கவலைதோய்ந்த காவிரி நினைவுகள்

ஆற்றுக்குச் செல்லும் பாதை நெடுக இருபுறமும் தென்னை மரங்கள், வாழை, கரும்பு. அதிஷ்டானத்தைக் கடந்துதான் சென்றோம். மயிலின் அகவல் திரும்பியபக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரே இரண்டு மணல் லாரிகள் கடந்து போயின. எச்சரிக்கைப் பலகை இங்கு ஆற்றில் ஆழம் அதிகம், சுழல் உள்ள பகுதி, பலபேர் பலியான இடம் என்று பயமுறுத்தியது. ஆறு எங்கு ஆரம்பிக்கிறது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாணல் மண்டிக்கொண்டு வருகிறது. ஒரு சின்ன மணல் பள்ளம். ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்திருக்க வேண்டும். ஏறினால் மணல் மேடு. ஒரு காலத்தில் பள்ளமாகும். அங்கு ஒரு குடும்பம் திதி கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே நாணல் குச்சங்கள். மணல்மேடு மறுபடியும், மேடுதோறும் திதி முடித்துச் செல்லும் மனிதக்கூட்டம் விட்டுச் செல்லும் கழிவுகள், வாழைப்பழம், இலை, காய்ந்த பூ இத்யாதி…  பக்கத்தில் சின்ன நீர்த்திட்டு.ஆங்காங்கே வெள்ளித் தகடுகளாக சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது காவிரி.