
மெலிந்த விரலிடமிருந்துப் பிடுங்கி
நீர் அணிந்த மோதிரம்
அருவி பாயும் ஆழத்தில்
மண்ணோடு உறங்கிக் கொண்டிருக்கும்
தொலைந்த கதையை
எப்படிச் சொல்வேன்
பிரிவதற்கான அறிகுறி இதுவென
மோதிரத்தைக் கழற்றி வைக்கிறாள்
நாளெனும் மோதிரத்தை
எதனடியில் நழுவ விடுகிறது பூமி
இரவுகளில் விழித்துக்கொள்ளும்
காணாமல் போன மோதிரங்கள்
மின்னி மின்னி என்ன பேசும்
நாம் விரும்பித்தான் தொலைகிறோமா
மண்ணைத் துழாவும் போது நீரிலும்
நீரைத் துழாவும் போது மண்ணிலும்
எதற்காக ஒளிந்து கொள்கிறோம்
தூங்கும் போது
உடல் மொத்தமும்
சின்னஞ்சிறு விரலாகிறது
நுழையும் மோதிரங்களால்
பொன்னெனப் பொலிகிறது இரவு
நழுவும் கணத்திற்கு பயந்து
விழிக்காமலேயே இருக்கிறோம்
ஒன்று போனால் இன்னொன்று இருக்கிறதே என்றேன்
அணிந்த நாளின் மோதிரத்தில்
உறைந்திருக்கும் நிச்சயத்தை
வாங்கிவரச் சொல்கிறாள்
மீண்டும் ஒரு முறை
அருவிக்குச் செல்லலாம்தான்
பயமாக இருக்கிறது
பூமியிடம் கேட்க.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
