சங்க இலக்கியங்களும் இதை உயிரோட்டத்துடன் பதிவு செய்துள்ளன. மதுரைக்காஞ்சி பாண்டிய நாட்டின் செல்வத்தைப் புகழ்ந்து, கொற்கைக் கடலில் கிடைக்கும் முத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றிலும் கடல், சிப்பி, முத்து, பரதவர் வாழ்க்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. முத்து என்பது தமிழரின் பொருளாதார வளத்தையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வியலையும் பிரதிபலிக்கிறது. கடல் கொடுக்கும் செல்வமான முத்து உருவாக பல ஆண்டுகள் தேவை. ஆயிரக்கணக்கான சிப்பிகளில் மிகச் சிலவற்றில்தான் இயற்கையாக முத்து உருவாகிறது. அதனால் அது அரிய பொருளாகக் கருதப்பட்டது. முத்தை எடுப்பதற்காக சிப்பியைத் தேடி கடலுக்கு அடியில் செல்ல வேண்டும். சங்க காலத்துத் தமிழர் இதற்காக உயிரையே பணயம் வைத்தனர்.
