ஒழிக தேசியவாதம்!

மதச்சார்பற்றவர்கள் சரியாக தெரிந்து வைத்துள்ள ஒன்று, ஹிந்துத்துவ கூட்டம் சத்தியப் பிரமாணம் செய்யும் தேசியவாதம் என்பது ஒரு மேற்கத்திய கண்டுபிடிப்பு என்பதாகும். சொந்த நாட்டின் மீதான பற்று எல்லா மக்களுக்கும் பொதுவானது. எனவே, இந்திய நாட்டினரை மட்டும் பிறநாட்டினர் தார் குச்சியால் குத்தி எழுப்ப வேண்டிய அவசியமில்லை. தேசப் பாதுகாப்பிற்காக வெளிநாட்டினரோ உள்நாட்டினரோ இதை ஒரு சித்தாந்தமாகத் திணிக்க வேண்டிய அவசியமுமில்லை. தேவையானபோது தேசியவாதம் சுயமாகவே உள்ளிருந்து வெளி வரும் உணர்வு. இதை யாரும் ஊக்குவிக்கவோ முன்னிறுத்தவோ தேவையில்லை. ஆனால் இது முதல் உலகப் போர் எனும் தீயில் நவீன மேற்கத்தியம் புடம் போட்டு எடுத்த சித்தாந்தம் . மதச்சார்பற்றவர்கள் மேற்கிலிருந்து வருவதையும், வந்திருப்பதாக நினைப்பதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் தன்னாட்டு கலாச்சாரத்திற்காக வெற்றிகரமாக உழைப்பவர்கள் இதை உன்னிப்பாக நோக்குவது அத்தியாவசியமாகும்.

இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு வெகுநாட்களுக்கு முன்னரே, ஒரு தேசத்தின் தோற்றமோ அதைப் பற்றிய உண்மையோ அரசியலுக்கு உபயோகமற்றது என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன். நான் சிறுவனாக இருந்தபோது 1970ல், தொலைக்காட்சி செய்தி அறிவிப்பில் கனடாவின் பிரதம மந்திரி ட்ரூடு உரை நிகழ்த்தும்போது தாடி வைத்த இளைஞர் ஒருவர் இடைமறித்தார். ட்ரூடு தன் உரையை நிறுத்தி விட்டு அவ்விளைஞரிடம் நேரடியாக கூறிய பதில், ‘அமெரிக்கா, சிகாகோ, கலிபோர்னியா போன்ற இடங்களிலிருந்து வரும் முற்போக்குக் கருத்துக்கள் உன்னை அலைக்கழிக்கின்றன. முதலில் கனடா தேசக்காரனாக இருக்கப் பார்!’ என்றார். இதேபோல், பிளெமிஷ் அரசியல்வாதி, எரிக் வான் ரோம்பு (Eric Von Rompuy) இடதுசாரி உத்வேகத்தினால் கிடைத்த கண்டுபிடிப்புகளை ’பிளெமிஷ் தேச ஆன்மாவிற்கு எதிரானது’ என விமரிசித்தார். கருத்துக்கள் என்பது ஏதோ கனடாவிற்கு சொந்தம் அல்லது சொந்தமில்லை, ப்ளெமிஷ் நாட்டினுடையது அல்லது நாட்டை சேர்ந்ததில்லை என்பது போலிருந்தது இவர்களது பேச்சு.

மாறி வரும் உலகில் தேசியவாதம்(NATIONALISM IN A CHANGING WORLD)

1920களில், சுதந்திரப் போராட்ட கால சமயம், இந்திய தேசியவாதத்தின் மீதான விசுவாசம் சுயமரியாதையுள்ள இந்தியர்களுக்கு தேவையாக இருந்தது. கல்வித் திட்டத்தில் ஆங்கிலேயர்களின் இருப்பினாலும் செல்வாக்கினாலும், ஐரோப்பிய சித்தாந்தம் வாழ்க்கைக்கும் மேலானதாக கருதப்பட்டது. தேசியவாதிகள், ஒரு பக்கம் அதை எதிர்த்தப்போதும் மற்றொரு பக்கம் அதை உறிஞ்சி உறிஞ்சி குடித்துக்கொண்டே இருந்தனர் . முத உலகப் போர் முடிந்த சமயம் தேசியவாதம் அதன் உச்சியில் இருந்தது. தேசிய போராட்டத்தை கோட்பாடாக அமைக்க இந்திய ஆர்வலர்களுக்கு, , கிஸ்ஸேப்பி மஜினி(Giuseppe Mazzini) போன்ற சிந்தனையாளர்கள் அளித்த உத்வேகம் இதற்கு வழி வகுத்தது. இவர் இத்தாலியின் ஒருங்கிணைப்பிற்கான பிரதான சூத்திரதாரி. இவரது நூலை விநாயக் தாமோதர் சாவர்க்கர் மொழியாக்கம் செய்துள்ளார். ஹிந்துக்களின் அக்கறைகளையும் கவலைகளையும் ஹிந்து தேசியவாதமாக மாற்றிக் கட்டமைக்க இது உதவியது என்பது புரிந்து கொள்ளத் தக்கதே. (ஹிந்துத்துவா என்ற வார்த்தையின் பயனுள்ள அர்த்தம் இதுதான். 1880ல் ஓரளவு உறுதியான இவ்வார்த்தை அரசியல் மேடையில் சாவர்க்கரால்தான் அரங்கேறியது). சுதந்திர போராட்ட வீரர்களான சாவர்க்கர், ஹிந்து மஹா சபா இணை நிறுவனர் சுவாமி ஷ்ரத்தானந்தா, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹெட்ஜ்வார் போன்றவர்களை இழிவுபடுத்துவது எனது நோக்கமில்லை.

எனினும், தேசியவாதிகளின் முக்கிய அக்கறை மக்களை ஒன்றுபடுத்துவது. ஆனால், அது இந்திய வரலாற்றில் காணப்படாத ஒன்று. இந்தியா பன்முகத்துவத்தில் முதன்மையானது. மொழியில் கூட மாநிலங்கள் ஒன்றுபடவில்லை. அம்மாநிலங்களை ஆண்ட அரசர்களும் அவ்வாறு செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லை. மாநிலத்தின் மேலுள்ள விசுவாசத்தை விட ஜாதியின் மேலுள்ள விசுவாசம்தான் நீடித்ததாகவும் நெருக்கமுள்ளதாகவும் இருந்தது, பி.ஆர். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கூறிய, “ஒவ்வொரு ஜாதியும் ஒரு தனிநாடு” என்பது உண்மையே . மக்களின் மீது மாநிலங்களின் அதிகாரம் குறைந்த பட்சமாகத்தான் இருந்தது, அவர்கள் வாழ்விலும் அது தலையிடவில்லை. மாறாக, நவீன தேசிய அரசமைப்புகள் குடிமக்களை அரசு திட்டங்களில் ஈடுபடுத்த முயல்கிறது. உதாரணம், இராணுவ கட்டாய சேவை. மேலும், அவர்களது வாழ்க்கையில் சிறிது சிறிதாக தன்னை நுழைத்துக் கொள்கிறது. இதற்கு ஆட்டோ வான் பிஸ்மார்க் ஜெர்மனியை ஒன்றிணைப்பதற்காக ஏற்படுத்தீய சமூக பாதுகாப்பு திட்டத்தை கூறலாம். பாரம்பரிய வழி வந்த இந்தியாவில் ஒருவரது சமூகம், அதற்கும் மேலாக அவரது ஜாதி அப்பாதுகாப்பை அளித்தது.

ஹிந்துத்துவ தீரர்கள் கலாச்சாரம் மிகுந்த ஐரோப்பாவை கண்டறிய விரும்பியிருந்தால் பன்னாட்டு மக்களை கொண்ட பேரரசுகள் பல இருந்தன. சாவர்க்கர் லண்டன் மாநகரத்தில் வாழ்ந்த காலத்தில், ரஷிய ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசுகள், முறையே மரபு வழி,ரோமன் கத்தோலிக்க கிருத்துவத்தை அரசு மதமாகக் கொண்டு செழிப்பாக வளர்ந்து கொண்டிருந்தன. இந்தியாவில் இத்தகைய இந்துத்துவத்தைதான் இவர்கள் மனதில் கொண்டிருந்தனர். அதே சமயம், ஓரின தேசியவாதம் மதச்சார்பின்மையை ஆதரித்தது. உதாரணத்திற்கு, ஜெர்மானிய ஒருங்கிணைப்பு வேண்டுமென்றே கத்தோலிக்க, லுத்தரன் எனும் இரு வகை மத மார்க்கங்களையும் குறைவாக மதிப்பிட்டனர்.தேசியவாதத்திற்கும் மதவாதத்திற்குமான விரோதத்திற்கு மற்றொரு உதாரணத்தை துருக்கி கொடுக்கிறது. அட்டாடுர்க், ஆட்டோமான் பேரரசு சார்ந்திருந்த மதத்தை நீக்கி விட்டு தனது மதச்சார்பற்ற தேசியக் குடியரசை நிறுவிய பின் துருக்கியர்களுக்கும் குர்திஷ் மக்களுக்குமிடையே கலவரம் மூண்டது. பழைய பேரரசுகள் ஆதிக்க மொழியை(ரஷிய அல்லது ஜெர்மானிய மொழி)கொண்டிருந்தாலும், இதர மொழிகளுக்கும் இடமளித்தன. ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் திணிக்கவில்லை. இதற்கு எதிர்மறையான கலப்படமில்லாத தேசியவாதத்தை பிரான்சின் 3வது குடியரசில் (1871-1940) பார்க்கலாம். 19ம் நூற்றாண்டில்,, நாட்டின் பாதி மக்களிடையே புழங்கிய அனைத்து சிறுபான்மை மொழிகளையும் முற்றிலும் அழித்து மதச்சார்பின்மை என்ற மதத்தை மக்களிடையே மும்முரமாக ஊக்குவித்தது.

முதல் உலகப் போருடன் முன் சொன்ன பேரரசுகள் மடிந்து விட்டன என்பது உண்மைதான். ஆனால் கையருகே உள்ள ஒரு பேரரசு மட்டும் உயிர் தப்பித்தது. அது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்தான். இந்த ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஒவ்வொரு பகுதியின் மாறுபட்ட விசேஷ நிலைமையைப் பற்றி ஒரு சிலருக்கே தெரியும். ஐல் அஃப் மேன், சானல் தீவுகள், வேல்ஸ் போன்றவை அன்றிலிருந்து இன்று வரை பிரிட்டிஷ் முடியாட்சியுடன் வித்தியாசமான உறவை கொண்டுள்ளது. வெல்ஷ், கேலிக் மொழிகளை அரசு ஆதரிக்காவிட்டாலும் அவைகளைக் களையெடுக்க முனையவில்லை. சகிப்புத் தன்மை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே போனாலும் அரசு அதன் மதத்தையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் நிறுவனங்களையும் கைவிடவில்லை. இறையாண்மைக்காக போராடிய சமயத்திலேயே காலனிய ஆதிக்கத்திடம் நாம் சில விவரங்களை கற்றிருக்கலாம். (பிரிட்டன், நெருப்பை உடையாக அணிந்த பிரிகிட் என்ற பெண் கடவுளை மையமாக கொண்டது . இப்பெயர், நெருப்பில் அர்ப்பணம் செய்யும் யாகத்தை அறிமுகப்படுத்திய பிருகு என்னும் வேத முனிவரின் பெயருடன் சம்பந்தப்பட்டது என்பது போன்ற விவரங்களை ஆரம்பத்திலேயே உணர்ந்திருக்கலாம்).

யதார்த்த நிலைக்கு திரும்புவோம்! ஹிந்துத்துவ முன்னோடிகள், அப்போது பிரபலமாயிருந்த தேசிய அரசு மாதிரியை தேர்வு செய்து அதில் ஹிந்துக்களின் அரசியல் விருப்பங்களை அடைக்க முயன்றனர். சரியோ தவறோ நடந்தது இதுதான். எனவே அங்கிருந்தே ஆரம்பிக்கலாம். ஊன்றி வரும் உண்மை நிலவரங்களிலிருந்து சாதகமான கருத்துக்களை எடுத்துக் கொண்டு காலத்திற்கேற்றவாறு சீர்திருத்தி அமைத்துக் கொள்வதுதான் அரசியல் சித்தாந்தங்களின் இயல்பான போக்கு. ஒரு மார்க்சிய தலைவரின் இன்றைய சொற்பொழிவு நூறாண்டுகளுக்கு முன் அவரது முந்தைய தலைவரின் சொற்பொழிவிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஆனால், இந்துத்துவாவின் வளர்ச்சியோ தலைகீழாக உள்ளது. அது தடத்திலேயே உறைந்து விட்டது.

இதனால் பல முக்கியமான சர்வதேச முன்னற்றங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் கதிரலைக் கும்பா(Radar)வில் பதிவாகவேயில்லை. தேசியவாதம் அதன் பளபளப்பை இழந்து விட்டதுமல்லாமல் ஒரு அவச்சொல்லாகவும் மாறி விட்டது. முதலாவதாக, ஜெர்மானிய ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் திடம் மிகுந்த தேசியவாதத்தின் மீது சத்தியபி பிரமாணம் செய்தனர். (எதிர் தரப்பிலும் பலர், உதாரணத்திற்கு, சார்லஸ் டி கால், இதைப் போலிருந்தனர். ஆனால் மக்கள் அதை மறந்து விட்டனர்). இதனால், தேசியவாதம் தீய சக்தியையும், தோல்வியையும் குறிக்கும் சொல்லாகி விட்டது. இரண்டாவதாக, சமீபத்திய உலகமயமாக்குதல் (Globalization), தேசியவாதத்தை பழமைக்காக ஏங்குபவர்களின் வார்த்தையாக மாற்றி விட்டது. அதாவது நாட்டுப் புறத்தினர் கோட்டை விட்ட முன்னேற்றம் எனும் ரெயில் வண்டிக்காக ஏங்குவதை போல் உள்ளது.

சங் பரிவார் இந்த வளர்ச்சிகளைக் கண்டு கொள்ளவேயில்லை. இரண்டு உலகப்போர்களின் இடைக்காலத்தில் நிலவிய தேசியவாதத்தையே கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. சங்கத்தின் மூத்த தலைவர்களான, ஹெட்ஜ்வார், கோல்வால்கர்தான் அவர்களுக்கு இன்றும் உத்வேகம் அளிக்கின்றனர்.

இவர்களது குரலை முன்பு கேட்டிராதவர்கள், ஒன்பது தசாப்தங்களுக்கு பிறகு தற்போதைய தலைவர் மோகன் பகவத் நீனே பேசுவதை கேட்டால் யார் பேசுகிறார் என அவர்களால் கூற இயலாது . ஏனென்றால் . இவரது எண்ணங்களையும் அவர்களது எண்ணங்களையும் பிரித்தறிய முடியாது. ஹெட்ஜ்வாரை குறை கூற முடியாது. அவரது காலத்தில் ஹிந்துக்களுக்கான அவரது பங்களிப்பு மிகச் சிறந்தது. ஆனால் சங்கப் பரிவாரம் அவரது போக்கிலேயே தொடர்வது தற்கால நிலைக்கு எதிர்மறையாக உள்ளது.

ஹிந்துயிசம்தான் தேசியவாதம் (Nationalism is Hinduism):

ஒரு விதத்தில், ஹிந்துப் பார்வையில் தேசியவாதம் அர்த்தமுள்ளதுதான். கண்ணுக்கெட்டிய காலம் வரை ஹிந்துயிசம் இந்தியாவிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால், கிருத்துவமும், இஸ்லாமிய மதமும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவை. அவற்றின் வரலாறும் புனித இடமும் இந்தியாவிற்கு வெளியே உள்ளன. ஹிந்துக்கள் எப்போதுமே தங்களை இந்தியாவுடன்தான் அடையாளப்படுத்திக் கொள்வர். கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும் அவ்வாறு செய்ய இயலாது.

இதைத்தான், சாவர்க்கர் “ஹிந்துவிற்கு இந்தியாதான் தனது தந்தை நாடும் புனிதநாடும்” என வரையறுத்தார். இந்த உட்பார்வையை பயன்படுத்தி கோல்வால்கர் கூறிய “இந்தியா இந்து ராச்சியமாக நிலைக்க வேண்டுமென்றால் கிருத்துவர்களும் முஸ்லீம்களும் விருந்தினர்களாகத்தான் இங்கு தங்க வேண்டும்.பிரஜைகளாக அல்ல” என்பது அடிக்கடி மேற்கோளாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த அனுமானத்திற்கான தர்க்கரீதியான காரணம் இந்தியா இந்து ராச்சியம் என்ற முன் நினைப்புதான்.

கோல்வால்கரின் வார்த்தைகள் நயமற்றதாக இருந்தாலும் இதில் நினைவு கொள்ளவேண்டியது இந்துக்களுக்கும் இந்துவல்லாதவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம். இவ்வித்தியாசம் நீதிமன்றத்தில் ஏதாவது விளைவுகளை உண்டு பண்ணுமா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும் குடியுரிமையை பொறுத்தவரை இந்துக்களும் இந்துவல்லாதவர்களும் மாறுபட்டவர்கள் என்பதுதான் இதன் உண்மை விளக்கம். இது மதச்சார்பற்ற பார்வை அல்ல. மதச்சார்பற்ற அரசில், மதத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால், கோல்வால்கர் தேர்வு செய்த அரசில் மதம்தான் குடியுரிமையை நிர்ணயித்திருக்கும்.

இஸ்ரேல் நாட்டு கே கொள்கை இங்கு நினைவிற்கு வருகிறது. உலகத்தில் எந்த மூலையில் வாழும் யூதரும் இந்நாட்டின் குடியுரிமையைப் பெறலாம். யூதரல்லாத சிலர் ஏற்கனவே அங்கு வாழ்பவராக இருந்தாலோ யூதரை மணமுடித்ததாலோ, குடியுரிமையைப் பெறலாம். ஆனால் பிற பகுதியினர் குடியுரிமை கோர முடியாது. சாவர்க்கர், கோல்வால்கர் இருவருமே யூத மதம்தான் உத்வேகத்தை அளிக்கும் உதாரணமாக அமைந்தது என்றனர்.

சுருங்கச் சொன்னால், தேசியம் மதங்களிடையே நடுநிலையைக் கொண்டிருக்க வேண்டும் எனும் நேருவியர்கள் கருத்துக்கு மாறாக மற்றொரு அர்த்தத்தை உள்ளேற்ற முடியும். தற்சமயம், நேருவும், அவரை சேர்ந்தவர்களும் ஹிந்துக்களை ஓரங்கட்டுவதை இவ்வர்த்தத்திலிருந்து களைய வேண்டும். பிறகு, மதச்சார்பின்மை என்றால் மதங்களிடையே நடுநிலைமை என அவர்கள் முதன்மைப்படுத்தும்போதெல்லாம் அதன் போலித்தனத்தை சுட்டிக் காட்ட வேண்டும். அத்தகைய நடுநிலைமையை சாவர்க்கரும் கோல்வால்கரும் மனதில் கொள்ளவில்லை.

மாறாக, தற்போது ஆர்.எஸ்.ஸிலும் அதற்கும் மேலாக பா.ஜ.கவிலும் நிலவும் மனநிலையை பாருங்கள்! பல தசாப்தங்களாக முன்பிருந்த கருத்தை முற்றிலும் மறந்துவிட்டு ஹிந்து இந்தியன் இவற்றிக்குள்ள பாகுபாட்டை அழித்துக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வசிக்கும் அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று கூறுமளவிற்கு சென்று விட்டனர். இது முற்றிலும் தவறான நோக்கு என்பதை நான் திருப்பித்திருப்பி சொல்ல வேண்டிய தேவையில்லை. இது நயமானதல்ல என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். முஸ்லிம்களும் கிருத்துவர்களும், தங்களை கேட்காமலேயே ஹிந்துத்துவ பிரிவில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை ஒருவரும் காதில் வாங்குவதாகவே தெரியவில்லை. அரை குறை அரசியல்வாதிகள், இப்பொய் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இன்றியமையாதது என்றால், அவர்கள் வாயிலிருந்து வரும் பொய் அவர்கள் மனதில் பதிந்துள்ள நம்பிக்கைக்கு மாறானது என்பதை உணர்த்த வேண்டும். பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றால் இப்பொய்கள் எதிரிகளை முட்டாள்களாக்குவதற்காக கூறப்படுவது தங்களையே முட்டாள்களாக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதை உணர வேண்டும். ஹிந்துவும் இந்தியனும் ஒன்றல்ல எனும் உள்ளுணர்வு மிக அத்தியாவசியம்.

“இந்து மனதின் காலனியத் துப்புரவு”(Decolonizing the Hindhu Mind) நூலாசியராகிய நான் இந்திய மனதில் காலனியத் துப்புரவு (Decolonizing the Indian Mind) எனும் ஒரு புதிய தேசிய இயக்கக் குழுவிற்கு எனது மறுப்பை அறிவிக்கிறேன். ஹிந்து சமூகத்தில் நீக்க வேண்டிய காலனிய விவரங்கள் பல உள்ளன. அவை பெரும்பான்மையான இந்தியர்களுக்கு தங்களது சுயநலத்திற்காகவும், பிறரைச் சிறுமைப்படுத்துவற்கும் உபயோகமாகின்றது. ஆனால், இந்தியாவிலிருந்தே காலனியத்தை நீக்குவதற்கான விவகாரம் என ஒன்றுமேயில்லை. இந்தியா 1947ல் சுதந்திரமடைந்தது. நீடிக்கும் ஆங்கிலேய செல்வாக்கு, ஆங்கிலம் அதிகார மொழியாக தொடர்வது போன்றவை, இந்திய அரசியல்வாதிகளே சுயேச்சையாகவும் சுய அறிவுடனும் ஏற்றுக்கொண்டவை. சமீப கால அமெரிக்கமயமாக்கலும் வெளி வகுப்பினர் உட்புகுத்த ஆர்வமாயிருந்தாலும் இந்திய அரசியல்வாதிகளே அனுமதித்ததோடல்லாமல் வரவேற்றுமுள்ளனர், குறிப்பாக, பெரும்பான்மை பா.ஜ.க வினர்.

ஒரு புறம் “இந்தியா நீடுழி வாழட்டும்”. மறு புறம் “ஒழியட்டும் இந்தியா”. இந்தியா என்ற வார்த்தை சில இடங்களில் ஹிந்து தர்மம் (ஹிந்துயிசம்) என்ற வார்த்தைக்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறதுஎன்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, எஸ்.ஆர். கோயலின் பதிப்பகம் “இந்தியாவின் குரல்”(Voice of India) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரிவினை(PARTITION):

பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் ஹிந்துத்துவா இயக்கம் தேசியவாதிகள் எனவே தன்னை கூறிக் கொண்டது. 1940களில் அதன் தேசியம், ஜின்னாவுடைய முஸ்லீம் லீகின் பிரிவினை திட்டத்திற்கு எதிராக ஒருமைப்பாட்டையும் நாட்டு எல்லையின் ஸ்திரத்தன்மையும் வலியுறுத்தியது. பிரிவினையை ஆதரித்தவர்களும் தேசியவாதிகளாக கருதப்பட்டனர். யாரை முஸ்லீம் பிரிவினைவாதிகளாக காங்கிரஸ் கருதினார்களோ அவர்கள் தங்களை முஸ்லீம் தேசியவாதிகள் எனக் கூறிக் கொண்டனர். ஒருவரின் பிரிவினைவாதம் மற்றொருவரின் தேசியவாதமாக இருந்தது. இவர்கள் இந்திய முஸ்லிம்கள் ஒரு தனிநாட்டினர் என வாதித்தனர். ஜனநாயகத்தின் அப்போதைய நாகரீகப் போககும் தேசியவாதமும் அவர்களுக்கு இணக்கமாக இருந்தது. (எனவேதான் எண்ணிக்கைக்கு அதிக மதிப்பு கொடுத்தனர். 24 விழுக்காடு மட்டுமே உள்ள முஸ்லீம் நபர்கள் தனி நாடு கேட்பது முறையாகாது என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது). தேசியத்தைப் பற்றிய நவீன நினைப்பில் இத்தகைய கருத்திற்கு தடையேதுமில்லை. இஸ்லாமிய இறையியல், உம்மா, மீலாத் போன்ற மத சமூகத்தைக் குறிக்கும் சொற்களை தேசத்தை குறிப்பதற்கும் உபயோகிக்கிறது.

முஸ்லீம் சமூதாயத்திற்குள்ளேயே பிரிவினைக்கு எதிராக தேசிய முஸ்லிம்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் எதிர் வரிசையில் நின்றனர். பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத இவ்வகுப்பினர் ஒரு பகுதியை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதையுமே கபளீகரம் செய்ய நினைத்தனர். இவர்களது பிரதிநிதி, மௌலானா ஆஜாத், கிலாஃபத் இயக்கத்தின் தலைவர், பிரிவினையைத் தடுக்க இந்தியாவையே ஜின்னாவிடம் கொடுத்து விட காந்தியை இணங்க வைத்தார். இதன் மூலம் சிறுபான்மை முஸ்லீம் ஆட்சியை கொண்டு வரலாம் என்றும் கூறினார்( காங்கிரஸ் இதை ரத்து செய்தது. [எனது புத்தகம், ஏன் மகாத்மாவை கொன்றேன்(Why I Killed the Mahatma) பார்க்க]. இவர்கள் உலகத்தைப் பல தேசங்களாக பிரித்தாளும் தேசியவாதத்தால் ஈர்க்கப்படவில்லை. உலகமுழுதும் காலிப் இறையாண்மையின் கீழ் பல நிர்வாகப் பிரிவுகளாக இருப்பதைத்தான் அவர்கள் விரும்பினர். ஜனநாயகம் எனும் நவீன மோகத்திலும் அவர்களுக்கு ஈர்ப்பு இல்லை.

பாகிஸ்தான் ஆன்மீகத் தலைவர் முகம்மது இக்பால் கூறியது போல் ‘ஜனநாயகத்தில் தலைகள் எண்ணப்படுகின்றன எடை போடப்படுவதில்லை’. அவர் எண்ணிக்கைக்கு இணங்கியதன் காரணம் நவீனத்துவத்திலும் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய வலிமை சமன்பாடு(Power equation) மேலுமுள்ள வியப்பாகும். ஆனால் கிலாஃபத்வாதிகள், ஜனநாயகம் ஒரு காகிதப்புலி, மத்திய காலத்தை போல், முஸ்லிம்கள் ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என நம்பினர். முஸ்லிம்கள் எப்போதுமே பெரும்பான்மையினராக இருப்பதைத்தான் விரும்பினார். காந்தி, நேரு இருவரும் தேசியவாதிகளாக கருதப்பட்டது போல், பிரிவினைக்கு எதிராக, அனைத்திந்தியாவையும் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர விரும்பிய முஸ்லிம்களும் தேசியவாதிகளாகவே காணப்பட்டனர். ஆனால் அவர்கள் நம்பியது, அனைத்து முஸ்லிகளையும் காலிப்பின் கீழ் இணைத்து இஸ்லாமிய மத நம்பிக்கையற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்பதாகும்.

இரு கட்சிகளின் இலக்கும் ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய முஸ்லிம்கள் என தவறாக அழைக்கப்பட்டவர்கள், நவீன உலகை முன்பின் பார்த்திராததால் இலக்கை நோக்கி நேராகச் சென்றனர். பிரிவினைவாதிகள், புதிய சூழ்நிலைக்கு தற்காலிக சலுகைகளை அளித்து முஸ்லீம்களை பாகிஸ்தானில் ஒருங்கிணைக்க விரும்பினர். அம்பேத்கர் முன்மொழிந்தது போல், முழு மக்கள் பரிமாற்றத்திற்கும் இசைந்தனர். இதன் பிரகாரம், அனைத்து முஸ்லிம்களும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு குடிபெயர வேண்டும். . ஆனால் , காந்தியும் நேருவும் இந்த அறிவுபூர்வமான அமைதியான விதிமுறைக்கு ஒப்பாமல் இந்தியாவின் கைகளைப் பிணைத்ததினால் கிடைத்த அதிருஷ்டத்தை அவர்களால் நம்பவே முடியவில்லை. பாகிஸ்தானிலுள்ள ஹிந்துக்கள் வெளியேற வேண்டும், இந்திய முஸ்லிம்கள் இருந்த இடத்திலேயே இருக்கலாம் எனும் முஸ்லீம் லீகின் கணிப்பு உண்மையானது. இதன் மூலம், முஸ்லீம் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கான ஐந்தாம் படை ஆயத்தமானது.

அடுத்த பகுதி


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஒழிக தேசியவாதம்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.