நவ திருப்பதிகளுள் ஒன்றான ‘அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன்’ திருக்கோவிலுக்கு வந்து சென்ற இனிய நினைவுகளுடன் தென்திருப்பேரையில் நவ கைலாய புதன் ஸ்தலத்தில் வண்டியில் காத்திருந்தோம்…
அழகான கோவில் பிரகாரம். அரசமர பிள்ளையார். நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அலங்கரிக்க பெரிய கோவில் மதிற்சுவர்கள். கோவில் திறந்தவுடன் உள்ளே சென்று விட்டோம். ஏழாவது கைலாய தலத்தில் தாமரை பீடத்தின் மேல் கைலாச நாதர். அம்மன் அழகிய பொன்னம்மை தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகங்கள், முருகன் சந்நிதிகளும், கொடி மரமும் பலி பீடமும் உண்டு. நவ கைலாயங்களில் இரண்டாவது பெரிய கோவில்.
..அருகே அங்கன்வாடி அரசுப் பள்ளியில் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளந்தி குழந்தைகள் கூட்டமாகச் செல்லும் ஆடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தார்கள். மழையைக் கண்டதும் அகவும் மயில்கள் அந்த இடத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன.
