மகரந்தம்

இரும்புக்கை மாயாவியும், எந்திர இரும்புக்கையும்:

1775260

இரும்புக்கை மாயாவியை முத்துக்காமிக்ஸ் ரசிகர்களுக்கெல்லாம் தெரியும். 1970களில் சக்கை போடு போட்ட காமிக்ஸ் அது, அதில் இருக்கும் செயற்கை கரம் ஒரு அறிவியல் அற்புதம். தானாக இயங்கும். அதில் ரேடியோ துப்பாக்கி மயக்க வாயு எல்லாம் உண்டு. ஆனால் காமிக்ஸின் கற்பனையுடன் ஒப்பிடுகையில், நம் காலத் தொழில்நுட்பம் மெது மெதுவாக, ஆனால் படு நிச்சயமாக அதே திசையில் வளர்கிறது. ரோபாட்களுக்கு மனிதக்கை போன்ற ஒரு கையை அளிப்பது குறித்த இந்த ஆய்வினைப் பாருங்கள். நாளைக்கு கைகளை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இதே போல ஒரு கையை அளிப்பதும் சாத்தியமாகக் கூடும். யாரறிவார், அவர்களுக்கு மின்சாரம் பாய்ந்தால் மாயமாக மறையும் மாயாவி வலிமையும் வாய்க்கலாமோ?

http://spectrum.ieee.org/automaton/robotics/humanoids/dlr-super-robust-robot-hand

ரணங்களை குணமாக்கும் ‘ரோபோட்டிக்’ மருந்து:

roboticnanodrug

நீரிழிவு நோயால் காலில் ஏற்படும் ரணங்கள் அவ்வளவு எளிதில் குணமாவதில்லை. சில அரிதான சமயங்களில் இந்த ரணங்கள் மொத்தமாகக் காலையே வெட்டி நீக்குவதில் கொண்டுபோய்விடுகின்றன. இப்போது அதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வரும் எனத் தெரிகிறது. ’Growth factors’ என்றறியப்படும் சில புரதங்கள் இந்த ரணங்களைக் குணப்படுத்த உதவுகின்றன என்பது பழைய செய்தி. ஆனால் இந்தப் புரதங்களை அவ்வளவு எளிதில் சுத்திகரிக்க முடியாது என்பதே இத்திசையில் மருத்துவ ஆராய்ச்சி எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் ஜெரூசலம் யூனிவர்சிட்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனட்டிக்-தற்குறிப்பேற்றப்பட்ட புரதம் (genetically-engineered protein) உடலுக்குள் செலுத்தப்பட்டு இந்த ரணங்களை குணமாக்க உதவுகிறது. இதற்கு ‘ரோபோட்டிக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://www.gizmag.com/robotic-drug-heals-chronic-wounds/17844/

சிரபுஞ்சியின் வேர்ப்பாலங்கள்: உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி, அஸ்ஸாமில் உள்ள சிறு ஊர் என்று பள்ளியில் படித்தபோது அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். சில வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் ‘ஆகும்பே’ அந்த இடத்தைப் பிடித்தது. சிரபுஞ்சியில் நடுவில் கொஞ்ச காலம் மழை குறைந்திருந்தது. சிரபுஞ்சி அருகில் ரப்பர் மரங்கள் பயிரிடப்படுகின்றன, அது காசி மலை மக்கள் வாழும் இடம், அதில் வேறு சில அதிசயங்கள் இருக்கின்றன என்பது இந்த அமெரிக்க வலைப் பத்திரிகையான ஸ்லேட் இதழின் ஒரு கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் சில ஒளிப்படங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில் ஒரு மூதாட்டி ஒரு நதியின், இல்லை ஒரு ஓடையின் கரையில் நிற்கிறார். அவருடைய காலடியில் ஓடும் தண்ணீரின் துல்லியமும் நிறமும் மனதை அள்ளுகின்றன.

root-bridges-cherrapungee2240large_slideshow

மரங்களின் வேர்களால் கட்டப்பட்ட பாலங்கள் இந்தச் சிறுநதியின் குறுக்கே கடந்து போக மக்களுக்கு உதவுகின்றன. என்னவொரு அதிசய அனுபவம் அது!

http://atlasobscura.com/place/root-bridges-cherrapungee

அடித்துக்கொல்லும் பண்பாடு – தொடரும் கொலைகள்…: bangladeshi-whipping-vict-007

சில இதழ்களுக்கு முந்தைய மகரந்தம் பகுதியில் இரானியில் கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணைக் குறித்த விவரணப் படத்தைப் பற்றிய தகவலைப் படித்திருப்பீர்கள். மிகவும் வருத்தமளிக்கும் வகையில் இந்தியாவுக்கு வெகு அருகிலிருந்தே இன்னொரு ’தண்டைக் கொலை’ குறித்த செய்தியும் மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது. பங்களாதேஷில் பதினான்கே வயதான ஒரு சிறுமி ‘கள்ளத்தொடர்பு’ வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சாட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் அச்சிறுமியின் பெற்றோரின் கண் முன்னே… இதை குறித்த கார்டியன் செய்திக்குறிப்பு இங்கே.

http://www.guardian.co.uk/world/2011/feb/04/bangladeshi-girl-whipping-fatwa

எத்தனையோ தணிக்கைகளையும் மீறி சர்வதேச ஊடகங்கள் வழியே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கசியும் இந்த தண்டனைகளை இத்தனை கொடூரமானவை என்றால், வெளியுலகம் அறியாமல் கிராமப் பஞ்சாயத்துகளால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை, எத்தனை!


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.