முகுந்தன்

1

சிறுவர்களும் குரங்குகளும் சேர்ந்துவிட்டால் விளையாட்டுக்கு என்ன குறைவு? வேலம்பட்டிப் புலியந்தோப்பில் ஊர்ப் பையன்களெல்லாம் சேர்ந்து மரத்தில் ஏறியும், குதித்தும் கூக்குரலிட்டும் குரங்குகளை விரட்டிக்கொண்டும் விளையாடினார்கள். சில சமயம் குரங்குகள் ஜயித்தன. அப்போது அவைகளில் பெரிய குரங்கு `உர்` என்று உறுமும்போது, சில பிள்ளைகள் விளையாட்டை மறந்து, சிறிது பயங்கொள்வார்கள். குரங்குகளின் சிறு குட்டிகளுக்கும், பாவம் ஆபத்தாய்த்தானிருந்தது. அவை விளையாட்டில் வேடிக்கை எதுவும் காணவில்லை, பயந்து ஓடி ஓடிக் கிளைக்குக் கிளை பாய்ந்து சிறுவர்களுடைய இம்சையிலிருந்து தப்பப் பார்த்தன. பையன்களுக்கோ இது வேடிக்கையாயிருந்தது. அவர்களுடைய ஆரவாரமும், குரங்குகளின் `கீச் கீச்` என்ற சத்தமும் ஊருக்குக் கேட்கும்.

 திடீரென்று கிழக்குக் கோடியில் ஒரு பையன் பெரிய கூக்குரலீட்டான். எல்லாரும் என்னவோ அபாயம் நேர்ந்துவிட்டதென்று அந்தப் பக்கம் ஓடினார்கள். முகுந்தன் மேல் ஒரு பெரிய குரங்கு பாய்ந்து, அவன் உடம்பெல்லாம் கிழித்து இரத்தக் காயம் செய்து கழுத்தைக் கவ்விக்கொண்டிருந்தது. முகுந்தன் குரங்குக் குட்டி ஒன்றைத் துரத்தி விளையாடும்போது அது கிளையிலிருந்து நழுவிக் கீழே விழ, அவன் அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடவே, தாய்க் குரங்கு மரத்திலிருந்து சீறி அவன் மேல் பாய்ந்து இவ்விதம் தாக்கிக் கொண்டிருந்தது. முகுந்தன் திக்பிரமை கொண்டவனாய், இன்னது செய்யவேண்டுமென்று தோன்றாமல், குரங்குக் குட்டியை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டான். இதைக் கண்டு குரங்கு இன்னும் ஆவேசத்துடன் அவனைக் காயப்படுத்திற்று. `குட்டியை விட்டுவிடு, குட்டியை விட்டுவிடு` என்று பையன்கள் கூக்குரல் போட்டும் அவனுக்கு விளங்கவில்லை. சிறுவர்களில் யாரும் கிட்டப் போகத் தைரியங் கொள்ளவில்லை. குரங்கோ மிகப் பெரியது. மகா கோபாவேசங் கொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாரி என்னும் சிறுவன், `அடே, செத்துப் போயிடுவான்`, என்று கத்திவிட்டு, ஒரே குதியாய்க் குதித்து முகுந்தன் கையிலிருந்து குரங்குக் குட்டியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினான். உடனே குரங்கு முகுந்தனை விட்டுவிட்டு மாரி மேல் பாய்ந்தது. மாரி, குட்டியைக் கீழே போட்டுவிட்டுத் தரையில் கிடந்த ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு குரங்கை எதிர்த்து நின்றான், குட்டி கீழே விழுந்து ஓட ஆரம்பித்ததும், தாயானது பையனைத் தாக்குவதை விட்டுவிட்டுக் குட்டியண்டை ஓடிற்று. குட்டி தாயின் வயிற்றைக் கவ்விக்கொள்ளவே, குரங்கு மரத்தின் மீது ஏறி உச்சிக் கிளை போய்ச் சேர்ந்து ஒன்றுமே நடவாததுபோல் அங்கே உட்கார்ந்தது.

முகுந்தன் நினைவற்றுக் கீழே கிடந்தான். பையன்கள் எல்லாம் பயந்து, `முகுந்தன் செத்துவிட்டான்`, `குரங்கு முகுந்தனைக் கொன்றுவிட்டது` என்று கத்திக்கொண்டு ஊர்ப்பக்கம் ஓடினார்கள். மாரி மாத்திரம் ஓடாமல், `அடே சின்னான்! போய் அம்மாவைக் கேட்டு ஒரு கலையத்தில் தண்ணீர் கொண்டுவா`, என்று சொல்லி முகுந்தன் பக்கத்தில் உட்கார்ந்து அவனுடைய முகத்தைத் துடைத்துத் தடவிக்கொண்டிருந்தான். சின்னான் சேரிக்கு ஓடிப்போய் ஒரு மண் கலையத்தில் தண்ணீர் கொண்டு வந்தான். அதை மாரி வாங்கி முகுந்தன் முகத்தில் தெளித்ததும், அவனுக்கு நினைவு வந்தது. ஆனால், காயங்களில் இரத்தம் பெருக்கிக்கொண்டேயிருந்தது.

`சின்னா, நீ ஒரு பக்கம் பிடி, நான் ஒரு பக்கம் பிடிக்கறேன் இருவரும் தூக்கி இவனை வீட்டுக்குக் கொண்டு போவோம் வா`, என்று மாரி சொல்ல, இருவரும் சேர்ந்து முகுந்தனைத் தூக்கிக்கொண்டு போனார்கள். மாரியும் சின்னானும் சிறு குழந்தைகள்தான், ஆனால் ஏழைப்பிள்ளைகளாயிருந்தபடியால் வேலைக்கு அஞ்சவில்லை. சுகத்தில் வளரும் குழந்தைகள் செய்யாத காரியங்களெல்லாம் ஏழைக் குலத்தில் பிறந்த குழந்தைகள் தைரியமாகச் செய்யும். இல்லாவிட்டால் அவர்கள் எப்படிப் பிழைக்க முடியும்?

2

முகுந்தன் தகப்பனில்லாக் குழந்தை. அவன் தகப்பனுக்கு ஒரு காரணமுமில்லாமல் வந்த ஜுரம் ஒரு மாதம் விடாமல் அடித்தது; ஊர்ப்பண்டிதன் என்ன மருந்து கொடுத்ததும் நிற்கவில்லை. முப்பதோறாவது நாள் இரவு, மனைவியையும் மகனையும் திக்கற்றவர்களாய் விட்டுவிட்டு அவன் இறந்து போனான்.

சீதம்மாள் தெய்வபக்தியுடையவள். புருஷன் இறந்தபிறகும் தைரியத்துடன் பையனை வளர்ந்து வந்தாள். ஊரில் புருஷன் அங்கங்கே கொடுத்திருந்த காசு பணத்தையெல்லாம் வசூலித்து, அவன் வைத்துவிட்டுப் போன நாலு ஏக்கர் புன்செய்க் காட்டை ஒரு குடியாவனிடம் குத்தகைக்குப் பேசிவிட்டுக் குடும்பத்தை நடத்தி வந்தாள். பையனைக் கிராமத்திலிருந்த நிறு பள்ளிக்கூடத்தில் போட்டாள். வீட்டிலும் அவனுக்கு இராமாயண பாகவத பாரதக் கதைகளைச் சொல்லிவந்தாள். தைரியமாய் வாழ்வு நடத்தி வந்தாலும், பாவம், சிறு வயதில் விதவையாய்ப் போன சீதம்மாளுக்குச் சில சமயம் உலகத்தின் மீது வெறுப்பு உண்டாகும். திக்கற்ற வாழ்வின் துன்பங்களைச் சகித்துக்கொள்ளுதல் யாருக்குமே கடினமல்லவா? ஆனால், ஈசுவர நம்பிக்கையும் ஆசாரசீலமும் இவளைக் காத்து வந்தன.

சீதம்மாள் ஸ்நானம் செய்து, பூஜைக் காரியங்களை முடிந்துவிட்டு, அடுப்பண்டை சமையல் செய்துகொண்டிருந்தாள். திடீரென்று மாரியும் சின்னானும், `அம்மா,அம்மா` என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்து மேலெல்லாம் இரத்த வெள்ளமாயிருந்த முகுந்தனை அவள் முன் கீழே இறக்கி வைத்தார்கள். திடுக்கிட்டுப்போன தாய் ஒரே பாய்ச்சலாய்க் குழந்தையண்டை வந்து குதித்து, `ஐயோ! என் குழந்தாய்!` என்று கூக்குரலிட்டாள். இவள் திடுக்கிட்டுக் குழந்தையண்டை குதித்த குதியும் தோப்பில் குரங்கு தன் குட்டியைக் காக்கச் சீறிப்பாய்ந்த பாய்ச்சலும் ஒரே மாதிரியாயிருந்தன. பெற்ற வயிறு எல்லாம் ஒன்றுதானே! குரங்கானாலென்ன, சீதம்மாளானாலென்ன?

நடந்த சங்கதிகளெல்லாம் மாரி சொன்னான், கேட்டதும் அவளுடைய உள்ளத்தில் உதித்த நன்றி முகத்தின் அழகிய புன்முறுவலாகப் பிரகாசித்தது.

`நீங்கள் யார் அப்பா!`, என்றாள்.

`நாங்கள் பறைப்பசங்கள் அம்மா` என்றான் மாரி.

இதைக் கேட்டதும் திடீரென்று சீதம்மாளுடைய மனோநிலை மாறிவிட்டது.

`பறைப்பயல்களா? அட பாவி! வீட்டுக்குள் நுழைந்து விட்டீர்களே! ஐயோ ஈசுவரா! நான் என்ன செய்வேன்? அடுப்பண்டை வந்துவிட்டீர்களே! ஐயோ, கொடும் பாவிகளே!`, என்று எல்லாவற்றையும் மறந்து பெரும் கூக்குரலிட்டுக் கொண்டே ஒரு விறகுக் கட்டையை எடுத்து பலத்துடன் வீசிச் சின்னான் மேல் எறிந்தாள். மாரி சட்டென்று குறுக்கே குதித்தான். கட்டை அவன் காலில்பட்டுக் காயம் ஏற்படவே அவன் கீழே விழுந்தான். சின்னான் கூக்குரலிட்டுக் கொண்டு தெருப்பக்கம் ஓடினான்.

`பறைப் பயல், வீட்டுக்குள் நுழைந்து என் ஜன்மத்தைப் பாழாக்கினான். போதாதற்கு, ஊருக்கெல்லாம் என் அவமானத்தைத் தெரிவிக்கக் கூச்சலிட்டுக்கொண்டு ஓடுகிறான், பார்!`, என்று கூவினாள் சீதம்மாள்.

கீழே விழுந்த மாரி, மெல்ல எழுந்து காயம்பட்ட காலைகையால் அழுத்திக்கொண்டு, `அம்மா, உன் மகனை நான் குரங்கின் கையிலிருந்து தப்புவித்தேன். அதற்குப் பதிலாக நீ, என் காலை ஒடித்துவிட்டாய்`, என்றான். ஏழைச் சாதிக் குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களைப் போல் பேசுவார்கள்.

`நீயும் உன் குரங்கும் நாசமாய்ப் போக. இந்தப் பறத்தீட்டு எப்படி நீங்கி நான் நற்கதியடையப் போகிறேன். ஐயோ நிழல் பட்டாலும் தீட்டாயிற்றே! வீட்டுக்குள் சுவாமி வைத்திருக்கும் இடத்துக்கே வந்து விட்டார்களே! இவர்கள் நாசமாய்ப் போக. ஹே, ஈஸ்வரா! என் மேல் கருணை வைத்துக் காப்பாற்று, சுவாமி!`, என்று கத்தினாள்.

மாரி இன்னும் காலை அமுக்கிக்கொண்டே நின்றான். `அடே தூரப்போ, பறைப் பயலே` என்று மெய்ம்மறந்து இன்னொரு கட்டையையெடுத்து ஓங்கி அவன் மேல் எறிந்தாள். முன் அடியைக் காட்டிலும் இது பலமாய்த் தாக்கிற்று. பொறுக்க முடியாமல் `வீல்` என்று கத்திக்கொண்டு, பாவம், பையன் காலைப் பிடித்துக்கொண்டே ஓடினான்.

தெருவில் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. `என்ன, என்ன?` என்று சிலர் கேட்கவும் சிலர் பதில் சொல்லவும் பெரிய ஆரவாரம் கிளம்பிற்று. மாரி, சின்னான் இவர்களுடைய ஆயாளும் சேரியிலிருந்து வந்து தெருக்கோடியில் நின்று கொண்டு, `ஐயோ, என் குழந்தைகளைக் கொல்லுகிறார்களே!` என்று பெரிய கூச்சல் போட்டுக்கொண்டிருந்தாள். பெற்ற தாயின் வயிறு எரிதல் எல்லா உயிர்களிடையும் ஒரே மாதிரிதான். குரங்கானால் என்ன, வேறு எந்த உயிரானால்தான் என்ன?

indian_paintings_Tamil_Nadu_Old_Classics_Ancient_Bygone_Era

3

பிறகு, இரண்டு வருஷத்திற்குப் பின் கதை: முகுந்தன் பெரிய பையனாகிக் கமலாபுரம் பேட்டையில் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டான். தினம் இரண்டு மைல் போய்த்திரும்பி வர வேண்டும். ஆனால், இவனைப் போலவே அந்தப் பள்ளிக்கூடம் போகிற இரண்டு பிள்ளைகள் துணைக்கு இருந்தபடியால் போவது கஷ்டமாய்த் தோன்றவில்லை. குரங்கு விளையாட்டுச் சமாசாரத்தை எல்லாரும் மறந்துவிட்டார்கள். முகுந்தன் நெற்றியில் மாத்திரம் பெரிய ஒரு தழும்பு இருந்தது.

மாரியின் தாயார் குப்பாயியினுடைய மனத்துக்கு மாத்திரம் சமாதானம் ஏற்படவில்லை. `எப்படி ஐயமார் வீட்டுக்குள் போய் நுழையலாம்? அந்தப் பாவம் பிடித்துத் தின்னாதா? மற்ற ஜாதிப் பையன்களுடன் நீங்கள் ஏன் கலந்து விளையாடினீர்கள்? தெய்வம் நம்மை விடுமா? அதனால்தான் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நமக்கு வந்திருக்கின்றன. மழையெல்லாம் நின்றுவிட்டது. தின்னச் சோறு இல்லாமல் தவிக்கிறோம். எல்லாம் அந்தச் சாபந்தான்` என்று பலவாறாகத் தன் மகனை ஏசிக்கொண்டே இருந்தாள். ஊர் மாரியாயிக்கு மூன்று பொங்கலுக்கும் தவறாமல் மூன்று கோழி கொடுத்து, `ஆயாளே! தெய்வமே! என் மகன் தெரியாமல் செய்துவிட்டான். மன்னித்துவிடு` என்று பிரார்த்தனை செய்துகொண்டாள்.

எவ்வளவு பயபக்தியுடன் பூசை செய்து பலி கொடுத்தாலும், மாரியாயிக்குக் கோபம் சாந்தமாகவில்லை. கஷ்டங்கள் மேலும் வந்துகொண்டே இருந்தன. முன்னெல்லாம் புருஷன் கள்ளுக்கடைக்குச் சந்தையன்று மாத்திரம் போவது வழக்கம். இப்போது தினமும் போகலானான். குடித்துவிட்டுப் போதையுடன் வீடு வந்து, சோறு போடு என்று மிரட்டுவதும், `சோறு ஏது? எல்லாம் கள்ளுக்குத் தொலைத்து விட்டாயே?` என்றால், உதைப்பதும் அடிப்பதும் வழக்கமாயிற்று. பகலெல்லாம் காட்டில் திரிந்து ஒரு தலைச்சுமை விறகு பொறுக்கி வந்து விற்று அவள் இரண்டணா சம்பாதித்தால், அதையுங்கூடச் சண்டை போட்டுப் பிடுங்கிக் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடுவான். இப்படி வாழ்வு மிக்க கஷ்டமான போதெல்லாம், `பார்ப்பாத்தி அடுப்பண்டை போன சாபந்தான் இது` என்று தன் பிள்ளைகளைப் பார்த்துச் சொல்வாள். புருஷன் குடித்துவிட்டு வந்து அடித்தால் அடிகளை வாங்கிக்கொண்டு, `பிள்ளைகளே, அழ வேண்டாம். நாம் கண்டிக்குப் போய்விடலாம். இந்தப் பாழாய்ப்போன ஊரும் வீடும் நமக்கு வேண்டாம். இவன் கள்ளுக்கடையிலே சாகட்டும்`, என்பாள்.

அந்த வருஷம் மழை சுத்தமாய் இல்லை. நிலங்களெல்லாம் காய்ந்து கிடந்தன. கூலிக்கு அழைப்பார் யாருமில்லை. ஏழைக் குடியானவர்கள் பாடே வெகு கஷ்டமாயிருந்தது. கூலி வேலை செய்து ஜீவனம் பண்ணுவோர் பாடு இன்னும் பரிதாபம். பறையர், சக்கிலிமார்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அவர்களின் நிலையை எழுதத்தான் முடியுமா?

கண்டிக்கு ஆள் சேர்க்கக் கங்காணி வந்தான். ஜனங்கள் அவனைத் தெய்வமாக எண்ணி எதிர்கொண்டார்கள். `கங்காணி வந்து ஏழைகளை ஏமாற்றி அழைத்துப் போகிறான். பொய்யும் புரட்டு சொல்லி, அறியாதவர்களை இட்டுச் செல்கிறான். இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையே` என்று பெரிய குடித்தனக்காரர்கள் சொன்னார்கள். ஆனால், `நாம் இப்போது படும் கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் என்ன இருக்கப் போகிறது?` என்றெண்ணிச் சேரிகளிலிருந்து அநேகம் பேர்கள் கங்காணியுடன் இலங்கைக்குச் சென்றார்கள்.

குப்பாயியும் தனக்கு விமோசனம் இதுதான் என்றெண்ணிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கண்டிக்குப் போகப் பெயர் கொடுத்தாள். புருஷன் வரமாட்டேன் என்றான். அவன் எக்கேடாவது கெடட்டும் என்று அவனை ஊரில் விட்டுப் போனதாகவே முதலில் தீர்மானித்திருந்தாள். ஆனால் கடைசியில் அவன் `எனக்கு யார் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்? நானும் வருகிறேன்` என்றான். இனி கள், சாராயம் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து தன்னையும் கூட்டிக்கொண்டு போகும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். முடிவில் எல்லாரும் சேர்ந்தே போனார்கள்.

4

மூன்று வருஷம் கழிந்தது. முகுந்தன் பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்து வந்தான். கடைசிப் பரீட்சையில் பையன்களுக்குக்குள் முதலாவதாகத் தேறினான். இந்தச் செய்தி ஒரு நாள் காலையில் வெளியாயிற்று. முகுந்தன் உடனே தாயிடம் போய்ச் சந்தோஷ சமாசாரஞ் சொல்ல மிக்க ஆவல் கொண்டான். ஆனால் பரிட்சையில் தேறிய தோழர்கள் எல்லாரும் கூடி சுவாமி மலையேறி, அங்கே அன்று திருநாள் பார்த்துவிட்டு, வேடிக்கையாய்ச் சிறிது நேரம் கழித்து வரலாமென்று தீர்மானித்து, முகந்தனையும் அழைத்தார்கள். மாட்டேன் என்று அவன் சொல்லிப் பார்த்தான். `போனால் நேரமாய்விடும். வீட்டில் தாயார் காத்திருப்பாள்`, என்றான்.

`போடா, பெண் குழந்தைபோல் பேசுகிறாயே. நேரமானால் நானும் உன்னுடன் ஊருக்கு வருகிறேன். நீ பயப்பட வேண்டாம். பரீட்சையில் முதலில் தேறினேனேன்று கர்வப்படாதே. எங்கள் கூடக் கட்டாயம் வரவேண்டும்.` என்று ஒரு தடிப்பையன் வற்புறுத்தினான்.

`வந்தே தீரவேண்டும். வந்தே தீரவேண்டும். விடக்கூடாது` என்றார்கள் சுற்றிலுமிருந்த பையன்கள் எல்லாரும். முகுந்தனிடம் எல்லாருக்கும் மிகவும் பிரியம்.

ஆகவே, முகுந்தன் மலைக்குப் போக வேண்டியதாயிற்று. மலைமேல் வேடிக்கையாய்த் தானிருந்தது. உற்சவத்திற்குத் திரள் திரளாக ஜனங்கள் வந்திருந்தார்கள். பையன்கள் கோயிலுக்குள்ளும் வெளியிலும் கடை வீதியிலும் மனம் போனபடி சுற்றித் திறிந்து விளையாடினார்கள். அவர்களில் ஒருவன் பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை. அவன் தகப்பன் ஐந்து ரூபாய் முழு நோட்டு ஒன்று பையன் இஷ்டப்படி செலவு செய்யக் கொடுத்திருந்தான். இதைக்கொண்டு, மிட்டாய்க் கடையில் வேண்டிய பட்சணங்கள் வாங்கி எல்லாரும் தின்றார்கள், வெயிலில் நாள் முழுவதும் ஓய்வில்லாமல் திரிந்துவிட்டு மலையிலிருந்து இறங்கினார்கள். பாதி தூரம் இறங்கும்போது, `அடே ராமகிருஷ்ணா! வெகு தாகமாயிருக்கிறதடா` என்றான் முகுந்தன். `இங்கே தண்ணீர் ஏது? ஊர் சேர்ந்தால்தான்` என்றார்கள் மற்றவர்கள்.

`போங்கடா மடையன்களா! இங்கே அனுமான் குட்டை இருப்பது தெரியாதா?` என்று தடிப்பையன் சொல்லி, அங்கே ஒற்றடிப் பாதை. வழியாய்ப் போய் ஒரு பெரிய ஆஞ்சநேய ஸ்வாமி செதுக்கியிருந்த பாறைக்குப் பின்னால் குட்டை ஒன்றைக் காட்டினான். முகுந்தன் அதில் இறங்கித் தாகம் தீரத் தண்ணீர் குடித்தான். `எவ்வளவு நன்றாய் இருக்குதடா தண்ணீர்?` என்று சொல்லிக்கொண்டு மேலே ஏறினான். நல்ல தாகமாயிருந்தால் அழுக்குத் தண்ணீர் கூட வெகு ருசியாயிருக்குமல்லவா?

கமலாபுரம் போய்ச் சேரவே இருட்டாகிவிட்டது. அதற்கு மேல் முகுந்தன் வேலம்பட்டி போய் வீடு சேர்ந்து, `அம்மா` என்று கதவைத் தட்டியபோது அதிக நேரமாய்விட்டது. `அப்பா முகுந்தா, வந்தாயா? ஏன் இவ்வளவு நேரம்? நான் பயந்துவிட்டேன் – குழந்தாய்! பரிட்சை சமாசாரம் தெரிந்தவுடன் திரும்பி வருவதாய்ச் சொன்னாயே?` என்றாள் தாயார்.

`சுவாமி மலைக்கு எல்லாரும் போயிருந்தோம். நான் வரவில்லை என்றேன். பையன்கள் விடவில்லை. போய்த் திரும்பிவர இவ்வளவு நேரமாகிவிட்டது. உற்சவ வேடிக்கையெல்லாம் பார்த்தோம்` என்று முகுந்தன் சொன்னான்.

`நல்லது! எப்படியாவது வந்து சேர்த்தாயே, அதுவே போது. இருக்கட்டும். பரிட்சை என்னவாயிற்று குழந்தாய்?` என்று தாயார் கேட்டாள்.

`அம்மா! நான் முதலாவதாகத் தேறியிருக்கிறேன்`, என்றான்.

`ஐயோ! என் கண்மணியே!` என்று சீதம்மாள் குழந்தையை அனைத்துக் கட்டிக்கொண்டு அழுதாள். அவள் ஏன் அழவேண்டும்? அவன் மனத்தில் அப்போது என்னென்ன எண்ணங்கள் உதயமாயின? இவையெல்லாம் புருஷனை இழந்து, பெற்ற பிள்ளை ஒருவன்மேல் ஆசை வைத்து வளர்த்த தாய்களுக்குத்தான் தெரியும். நான் எழுத முடியுமா?

5

முகுந்தன் தாயார் இப்படி ஆனந்தக் கடலில் மூழ்கிய நான்கே நாட்களுக்குள் ஐயோ உலகமே! இந்த வீடு ஏன் இப்படிப் பாழடைந்து கிடக்கிறது? கதையைச் சுருக்கமாய்ச் சொல்லி முடிக்கிறேன். முகுந்தன் சுவாமி மலையில் தோழர்களுடன் விளையாடிவிட்டு வீடு திரும்பிய இரவே வயிற்றில் வலி கண்டது. பிறகு பேதியாயிற்று. இரவுக்குள் பத்துத் தடவையாயிற்று. ஆனால் யாரும் விஷபேதி என்று நினைக்கவில்லை. ஏதோ சுவாமிமலையில் கடையில் பட்சணம் வாங்கித் தின்றதனால் அஜீரணம் ஏற்பட்டிருப்பதாக எண்ணினார்கள். பையன் வெகு கஷ்டப்பட்டான். கிராமத்தில் நோய் கண்டால் வைத்தியனா மருந்தா ஒன்றும் கிடையாது. அதிலும் ஏழைகள் வீட்டில் காலரா, அல்லது வேறு பெரிய வியாதியை நிறுத்தவோ பரவாமல் செய்யவோ என்ன ஏற்பாடுகள் செய்வதென்று ஒருவருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதற்குச் செளகரியம் ஏது? செலவுக்குப் பணம் எங்கே? இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்யவேண்டும் என்று அறிந்தோர் சொல்வார்கள். புத்தகத்தில் எழுதியிருப்பார்கள். அவற்றில் ஒன்றையும் திக்கற்ற ஏழைகளின் குடிசைகளில் நடத்த முடியாது.

தெய்வாதீனமாய்ப் பையன் பிழைத்துக்கொண்டான். பக்கத்து வீட்டு ஜனங்கள் சிலர் பரிதாபப்பட்டு உதவி செய்தார்கள். பையன் தப்பிப் பிழைத்தாலும் தாயை விஷநோய் பிடித்தது. இரண்டு நாள் யாருக்கும் சொல்லமால் தன் நோயை மறைத்து வைத்துக்கொண்டே பையனுக்கு வேண்டியது செய்து வந்தாள். கடைசியில் தாங்க முடியாமல் போகவே, படுத்துவிட்டாள். பிறகு என்ன செய்யமுடியும்? `ஐயோ என் குழந்தைக்குக் குணமாயிற்றா? அவனை யார் பார்த்துக்கொள்வார்கள்? நான் சாகிறேன்!` என்று எழுந்து உட்கார்ந்து கதறிவிட்டு மறுபடியும் கீழே பிரக்ஞை தப்பி விழுந்தாள். பிறகு நினைவு வரவேயில்லை. கை கால்கள் சிறிது இழுத்தவுடன் உயிர் போய்விட்டது.

6

மேலும் பதினைந்து வருஷம் சென்றது. எல்லாம் அடியோடு மாறிவிட்டது. வேலம்பட்டி பார்ப்பாரத் தெருவில் வீடுகள் எல்லாம் பாழாயின. கோயில் பூஜை செய்யும் கிருஷ்ணபட்டர் மாத்திரமே தம்முடைய வீட்டில் குடியிருந்தார். மற்றவர்கள் எல்லாரும் ஜீவனோபாயந்தேடி ஊரைவிட்டுப் பட்டணக்கரைகளுக்குப் போய்விட்டார்கள். சிலர் கண்டிக்கும், சிலர் பினாங்குக்கும், பெங்களூருக்கும், வேறிடங்களுக்கும், கூலிவேலை தேடிப் போய்விட்டனர். குடியானவத் தெரு மட்டும் அவ்வளவு பாழாகவில்லை. காட்டையும் மாட்டையும் விட்டுப் போக வழியில்லாமல் அவர்கள் இருந்த இடத்திலேயே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

தாயுடன் இலங்கைக்குப் போன மாரியும் சின்னானும் அங்கேயே இருந்து வந்தனர். தோட்டம் சேர்த்தவுடன் தகப்பன் பழையபடி கள்ளுக்கடைக்குப் போக ஆரம்பித்தான். வேலை சரியாய்ச் செய்வதில்லை. சோம்பேறி, குடிகாரன் என்று அவனைச் சில நாளுக்குள்ளாகவே துரத்திவிட்டார்கள். பிறகு வேறு தோட்டத்துக்குப் போனான். அங்கேயும் இதே கதிதான். பிறகு கண்ட கண்ட இடமெல்லாம் அலைந்து பிச்சையெடுத்துக் கொஞ்ச நாள் குடித்து வந்தான். கடைசியில் இன்ன இடம் போனானென்றே தெரியவில்லை.

மாரியும் சின்ன்னும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு தாயுடன் சிக்கனமாய் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். மாரிக்கு இப்போது வயது இருபத்தைந்து. அதே தோட்டத்தில் பிறந்த பெண் ஒருத்தி இருந்தாள். ”உனக்கு இந்த பெண்ணை விட நல்ல பெண் ஊரில் எங்கே கிடைக்க போகிறாள்? இவளை கட்டிக் கொள்” என்று குப்பாயி வற்புறுத்தியதின் மேல் மாரியும் அதற்கிணங்கினான். கல்யாணமாகிச் சில நாளானதும் ஊருக்கு திரும்பக் குடி போகலாம் என்று மாரி யோசித்தான்.

”அம்மா, இந்த நாட்டில் நாம் பதினைந்து வருடம் ஜீவனம் செய்தாகி விட்டது. தகப்பன் போனவன் திரும்பி வரவேயில்லை. அவனுக்காகக் காத்து பயனில்லை.  நாம் ஏன் இனி நம் ஊருக்குப் போக்க் கூடாது? நமக்கு இப்போது என்ன குறைவு? நம்முடைய பணம் சுமார் 200 ரூபாய் கங்காணியிடம் இருக்கிறது. அதை வாங்கிக் கொண்டு வேலம்பட்டிக்கு திரும்பி போய், ஒரு வண்டியும், ஒரு ஜதை மாடும் வைத்து கொண்டு மானமாய் ஜீவனம் செய்யலாம். அம்மா! இந்த ஊர் எனக்குப் பிடிக்கவேயில்லை. பட்டியில் அடைபட்ட மாடுகள் மாதிரி வாழ்வு நடத்துகிறோம். கோயில் கிடையாது. ஒருவன் பெண்டாட்டி ஒருவனுடையவளல்ல. இங்கே ஏன் அம்மா நாம் இனி இருக்க வேண்டும்?” என்று தாயிடம் சொன்னாள்.

“ஆமாப்பா ஆமாம். வேலம்பட்டிக்கே  போய் அங்கே உங்கப்பன் குடிசையிலேயே சாக வேண்டும்  என்றுதான் எனக்கும் ஆசை” என்றாள் குப்பாயி.

அவ்வாறே வேலம்பட்டிக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்தார்கள்.   மாரியும் சின்ன்னும் மேலச்சேரிச் சந்தைக்குப் போய் ஒரு ஜதை நல்ல காளை மாடும், சேலத்தில் ஒரு வண்டியும் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.   அவற்றை வைத்து கொண்டு  சில காலம் மாரி மிகவும் சந்தோஷமாய் வாழ்வு நடத்தினான். குடியானத் தெருவில் ”பார்த்தாயா? கண்டிப்பறையன் மாடும் வண்டியுமாக கொழுத்திருக்கிறான்” என்று பொறாமைப்பட்டார்கள்.

ஆனால் நீண்ட நாள் இப்படி நடக்கவில்லை. கெட்டகாலம் சீக்கிரத்திலேயே வந்துவிட்டது. மாடுகளில் ஒன்று இருந்தால் போல் இருந்து நொண்ட ஆரம்பித்த்து. இன்ன காரணம் என்று தெரியவில்லை. என்ன செய்தும் கால் சரியாகவில்லை. கொண்டலாம்பட்டியில் ஒரு மாட்டு வைத்தியனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து காலுக்கு மருந்து வைத்து கட்டிப்பார்த்தான்.   பிறகு மந்திரம் போட்டுவித்தான். கடைசியில் சூடும் போட்டு பார்த்தான். ஒன்றுக்கும் கேட்கவில்லை.   அந்த மாட்டுக்கு போட்ட பணம் வீணாய்ப் போயிற்று.   வண்டியை ஈடுக்கட்டிக் குடியானவன் ஒருவனிடம் நாற்பது ரூபாய் கடன் வாங்கி கையிலிருந்த பணத்தையும் சேர்த்து வேறொரு மாடு வாங்கினான். இது கொஞ்ச நாள் நடந்து வந்தது.

திடீரென்று அந்தப் பக்கத்து கிராமங்களில் கோமாரி வியாதி பரவலாயிற்று. அனேக கால்நடைகள் இறந்தன.  மாரியின் புது மாடு அந்த நோய் கண்டு ஒரே நாளில் செத்து விட்டது. பிறகு குடித்தனம் போன போக்கை பற்றி எழுதுவானேன்?

கடைசியில் ஒரு குடியானவன் தோட்ட்த்தில் அண்ணணும் தம்பியும் வேலைக்கு அமர்ந்தார்கள்.  எஜமானன் இரவும் பகலும் வேலை வாங்குவான். ஆனால் கூலி மிகவும் குறைவு. எல்லோரும் அரை வயிறு சாப்பிட்டாலும் தள்ளாத தாயைக் காப்பாற்றுவது கஷ்டமாய் இருந்த்து. போதாதற்கு, தம்பி சின்னான் சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.

இப்படி இருக்கையில் பினாங்கிற்கு ஆள் சேர்க்க ஒரு கங்காணி வந்தான்.  சின்னான் அண்ணணிடம் சொல்லாமல் அவன் பின்னோடு போய் விட்டான். நாகப்பட்டினம் போனதும் அண்ணனுக்கு ஒரு கடுதாசி எழுதி போடச் செய்தான். தான் சொல்லாமல் வந்து விட்டது ஒரு பெருங்குற்றம் என்றும் அதற்காக மன்னிக்க வேண்டுமென்றும் பஞ்சம் பொறுக்கமுடியவில்லையாதலால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாமென்று கிளம்பி வந்ததாகவும் அண்ணண், அண்ணி, தாயார் இவர்களுடைய பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்வதாகவும் கடித்த்தில் எழுதியிருந்தது. ஆனால் இந்த வக்கணையெல்லாம் சின்னனுக்கா எழுத தெரியும்?

எழுதி தந்தவனுடைய கைச்சரக்குதான். ஆனால் அண்ணணுக்கு மரியாதையாய்க் கடிதம் எழுதச் சொல்லி அதற்காக இரண்டணா எழுத்து கூலி கொடுத்தது பெருந்தன்மையல்லவா?  படிப்பில்லாத ஏழை ஒருவன் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

கிழவி குப்பாயி,  பாவம் புலம்ப ஆரம்பித்தாள்.  “ஐயோ! இது எல்லாம் குழந்தையாயிருக்கையில் அந்தப் பாப்பாத்தி அடுப்பண்டைபோனாயே, அந்தப் பாபந்தான், அப்பா! அது இன்னும் நீங்கவில்லையே மாரியாயி! நீ எப்போது மனமிரங்குவாய்?  இந்தக் கொடுமை எப்போது தீரும்? கையில் காசு இல்லையே. இருந்தால் அடுத்த நோன்புக்கு ஒரு கோழியாவது தருவேனே,  வேம்பட்டி ஆயாளே!  நானாவது சீக்கிரம் செத்தால் என் கஷ்டம் தீர்ந்துவிடும், என் அறியாமகனைக் காப்பாற்று.  அவனும் அவன் பெண்டாட்டியும் சுகமாயிருக்க வேண்டும்” என்று அவள் சதா உளறிக் கொண்டேயிருப்பாள்.

மாரியின் மனைவி பூவாயிக்கு பதினைந்தே வயதானாலும் வெகு சுறுசுறுப்பாய் வேலை செய்வாள்.  காட்டுக்குத் தைரியமாய்ப் போய் சுற்றித் திரிந்து விறகு கொண்டுவருவாள்.  வெறுமனே ஒரு நிமிஷமும் இருக்கமாட்டாள். ஒழிந்த நேரத்தில் புல் செதுக்குவாள்,  அல்லது எங்கேயாவது கெஞ்சி வேலை செய்து கூலி கொண்டு வருவாள். புல் அல்லது விறகு கொண்டு போனால் இவள் தலைசுமைக்கு கொஞ்சம் அதிக விலையே கொடுப்பார்கள்.  எப்படியோ தன் சாமர்த்தியத்தால் வாரத்தில் இரண்டு மூன்று நாள் தவறாமல் வெள்ளைப் பணமாக இரண்டணாக் கொண்டு வந்து சிரித்த முகத்துடன் புருஷனிட்த்தில் கொடுப்பாள்.

அந்த வருஷத்தில் மழை துளி கூட கிடையாது.  நாலு வருஷமாகவே மழை சரியாகப் பெய்யவில்லை. ஆனால் அந்த வருஷத்தை போன்ற கொடும்பஞ்சம் அதற்கு முன் கிடையாது. கிணறுகளெல்லாம் வற்றிப் போயின. பயிர் பச்சையேயில்லை,  குடிதண்ணீருக்குக் கூடக் கஷ்டமாய்ப் போய்விட்ட்து, அனேகம் பேர் ஊரை விட்டே போய்விட்டார்கள்.

மாரியும் தன் மனைவியுடன் எங்காவது போய் ஜீவனம் தேடலாம் என்று பார்த்தான்.  ஆனால் தாய்,  “நாம் இங்கேயே இருந்து செத்து போகலாம்.  எங்கே போய் என்ன?  தெய்வம் அங்கே காப்பதாய் இருந்தால் இங்கேயும் காக்கும்”  என்று சொல்லி பிடிவாதமாய் மாட்டேனென்றாள். தள்ளாத தாயின் வார்த்தையைத் தட்டமாட்டாமல் மாரி பேசாதிருந்தான்.

சேரியில் இப்போது ஐந்து வீடுகள்தான் காலியாகாமல் இருந்தன.  மற்ற வீட்டுக்காரர் எல்லோரும் ஊரை விட்டே போய்விட்டார்கள்.  சேரியை சேர்ந்த தண்ணீர்க் குட்டை வற்றிப்போய் பல நாளாயிற்று. பக்கத்தில் ஒரு வேளாளன் தோட்டம்,  அதில்தான் ஒரு கிணற்றில் கொஞ்சம் தண்ணீர் இன்னும் இருந்தது.  அந்தத் தோட்டக்காரன் அதில் கமலை கட்டி இறைத்துக் கொஞ்சம் பாக்கி இருந்த பயிரைக் காப்பாற்றி வந்தான். தண்ணீர் இறைத்தானதும் கமலை மாடுகளை அவிழ்த்து விட்டுக் கழுவின பிறகு பறையர்கள் கிணற்றுவாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டியது;  மற்றக் குடியானவர்கள் இவ்வளவு கூட இடங்கொடுக்க மாட்டார்கள்.  ஐந்து வீட்டார் தினசரி எடுத்து கொள்ளும் தண்ணீர்,  காய்ந்து போகும் பயிருக்கு கொஞ்சம் உதவுமல்லவா?  ஆனால் குட்டி கவுண்டன் நல்லவன்,  “பாவம்!  ஏழைப் பறையர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சாகிறார்கள்” என்று இரக்கப்பட்டு அவர்களை தண்ணீர் எடுக்கவிட்டான்.

காலையிலிருந்து பெண்கள் காத்து கொண்டிருப்பார்கள்,  நான் முன்,  நீ முன் என்று சண்டை போடுவார்கள்,  வாய்க்காலில் தோண்டிய பள்ளத்தில் நிற்கும் ஜலம் ரொம்பக் கொஞ்சம்,  ஆகையால் சண்டை,  ஒவ்வொரு நாள் அவர்கள் போடும் சண்டையில் வாய்க்காலில் தண்ணீர் சேறாகிப் போய்விடும்,  “பார்சாமி,  பொல்லாதவள் தண்ணீரைக் கலக்கிவிட்டாள்”  என்று ஒருத்தி மேல் மற்றொருத்தி குடியானவனிடம் புகார் சொல்லுவாள்,  இந்த வேடிக்கையைப் பார்த்து கொண்டு நின்ற குடியானவர்கள்,  “இந்தப் பறையர்கள் வழக்கமே இப்படி”  என்பார்கள்.  பிறகு அந்தப் பெண்கள் சேற்று நீரையே அள்ளி எடுத்து கொண்டு போவார்கள். வீட்டில் குடத்தில் வைத்திருந்தால் பிறகு தெளியலாமல்லவா?

இவையெல்லாம் படிப்பதற்குக் கஷ்டமாகவே இருக்கும். மகாகொடுமை! ஆனால் இவ்வளவும் உண்மையேயல்லவா?  ஏழைத் தீண்டாதாரின் துயரம் இதுதான். உலகத்தில் புண்ணிய பூமியும், தர்ம்ம் என்பதற்குப் பிறப்பிடமுமானது நமது பாரததேசம்,  அன்பும் தெய்வ பக்தியும்,  பாவத்தை கண்டு அஞ்சும் குணமும்,  நம் நாட்டில் வாழும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பானவை. ஆனால் நீசர் என்று பெயரிட்டு சிலரை ஒதுக்கி வைக்கிறோம்.  அக்கொடிய வழக்கத்தின் வெப்பத்தில் நமது தர்ம்ம்,  அன்பு,  தெய்வ பக்தி,  நல்லொழுக்கம் எல்லாம் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அவ்வழக்கம் தொலைய வேண்டும்,  தெய்வம் கொடுக்கும் சுக துக்கங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்து அனுபவிப்பதல்லவா தர்ம்ம?சில பேரில் பொறுக்க முடியாத சுமை போடுவது பாவம் அல்லவா?

7

குட்டி கவுண்டன் தோட்டத்துச் சாலையில் அவன் மக்கள் இருவரும் படுத்திருந்தார்கள்.  இராத்திரிக் காவலுக்கு அங்கே பயிர் ஒன்றுமில்லை.  ஆனால்,  அரை வயிற்றுக்குத் தீனி போட்டு எலும்புக் கூடாயிருந்த நாலு எருதுகளும்,  நாலைந்து வெள்ளாடுகளும் இருந்தன.  தண்ணீர் இறைத்த பரியும் கயிறும் கிடந்தன.  இவைகளை யாராவது தூக்கிக் கொண்டு போய் விடலாமல்லவா?  பஞ்சகாலத்தில் கிடைத்ததைத் தூக்கி விடுவார்கள்.  இதற்காகக் காவல் சாலையில் யாராவது இரவில் படுப்பது வழக்கம்.

நடுநிசி,  உச்சிக்கு மேல் பூரணசந்திரன்.  அந்த வெண்ணிலாவில் காய்ந்து போன வயல் காடுகளும் கூட,  பால் வண்ணத்துடன் அழகாய் தோன்றின.  பகலில்தான் எங்கும் பஞ்சத்தின் கொடிய தோற்றம். இரவில் எல்லாம் ஓய்ந்து அடங்கி மறைந்திருந்தன.  பஞ்சம் கூட இரவில் தூங்குமில்லையா?  மனிதருக்கிருக்கும் கஷ்டங்களுக்கு,  அவன் சற்று நேரம் நினைவற்றுத் தூங்க கூடியதாய் இருப்பது ஒரு பெரிய சகாயமே.

நிசப்தமாயிருந்த அந்த நள்ளிரவில் திடீரென்று நாய் குலைத்த்து. ஒன்று குலைக்கவே எல்லா நாய்களும் குலைக்கத் தொடங்கின.  “யார்?  திருடன்!”  என்று குட்டிகவுண்டனின் சின்னமகன் எழுந்து உட்கார்ந்தான்.  கிணற்று வாரியோடு யாரோ பூவரச மரங்களின் நிழலில் மெதுவாய் நழுவிச் சென்றதாய் தோன்றிற்று.

”எழுந்திரு அண்ணா! யாரோ திருடன் ஓடுகிறான்”  என்று மறுபடியும் சத்தம் போட்டான்.  “என்ன,  என்ன?”  என்று செங்கோடன் கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்தான்.  உடனே  “ஓ மாமா!  ஏ,  இராக்கியாக் கவுண்டா!  ஓ,  காளி!  பரி எடுத்துக் கொண்டு ஓடுகிறான் திருடன். ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!” என்று உரக்கக் கூவிக் கொண்டு ஆள் போன பக்கமாய் ஓடினான்.

இதற்குள் ஊரிலுள்ள நாய்களெல்லாம் குலைக்க ஆரம்பித்து விட்டன.  “தோட்டத்தில் திருடன் புகுந்து விட்டான்”  என்றும்,  “பிடி பிடி”  என்றும் இன்னும் பலவாறாகப் பெருங்கூச்சல் கிளம்பிவிட்டது. பக்கத்துச் சாலைகளில் உள்ளவர்கள் எல்லாரும் எழுந்து ஓடி வந்தார்கள்.  கடைசியில் திருடன் பிடிபட்டான்.  பிடிபட்ட திருடனைப் பார்த்தால் ஒரு பெண் பிள்ளை!  அவள் கையில் மண்குடமும் கயிறும் இருந்தன். திருடியது தண்ணீர்!  கிணற்றில் தன் குடத்தை போட்டுத் தண்ணீர் மொண்டிருந்தாள். “அடேபாவி, பறைப்பிள்ளை வந்து கிணற்றில் குடத்தை விட்டு விட்டதடா” என்று கூக்குரலிட்டார்கள். உடனே, “அடி”, “உதை”, ”கொல்லு” , “உடைபானையை” என்று நாலாபுறமும் கூச்சல் கிளம்பிற்று. பானை ஒரு நிமிஷத்தில் சுக்கு நூறாயிற்று. உதையும் அடியும் ஒன்றின் மேல் ஒன்றாக ஓயாமல் விழுந்தன. பெண் பிள்ளை நினைவு தப்பிக் கீழே விழுந்தாள்.

“அடே, செத்துப் போய்விட்டாள். இனி அடிக்காதேயுங்களாடா” என்றான் இராக்கியாக் கவுண்டன்.

“குழி வெட்டி நாயை மூடுங்கடா” என்றான் இன்னொருவன்.

“ஆமாம், தொந்தரவு இல்லாமல் போகும்” என்றான் மற்றொருவன்.

குழி வெட்டுவது,  மூடுவது என்று பேச்சு கிளம்பியவுடன் எல்லோருக்கும் கொஞ்சம் புத்தி தெளிந்தது.  அடித்து கொண்டே இருக்க முடியாது. அதற்கு ஒரு முடிவு உண்டு என்று உணர்ந்தார்கள்.

”யாரடா இவள்? யாருக்காவது தெரியுமா? பாருங்கள்” என்றான் ஒரு கிழவன்.

“கண்டிமாரி பெண்சாதிடா!  ஐயோ பாவம்!  இவள் நல்ல பிள்ளையாயிற்றே.  இவள் ஏன் இந்த வேலை செய்தாள்?”  என்றான் செங்கோடன்; குட்டிகவுண்டனின் பெரியமகன்.

”நேற்று தண்ணீர் இல்லை போ என்று எல்லா பெண்களையும் விரட்டி விட்டேன்.  ஆகையால் இம்மாதிரி போக்கிரித்தனம் செய்திருக்கிறாள்” என்றான் சின்ன மகன்.

இந்த கொடும்பஞ்சத்தில் சாதியேது,  சாமியேது; எல்லாம் ஒன்றாய்ப் போய்விட்டது. நல்லதுமில்லை,  கெட்டதுமில்லை”  என்று நெட்டையான கவுண்டன் கீழே கிடந்த பெண்ணண்டை நின்று பார்த்துக் கொண்டு சொன்னான்.

”அட! அவள் சாகவுமில்லை, ஒன்றுமில்லை; வெறும் பாசாங்க்கு, உதையடா, உதை விழுந்தால் எழுந்து வீட்டுக்கு ஓடுவான்!  என்று ஒருவன் சொல்லிக்கொண்டு உதைக்கவும் உதைத்தான். மற்றவர்களும் இந்தச் சிகிச்சையைப் பிரயோகித்தார்கள். கொஞ்சம் அசைந்தாற்போல் காணப்பட்டது. ஆனால் எழுந்திருக்கவுமில்லை. பேசவுமில்லை.

`அடே, இந்த நாயைத் தூக்கிப்போய்ச் சேரியில் எறிந்து விட்டு வாருங்கடா` என்றான் இராக்கியாக் கவுண்டன். இராக்கியாக் கவுண்டனுக்குக் கொலைக் கேசு அனுபவம் உண்டு. அதன் கஷ்டம் அவனுக்குக் கொஞ்சம் தெரியும். அவன் செஷன்ஸ் வரையில் ஒரு விசாரணைக்காகப் போயிருந்தவன்.

இராக்கியாக் கவுண்டன் சொன்னபடி, மூன்று நாலு பேர், கீழே கிடந்த பெண்பிள்ளையைத் தூக்கிக்கொண்டு சேரிப்பக்கம் சென்றார்கள்.

8

பெற்றோர்களில்லாத அனாதைக் குழந்தைகளுடைய சரித்திரம் உண்மை விவரங்களுடன் எழுதப்பட்டால் எல்லாருக்கும் மிகுந்த பயன் தருவதாயிருக்கும். நாம் அனைவரும் அவர்களைப் பொன்ற அபாக்கியர்கள் இல்லையானாலும், அவர்களுடைய அனுபவங்களிலிருந்து பல விஷயங்களைக் காற்றறிந்து பயன்பெறுதல் கூடும். முகுந்தனுடைய அனுபவங்களும் அத்தகையனவே. தாய் இறந்து அனாதையாய்ப் போன நாள்முதல், அவன் ஏங்கித் திரிந்து அலைந்து வளர்ந்த கதை ஒரு பாரதமாகும், ஆனால் அவன் தன் சரித்திரத்தை எழுதி வைக்கவில்லை. கேட்டறிந்து எழுதுவது ஆறின கஞ்சியைப் போல ருசியற்றிருக்கும்.

திக்கற்ற குழந்தைகளுக்கு மற்றது ஒன்றுமில்லாமல் போனாலும் தேசம் சுற்றித் திரியும் பாக்கியம் உண்டு. பூகோள சாஸ்திரம் அவர்களுக்கு அனுபவப் படிப்பு. முகுந்தனும் பாரததேசம் முழுவதும் அலைந்து திரிந்து வெகு கஷ்டங்கள் பட்டு எப்படியோ முன்னுக்கு வந்தான். கடைசியாக டாக்டர் பரீட்சையில் தேறி, ஒன்றிரண்டு ஊர்களில் இருந்துவிட்டு, பிறகு சொந்த ஊருக்கே ஆஸ்பத்திரி டாக்டராக வந்து சேர்ந்தான்.

ஒரு நாள் கமலாபுரம் ஆஸ்பத்திரியில் டாக்டர் முகுந்தன் மேஜைமீது மருந்து கொடுத்த கணக்குகளை வைத்துக்கொண்டு ஒத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வருஷாந்தரக் கணக்குத் தயார் செய்து அனுப்ப வேண்டிய நாள் நெருங்கியிருந்தது. அபோது வெளியே நான்கு ஆட்கள் தாங்கள் தூக்கிவந்த கயிற்றுக் கட்டிலைக் கீழே மெதுவாக வைத்து, `சாஅ அமி!` என்றார்கள். அளபெடை நீட்டம் காதில்விழ, `பறையர்கள் போலிருக்கிறது. என்ன? கொலையா? போய்ப் பாரும்` என்று முகுந்தன் கம்பவுண்டருக்குச் சொன்னான்.

அவ்வூர்ப் பள்ளிகூடத்தில் தலைமை உபாத்தியாயர் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் தினம் காலையில் தேகாரோக்கியத்துக்காகக் கொஞ்ச தூரம் நடந்துவிட்டு ஆஸ்பத்திரியில் டாக்டருடன் அரைமணி நேரம் வெறும் பேச்சுப் பேசிவிட்டுப் போவது வழக்கம்.

`வாரந்தவறாமல் இந்த ஊரில் ஒரு கொலை. ஒரு பிரேத விசாரணை. பொல்லாத ஊர் இது; நான் இருந்த வேறு எந்த ஆஸ்பத்திரியிலும் இப்படியில்லை`, என்றான் முகுந்தன்.

`படிப்பில்லாத ஜனங்கள். இந்த ஜில்லாவில் ஒன்றுமில்லாததற்கெல்லாம் சண்டை போடுவார்கள். வாய்ப் பேச்சிலிருந்து உடனே அடி, குத்து, கொலை ஏற்பட்டு விடுவது சர்வ சாதாரணம். ஆரம்பப் படிப்புப் பரவினால்தான் இவைகளெல்லாம் இருக்காது இருக்காது`, என்றார் உபாத்தியாயர்.

இதற்குள் கம்பவுண்டர் முத்துப்பிள்ளை திரும்பி வந்து `பிரேதமல்ல; பெண்பிள்ளையைப் பலமாய் அடித்துக் கட்டிலில் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள்.`, என்றார்.

`வயது என்ன?`, என்றார் ஹெட்மாஸ்டர். இந்தக் கேள்வியைக் கவனியாமல் முகுந்தன், `உள்ளே கொண்டு வந்து மேஜைமேல் இறக்கச் சொல்லு` என்றான்.

ஹெட்மாஸ்டர் புன்னகையுடன், `ஏதோ திருட்டு சிநேகம். அதிலிருந்து வந்த ஆபத்தைப் போல் தோன்றுகிறது`, என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.

`இருந்தாலும் இருக்கலாம்; போய்ப் பார்ப்போம்` என்று முகுந்தன் எழுந்து மேஜையண்டை போனான். பெண்ணைக் கொண்டு வந்த ஆட்கள் அவளை மெல்லக் கட்டிலிலிருந்து தூக்கி மேஜைமேல் படுக்க வைத்தார்கள்.

முகுந்தன் காயங்களைப் பார்த்துக்கொண்டே, `பலமாய் அடித்திருக்கிறார்கள்` என்றான். நன்றாகப் பரிசோதித்ததில், இரண்டு கையெலும்புகள் ஒடிந்து போயிருந்ததாகத் தெரிந்தது. மற்றவை மேலான தோல் காயங்கள்.

பெண்ணைத் தூக்கி வந்த ஆட்களில் ஒருவன் மாரி. `பிழைப்பாளா, எஜமானே?` என்று அவன் கேட்டான்.

`உனக்குச் சொந்தமா?` என்று கேட்டான் முகுந்தன்.

`என் வீட்டுக்காரி சாமி! பிழைப்பாளா?`, என்று கண்ணில் நீர் ததும்ப மறுபடியும் கேட்டான்.

`எல்லாம் சரியாய்ப் போகும், பயப்படாதே. ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் வைத்திருக்க வேண்டும்`, என்றான் முகுந்தன்.

இதைக் கேட்டதும் மாரி, `ஐயோ!` என்று கதறி, `ஒரு மாதம் கஞ்சிக்கு என்ன செய்வேன்?` என்றான்.

`பைத்தியக்காரா! கஞ்சி நாங்கள் வார்ப்போம். பயப்படாதே!` என்றான் முகுந்தன். அப்போது கூட வந்திருந்தவர்களில் ஒருவன்,`அடே மாரி! உனக்குத் தெரியாதா? நம்ம ஊர் சாமியடா. டாக்டர் துரை நம்ம வேப்பமரத்தையா மகன்! நம்மைக் காப்பாற்றுவார். எஜமான் வாசி பண்ணிடுவார்`, என்றான்.

`கஞ்சி வார்த்துக் குணப்படுத்தி விடுவார். உனக்குக்கும் கூடச் சோறு போடுவார். ஏண்டா அழுகிறாய்?` என்றான் மற்றொருவன்.

`நம்ம எஜமான் நம்மைக் காப்பாற்றுவாரடா` என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்து.

மாரி இப்போது நிமிர்ந்து டாக்டர் முகத்தைப் பார்த்தான். `சுவாமி, நீங்கள் முகுந்தையா அல்லவா?` என்று கேட்டான்.

`ஆம், ஆம்` என்று முகுந்தன் அடிப்பட்டவளுடைய ஒடிந்த கைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

`நான் போய் வருகிறேன், டாக்டர்வாள்!` என்று ஹெட்மாஸ்டர் நமஸ்காரம் செய்தார்.

`ஆகா, சரி நமஸ்காரம்` என்று முகுந்தன் அவருக்குச் சொல்லிவிட்டு, `என்ன சண்டை? ஏன் இந்த அடி? சமாசாரம் சொல்லு தம்பி`, என்று மாரியைக் கேட்டான்.

அதை சொல்லும்போது எல்லாரும் சேர்ந்தாப்போல பேசியபடியால் விவரம் தெரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமாய்த்தானியிருந்தது.

9

`முத்துப்பிள்ளை! ஏதாவது பூப்பறித்து வைத்திருக்கிறீரா என்ன?` என்று கேட்டார் டாக்டர்.

`இல்லை ஐயா! பூவேது? பறிப்பதேது? செடியெல்லாம் காய்ந்து கிடக்கிறது` என்று கம்பவுண்டர் சொன்னார்.

`இந்தப் பெண்ணண்டை வந்தால் கம் என்று மல்லிகை வாசனை வருகிறதே. என்ன காரணம்? அம்மா கொய்து வைக்கும் மல்லிகைப் பூ வாசனை மாதிரியே இருக்கிறது` என்று முகுந்தன் தன் தாய் ஞாபகத்துடனே பூவாயியின் காயங்களுக்கெல்லாம் மெதுவாக மருந்து தடவினான். பிறகு எலும்பு உடைந்த கைகளுக்குச் சிம்புகள் வைத்துக் கட்டினான்.

`எப்படி இருக்கிறதம்மா?` என்று அவளைக் கேட்டான்.

`அப்பா!` என்று அவள் பெருமூச்சுவிட்டு, `இப்போது கொஞ்சம் பொறுக்கலாம், எஜமானே! சாமி உன்னை மகாராஜனாக்கட்டும். நீ சுகமாயிருக்க வேண்டும் எஜமானே!` என்றாள்.

இவ்வார்த்தைகள் அந்தப் பெண் வாயிலிருந்து வந்த போது அவன் பார்வையும், அவள் முகத்தில் பூத்த புன்முறுவலும், பெற்ற தாய் தன் குழந்தையைக் கண்டு ஆனந்தப்படும் போது தோன்றும் முகமலர்ச்சியாகவே இருந்தது. முகுந்தனுக்கு ஏனோ தன் தாயின் நினைவு மேன்மேலும் அதிகரித்து வந்தது.

`இது என்னவோ தெரியவில்லை. இவளண்டை வரும்போதெல்லாம் அம்மா நினைவு மேலிடுகிறது` என்று மறுபடியும் தனக்குள்ளே சொல்லிக்கொண்டு முகுந்தன் எழுந்து கைகழுவப் போனான். எங்கே போனாலும் மல்லிகை வாசனை நிறைந்தாற்போலிருந்தது. முகுந்தன் தாயாருக்கு மல்லிகைப் பூவில் அதிகப் பிரியம். புருஷன் இறந்து தலையில் பூ வைத்துக்கொள்ள முடியாமல் போன பிறகுங்கூட, தினம் தவறாமல் எங்கிருந்தாவது மல்லிகைப் பூ பறித்துக்கொண்டு வந்து பூஜைக்கு வைப்பாள். வீடு முழுவதும் வாசனை வீசும். இன்று முகுந்தன் எங்கும் அவ்வாசனையைக் கண்டான்.

இம்மாதிரி சில சமயங்களில் அகாரணமாக ஏதோ ஒரு வாசனை அல்லது ஒரு பாட்டின் இசை மனத்தில் திடீர் என்று தோன்றி, அதனுடன் குழந்தைப் பிரயாத்தின் நினைவு உதிப்பது பலருடைய அனுபவம். சில வேளைகளில் ஏதோ முன்னால் மோந்த மணம், எப்போதோ கேட்ட பாட்டு என்று மாத்திரம் நினைவு தோன்றுமேயொழிய எப்போது எந்நாளில் நுகர்ந்தது என்று சொல்ல முடியாமலிருக்கும். இவை பூர்வஜன்ம நினைவுகள் என்று சிலர் சொல்வார்கள். தான் குழந்தையாயிருந்த போது வேலம்பட்டி வீட்டில் தாயுடன் விளையாடின பருவம் இன்று முகுந்தன் மனதை விடாமல் கவர்ந்தது.

`இதென்ன ஆச்சரியம்! இந்த மல்லிகைப்பூ வாசனை விட மாட்டேன் என்கிறது. ஒரு வேளை இறந்தவர்கள் மறுபடியும் பிறக்கின்றார்களென்று சொல்லுகிறார்களே,அம்மாதான் இந்தப் பெண்ணாய்ப் பிறந்தாளோ என்னவோ? யார் இல்லையென்று சொல்லமுடியும்?` என்று இந்த மாதிரி எண்ணிக்கொண்டு முகுந்தன் மறுபடி எழுந்து அந்தப் பெண்ணின் கட்டினண்டைப் போனான். கண் மூடியிருந்தவள் கண்ணைத் திறந்து இவனைப் பார்த்தாள். அந்தப் பார்வை மறுபடியும் இவனுக்குத் தாயார் நினைவை உண்டாக்கியது. மீண்டும் மல்லிகைப் பூ வாசனை குப் என்று வீசிற்று.

10

படுத்ததும் தூங்கிப்போவது முகுந்தன் வழக்கம். இந்த வித்தையை அவன் வடக்கே சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு யோகியிடம் கற்றுக்கொண்டான். படுத்த உடன் தூக்கம் வராமல் எண்ணங்கள் பல தொடர்ந்து தொடர்ந்து வருவது எல்லாருக்கும் சாதாரண அனுபவம். முகுந்தன் அவ்வெண்ணங்களை விரட்டி, மனத்தையடக்கிப் படுத்தவுடம் தூங்கிப் போகப் பயின்றிருந்தான். ஆனால் இன்று அது பலிக்கவில்லை. என்ன முயற்சி செய்தும் தூங்க முடியவில்லை. சிறிது நேரம் புரண்டு புரண்டு பார்த்துவிட்டுக் கடைசியில் எழுந்து உட்கார்ந்து விளக்கேற்றிப் புத்தகத்தை எடுத்துக்கொண்டான். அது, இறந்துபோன நண்பன் ஒருவன் கொடுத்த பகவத்கீதைப் புத்தகம். அதைப் பிரித்ததும் படிக்க ஆரம்பித்தான். இரண்டாவது அத்தியாயம் 22 ஆம் சுலோகத்துக்கு வந்தான்:

`ஒருவன் நைந்துபோன துணியை எறிந்துவிட்டுப் புதிய துணியை உடுப்பதுப்போல, தேகத்தில் வசிக்கும் ஆன்மாவானது பழுதுபட்ட தேகத்தை விட்டு வேறு புதிய தேகத்தை அடைகிறது`

முகுந்தனுக்குத் தன் தாயார் நினைவு வந்தது.

`ஆமாம்; ஆனால் இறந்தவனுக்கு மறுபிறப்பில் என்ன தேகம் கிடைக்கும்? நினைத்த தேகம் எடுக்க முடியுமா? அது முடியாது. தான் செய்த நன்மை, தீமை, உபகாரம், அபகாரம் இவைகளை ஒட்டியே புது ஜன்மம் கிடைக்கும். மனிதனோ, பிராணியோ துன்பத்தில் அடிபடுவதை அடிக்கடி நாம் காண்கிறோம். நம்மைத் துக்க சாகரத்தில் மூழ்கடித்துவிட்டு இறந்து போன நமது தாயே, தகப்பனே, அண்ணனே மறுபிறப்பில் அந்த உருவம் எடுத்திருக்கலாமல்லவா? ஆதலில் துன்பப்படும் மனிதனுக்காகட்டும், பிராணிக்காகட்டும், நாம் அன்புடன் ஆதரவளித்து நோயைத் தீர்க்க முயல வேண்டும். யாராவது பொருளோ, பதவியோ அடைந்து சுகமாயிருப்பதைக் கண்டு நாம் பொறாமைப்படுகிறோமே, அது என்ன அறியாமை? ஒரு வேளை, நமக்கு மிகவும் பிரியமாயிருந்து அகாலத்தில் இறந்து போன எவருக்காக நாம் இன்னும் துக்கப்படுகிறோமோ, அவரே, மறு ஜன்மம் எடுத்து தாம் முன்செய்த நற் கருமங்களின் காரணமாய் அந்த நல்ல பதவியையோ, பொருளையோ அடைந்திருக்கலாமல்லவா? இப்படி முகுந்தன் தனக்குத்தானே வியாக்கியானம் சொல்லிக்கொண்டான். `

இந்தக் கீதா சுலோகத்தை இதற்குமுன் பலதரம் அவன் படித்ததுண்டு. புதியதொன்றுமில்லை. ஆனால், சில சமயங்களில் நாம் படிக்கும் சுலோகமோ, பாட்டோ, குறளோ முன்னெப்போதுமில்லாத புதுமைத் தெளிவுடன் விளக்கமாகிறது. இந்தப் பகவத்கீதை சுலோகம் முகுந்தனுக்கு அவ்விதம் இன்று விளங்கிற்று.

`வயதினாலோ, நோயினாலோ மெலிந்து உடல்தான் இறந்துபோகிறது. ஆனால், நோயும், மூப்பும் இல்லாத ஆத்மாவும் அத்துடன் இறந்துப்போகுமோ? அதெப்படி முடியும்? அம்மாவின் உடல் இறந்தாலும் அவள் மறுபடியும் வேறு உடலில் பிறந்தே இருக்க வேண்டும்` என்றிவ்வாறு இடையே பற்பல எண்ணங்கள் எண்ணிக்கொண்டே படித்துக்கொண்டிருந்தான்.

`அப்பா, முகுந்தா! குழந்தாய்! சாப்பிட வருகிறாயா?` என்று அம்மா சமையல் உள்ளிலிருந்து கூப்பிட்டாள்.

அவள் குரலே! அதில் சந்தேகமில்லை! அதென்ன அதிசயம்! இவ்வளவு நாள் இவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து வருந்திக்கொண்டிருந்தேனே? இதோ அவள் குரல்! அவளே! நான் ஊர் ஊராய்ச் சுற்றியது, கஷ்டப்பட்டது, எல்லாம் வெறுங் கனவு. அம்மா செத்துப் போகவில்லை; உயிருடன் இருக்கிறாள். பள்ளிக்கூடத்துக்குப் போக நேரமாயிற்று. இனி ஒரு நாளும் அழுக்குத் தண்ணீர் குடிக்கமாட்டேன். எனக்குக் காலரா வந்தாலும் அவளை என்னருகில் வர விடமாட்டேன். ஐயோ! இதென்ன சந்தோஷம்? அம்மா உயிருடன் இதோ இருக்கிறாளே! அம்மா! கிட்டவா!

எங்கேயோ அவசரமாய்க் குடம் எடுத்துக்கொண்டு வேகமாய்ப் போகிறாள். என்னையும் வாவென்று அழைப்பதுபோல் கையினால் சைகை காட்டுக்கிறாள். அவசரமாய்ப் போகிறாள். இதென்ன சேரிக்குள் ஓடுகிறாள்! ஐயோ, நில் , அம்மா நில் ஏன் ஓடுகிறாய்! அதோ சேரிக்குள் போய்விடுகிறாள். அங்குள்ளவர்கள் எல்லாரும் சுற்றிக்கொண்டு அடிக்கிறார்கள். `வந்தாயா சேரிக்குள்? பாப்பாத்திக்கு இங்கென்ன வேலை?` என்று காட்டு மிருகங்களைப் போல கூக்குரலிட்டுக்கொண்டு தடி எடுத்து வந்து மனம் போனபடி அடித்து, எலும்பை நொறுக்கி விடுகிறார்கள். கயிற்றுக் கட்டிலில் போட்டு நாலு பேர் தூக்கிக்கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் போடுகிறார்கள். ஐயோ! அம்மா!

என்ன புத்தி மாறாட்டம்? காலரா கண்டு, பாவம் படுத்த படுக்கையாக அல்லவா இருக்கிறாள்? உடம்பில் சொல்ல முடியாத வலி. கை கால் இடுப்பு வயிற்றில் பொறுக்க முடியாத நோவு. ஐயோ, அம்மாவைத் தூக்கிப் போகிறார்களே, என்னால் எழுந்திருக்க முடியவில்லையே! `முடிந்து போயிற்று` என்கிறார்களே. என்ன? அம்மாவுக்கு என்ன? ஏன் பேசாதிருக்கிறாள்? செத்தா போய் விட்டாள்? எனக்கு இனித் தாய் இல்லையா? ஐயோ! என்ன செய்வேன்?

திடுக்கிட்டு முகுந்தன் கண் விழித்தெழுந்தான். நாற்காலியிலேயே தூங்கிப் போனபடியால் பகவத்கீதைப் புத்தகம் கீழே விழுந்தது. கமலாபுரம் ஆஸ்பத்திரியில் இருப்பதுதான் உண்மையாகவும், மற்றவையெல்லாம் கனவாகவும் முடிந்தன. எழுந்து படுக்கையில் படுத்துக்கொண்டு மறுபடியும் தூங்கிப்போனான்.

11

பூவாயியின் காயங்களையெல்லாம் ஆற்றிக் கையெலும்பைக் குணப்படுத்த ஒரு மாதத்திற்கு மேலாயிற்று. மிக்க அன்புடனும் ஆதரவுடனும் முகுந்தன் மருந்து போட்டுப் பார்த்து வந்தான்.

`தம்பி, மாரி, நான் ஒன்று சொல்லுகிறேன். கேட்கிறாயா?` என்றான் முகுந்தன்.

`சொல்லு எஜமானே!` என்றான் மாரி.

`நாம் சிறு பையன்களாக இருக்கையில் என்னை ஒரு பெரிய குரங்கின் கையியிலிருந்து காப்பாறினாய் அல்லவா? அப்போது என் தாய் அதற்காக உன்னை அடித்துத் துரத்தினாளல்லவா?`

`ஏதோ நடந்தது. அது வெகு நாளாயிற்று, சாமி! இப்போது என் வீட்டுக்காரியின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தாயே. என் வீட்டில் விளக்கு வைத்தாயே, எஜமானே!`

`மாரி, செத்துப் போனவர்கள் திரும்பிப் பிறந்திருக்கிறார்களென்று உனக்குத் தெரியுமா? நல்லதோ, தீயதோ, செய்ததன் பலன்களை அனுபவிக்க மறு ஜன்மம் எடுப்பது தெரியுமா?`

`ஆமாம் எஜமான்! அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். ஆண்டவன் எல்லாம் பார்த்து வருகிறான். ஒருவரையும் விடமாட்டான். அவனுக்கு மேல் யார்?`

`என் தாயார் எனக்குச் செய்தது பெருந்தவறு. அதற்காக அவள் இப்போது வேறு ஜன்மம் எடுத்துக் கஷ்டப்படுகிறாள் என்றே நினைக்கிறேன். அதற்காக ஒரு நோன்பு இருக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்`

`சொல்லு, சாமி` என்றான் மாரி.

`இப்போது உங்களுக்கெல்லாம் மிகவும் கஷ்டகாலம் கொடும் பஞ்சம். நீயும் உன் மனைவியும் என் வீட்டில் என்னுடன் இருங்கள். எனக்குப் பந்துக்கள் இல்லை. நீயும் பூவாயியும் எனக்குத் தம்பியும் தங்கையுமாயிருக்க வேண்டும்` என்றான் முகுந்தன்.

மாரிக்கு ஒன்றும் புரியவில்லை. `சாமி, நாங்கள் எஜமானுக்குத் தம்பியும் தங்கையும் எப்படி ஆவோம்? முடியாது எஜமானே` என்றான்.

அதற்கு முகுந்தன், `மாரி, உங்களை இப்படிக் கேவலமான வாழ்வு நடத்தும்படி மற்றவர்கள் வைத்திருப்பது பெரும் பாவம். அதற்காகவுந்தான் இந்த நோன்பு நிச்சயித்தேன்; நீ மறுக்கக்கூடாது` என்றான்.

oOo

அடிமட்டத்து ஏழை மக்களின் தாங்கொணாத் துயர் அறிந்து ‘மது விலக்கை’க் கொண்டு வந்து லட்சோப லட்சம் வீடுகளில் விளக்கும், அடுப்பும் ஏற்றிவைத்த ‘இந்திய மது விலக்கு இயக்கத்தி’ன் தந்தையான ராஜாஜி (10-12-1878-25-12-1972) எழுதியது
சுமார் 80,90 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட இந்தக் கதை சமுதாயத்தின் கடைசித் தட்டு மக்களைப் பற்றியது. பிரசாரக் கதை என்றாலும் அதன் உள்ளடக்கத்தின் கனிவால் ஓர் இலக்கிய அமைதியும், அழகும், தீவிரமும் உள்ள கதை. .
பின்னர் 1970 களில் ராஜாஜி மறைவுக்குப் பின் ஆதித்தனாரின் ‘ராணி முத்து’ வெளிக் கொணர்ந்த ‘திக்கற்ற பார்வதி’ நூலில் இக்கதையும் இடம் பெற்றது. அப்போது இக்கதைக்கு தரப்பட்ட தலைப்பு : முகுந்தன். இக்கதைகள் ஆங்கிலத்தில் Stories for the innocent’ என்று வெளியாகையில் அதில் தரப்பட்ட தலைப்பு ‘Jasmine Flowers’. காலத்துக்கேற்ப தலைப்பை மாற்றுகையில் ‘மல்லிகை மலர்கள்’ என்கிற தலைப்பே ‘முகுந்தன்’ என்கிற தலைப்பை விட இன்னும் பொருத்தமாகவும், பொயடிக் ஆகவும் இருக்கின்றது.
ராணி முத்து கலெக்ஷனின் முன்னுரையாக ஆசிரியர் சிவந்தி ஆதித்தன் எழுதியது : ‘ மேதை ராஜாஜி எழுதிய கதைக்கு முன்னுரை எதற்கு? எல்லா ‘உரை’யும் இதில் இருக்கிறது.’
‘திக்கற்ற பார்வதி’ 40 வருடங்களுக்கு முன் திரைப்படமாக வந்தது. அதைப் பற்றி ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்ரிகையில் திரு பரத்வாஜ் ரங்கன் எழுதிய கட்டுரை இதோ.
ஒரு முறை கல்கியிடம் ரஸிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் சொன்னது : “கல்கி, உங்கள் நடையும், பாணியும் ‘தாக்கா மஸ்லின்’ போல மென்மையாக, ம்ருதுவாக இருப்பவை. ராஜாஜியுடையவையோ அவர் அணியும் கதர் போல கடினமாக இருக்கும்; ஆனால் உள்ளடக்கத்தால் புனிதமான, தூய்மையானவை.” – ஜஸ்டிஸ் மகராஜனின் சாஹித்ய அகாடமி உரை ( 7-2-1979)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.