பிரான்சு: நிஜமும் நிழலும் -3

france

கைகுலுக்கல் – Se serrer la main

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக  வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் சந்திப்பு நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

காதலும் முத்தமும்

“இது யார்தும்மா குழந்தை? தங்கச்சியா- தம்பியா? உங்கம்மாவுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? நீ தூக்கிவந்திருக்க!”

“இல்ல சார் என்னோடதுதான். திடீர்னு கல்யாணம் கூடிடுச்சி. அவர் எங்க வீட்டாண்டதான் இருக்கார். அப்பப்ப பார்ப்பாரு, ஒரு நாள் திடீர்னு ‘லவ்’ வை சொன்னாரு. நான் ஆரம்பத்துலே,  எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னுதான் சொன்னன். அவர் கேட்கலை.?

“அப்புறமென்ன நீயும் லவ்வ சொல்லிட்ட, ஓடிப்போய் கல்யாணம்பண்ணிகிட்ட சரிதானே? “

‘ ‘லவ் மேரேஜ்’, ‘லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்’ என்ற வார்த்தைகள் தமிழ் சமூகத்தில் அதிகம் காதில் விழுகின்றன. ஒரு பக்கம் காதலைக் கொண்டாடும் தமிழ் சினிமாக்கள், இன்னொரு புறம் காதலைத் தீவிரமாக எதிர்க்கும் சாதிக்கட்சிகள் – இவ்விரண்டையும் செய்திகளாக்கும் தினசரிகள். ஆக மொத்தத்தில் தமிழ்மண்ணில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகம் மகசூலைத்தரும் பொருள் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அவ்வளவு உண்மை காதல் திருமணம் இந்தியர் மரபில் மிகக்குறைவான விழுக்காடுகளுக்குரியவை என்பதும்.  பீஸா சாப்பிடப் பழக்கிக்கொண்டதை ப் போல  இந்த நிலமையும் மாறலாம். நாளை  மகனையோ மகளையோ பார்த்து ‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போற சீக்கிரம் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கோ! என்கிற மேற்கத்தியர்களின் நிலமை எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாததென்றுதான் தோணுது.  பிரான்சு போன்ற நாடுகளில் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பெற்றோர்கள் சம்மதத்துடனே திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்று மேற்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களிடை பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணங்கள் நடப்பதில்லை. ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ விரும்புவது பெற்றோர்கள் சம்மதமின்றி நடக்கிறது என்பதால், திருமணச்செலவையும் அந்த ஜோடியே பார்த்துக்கொள்கிறது, பின்னர் அவர்கள் பிரிவும் பெற்றோர்களை எதிர்பார்க்காமலேயே நடைபெறுகிறது. ஓர் ஆணும் பெண்ணும் சேர்வதும் பிரிவதும் அவரவர் சொந்த விருப்பம், இரண்டிற்குமே உதவச் சட்டங்கள் இருக்கின்றன.

மனிதர்கள் கூடிவாழ்வது என்று தீமானித்தபிறகு, ஒரு கூட்டத்திற்கென பொதுவானதொரு வாழ் நெறியை அச்சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களோ அல்லது அவர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு சிலரோ  அறிவுறுத்துகிறார்கள். தனது தேவைகளை தான்மட்டுமே நிறைவேற்றிக்கொள்வது இயலாது என்றிருக்கிறபோது, தானல்லாத பிறர் வகுக்கும் நியதிக்கும் அவன் கட்டுப்பட்டான். அதுபோலவே இவன் பிறரோடு சேர்ந்து ‘இதுதான் சரி’ என்றதை ஏற்ற மனிதர்களும் இருந்தார்கள். பெருவாரியான மக்களால் ஏற்கப்பட்ட ஒரு வழக்கம் ஆண்டு பலவாக கடைபிடிக்கப்பட்டு மரபு ஆனது. மானுடம் பெற்றுள்ள வளர்ச்சிக்கு ஒப்ப வாழ் நெறிகளை விவாதத்திற்குட்படுத்தி தேவையெனில்  சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியம்,  எதுவும் ‘taboo’ அல்ல என்று நினைத்த மேற்கத்திய சமூகத்தில் ஒரு பிரிவினர் “இப்போக்கு எதில் போய் முடியுமோ?” என்ற கவலையில் மூழ்கி இன்று தங்கள் எதிர்ப்பைத்  தெரிவிக்க வீதியில் இறங்குகின்றனர்.

ஒரு பிரெஞ்சுக் குடும்பம் இரண்டு பெண்கள்: ஒருத்தி நடுத்தர வயது, மற்றவள் உயர்கல்வி தொடர்பவள். ஒருத்திதாய், மற்றவள் மகள். தன்னுடன் பழகும் ஆண் நண்பன் தன்னிடம் காதலைத் தெரிவிக்கவில்லை என்ற வருத்தத்தைத் மகள், தாயிடம் தெரிவிக்கிறாள். தாயோ “அவசரப்படாதே அவன் உன்னிடம் பழகுவதைவைத்துப் பார்க்கிறபோது, விரும்புவதாகத்தான் தெரிகிறது, ஒரு வேளை எப்படிச் சொல்வது என தயங்குகிறானோ என்னவோ” என மகளுக்குச் சமாதானம் சொல்கிறாள்.  ஒரு வாரம் கழித்து மகள் இல்லாத சமயம் பார்த்து அவள் தாயிடம் இளைஞன் வருகிறான், தனது மனதிலுள்ள காதலைத் தெரிவிக்கிறான். பிரச்சினை என்னவெனில் அவன் காதல் வயப்பட்டது பெண்ணின் தாயிடமே அன்றி அவள் மகளிடம் அல்ல என்ற உண்மை. பெண்ணின் தாய்க்கு எதிர்பாராத இத்தகவல் அதிர்ச்சியை அளிக்தபோதிலும், தனக்கான நியாங்களின்படி அக்காதலை ஏற்பது சரி. இளைஞனுக்கு அவள் தரும் பதில் ஒரு பெரிய’Oui’ (Yes).  அவள் பெண்ணேகூட தாய் எடுத்த முடிவினைக்கேட்டு அதிர்ச்சி அடைவதில்லை, பெண்கள் இருவரும் தாய்- மகள் என்ற உறவின் அடிப்டையில் இப்பிரச்சினையைப் பார்ப்பதில்லை, இரு பெண்களுக்கிடையேயான பிரச்சினையாக பார்க்கின்றனர். “எனது நலன் முக்கியம், மகளோ, மகனோ உறவினர்களோ, நண்பர்களோ,  சமூகமோ வாழ்வில் குறுக்கிட, எனது நடத்தையை மதிப்பிட ஒன்றுமில்லை – என்ற இந்த பிரெஞ்சுக்காரர்களின் அல்லது மேற்கத்தியர்களின் போக்கு உலகமெங்கும் பரவி வருகிறது.

சுதந்திரத்திற்கு வானமே எல்லை என்கிற ‘Libertine’  கூட்டம் –  Marquis de sade (1740 -1814) போன்றவர்கள் பிரெஞ்சு சமூகத்தில் இன்று அதிகம்.  அவர்கள்  “மனம்போன போக்கில் வாழ்வேன், எனது தேவைகளும், உணர்ச்சிகளுமே எனக்கு முக்கியம்” என வாதிடுபவர்கள். விளைவாக ஓர் ஆணும் பெண்ணும் -அல்லது ஆணும் ஆணும் – அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்துவாழ (திருமணம் என்பது தற்போதைக்கு விலக்கப்பட்ட சொல்) காதல் – (l’amour) ‘இறைவணக்கம் போல’ பிரெஞ்சுக் காரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே முதற்பார்வையிலேயே ஏற்பட்ட மயக்கம் – coup de foudre, காதலுக்குக்  காரணமாக இருக்கலாம், ஆங்கிலத்தில் ‘love at first sight’ என்கிறோமே அதே பொருளில்.  வயது, குடும்பம், சமூகம் என எவ்விதத் தளைகளும் அவர்களுக்கில்லை, தயக்கமின்றி ஒருவர் மற்றவரிடம் “Je t’aime’  (I love you) என்பார்கள்.

முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்த பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஒலாந்து (François Hollande) அதிபர் தேர்தலில் ஜெயித்து மேடையில் தோன்றியபோது தமது காதலி பத்திரிகையாளர் பெண்மணிக்குப் பகிரங்கமாக பிரெஞ்சு முத்தம் தர தயங்கவே இல்லை. அப்பெண்மணியின் இடத்தில் இன்று ஒரு நடிகை. இவரிடம் ‘Je t’aime’ என அதிபர் தெரிவித்து ஒருவருடம் ஆகப்போகிறது. இவருக்கு முன்பிருந்த அதிபர் சர்க்கோசியும் தனது அப்போதையை மனைவிய விவாகரத்து செய்துவிட்டு, இத்தாலி நாட்டைச்சேர்ந்த பாடகி ஒருவரை பதவிக்காலத்தில் காதலித்து மணம் செதுகொண்டார். பெரும்பாலான பிரெஞ்சுகாரர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணவன், மனைவி என வாழ்கின்றவர்கள்தான். முறைப்படி மணவிலக்கு பெற்றபிறகே இது நடைபெறுகின்றன என்றாலும் தங்கள் பிள்ளைகள் நலனில் அக்காறைகொள்ளாத இந்த நவீன வாழ்க்கை ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த நலனை மட்டுமே கருத்தில் கொள்கிற வாழ்க்கை முறை.

Faire le Bise – முத்த பரிமாற்றம்

முத்தம் என்றாலே காதல் சம்பந்தப்படப் பொருள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரெஞ்சு சந்திப்புகளில் கைகுலுக்கல்போல, முத்தங்கள் இரு மனிதர்களுக்கிடையேயான உறவின் வெளிப்பாடு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரன்றி நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடையேயும் முகமன் கூறவும் ஒருவர் மற்றவரிடம் தமக்குள்ள அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் முத்தமிட்டுக்கொள்வது வழக்கம். முத்தத்தை Bise அல்லது  Bisu எனப்பொதுவாகச் சொல்வார்கள்.

காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடைய இடம்பெறும் முத்த பரிமாற்றம் உதடுகளை மையமாகக் கொண்டது. அதிலும் பிரெஞ்சு முத்தம் உலகம்புகழ்பெற்றது. இரண்டாம் உலகபோருக்குப்பின் அமெரிக்க வீர்கள் சொந்த நாடு திரும்பியபோது, காத்திருந்த காதலிக்கும், மனைவிக்கும் மணிகண்ணகில் தாங்கள் ஐரோப்பாவில் கற்றதென பிரெஞ்சு முத்தங்களை வழங்கியிருக்கிறார்கள்; இதன் விசேடம், உதடுகளோடு இருபாலரின் நாக்கும் ஒத்துழைக்கவேண்டும், பிரெஞ்சில் இம்முத்தத்தைச் அரங்கேற்றுவதற்கு Galocher என்று பெயர். Galocher என்பதற்கு Overshoe என்று பொருள். மழைக்காலத்தில் ஓவர் ஷூ போட்டு நடந்து பார்த்துவிட்டு காதலிக்கோ காதலர்க்கோ பிரெஞ்சு முத்தத்தைத் கொடுத்துப் பெயர்வைத்தது சரிதானா? எனத் தெரிவியுங்கள்.   

இரண்டு நண்பர்கள் சந்திக்கிறபோது தன்னோடு இருக்கிற மூன்றாவது நபரை அறிமுகப்படுத்துகிறபோதும் கன்னத்தில் முத்தமிடலாம் குறிப்பாக அவர்கள் சிறுவர் சிறுமியராகவோ வயதில் மூத்தவராகவோ இருப்பின் முத்தமிட தயங்கவேண்டியதில்லை. முத்தமிடுவதா அல்லது கைகுலுக்கல்போதுமா என்பதை இரு நபர்களுக்கிடையேயான உறவு அல்லது நட்பின் அளவுகள், பாலினம் ஆகியவைப் பொதுவாக தீர்மானிக்கின்றன ( பல நேரங்களில் அவர்களின் முகங்கள்). சிநேகிதிகள் இருவர் அதாவது அவர்கள் ஒருவரையொருவர் நீ போட்டுக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமிருப்பின், சந்திக்கிறபோதும், புறப்படும்போதும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்ளலாம். எதிர் பாலினத்தைச்சேர்ந்த இருவர்கூட அவ்வாறு செய்யலாம். ஆனால் அவ்விருவரில் ஒருவரான பெண் அதை விரும்பாவிடில் ( அவர்கள் விலகி நின்று கை நீட்டுவார்கள் -கை குலுக்குவதற்காக) தவிர்ப்பது நாகரீகம். அவ்வாறே இருவர் சந்திக்கிறபோதும் பிரிந்து செல்கிறபோதும் முத்தமிடுவது தவிர்க்கபடுவதற்கு காரணங்களிருக்குமெனில் நிச்சயம் கைகுலுக்கவேண்டும்.

கன்னத்தில் முத்தமிடும் சம்பிரதாயத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன.

1. இருவர் கன்னங்களும் மற்றவரின் கன்னத்தில் பாதி அளவைத் தாண்டக்கூடாது.

2. கன்னத்தில் உதடுகளை பதிக்காமல் முத்தமிடவேண்டும் கன்னத்தில் உதடுகள் பதிந்தால் அதற்கு வேறுபொருள்.

3. எண்ணிக்கை:

  கன்னத்தில் மாறிமாறி இரண்டு முறை முத்தமிட்டுக்கொள்வதென்பது (நட்பு, நெருங்கிய உறவுகள்) பொது வழக்காக இருக்கிறது.

சில நேரங்களில்  சந்திப்பைத் தொடங்குகிறபோது மூன்று முத்தமென்றும் புறப்படும்போது இரண்டு முத்தமென்றுங்கூட சில பகுதிகளில் வழக்க முண்டாம்.

புதுச்சேரி தமிழர்களிடத்திலும் இந்த கன்னத்தில் முத்தமிடும் வழக்கிலிருக்கிறது. ஒரு முறை நாற்பதுவயதைக் கடந்த பெண்மணி மீன்குழம்பு சாப்பிட்ட வாயோடு கன்னத்தில் முத்தமிட நெருங்கினார். தற்போதெல்லாம் பிரான்சிலுள்ள இந்தியப் பெண்மணிகளைக் காண்கிறபோதெல்லாம் அவர்கள் போட்டிருக்கிற  பர்ஃப்யூமையும் மீறி மீன்வாசம்தான் மூக்கைத் தொடுகிறது.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.