- விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
- சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
- பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
- பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
- விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
- விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
- ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
- ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
- விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
- டால்கம் பவுடர்
- டால்கம் பவுடர் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
- விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
ரவி நடராஜன்
கனடாவின் மிகப் பெரிய தொழில் எது?
- கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி
- மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products)
- கனிமப் பொருளகள் (minerals)
- மாட்டிறைச்சி (beef)
- திராட்சை மது (wine)
- எஃகு (steel)
இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை யாவும் பெரிய தொழில்கள்தான். ஆனால், கனடாவின் மிகப் பெரிய தொழில், வட ஆல்பர்டாவில் காடுகளை அழித்துத் தார் மண்ணிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வது. கனடா, உலகின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. வளைகுடா நாடுகளைப்போல, எண்ணெய்யை நம்பியே காலம் தள்ளும் நாடு இல்லை கனடா. ஆனால், அதன் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம் எண்ணெய் ஏற்றுமதி – குறிப்பாக அதனுடைய அண்டை நாடான அமெரிக்காவிற்கு.
இது என்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். முதலில், வளைகுடா நாடுகளைப் போல நிலம் மற்றும் கடலோரப் பகுதிகளில் கிணறுகள் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்த நாடு கனடா. வளைகுடா நாடுகள் போலல்லாமல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடான கனடா, தார் மண்ணிலிருந்து (tar sands or bitumen sands) கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. கனடாவிடம் சவுதி அரேபியாவைவிட அதிக எண்ணெய் வளம் இருப்பதை இந்தத் தார் மண் கண்டுபிடிப்பு நிலைநாட்டியது. அட, இது நல்ல விஷயமாச்சே, இதைப் பற்றி இந்த விஞ்ஞானத் திரித்தல் கட்டுரைத் தொடரில் ஏன் எழுத வேண்டும்? இதில் என்ன திரித்தல் இருக்கப் போகிறது?
இந்தக் கேள்விகளுக்கு விடையை எப்பொழுதும்போல, விஞ்ஞானத்திலிருந்து ஆரம்பிப்போம். முதல் கேள்வி, தார் மண் எப்படி உருவாகிறது?
- தொல்லெச்சப் பொருட்கள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த மரங்கள், செடிகள், நீர் உயிர்கள் போன்றவை. இவை மடிந்தபின், நிலத்தில் கலந்து பல மில்லியன் ஆண்டுகள் சூடேறி நிலத்தடி அழுத்தம் சேர்ந்து இவ்வகை ஹைட்ரோகார்பன்களை இயற்கை பூமியடியில் உருவாக்குகிறது.
- மேலே சொன்ன விஷயம், கச்சா எண்ணெய்க்கும் பொருந்தும். வளைகுடா / டெக்ஸாஸ் பகுதி போலல்லாமல் ஏராளமான நீர்வளம் கொண்ட கனடாவிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், நீர். இதனால், கனடாவின் கச்சா எண்ணெய் சொஞ்சம் சன்னமானது. (light crude.)
- இந்த ஹைட்ரோகார்பன்கள், நீர் மூலம் ஆல்பர்டா மாநிலத்தின் நதி / ஏரி நீர் மூலம் கலந்து அதில் வாழும் நுண்ணுயிர்களுக்குத் தீனியாகிறது. மீதம் இருக்கும் கனமான ஹைட்ரோகார்பன்கள் மண்ணுடன் கலந்து, நதி / ஏரிக்கரை ஓரம், பல கோடி ஆண்டுகளாகக் கலந்துவிட்டன. இதுதான் தார் மண் என்று சொல்லப்படுகிறது. இந்த மண்மீது, மிகப் பெரிய காடுகள் வளர்ந்துவிட்டன.
- ஆல்பர்டா (Alberta) மாநிலத்தில், உலகின் 10% கச்சா எண்ணெய் உள்ளது. தார் மண் வளம், உலகிலேயே கனடாவில்தான் அதுவும் அல்பர்டாவில்தான் அதிகமாக உள்ளது
- இந்தத் தார் மண், பச்சை பசேலென அடர்த்தியான போரியல் (boreal) காடுகளுக்கு அடியில் (பெரும்பாலும் 200 முதல் 300 அடி) உள்ளது. ஏறக்குறைய 142,000 சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு இந்த வளம் உள்ளது. இந்தப் பரப்பளவு இங்கிலாந்து நாட்டைவிட அதிகமானது!
- அதபாஸ்கா, கோல்ட் லேக் மற்றும் பீஸ் ரிவர் (Athabasca, Cold Lake, Peace River) என்ற மூன்று மிகப் பெரிய தார் மண் பகுதிகள் வட ஆல்பர்டாவில் உள்ளது
அடுத்து, இந்தத் தார் மண்ணை எண்ணெய் ஆக்குவதைப் பற்றிய சில கொடூர உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்:
- முதலில் மண்ணை வெளியே எடுக்க, மண்ணின் மேலே உள்ள பச்சைப் பசேல் காடுகள் அழிக்கப்பட வேண்டும்.
- சுற்றியுள்ள நீர் நிலைகள், காலி செய்யப்பட வேண்டும்.
- நதிகளைக் கூட திசை திருப்ப வேண்டும் – அப்பொழுதுதான் பெரிய பரப்பளவு மண்ணெடுக்கக் கிடைக்கும்.
- இதனால் காட்டு மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என்று பலவும் பாதிக்கப்படும்.
- இந்த அமைப்பு சூழ்ந்துள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும்.
- ஒரு நாளைக்குத் தார் மண்ணிலிருந்து எண்ணெய் எடுக்கத் தேவையான நீர், எட்மண்டன் (கனடாவின் 6 வது பெரிய நகரம்) மற்றும் கால்கரி (கனடாவின் 5 வது பெரிய நகரம்) நகரங்களின் அன்றாட நீர்த் தேவையைவிட அதிகம். உலகின் அதிக நீர்வளம் மிகுந்த நாடான கனடாவில் இது பிரச்சினை இல்லை. ஆனால், இது வேறு எந்த நாட்டில் சாத்தியம் என்று யோசித்துப் பாருங்கள்!
- நாளொன்றுக்கு 16,000 லிட்டர் டீசல் உறிஞ்சும் ராட்சச நீராவி மண்வெட்டிகள் மண்ணை வெட்டி, போயிங் 747 விமானத்தைவிடப் பெரிய ராட்சச லாரிகளில் (இந்த லாரியின் விலை பல மில்லியன் டாலர்கள்) இந்த மண், எண்ணெயைப் பிரிக்கும் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
- இந்த மண், மிக அதிக வெப்பத்தில் இயற்கை வாயு மற்றும் நீராவி கொண்டு வேகவைக்கப்படுகிறது. இப்படி வெப்பத்தைக்கொண்டு மண்ணிலிருந்து தார் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட தார், இதற்கென்ற பிரத்யேகமான சுத்திகரிப்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அடடா, வெங்கடேஷ் பட்டின் சமையல் குறிப்புபோல இருக்கிறதே என்று தோன்றும்! ஒரு நாட்டின் எண்ணெய்ச் சமையல் குறிப்பு இது!
- ஏறக்குறைய 20% எண்ணெயை மட்டுமே இவ்வாறு மேல்வாரியாக எடுக்க முடியும். மீதம் 80% பூமியின் 300 அடிக்குள் இருப்பதால், 538 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உயரழுத்த நீராவி பூமிக்குள் பாய்ச்சப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இளகிய தார், ராட்சச பம்புகள் மூலம் வெளியே எடுக்கப்படுகிறது.
- இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தாரை வெளியே எடுத்த பின்பு பாக்கி இருக்கும் மண் சகதியில் ஏராளமான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருக்கும். இவற்றை என்ன செய்வது? இந்தப் பகுதியில் (மனிதனால் உருவாக்கப்பட்ட) மிகப் பெரிய செயற்கை குளங்களில் இறைக்கப்படுகிறது. (tail ponds.)
- இந்த விஷ செயற்கைக் குளங்களால் இரண்டு ஆபத்துகள் உள்ளன. முதலாவது, இந்த குளங்களிலிருந்து நிலத்தடி நீருக்குள் விஷ ரசாயனங்கள் கலக்கின்றன. இரண்டாவது, மிருகங்கள் இந்த நீரைக் குடித்தால் இறந்துவிடும். அவற்றைக் காப்பாற்றும் கனேடிய முறை அலாதியானது. ஒவ்வொரு மணி நேரமும் இரவில் ராட்சச பீரங்கி மூலம் குண்டுகள் வானில் வெடிக்கப்படும். சத்தத்தைக் கேட்டு விலங்குகள் ஓடிவிடுமாம்!
- காற்று மாசுபடுவது என்பது இவ்விஷயத்தில் ஒரு பங்கு என்றாலும், ரசாயனக் கழிவு மற்றும் இயற்கையை மனித பேராசைக்காக அழிப்பது மிகவும் பெரிய அநீதி.
- செயற்கை கோளிலிருந்து தெரியும் அளவிற்கு இங்கு பூமி அழிக்கப்பட்டுள்ளது. நாம் இங்கு சொல்வது பன்னாட்டு விண்வெளி நிலையம். (ISS)
- இது ஆல்பர்டாவின் பொருளாதார பிரச்சினை மட்டுமல்லாமல் கனடாவின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் அவலமும் ஆகும். அரசியல்வாதிகள், 2019 தேர்தலில் பலவாறும் பேசி ஓட்டு வாங்கப் பார்த்தார்கள். சில கட்சிகள் 2030 –ல் தார் மண் தொழிலை மூடிவிடுவோம் என்று சும்மா பூச்சி காட்டுகிறார்கள். கூடவே, பசிபிக் பெருங்கடலுக்கு ஆல்பர்டாவிலிருந்து எண்ணெய்க் குழாய்த் திட்டம் என்று குழப்பி வருகிறார்கள்.
- தார் எண்ணெய்த் தொழிற்சாலைகள் ஆண்டொன்றிற்கு, 60 மெகா டன் காற்றை மாசுபடுத்தும் வாயுக்களை உமிழ்கிறது – இது கனடாவின் பங்கில் 8.5% ஆகும். கார்களைத் தவிர எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட தொழில் இப்படி மாசுபடுத்துவது இல்லை.
- ஒவ்வொரு பீப்பாய் தார் எண்ணெய்க்கும் மூன்று பீப்பாய் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது.
https://www.npr.org/2012/08/16/158907708/infographic-how-tar-sands-oil-is-produced
விஞ்ஞானிகள் இந்த வகைச் சுரங்க வேலைகள் சுற்றுச்சூழலுக்கு நல்லதில்லை; அதனால், உடனே இவ்வகை தொழில்கள் மூட வழி வகுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு அளித்து வந்துள்ளார்கள். ஆனால், சில சிக்கல்களால் விஞ்ஞானப் பரிந்துரையை அமுல்படுத்த முடியாமல் எல்லா தரப்பினரும் குட்டையைக் குழப்பி வருகிறார்கள். (உண்மையில் இவர்கள் குட்டையை குழப்பித்தான் லாபம் பார்ப்பவர்கள்.)
- இது ஒரு மிகப் பெரிய தொழில். இதில், வருடத்திற்கு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படுகிறது.
- ஆல்பர்டாவின் பொருளாதாரம், எண்ணெய்யை நம்பிப் பழகிவிட்டது. இது ஒரு மிகப் பெரிய கனேடிய அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. க்ரீன் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் இந்த விஷயத்தில் பலவிதக் குழப்பங்களை வளர்ப்பதில் குறியாக இருக்கின்றன.
- கனேடிய உற்பத்திப் பொருளாதாரம், உலகமயமாக்கலால் மிகவும் அடிபட்டுள்ளதால் இருக்கும் ஒரே பெரிய தொழிலான தார் மண் தொழிலை மூடுவது ஒரு மிகப் பெரிய அரசியல் தர்மசங்கடமான விஷயம்.
- ஒரு வேளை, 2040 –க்குள் இந்தத் தொழிலை மூடினாலும் கடந்த 25 ஆண்டுகளாக இயற்கையை அழித்தது அழித்ததுதான். மீண்டும் புதுப்பிப்பது என்பது காதில் பூ சுற்றும் விஷயம்.
- சமீபத்தில் நிகழ்ந்த 2019 தேர்தலில் இது ஒரு மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. லிபரல் கட்சிக்கு ஒரு இடம்கூட ஆல்பர்டாவில் கிடைக்கவில்லை. மிகவும் சரிந்துள்ள ஆல்பர்டா மாநிலம் கனடாவிலிருந்து பிரிந்து செல்லுவோம் என்று பயம் காட்டியுள்ளது. அரசியல் ரீதியாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, தார் மண் எண்ணையை கூடிய சீக்கிரம் எண்ணெய் குழாய்கள் மூலம் பசிபிக் கடலுக்கு இணைத்தால் இந்த மாநிலத்தைத் தலை நிமிரச் செய்ய முடியும். அத்துடன், புதிய தார் மண் எண்ணெய் வயல்களை தடை செய்ய வேண்டும். இருக்கும் எண்ணெயை விற்பதே இன்று கடினமாக உள்ளது.
- இதில் சோகக் கதை என்னவென்றால் தார் மண் எண்ணெய், குறைந்தது இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு இயற்கையை அழித்து வெளியெடுக்கப்படும் என்பது. அத்துடன், எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $70 –க்கு மேல் இருந்தால்தான் தார் மண் எண்ணெயில் லாபம் பார்க்க முடியும். ஆனால், இன்று விலை $55 –ஐ தாண்டாமல் இந்த முறையைக் கேள்விக்குறி ஆக்குகிறது. நல்ல வேளையாக, வளரும் நாடுகளில் கனடாவைப்போல நீர் வளத்தை வீணடிக்கும் வாய்ப்பு இல்லை. அதனால், இது ஒரு கனேடிய விஞ்ஞானத் திரித்தலாகவே இன்று வரை இருக்கிறது.
- ஆனாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. சமீப காலமாக, இதே தொழில்நுட்பம் வேறு விதமாக இயற்கை வாயுவை நிலத்தின் அடியிலிருந்து விடுவித்து வெற்றி பெற்றுள்ளார்கள். கிணறு வெட்டப் புது பூதம் ஒன்று இன்று தலையைத் தூக்குகிறது. இதற்கு hydraulic fracturing அல்லது fracking என்று பெயர் வைத்துள்ளார்கள். அமெரிக்கர்கள், இயற்கையை அழிப்பதில் கனேடியர்களுக்குக் கிஞ்சித்தும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதைப்போல, இந்த hydraulic fracturing –ல் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். நம்முடைய அடுத்த பகுதி, இந்தப் புதிய பூதத்தை ஆராயும்.