Ecce Homo (இவன் மனிதன்!)

ரெடிமேட் டைக்களைத் தூக்கி எறிந்துவிட்டு டை கட்டிக் கொள்ளும் கலையை மணிக்கணக்காகப் பழகினான். கடிகாரம் கட்ட தங்கத்தாலான இரட்டைவடச் சங்கிலி வேண்டுமென்று லக்ஷ்மி அண்ணனுக்கு கேட்டெழுதினான். ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்களுக்கு பெரிய கண்ணாடியொன்றிற்கு முன் நின்று  கொண்டு டையையும் தலை வகிடையும் சரி செய்து கொண்டான்.
பேச்சுக்கலையில் தேர்ச்சி பெறுவதற்காக பெல்லின் Standard Elocutionist என்ற பாடப் புத்தகத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் அசரீரியைப் போல் அவனுக்குள் ஒரு எண்ணம் ஒலித்தது. “ஆங்கிலத்தில் பெரிய பேச்சாளராகி எனக்கு என்னவாகப் போகிறது. நடனத்தால் அல்ல எனது ஆளுமையால் மட்டுமே நான் கனவானாக முடியும். வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கும் பணத்தை நானிங்கு ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு படிக்க வந்தேன், அதை ஒழுங்காகச் செய்வதே என் கடமை” என்று தனக்குத் தானே புத்திமதி கூறிக் கொண்டான்.