முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
