உடல்
மெல்லிய இசை இழையும்
ஒரு பின்னிரவில்
நீரோடு மிதந்து செல்லும்
உதிர்ந்த சருகு
மிதமான காற்றில்
தன் நகர்தலின் வலி அறியாது
அசைகிறது காகிதம்
மெல்லக் கேட்கும் மூச்சொலியில்
பொதிந்து கிடக்கும் வேகத்தை
பேரிரைச்சலாக்கிக் காட்டுகிறது
தத்தித் தத்தி நகரும் கடிகார முள்
பெரும் உறக்கத்துடன்
திறந்து கிடக்கும் விழிகளில்
சத்தமின்றி
தோன்றித் தோன்றி மறையும்
தொலைக்காட்சி வெளிச்சம்
ஏதோ கனவு கண்டு
தானறியாமல் அவள் சிரித்த மின்னலுடன்
மலரும் தாழம்பூ வாசமதில்
அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது
ஆறுதலை நாகம்
![]()
நான்
யாருக்காகவோ
உருவாக்கி வைத்திருந்த
வார்த்தைகளை பொறுக்கி எடுத்து
பேசக் கற்றுக்கொள்ளும்
மகன் மீது எரிந்து விழுகிறேன்
வார்த்தைகள் தரும் அர்த்தங்கள்
கானகமெங்கும் முள்ளாய் பரவ
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிந்தவன் கண்முன்னே
பைக்கில் ஏறி உட்கார்ந்து
உதடு சுளுக்கிச் சிரிக்கிறான்
என்னை முறைக்கும்
மனைவியைப் பார்க்காத
பாவனையில் வெளியேறும்
என்னை வழி மறிக்கும் மகன்
அம்மாவின் வார்த்தைகளை ஒப்புவிக்கிறான்
உனக்கு யார் மீது கோபம்?
![]()
இன்னும் சில கிறுக்கல்கள்
பொழுது போகாத நேரத்தில்
அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்
சுவற்று ஓவியங்களில் இருந்து
வீட்டுக்குள் ஓடி வந்தன
பசுவொன்றும் அதன் கன்றொன்றும்
அவற்றின் விசித்திர உருவத்துடன்
என்னைச் சுற்றி அத்தனை பேரும் நடனமிட
என் ஓவியத்தில் இருந்து நான் இறங்கி வருகிறேன்
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் என்னைப் பார்க்க
எனக்கே பாவமாக இருக்கிறது
இடி இடிக்கும் ஒரு நொடியில்
அத்தனை பேரும் ஓவியமாகிப் போனார்கள்
வீடெங்கும் கிறுக்கும் குழந்தையை
இனி திட்டக்கூடாது என நினைத்துக்கொண்டே
நான் என் ஓவியத்தைத் தேடி ஓடுகிறேன்
![]()
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
