப்பட்டவன்

என் முகத்தைப் பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது…?

எதிரே பவ்யமாய் எழுந்து நின்றவரை நேருக்கு நேர் தீர்க்கமாய்ப் பார்த்து கேள்வியை அவர் முகம் நோக்கி வீசினான் சத்யன். அவரால் அவன் கண்களை நேருக்கு நேர் எதிர்நோக்க முடியவில்லை என்று தெரிந்தது.

அந்த அம்பு அவர் முகத்தில் கூர்மையாக இறங்கியிருக்க வேண்டும். திடீரென நிலை குலைந்து போனார் அவர். எழுந்தவர் மீண்டும் உட்காரப்போனார்.

“எதுக்காக எழுந்திருக்கிறீங்க…? வந்ததும் உங்களை நான் உட்காரத்தானே சொன்னேன்…? “

உட்காரப் போனவர் மீண்டும் எழுந்தார். அவர் காரியத்தில் அவருக்கே நிதானமில்லை.

“செய்றது தப்பு…தப்புன்னு மனசு சொல்லுது…ஆனா செய்யாம இருக்க முடியலை…அப்டித்தானே…? ஏன்னா செய்து செய்தே பழகிட்டீங்க…!” இல்ல சார்…” அசட்டுச் சிரிப்பு உதிர்த்தார் அவர். இவன் முகமோ கடுமை சிறிதும் மாறாமல் இருந்தது. எதற்காக மாற்றுவது? மாற்றுவதுதான் எப்படி? எது இயல்போ அதுதானே உணர்ச்சி வெளிப்பாடாய் வெடிக்கும்? அவசியமிருப்பவன்தானே மாறுபாடாக நெளிய வேண்டும்? அவர் கையில் வைத்திருந்தது கைக்குள் போனது. விரல்களை மடக்கி மூடியிருந்தார்.

‘நீங்க தப்பா நினைக்கப்படாது…” “எதை? நீங்க கொடுக்கிறதையா? அல்லது நான் வாங்கப்போறதா நீங்க நினைக்கிறதையா? ‘அப்டியில்லை சார்…வழக்கமாச் செய்றதுதான்…” ‘வழக்கமான்னா…? காலங்காலமா செய்திட்டு வர்றீங்களே…அதைச் சொல்றீங்களா…?” ‘ஆமா சார்…அதே தான்…” ‘காலங்காலமா இங்கே உட்கார்ந்திட்டிருந்தவங்களும் வாங்கிட்டு வர்றாங்க…அப்டித்தானே?” ‘ஆமா சார்…என்ன சார்…இப்டியெல்லாம் கேட்குறீங்க? ‘அதுனால வழக்கம்போல எங்கிட்டயும் எடுத்து நீட்டிட்டீங்க…நானும் வாங்கிக்கணும்ங்கிறீங்க…” இதற்கு அவர் பதில் சொல்லவில்லை. ‘இதுவரைக்கும் இருந்த எல்லா மூஞ்சிலயும் பீ அப்பினதுனால, இந்த மூஞ்சிலயும் அப்பி விட்ரலாம்னு நினைச்சிட்டீங்க…” இப்பொழுது முற்றிலுமாக அவர் தலை குனிந்திருந்தார். அந்த உறாலில் இருந்த எல்லோர் தலையும் குனிந்துதான் கிடந்தது. கோப்புகளில் இத்தனை கவனமாய் அவர்கள் இருந்து இவன் பார்த்ததேயில்லை.  கோப்பினைப் பார்க்கிறார்களா? அல்லது தூங்குகிறார்களா? 

வலது கடைசியில் இருந்த கணக்கர் ராமானுஜம் கைப்பேனாநழுவியது. நினைத்ததுபோலவே அவர் தூங்கத்தான் செய்தார். பாவம்! இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் இருந்திருக்காது. தினமும் போராட்டம்தான்.

புத்தி பேதலித்த பெண்டாட்டியுடன் தினமும் அல்லல் அவருக்கு.  இருக்கவும் முடியாமல், விடவும் முடியாமல், இரண்டு குழந்தைகள் வேறு. அதுகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஓட்டமும் நடையுமாக வியர்க்க விறுவிறுக்க வருவார். நெற்றியில் இட்டிருக்கும் நாமம் மூக்கிலே வழிந்தோடும். மூக்குப்பொடி வாடை வேறு ஆளைத் தூக்கும். இருப்பவர்களைக் கொல்லும். துடைக்கும் உணர்வு கூட இருக்காது அவருக்கு. இவனுக்கு அவர் பேரில் எப்போதும் பரிதாபம்தான்.

‘என்னை மாதிரி நீங்கள்லாம் இருந்தீங்கன்னா, என்னைக்கோ சொல்லாமக் கொள்ளாம வீட்டை விட்டு ஓடிப் போயிருப்பீங்க…” என்பார் எல்லோரிடமும். வழக்கமாய் மதியச் சாப்பாட்டிற்கு மேல் ரூம் சாவியைக் கேட்பார். அவர் மேல் இரக்கப்பட்டு ஒரு சாவியை நிரந்தரமாக அவரிடமே கொடுத்து வைத்திருந்தான்  இவன். போய் நன்றாக ஒரு தூக்கம் போட்டுவிட்டுத்தான் வருவார். அப்பொழுதுதான் முடியும் அவரால். இல்லையென்றால் மூளைக்கு ஓய்வில்லாமல் என்றைக்கோ அவருக்கும் பைத்தியம் பிடித்திருக்கும்தான்.

‘என் சகதர்மிணியோட சேர்ந்து நானும் கைகோர்த்திட்டு  அலைய வேண்டிதான்…” என்பார் வேதனையாக. ‘சார், உங்க ரூம் இருக்கே…சொர்க்கம் சார் அது…அதென்ன சார் இப்டி ஆளைப் போட்டு அமுக்குது…” என்று உருகி உருகிச் சொல்வார். பாவமாய் இருக்கும் இவனுக்கு. அவர் உடம்பின் அயற்சியும், அவரின் பாடுமல்லவா அவரை அப்படிச் சுருட்டி அடிக்கிறது?

ராமானுஜம் தட்டச்சராய் இருந்த காலத்திலிருந்து அறிவான் இவன். உட்கார்ந்திருக்கும் அந்தப் பெரிய ஆகிருதியின் முன்னே அந்த டைப் மிஷின் மிகச் சின்னதாய்த் தோன்றும். இவர் விரல்கள் விளையாடும் வேகம், சூப்பர்ஃபாஸ்ட் ரயிலை மிஞ்சும். சடசடவெனப் பிளந்தெடுக்கும் பேய் மழையின் உக்ரம் அது!

‘சார், தயவுசெஞ்சு டைப்பிஸ்டை தனி ரூமுக்குள்ள போட்ருங்க சார்…சத்தம் தாங்க முடியலை…இங்கே எங்க வேலை கெடுது ..”

வாயு வேகம், மனோ வேகம் எல்லாவற்றையும் விட அதிவேகம் ராமானுஜம் டைப் அடிப்பது!!

அது அவர் தனியாய்த் திரிந்த காலம். கல்யாணம் என்பதுதான் அவரை இப்படி மாற்றிப் போட்டு விட்டது. அத்தை பெண், அத்தை பெண், என்று உறவிலேயே கட்டி வைத்துவிட்டார்கள். அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சில குறைபாடுகள்தான்.

‘எங்கதான் சார் இல்ல…வீட்டுக்குவீடு வாசப்படிதான்…எங்க அத்தை, கால்ல விழாத குறை சார்…கதறி அழறாங்க…என்னை என்ன பண்ணச் சொல்றீங்க…? சின்ன வயசிலேயிருந்து எங்க குடும்பத்துக்கு நிறைய உபகாரம் செய்தவங்க…அவங்க உதவியினாலதான் எங்க குடும்பமே ஏதோ ஓரளவுக்கு இன்னிக்கு ஜீவிச்சிட்டிருக்கு…..கோவில் உண்டக்கட்டிய நம்பி இருந்த எங்க குடும்பத்தைக் கடைத்தேற்றினவங்க அவுங்கதான்…” ‘எனக்கெதுக்கு இவ்வளவு துட்டு? ஏற்கனவே ரெண்டு விளங்காமப் போயிடுத்து…அதுகள் ஆயுசுக்கும் கொஞ்சம் ஒதுக்கிட்டேன்…இவ ஒருத்திதான்…வெளில கொடுத்துத்தான் ரெண்டு சப்பட்டையாப் போச்சு…கண்ணெதிரிலே ராமானுஜம் இருக்கான்…அந்தப் பெருமாளுக்கே என் பொண்ணை தாரை வார்த்துடறேனே…ஏத்துக்கப்படாதா…?”

-இதைச் சொல்லியபோது அவர் நின்று கண்கலங்கிய காட்சி இவன் மனத்திரையில் ஓடியது. நல்ல மனதுள்ளவர்களையும், நல்லதையே நினைத்து செய்பவர்களையும் கூட வாழ்க்கை எப்படியெல்லாம் நிலைகுலையச் செய்து விடுகிறது?

‘எல்லாமும் கர்மவினை சார்…எங்க அப்பா அப்டித்தான் சொல்லுவார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க…?”

‘அடிக்கடி ராமானுஜத்திடம் வெளிப்படும் அந்த வார்த்தைகள்…! என்னை என்ன செய்யச் சொல்றீங்க…?’ எத்தனை இடங்களில் எத்தனை மனிதர்கள் இதே வார்த்தைகளைச் சுமந்து கொண்டு இந்த வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து சகித்துக்கொண்டு கழிக்கிறார்கள்?

இருக்கையிலேயே தூங்கும் அவரை இவன் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லிப் பயனில்லை. ‘கர்ர்ர்ர்ர்……” என்ற ஒரு நீளக் குறட்டையோடு தனக்குத்தானே விதிர்த்து விழித்துக் கொள்வார். பிறகு வேலை தொடரும். இரவு எத்தனை நேரமானாலும் அன்றைய வேலையை அன்றே முடித்துவிட்டுத்தான் எழுவார். பிறகென்ன? டைப்பிஸ்ட்டாய் இருந்த காலத்திலும் சரி, இன்று பதவி உயர்வில் இருக்கிறபோதும் சரி, ஆபீஸ் வேலையில் அதே வேகம் இம்மியும் குறையவில்லை.

எதிரே இருந்தவர், ‘சார்… அப்புறம்…?” என்றார். அந்த அப்புறம் என்ற சகஜமான வார்த்தையே இவனுக்குப் பிடிக்கவில்லை. ‘உன்னோடு தோளில் கை போட்டவனுக்கல்லவா நீ இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். ..”

‘போயிட்டு வாங்க…ரெண்டு நாள் ஆகும்…” ‘சார்….ர்ர்ர்….” ‘ஆமாங்க…இத்தனையையும் வெரிஃபை பண்ண வேணாமா…?  இருபத்தஞ்சு பர்ஸன்ட் செக்கிங் என் சார்ந்த வேலை…பார்த்துத்தான் போட முடியும்…”

‘எல்லாமே இன்ஜினியர் பார்த்துட்டார் சார்…நீங்க வெறுமே இனிஷியல் மட்டுமே பண்ணினாப் போதும்…” ‘மொட்டை இனிஷியல் போடுங்கிறீங்க…உங்களுக்குச் செக்குத் தர்றது நானா? இன்ஜினியரா…?” ‘நீங்கதான் சார்….இன்னைக்குச் செக்கை வாங்கி கேஷ் பண்ணினாத்தான் சார் நாளைக்கு அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும்…” ‘அதுக்காக நான் கண்ணை மூடிட்டுப் போட முடியுமா…? என்ன சொல்றீங்க நீங்க…?” ‘சார்…கொஞ்சம் தயவுபண்ணுங்க சார்…ஃபார்மாலிட்டீஸை வழக்கம்போல செய்துடுவோம்…அதைப் பத்தி நீங்க எதுவும் நினைக்க வேணாம்…” ‘இப்டி எதிர்க்க உட்கார்ந்திட்டு என்னை டார்ச்சர் பண்ணாதீங்க…ஆபீஸ் ப்ரொசீஜர் எப்டியோ அப்டித்தான் என்னால செய்ய முடியும்…உங்க ஃபார்மாலிட்டீஸையெல்லாம் அங்கயோட நிறுத்திக்குங்க..நீங்க போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரலாம்…” – சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தான். ‘ராமானுஜம்…வர்றீங்களா…ஒரு டீ சாப்டிட்டு வரலாம்…”

‘நா வாங்கிட்டு வரச் சொல்றேன் சார்…” – அந்த ஆளின் குரலை இவன் சட்டையே செய்யவில்லை.

உட்கார்ந்தமேனிக்கே உறக்கத்திலிருந்து திடீரென விழித்ததால், வாயிலிருந்து எச்சில் வழிய, அதைக் கையால் பிடித்துத் துடைத்துக்கொண்டே எழுந்தார் ராமானுஜம். எப்பொழுதுமே ரப்பர் செருப்புதான் அணிவார் அவர். படக் படக் கென்று சத்தம் எழுப்பும் அது. தனது வருகைக்கான அடையாளமாய் தாமதமாய் வரும் பொழுதுகளில் உதவியாய் உணர்ந்தார் அதை. வெளியில் நடக்கையில், ‘சார்…ஒண்ணு சொல்லணும் உங்க கிட்டே…சொல்லலாமா? ” என்று ஆரம்பித்தார் ராமானுஜம். வெகு நேரமாக அதற்காகக் காத்துக்கொண்டிருந்தது போல் இருந்தது அவர் ஆரம்பித்தது. ‘சொல்லுங்க…” என்றான் இவன். ‘உங்க பேரு சத்தியமூர்த்தியா இருக்கலாம் சார்…ஆனா இங்க நீங்க சத்யமா இருக்க முடியாது சார்…” லேசாய்ப் புன்னகைத்தவாறே இவன் அவரைப் பார்த்தான். ‘ஆமா சார்…சத்தியமான உண்மை இது…விளையாட்டுக்குச் சொல்லலை …” மீண்டும் அழுத்தம் கொடுத்தார் ராமானுஜம்.

பதில் பேசாமல் யோசனையோடு நடந்தான் சத்யன். ‘என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்…திருச்சில நான் இருந்தபோது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடை மறிச்சு அடி பின்னி எடுத்துட்டாங்க சார்…அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்டியே லீவைப் போட்டுட்டுப் போனவர்தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா…!

இவுங்கல்லாம் ரொம்ப வருஷமா தொடர்ந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்…ஆளுகளைக் கூட மாத்த முடியாது…யாரையும் எதுத்துக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்னையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க…நாளைக்கு ஆடிட்ல பிரச்னை வந்தாலும் கையைக் காண்பிச்சு விட்டாப் போதும்…வேணுங்கிறதைக் கவனிச்சு அனுப்பிடுவாங்க…சொல்லப் போனா அவுங்களுக்காகத்தான் ஆபீஸே நடக்குதுன்னு வச்சிக்கிங்களேன்…வெறுமே சீலைப் போட்டு சைன் பண்ணச் சொன்னாத் தப்பு…அதுவும் செய்வாங்க…ஆனா அது வேறே மாதிரி ஆளுகளுக்கு…உங்களுக்கில்லே…இது நீங்கங்குறதுனாலதான் இந்த மரியாதை…ஆகையினால எதுக்கு சார் பிரச்னை…? உங்க நல்லதுக்காகச் சொல்றேன்…நன்மைக்காகச் சொல்றேன்…” – தயங்கியவாறே நிறுத்தி இவனைக் கூர்ந்து பார்த்தார் ராமானுஜம்.  நினைத்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி அவரிடம். இவரைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற ஆதங்கம் அவர் முகத்தில் வழிந்தது போலிருந்தது.

‘நான் ஒண்ணும் போட மாட்டேன்னு சொல்லலியே ராமானுஜம்..? .25 %  செக்கிங் பார்த்துட்டுப் போடறேன்னுதானே சொன்னேன். வரி, சர்சார்ஜ், இதெல்லாம் கரெக்டா போட்டிருக்காங்களான்னு பார்க்க வேண்டாமா? பட்ஜெட்டை எகிறிடக் கூடாதுல்ல…?அதையாவது பார்க்க வேண்டாமா நான்? நாளைக்கு யார் பதில் சொல்றது? ” ஒண்ணும் பைன்ட் பண்ணாது சார் எதுவும்…தைரியமா நீங்க போடலாம்…டோட்டல் எஸ்டிமேட்டே அந்தப் பிரிவுலதானே அப்ரூவ் ஆகுது…பிறகென்ன சார்? நாம இனிஷியல் பண்றது அந்த வேலைகள் பதிவேட்டுல முடிஞ்சிடுச்சுங்கிறதைத்தான்…எல்லாத்தையும் எழுதித்தானே சார் நீட்டுறாங்க…பேசாமப் போட்டு விடுங்க சார்…செக்கைக் கிழிச்சு தொலையுதுன்னு அனுப்பி விடுங்க…இதிலெல்லாம் ரொம்ப உள்ளே போனீங்கன்னா பிறகு மன நிம்மதியே போயிடுமாக்கும்..

அதெல்லாம் கெடக்கட்டும் சார்…நான் ஒண்ணு கேட்குறேன் அதுக்கு உண்மையா பதில் சொல்றீங்களா…?” ‘என்ன ராமானுஜம், பேச்சு ஒரு மாதிரியிருக்கு?” – இவன் குரல் தானே உயர்ந்தது. ‘ஐய்யய்யோ…தப்பா நினைச்சிக்கிடாதீங்க…உங்களோட சகஜமான உரிமையுள்ளவன்ங்கிற முறைலதான்…” ‘என்ன சொல்லுங்க…?” ‘உண்மையிலேயே இதெல்லாம் சரியா ஒர்க் அவுட் பண்ணியிருக்காங்களான்னு பார்த்து உறுதி செய்யத்தான் நீங்க சரி பார்க்கிறீங்களா, இல்ல வேறே எதுக்காச்சுமா?” அதிர்ந்துதான் போனான் சத்யன். இருந்தாலும் அவர் கேட்ட தோரணையில் அவர் மூலம் நிறைய விஷயங்கள் வெளிவரும்போல் தோன்றியது இவனுக்கு. ராமானுஜம் ரொம்பவும் சகஜமானவர். ஆபீசின் எல்லாப் பிரிவுகளுக்கும் வேண்டப்பட்டவர். அதனால்தான் அவரை கணக்குப் பிரிவிலேயே போட்டிருந்தான் இவன். யாரும் அவரை வெறுக்க மாட்டார்கள். ஒதுக்க மாட்டார்கள். தன்னிடமும் மரியாதையாய்த்தான் இருக்கிறார். அதனால் பதில் மரியாதை என்றும் அவருக்கு உண்டு. ‘உங்களோட இத்தனை நாள் பழகினவன்ங்கிற முறைலதான் கேட்குறேன். வேறே எதுக்காச்சும்னா வெளிப்படையா சொல்லிக் கேட்டிருங்க. தப்பில்லே…அதைத்தான் அவங்களும் விரும்புவாங்க…எங்களால இவ்வளவுதான் முடியும்னு கொடுத்திட்டுப் போயிடுவாங்க…இல்ல…நீங்க கேட்டதுக்கு ஓ.கேன்னா டக்குனு எடுத்து நீட்டிடுவாங்க…அதில்லாம வெட்டியா இருந்தீங்கன்னா அனாவசியமா பழி உங்க மேலேதான் விழும். நாளைக்கு ஒர்க் டயத்துக்கு முடியலைன்னா

இதையெல்லாம் காரணமாச் சொல்லுவாங்க…புகார் ஆயிடும்…பார்த்துக்குங்க…” இவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். ராமானுஜம் தன்னைவிட ரொம்பவும் அனுபவப்பட்டவராய்ப் பேசுகிறார். இத்தனை நாள் பழகியும், என்னைப்பற்றித் தெரிந்தும், மீண்டும் இந்தச் சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்? மனித மனம் சபலத்திற்கு ஆட்பட்டது என்று நினைக்கிறாரோ? ‘உங்க மனசை நீங்களே தெளிவாக் கேட்டுக்குங்க சார்…கூச்சப்படாதீங்க…உங்களுக்கு நீங்களே பொய்யா இருக்காதீங்க…உங்களுக்கு வர்ற பங்கை வாங்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா…இல்ல வாங்கணும்னு நினைக்கிறீங்களா? இதுவா அல்லது அதுவா…? சரியா முடிவு பண்ணிக்குங்க…ஏன்னா காலம் காலமா இந்தப் பழக்கம் உண்டு இங்கே…புதுசில்லே…நீங்க வேணாம்னா உங்க பங்கை வேறே யாராவது வாங்கிக்கப் போறாங்க…அவ்வளவுதான்…அல்லது உங்க பேரை மிஸ் யூஸ் பண்ணி வாங்கிக்கிடுவாங்க…அதை நீங்க தடுக்க முடியாது.   அது பத்தி உங்களுக்குத் தெரியவும் தெரியாது….” ‘நீங்க என்ன சொல்றீங்க ராமானுஜம்?” – பரிதாபமாய்க் கேட்டான் இவன். அவரது அனுபவத்தின் முன் தான் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றியது அந்த நிமிடத்தில்.

‘இல்ல சார்…நிறையப் பேருக்கு வாங்கணும்னு தோணும். ஆனா மனசுல பயம் வந்திடும். ஏதாச்சும் பிரச்னை ஆயிடக் கூடாதேன்னு. இன்னும் சிலபேர் கிடைக்கிறதை வாங்கிக்கிடுவோம்னு நினைப்பாங்க…ஏன் விடணும்னு ஒரு நினைப்பிருக்கும். ஆனா தான் வாங்குறது மத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுங்கிற எண்ணமிருக்கும்…அதாவது கௌரவத்தை இழக்க விரும்பாத மனசு. அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு அர்த்தம். வாங்கறதுன்னு ஆயிட்டாலே அது எப்படியாவது தெரிஞ்சு போயிடும்னு வச்சிக்குங்க…கீதைல சொல்றமாதிரி பாவ காரியங்கள் என்னைக்காவது ஒரு நாள் எப்டியாவது வெளில வந்துதான் தீரும்ங்கிறதுதான் சத்யம். ஆனா அதையெல்லாம் பத்தி இப்ப யாரு நினைக்கிறா? இன்னும் சில பேர் இருக்காங்க. அவுங்க இந்த விஷயத்தையே ஜனநாயகப்படுத்திடுவாங்க… வர்றதை எல்லாருக்கும் சந்தோஷமாப் பிரிச்சுக் கொடுத்திடுவாங்க. தன் பங்கையும்கூட…அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்…என்கூட திருச்சில ஒருத்தர் ஒர்க் பண்ணினார். அவர் பெயர்கூட வெங்கடேசன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி ஏதேனும் எண்ணம் உண்டா சொல்லுங்க…அதுக்கு நான்கூட ஒத்தாசை பண்றேன்..

வாய்மூடி மௌனியாய்க் கேட்டுக் கொண்டிருந்தான் சத்யன். இதென்ன? ஒரு வேண்டாத விஷயத்தைப் போய் இத்தனை விலாவாரியாய் விவரித்துக்கொண்டு? சே! ” ‘ஒண்ணும் குழம்பிக்க வேண்டாம் சார்…வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அவ்வளவுதான்…டேக் இட் ஈஸி…”

சத்யன் அமைதியாயிருந்தான். அவரே மேற்கொண்டு பேசட்டும் என்றிருந்தது அவனுக்கு. கணக்காளர் மிகக் கணக்காகத்தான் பேசுகிறார். கணக்காகப் பேசுகிறாரா அல்லது மிகக் கணக்காய் காயை நகர்த்துகிறாரா? என்னைத் தெளிய வைக்கிறேன் என்னும் சாக்கில் நைஸாக உள்ளே இழுக்கிறாரோ? இப்போது அவர் மேலேயே சந்தேகம் வந்தது இவனுக்கு. ‘எதுக்குச் சொல்றேன்னா சார்…நீங்க தப்பா நினைக்கக்கூடாது. இன்றைய சூழ்நிலை அப்படி. எதெல்லாம் நாம தப்புன்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நடைமுறைன்னு ஆயிடுத்து. குடிக்கிறமாதிரின்னு வச்சிக்குங்களேன். டீக்கடைக்குப்போகிற மாதிரி தினமும் அங்க போறாங்க இல்லியா? ஃபார்மாலிட்டின்னு இப்ப அதுக்குப் பேர் சொல்றாங்க…செய்ற தப்புக்கு, தப்பு பண்றவங்க கொடுத்த பேரு அது. ஆனா தப்புன்னு எங்கயும் அதைச் சொல்லவே மாட்டாங்க..அவுங்க வாயிலிருந்து அது மட்டும் வரவே வராது. அது அவச்சொல். தப்பு தப்புன்னு நாமதான் ஒத்த மரத்துக் கொரங்கு மாதிரி காழ் காழ்னு கத்திட்டிருக்கணும். அதையும் கவனிக்க எவனும் இருக்க மாட்டான். காரியத்துல கண்ணாயிருக்கிறவன், அங்கங்கே தூவ வேண்டியதைக் கணக்கா தூவிட்டு காரிய சித்தி பண்ணிட்டுப் போயிட்டேயிருப்பான்…இவன் இங்கே  ‘பே..”ன்னு வாயைப் பிளந்திட்டு வெறுமே நின்னிட்டிருக்க வேண்டிதான். என்னுடைய சர்வீஸ்ல எவ்ளவோ பார்த்தாச்சு. உங்களுக்கும் இந்த அனுபவம் கிட்டியிருக்கும்தான்…ஆனாலும் உங்ககிட்டே சொல்லணும்னு தோணிச்சு…சொல்லிட்டேன்…”

முடிந்தது என்பதுபோல் பேச்சை நிறுத்திவிட்டு, இவன் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு ரோட்டை கிராஸ் பண்ணுவதில் கவனமானார் ராமானுஜம். சூடான டீ மனதுக்கும், உடம்புக்கும் இதமாய் இருந்தது. தெளிந்த குளத்தில் கல்லெறிந்து குழப்பி விட்டாரா? அல்லது கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனிக்கிறாரா? இவனுக்கே இவன் இருப்பு புரியவில்லை.

அந்த நீண்ட அமைதியை ராமானுஜமே குலைத்தார் மீண்டும். ‘என்ன சார், சங்கடப்படுத்திட்டேனா…? ரொம்ப உரிமை எடுத்திட்டு உங்களுக்கே அட்வைஸ் பண்ணிட்டேனோ? ஏதோ சொல்லிடணும்னு தோணிச்சு. நேத்திலேர்ந்து ஒரே அரிப்பு. இதுவரைக்கும் யார்கிட்டயும் இவ்வளவு விலாவாரியா டிஸ்கஸ் பண்ணினதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஏன்னா நான் பழகினவங்களெல்லாம் ரொம்பப் ப்ராக்டிகலானவங்க…உலக நடைமுறைகளோட, அதன் போக்குல, லாவகமா, ரொம்ப இயல்பா கலந்துடறவங்க…பிராக்டிகல்னுதான் சொன்னேன். நேர்மையானவங்கன்னு சொல்லலை…அந்த வார்த்தை  இப்போ ரொம்பப் பழசு… அநாவசியமான, அநாகரீகமான வார்த்தைன்னு கூடச் சொல்லலாம். உங்களை நான் வித்தியாசமானவரா மனசுல வச்சிருந்தேன். அதான் சொன்னேன். இத்தனை உரிமை  எடுத்துக்கிட்டதுகூட அதுனாலதான்…உங்களுடைய ட்ரீட்மென்ட் ரொம்பக் கடுமையாத் தெரிஞ்சது எனக்கு. அதனால சுதாரிச்சேன். வெளியூர்ல வந்து தங்கியிருக்கீங்க…தனியா வேறு இருக்கீங்க…பயமில்லாமத் தெளிவாப் பேசுறீங்க…உங்க வேலைகள்ல ஒரு தீர்மானம் இருக்கு…அது உங்களை வழி நடத்துது…ஆனா அதுவே உங்களுக்கு எதிராத் திரும்பிடுமோன்னு நான் பயப்படுறேன்…எது உங்க பலம்னு நீங்க நினைக்கிறீங்களோ அதுதான் உங்க பலவீனம்னு  எனக்குத் தோணுது…சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்…இப்பத்தான் என் மனசு நிம்மதி ஆச்சு…..” -ஒரு நீண்ட பெருமூச்சோடு பேச்சை நிறுத்தினார் ராமானுஜம். உலகாயத அனுபவங்களையெல்லாம் கரைத்துக் குடித்ததுபோல் இருந்த அவரது பேச்சு, சத்யனை நிரம்ப சிந்திக்க வைத்தது. என்னதான் நடைமுறைகள் மாறியிருந்தாலும், அடிப்படை விழுமியங்கள் மாறி விடுமா என்ன? அவைகளுக்குஅழிவுண்டா? அவற்றை அசைத்துப் பார்க்கலாமே தவிர வேரோடு பிடுங்கி எறிய முடியுமா? எங்கெங்கோ சுற்றினாலும் கடைசியில் அங்குவந்துதானே சங்கமமாகிட வேண்டும்? அத்தனையையும் அது உள் வாங்கிக்கொண்டு தன்னை மேலும் புனிதப் படுத்திக்கொள்ளத்தான் செய்யும். அந்த நாளும் ஒரு நாள் வரத்தான்  செய்யும்..!விடியத்தான் செய்யும்!!. அதற்காக நின்று கொண்டிருக்கும் அந்த 

ஸ்தலத்தை விட்டு, தான் இடம் பெயர முடியுமா? மேட்டில் நிற்பவன் பள்ளத்தில் விழலாமா? எல்லோரும் பள்ளத்திலேயே கிடக்கிறார்கள் என்பதால் அந்த இடம் புனிதமாகிவிடுமா?

மீண்டும் இருக்கையில் போய் அமர்ந்த போது அந்த ஆள் இல்லை என்பது மனதுக்கு மிகவும் நிம்மதியாயிருந்தது இவனுக்கு. தன்னுடைய இயல்புக்கு ஏற்றாற்போல் தனக்கு ஒரு அலுவலகம் வாய்க்காதது எப்பொழுதும் சிக்கலாகவே இருந்திருக்கிறது என்று நினைத்தான்.

தான் இதுவரை இருந்த அலுவலகங்களிலெல்லாம் இந்தப் பிரச்னை தன்னைத் தொடர்ந்து வந்திருப்பதையும், அதற்காகவே மாறி மாறி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதையும் எண்ணிப்  பார்த்துக் கொண்டான். பதவி உயர்வு  வேண்டாம் என்று சொல்லி உள்ளுரிலேயே பேசாமல் குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கலாமோ என்று  எப்போதும்போல் அப்பொழுதும் தோன்றியது.

பதவி உயர்வில் மேலே செல்லச் செல்ல பொறுப்புக்கள் அதிகமாவதைப்போலவே சிக்கல்களும் பெருகுகின்றனவே? இவற்றிலிருந்து தன்னளவில் ஒதுங்கியிருக்கலாம்  என்றால், கடமையைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாத சூழல் அல்லவா நிலவுகிறது? தனித்தன்மையோடு இயங்கவே முடியாத சூழலல்லவா நிலவுகிறது? தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க நினைப்பவன்கூட அப்படியே தன்னைக் கொண்டு செலுத்த முடியவில்லையே? தன்னைப் போல் இருப்பவர்களெல்லாம் இப்படி நாள்தோறும் ஏதாவதொன்றிற்கு அவதிப் பட்டுக்கொண்டு மன உளைச்சலோடு நிம்மதியின்றித் திரிய வேண்டியதுதானா?  தவறு செய்பவர்களுக்கல்லவா மன உளைச்சலும், நிம்மதியும் குலைய வேண்டும்? இங்கே மாறுபாடாய் அல்லவா திகழ்கிறது?

தப்பு செய்பவர்களும், துட்டடிப்பவர்களும் அல்லவா சந்தோஷமாயும், குஷாலாயும் திரிகிறார்கள்?

யோசிக்க யோசிக்க சத்யனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.கடைசி மிச்சம் இதுதானா?  உடல் நலக் கேடு! அதுதானே?

இருப்பது வெளியூர். அதில் எங்கிருந்தால் என்ன? வெறுமே நிர்வாகம், நடைமுறை என்கிற அளவில் மட்டும் பணியில் ஐக்கியமாகி விடுவதுபோல் தனக்குத் தோதாய் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வெளியேறி விட்டால் என்ன? தன்னைப் போன்றவர்களின் இடம் அப்படித்தானே அமையும்? தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான் சத்யன். ராமானுஜத்தோடான உரையாடல் ஒரு சரியான வழிக்குத்தான் தன்னைத் திருப்பி விட்டிருக்கிறது என்பதாக உணர்ந்து திருப்தியடைய ஆரம்பித்தான். ஒரு நீண்ட விடுமுறை இடைவெளிக்குப்பின் அன்று அலுவலகம் வந்தபோது, அவன் இருக்கையில், அவனின் முதல் பார்வையில், அது அவனை வரவேற்றது. தனக்கான இடத்தைத் தானே தேர்வு செய்து அடைந்திட வேண்டிய அவசியம்கூட இல்லையென்பதுபோல், அது அந்த அலுவலகத் தலைமையாலேயே  சொந்த முயற்சியில் பெற்று வைத்திருந்த சென்னைத் தலைமையகத்துக்கான மாறுதல் ஆணை என்பதாய்  அவனின் பார்வைக்குத் தயாராய் அங்கே வைக்கப்பட்டிருந்தது.!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.