
தாயின் விரல் தீண்டலில்
மொத்தத் துயரும் தீர்ந்துப்போய்
துயிலுறங்கத்தான் விரும்புகின்றன!
ஆழத்தூக்கத்தின் அமைதியில்
சிற்றுயிர் பூச்சி சிறகசைக்கும்
மீச்சிறு ஒலியில்
செவியறைகள் அதிராமல்
உள்செவிகளுக்குள்
நிசப்தக் கீதங்களையே எழுப்பியே
நினைவகத்தில் பதிகின்றன!
கனிந்த காலத்தின் நரை எய்தா
இளமையினை நினைவூட்டிச் செல்லும்
மனவோடையில்
பொத்தியே வைத்துக்கொண்ட
நினைவின் நியூரான்கள்
தாலட்டை வசந்தமென்றே
வரவேற்கத் தூண்டுகின்றன!
கார்காலத்து மழைத் தூவல்கள்
வீட்டுக்கூரையிலிருந்து சொட்டிவிழ
கேரளத்து கருந்தேநீரென
மனம் வியந்த காலங்கள்
மன ஆழத்தில்
தேங்கியே நிற்கின்றன..
கரும்புச்சருகுகளின் ஈரம்
நனைந்தூறிய மழைநீரென!
வெளுத்துப் பூத்திருக்கும்
குடைக்காளனும்
அதற்கிணையாய் பூத்திருக்கும்
சிறுக்குட்டிக் காளனும்
ஒட்டிப் பிறந்த மரத்துக்கடியில்
தேடிப் பறித்த உலவல் நாட்களை
நவீன துரித உணவுக்கடையில்
பட்டியலில்
பார்க்கும் போதெல்லாம்
புன்னகையோடு ரசிக்கிறேன் மனதில்…
இடி இடித்தால்
காளான்கள் முளைக்கும் என்னும்
அக்காவின் சொற்களோடு..
வரவேற்கிறேன் எப்போதாவது
வீட்டுக்கு வரும் அக்காவையும்!
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமை.
கருந்தேநீர் – முதன்முதலாக இப்படி ஒரு உவமையை பார்க்கிறேன். அருமை.