குலுக்கல்
ரொம்பவும் யோசிக்காதே
எதையும்
சுவர்களுடன் பேச
தலையைப் பிய்த்துக்கொள்ள
சட்டையைக் கிழித்துக்கொள்ள நேரும்
ஒரு காட்டில்
தர்க்க ரீதியாக நிகழாது
எதுவும்
புசிக்க உணவு
உடுத்த உடை
வசிக்க நிழல் கிடைத்ததா?
சந்தோஷப்படு
அவனைப்போல்
இவனைப்போல்
நாமாகமுடியாது
குலுக்கலில்
நமக்கு பரிசு விழவில்லை
குலுக்கல்
விதிகளுக்கு கட்டுப்படாதது
நின்றது நின்றபடி
திருப்பதிசாமி
தினமொரு கோடி சம்பாதிக்கிறான்
சிவசாமியைப்பார்
கால்வலிக்க ஆடினாலும்
கையில் தனரேகையில்லை
அதனால் சத்யநாதா
oOo
உள்ளே வெளியே
கதவை மூடு
தெருநாற்றம்
உள்ளே வரும்
கதவைத் திற
அறைநாற்றம்
வெளியேபோகும்
கதவைத் திறக்காதே
கதவை மூடாதே
கதவைத் திறப்பது
என் உரிமை
கதவை மூடுவது
என்னுரிமை
கதவைத் திறந்தால்
கட்டையாலடிப்பேன்
கதவை மூடினாலுன்
வயிற்றைக் கிழிப்பேன்
என் கட்சிக்காரன்
ஏமாளியா
என் கட்சிக்காரன்
இளிச்சவாயனா
வன்முறை தவிருங்கள்
வழக்காட்டுங்கள்
இருதரப்பு வாதங்களைக்
கேட்டதில்
கதவுதான் கலகத்துக்கு
காரணமென்று
நீதிமன்றம் கருதுகிறது
கதவையகற்றிவிடுமாறு
தீர்ப்பளிக்கிறது
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

குலுக்கல்
உள்ளே வெளியே
திரு. லாவண்யா அவர்களின் கவிதைகள் நன்றாக இருந்தது. குறிப்பாக ‘குலுக்கல்’ கவிதை மிகவும் ரசித்தேன்.
தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்.