உங்கள் கேள்விக்கு என்ன பதில்? – 6

Paddy_Fields_Wiki_Rice_Harvest_Natural_Organic_Fertilizers

கேள்வி 16

ஒரு பயிருக்கு உகந்தமுறையில் பயிர்பாதுகாப்பை எப்படி செய்யலாம்? அதை மீறிப் பயிர்க்ளைத் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு அழிப்பது?

மோகன்ராஜ் மேட்டுப்பாளையம்.

உகந்த முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்ணிலிருந்து தொடங்கவேண்டும். வள்ளுவர் வழங்கியுள்ள யோசனையை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம்

தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்’

இன்று சுபஷ் பாலேக்கர் கூறும் ஜீரோ பட்ஜட்டை வள்ளுவர் அன்றே கூறிவிட்டார். ஒரு மழைக்குப்பின் கோடை உழவு நிகழும், உழவு முடிந்தபின் மண்ணைக் காயவிடும்போது கோள்களின் சக்தியை மண் பெறும். மீண்டும் ஒரு சால் ஓட்டி மண்ணைப் புழதியாக்கி மீண்டும் காயவைத்து மூன்றாம் உழவைச் செய்ய வேண்டும். இவ்வாறு உழவைச் செய்தால் மூட்டைப்பூச்சி அளவில் பறக்கும் பலவிதமன கொசு இனங்கள் சாறு உறிஞ்சிகள் மண்ணுக்குள் முட்டை இடாது. இப்படிச் சுக்காகக் காயவைத்துப் புழுதியாக்கிவிட்டால் மண்ணுக்கு ஒரு பிடி எருவும் தேவையில்லை என்பது வள்ளுவர் வாக்கு. நடைமுறையில் இது சாத்தியம் இல்லை புஞ்ஞைப் பயிர்களை முதல் உழவிலேயே விதைத்து விடுவார்கள். ஆள் கூலி, டிராக்டர் கூலி என்று பல பிரச்சனைகள் உள்ளனவே. ஒரு சிலர் கடைபிடிக்கலாம்.

தத்துவம் வேறு. நடைமுறை வேறு. முதலாவதாகப் பயிர்களை நஞ்சை – புஞ்சை என்று பிரித்துக்கொண்டு நஞ்சையிலும் நெல்லுக்கும் பொருந்தும் வைத்தியம் வாழைக்குப் பொருந்தாது. கரும்புக்கும் தனிவழி. மூன்றுக்கும் பொதுவான விஷயம் ஆழ உழுது அதிகமான மக்கிய தொழஉரம் தொடக்கத்தில் வழங்கவேண்டும். களைமண்டாமல் இருக்க நெல்லுக்கு நீர்கட்ட வேண்டும். கரும்பு வாழைக்கு நீர் கட்டக்கூடாது. கரும்பு – வாழைக்கு வாரம் ஒரு முறை நீர் போதும். ஈரம் காத்தால் சரி.

இயற்கையில் நெல் விதைக்கும்போது பச்சை கட்டிப் பயிர் எழும்பத்தாமதமாகலாம். இதைத் தசிர்க்க தொழு உழவு செய்யும்போதே பலவகையான மரத்தழைகளை வெட்டிப் போட்டு குலை மிதித்து 2 நாட்கள் அழுகியபின் பரம்பு ஒட்டி விதைக்க வேண்டும். நாற்றை நட்ட ஒரு வாரத்தில் வேர் பதிந்த பின்னர் எருக்கு, வேம்பு, நொச்சி, சோத்துக் கத்ஹ்தாழை, ஆமணக்கு ஆகிய ஐந்து வகைப் பச்சை இலைகளைப் பொடித்துப் பசுமை மாறாத வண்ணம் கிரைண்டரில் ஆட்டிக் குழம்பாக்கிய பின்னர் கிடைக்கும் அளவில் கோமியம் (பசு மூத்திரம்) கலந்து கொண்டு ஸ்ப்ரே செய்யும் 12 லிட்டர் டேங்கில் 1 லிட்டர் பச்சிலைச் சாறை ஊற்றி 25 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து 10 லிட்டர் தண்ணீர்விட்டும் கலக்கிப் பவர் ஸ்ப்ரேயர் கொண்டு நெற்பயிரில் தெளிக்கவும். இப்படித் தெளித்த மறுவாரத்தில் பச்சைக்கட்டிப் பயிர் எழும்பும். பயிர் துரிதமாக வரை மடை நீள் பசுஞ்சாணியைக் கரைத்து விடலாம். பயிர் வளர பஞ்சகவ்யம், மீன்குணபம், பன்றிகுணபம் போன்றவற்றை நிலைமைக்கு ஏற்ப 4 அல்லது 5 சதவீதம் வழங்கலாம். (1 லிட்டர் நீருக்கு 50 மில்லி)

கரும்பு வாழை போன்ற பயிர்களுக்குப் பச்சிலைக் கரைசல் வேண்டாம். பஞ்சகவ்யம், குணபக் கரைசல் போதுமானது. எல்லா நஞ்சைப் பயிர்களுக்கும் அடிவாக்கில் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு அல்லது வேறு வகையான எண்ணை வித்துப் பிண்ணாக்கு இடுவதன் மூல போதிய மணிச்சத்துகிட்டும். அடிஉரம் இட்டபோது வழங்காவிட்டால் பிண்ணாக்கை மாவாக்கிப் பயிர்மீது தூவியபின்னர் பஞ்சக்கவ்யம் – குணபஜலம் தெளித்தாலும் பலன் உண்டு. ஒட்டுண்ணி அட்டைகளை வாங்கியும் கட்டிவைக்கலாம்.

ஒட்டுண்ணி அட்டைகள்

பயிர்ப்பாதுகாப்பு முறையில் உயிரியல் அடிப்படையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் வேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரியல் பூச்சிக்கட்டுப்பாடு என்றால் நன்மைசெய்யும் பூச்சிகளைக் கண்டறிதல். தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கைகள் உயர்ந்தும் நன்மை செய்யும் பூச்சிக்ளின் எண்ணிக்கை குறைந்தும் காணப்பட்டால் பூச்சிகள் பயிற்களை அழித்துவிடும். பல்வேறு மூலிகைப் பூச்சி விரட்டிகளைத் தெளிக்கும்போது தீமைசெய்யும் பூச்சிகள் விரட்டப்படுவதால் அதன் இனப்பெருக்கம் தடைபெறுகிறது. மூலிகைப் பூச்சி விரட்டிகளால் கட்டுப்படுத்த முடியாத போது ஒட்டுண்ணி அட்டைகளை வாங்கிடும் பயிர்களில் கட்டிவிடலாம். உதாரணமாகப் பயிர்களில் சேதம் விளைவிக்கும் பூச்சிகளில் தத்துப்பூச்சி, இலைப்பேன், புணையான், பச்சைவெட்டுக்கிளி, இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்புழு, கதிர்நாவாய், வெட்டுப்புழு ஆகியவை. மேற்கூறிய தீயபூச்சிகளையே உணவாகக் கொண்டு வாழக்கூடிய நன்மைப் பூச்சிகளாவன. தரைவண்டு, பொறிவண்டு, ஓநாய்சிலந்தி, லிங்ஸ் சிலந்தி போன்ற பல சிலந்திகள், ஊசித்தட்டான், கிரிக்கெட் பூச்சி, நீள்கொம்பு வெட்டுக்கிளி சிறு அலை நாவாய்ப்பூச்சி, நீர்த்தாண்டி, குளவி, தேனி இவ்வாறு நன்மை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் கொண்ட அட்டைகளை வேளாண்துறை பூச்சி நிர்வாகம் வழங்குகிறது. சில தானியங்களும் வழங்குகிறார்கள். இவற்றைப் பெற்றுக் கட்டி வைக்கலாம். என்ன பயிர்களுக்கு எந்த ஒட்டுண்ணிகளை வாங்கலாம் என்ற விவர்மும் உண்டு.

கேள்வி – 17

நெல்பயிரிடும் விவசாயிகளில் பலர் பாசுமதியைத் தேர்ந்தெடுப்பது ஏன்? தமிழ்மணமுள்ள சீரகச் சம்பா பிரியாணிக்கு உதவாதா? பாசுமதி நெல் விதை எங்கு கிடைக்கும்? பாரம்பரிய சீரகச் சம்பா எங்கு கிடைக்கும்?

எஸ். கோவிந்தசாமி, செங்கற்பட்டு

அரிசியில் தமிழ்மணம், இந்தி மணம், இமய மணம் என்றெல்லாம் இல்லை. சீரகச் சம்பா தமிழ்நாட்டில் விளைவதால் அது தமிழ் மணம். பாசுமதி இமயமலைச் சாரலில் விளைவதால் அதை இமையமணம் என்று கூறலாமா? பாசுமதி அரிசியை விவசாயிகள் விரும்பிச் சாகுபடி செய்வதன் நோக்கம் அணைத்துலக சந்தையில் அதன் உயர்ந்தவிலை. 100 கிலோ முட்டை அரிசி ரூ 15000 முதல் 20000 வரை விற்பதால் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நல்ல லாபம். இதை உணர்ந்து தில்லியில் உள்ள புசா நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ( Indian Agricultural Research Institute – இன் ஒரு அங்கம்) நிறைய பாசுமதி நெல் விதைகணம் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

பிரியாணியை பாசுமதி அரிசியில் செய்வதற்குச் சீரகச் சம்பாவில் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. சீராச்சம்பா பச்சை அரிசி குழந்துவிடும். பாசுமதியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் குழையாது. புழுங்கல் அரிசியில் பிரியாணி செய்யவில்லை. ஆகவே கெட்டித்தன்மை. குழையாத நிலை தேவை. பழைய பொன்னி அரிசி, மசூர் அரிசி, கூட பிரியாணிக்கு உகந்தவை. என்ன செய்வது? புலாவ், பிரியாணி செய்யத் தமிழ் மணம் விடும்பப்படுவது இல்லை. அதே சமயம் அன்றாட சமையலுக்கு யாரும் பாசுமதி அரிசியை விரும்புவது இல்லை. பாசுமதி அரிசியில் உள்ள இயல்பான மணம் பிரியாணிக்கு மட்டுமே ஏற்றது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இஸ்லாமியர்கள் கெட்டியான பிரியாணியை விரும்புவதுபோல், ஜப்பானியர்கள் குழைவான சாதத்தையே விரும்புவார்கள். அந்த நாட்டுக்கு பொன்னி, சீரகச் சம்பா ஏற்புடையதாக இருக்கும். பிரியாணிக்குரிய சாதம் ஒட்டாமல் இருக்கவேண்டுமே! சீரகச்சம்பா விதை நெல் மட்டுமல்ல; வேறு பல நெல் பாரம்பர்ய விதைகளையும் கிரியேட் என்ற பெயரில் நெல்விதை வங்கி வைத்துள்ள விவசாயி ஜெயராமிடம் உண்டு. அவர் முகவரி – திரு ஜெயராம் – CREATE ஆதிரங்கம், கட்டிமேடு வழி, திருத்துறைப்பூண்டி, கைபேசி – 9443320954.

– கேளுங்கள் பதிலுண்டு.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

0 Replies to “உங்கள் கேள்விக்கு என்ன பதில்? – 6”

Leave a Reply to DhanasekaranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.