எஸ்ஸார்சி
ஈசாவாஸ்ய உபநிடதம்
அங்கும் நிறைவு.
இங்கும் நிறைவு.
நிறைவே நிறைவை வழங்கிட
நிறைவு நிறைவாய் மீள்கிறது..
(.ஈசாவாஸ்ய உபநிடத சாந்தி பாடம் இப்படித் தொடங்குகிறது.)

1 .
இங்கு அசைவன அசையாதன
எப்பொருளிலும் இறைவன்
வியாபித்தே இருக்கின்றான்.
எப்பொருளோடும் நீ
பந்தப்படாமல் விலகி இரு.
2
அங்ஙனம் பந்தப்படாதவன்
மட்டுமே
நிறைவாய் வாழ்கிறான்
அடுத்தவன் செல்வத்துக்கு
மனதில் ஆசையை வளர்த்துக்கொள்ளாதே.
2.
செயல்படுவதே இங்கு உனது கடன்
நூறாண்டுகள் மனிதன் உயிர்வாழலாம்.
செயல்படு
அது மட்டுமே பிரதானகுறிக்கோள்
உரிமைகள் உனதாகட்டும்.
செயல்பாட்டின்பலனோடு மட்டும்
உனக்குப் பந்தம் வேண்டாம்.
3.
உடலைப் பெரிதெனக்கருதி
ஆன்மாவைக் கொன்றவர்கள்
அடர்ந்த இருள்
உலகில் வாழ்கிறார்கள்.
நிலையில்லாத பொருள்களுக்குப்
பின்னால் சுற்றிச்சுற்றி ஆவதென்ன?.
அழிவற்ற ஆன்மாவின்
மகிமையும் ஆற்றலும்
அவர்கட்கு விளங்குவதில்லை.
4.
மனித ஆன்மா அசைவில்லாதது
மனோவேகத்தினும் விரைவது அது.
ஐம்பொறிகளை விஞ்சிடும்
ஆற்றல் பொதிந்தது..
ஐம்பூதங்களில் வதியும் காற்றே
உயிர்வாழ் அனைத்து ஜீவன்களுக்கும்
உற்றதுணை..
ஆன்மா தொலைவில் இருப்பது .
காண்கின்ற ஒவ்வொரு பொருளிலும்
அதனதன் உள்ளும் நிறைந்து
புறமும் உறைவது.
6.
அனைத்து உயிர்களையும்
தன் ஆன்மாவுக்குள்ளே காண்பதுவும்
அனைத்து உயிர்களிலும்
தன் ஆன்மாவைக் காண்பதுவும்
ஆத்ம அனுபவம்
ஆத்மானுபவம் கைவரப்பெற்றிட்டமனிதன்
துயர் எதுவும் படுவதில்லை.
அரசன், குடியானவன், ஞானி
,முரடன், செருப்புதைப்பவன்,நாவிதன்,
எறும்பு,யானை, மரம்,கல்
எல்லாவற்றிற்கும்
பொதுவானதே ஆன்மா..
இப்படியாய் உணரும் ஞானி
யாரை வெறுப்பது
யாரை பழிப்பது
எப்படிச் சாத்தியம் ?.
7.
எல்லா உயிர்களும்
நம்ஆன்மாவோடு பந்தமுடையன
இப் பார்வை வாய்த்தபின்
துயரம் எங்கிருந்து
ஒருவனை ஆட்கொள்ளும்.
எங்கு நோக்கினும் உன்னையே நீ
காண்கிற பெருவிழிப்பு வாய்க்குமானால்
உன்னைத் துன்பம் எப்படிநெருங்கும்..
8.
இல்லாதது ,
குறையென ஏதுமில்லாதது,
தசையற்றது, தூயது,
பாவவினைகள்தொடாதது,தெளிந்தது
மாஞானியாய், விரவிச்செல்லவல்லது,
அது ஆன்மா சுயம்புவாய் அரும்பியது.
9.
வேதச்சடங்குகளைச்
சுயதேவை கருதிசெய்பவன்
இருளில் வீழ்கிறான்
குறை ஞானத்தோடு
உருக்கொண்ட தெய்வங்களை
மட்டுமே வழிபடுவோன்
பின்னும் இருளில் வீழ்கிறான்.
10.
உருக்கொண்டதெய்வங்களை
அறிதலினின்றும் பெறப்படுவது
சடங்குகளைச்செய்வதனின்றும்
பெறப்படுவது என
விஷயங்கள் இரண்டு
அனைவர்க்கும் சொல்லப்படுகின்றன..
11
தெய்வங்களைப்பற்றியதெளிவு
சம்பிரதாயச்சடங்குகள் தொடர்வது..
முதலாவது வித்யா,
இரண்டாவதுஅவித்யா.
இவை இரண்tடையும் தெளிந்து
தேர்ந்தவர்கள் இப்படிச்செய்கிறார்கள்.
இவ்வுலக அன்றாடநடப்புக்களைச்
செயல்பாடுகளைச்
சம்பிரதாயச்சடங்குகள் என்னும்
அவித்யாவினால் நிறைவாக முடிக்கின்றனர்.
தெய்வங்களின்பால்தெளிவு என்னும்
வித்யாவினால் அமரத்துவம் அல்லது
நிலைபேறு பெறுகிறார்கள்.
12.
தோன்றா உருவத்தை வணங்குவோர்
குருட்டுஇருளில் மூழ்குவர்.
எதிர்நிற்கும் தோற்றத்தை
மட்டுமே வழிபடுவோர்
இன்னும் கூடுதல்
இருளுக்குத்தான்போவார்கள்
13.
தோற்றத்தின் மூலத்தை( ஹிரண்யகர்பன்)வணங்குபவர்கள் ஒன்றைப்பெறுகிறார்கள்.
தோற்றம் தரா இயற்கையை( unbornபிரகிருதி) வணங்குபவர்கள்
வேறு ஒன்றைப்பெறுகிறார்கள்.
தெளிந்தோர் எமக்கு உரைத்தவை இவை.
14.
தோற்றத்தின் மூலம்,
தோற்றம் தரா இயற்கை
என இரண்டையும்
வணங்குபவர்கள் எளியசாதனைகளைத்
தோற்றத்தின் மூலவழிபாட்டின் துணைகொண்டும்
நிலைத்தபேறு பெறுவதைத்
தோற்றம் தரா இயற்கையை
வழிபட்டும் பெறுகிறார்கள்.
15.
தங்கத்தாம்பாளம் கொண்டு
சத்யத்தின்முகம் மூடிக்கிடக்கிறது.
கதிரவனே நீ நினது மூடியைத்திற.
யான் சத்யத்தைத் தரிசிக்கவேண்டும்.
சத்தியத்தை வணங்குவோன் யான்
என்னையே யான் அறியத்
துணை நிற்பாய் நீ.
16.
கதிரோன்நீ,
எம்உயிருக்கு ஆதாரம்நீ.
அண்டமெங்கும் பயணிப்போன்நீ.
அனைத்தையும் ஆளுபவன்நீ,
தலைவனின்குமாரன் நீ,
கதிரொளி வழங்கித்.
தகிக்கும் வெளிச்சத்தைக்கூட்டு.
நினது ஒளிர் உருவை யான் காண்கிறேன்.
யானும் அதுவாக ஆகின்றேன்
நின்னுள் உய்யும் புருடன் யான்.
17.
எனது உயிர்
எங்கும் நிறை
எப்போதும் உறை
அக்காற்றோடு கலக்கட்டும்.
தீ என்உடலை எரித்துச் சாம்பலாக்கட்டும்.ஓம்.
எனது செயல்கள் நினைவில் இருக்கட்டும்.
எனது செயல்கள் மட்டுமே நினைவில் நிற்கட்டும்’
18 .
கடவுளே நீயே அறிவாய் அனைத்துவழிகளும்.
எங்களை நல்வழிப்படுத்து.
விடுதலைக்கும் வளமைக்கும் இட்டுச்செல்.
உளமார வணங்குகிறோம் உம்மை
கொடூரமான பாவங்களிருந்தும் எம்மைக் கரைசேர்..
————————————
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

மிக அருமை. எளிய விளக்கம் , அரிய கருத்து.
மகாத்மா காந்தியின் மனதுக்கு மிக நெருக்கமான உபநிடதம் இது.
இதன் 18 ஸ்லோகங்களையும் கைப்பட எழுதி அவர் தன்னுடனேயே எப்போதும் வைத்திருந்ததாய் வாசித்திருக்கிறேன்.🙏