'பெண்களின் விடுதலை' – யதுகிரி அம்மாள்

“நீங்கள் என்ன சொன்னாலும் பெண்களால் தான் இந்த தேசம் நின்றிருக்கிறது. நீங்கள் மில் வேஷ்டி உடுத்துகிறீர்கள். நாங்கள் தறியில் நெய்த புடவையை உடுத்திக் கொள்கிறோம். வழக்கங்கள், பண்டிகைகள், ஆசாரங்கள், பிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் எல்லாம் எங்களால் தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இங்கிலீஷ் பண்டிதர்களான உங்களுக்கு அவைகளை படித்துப் பார்க்க வேளை எங்கு இருக்கிறது? யாரவது ஒரு வெள்ளைக் காரன் சொன்னால் அப்போது தான் உங்கள் தாயார்களை, “பாராயண புஸ்தகம் இருக்கிறதா? என்று கேட்பீர்கள்” என்று இந்தியப் பெண்களின் பெருமையை எடுத்துச் சொன்னேன்.
பாரதியார்: பலே! ஐயர் சொன்ன பிரசங்கத்தை அப்படியே விழுங்கி விட்டிருக்கிறாயே! பரவாயில்லை.குழந்தைகளிடம் தோற்றாலும் சந்தோஷமே. குரு சிஷ்யனிடம் தோற்பது ஒரு பெருமை. அதை நம் தேசத்தில் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.