புளியந்தொக்கு

சில நொடிகள் நின்று யோசித்தவன் ஒற்றையடிப் பாதை நோக்கி நடக்கத் தொடங்கினான். மகேஷும் செண்பாவும் ஓட்டமும் நடையுமாய் அவனை பின் தொடர்ந்தார்கள். முட்புதர்கள் தாண்டி தெருவைக் கடந்து மூவரும் செண்பாவின் வீட்டை அடைந்தார்கள். முத்து படிக்கட்டிலிருந்தபடியே மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான். அவன் அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். உதட்டின் முன் ஆட்காட்டி விரலை வைத்து செண்பாவிடம் சப்தம் ஏழாமல் பின் தொடருமாறு சைகை செய்தான். வீட்டின் பக்கவாட்டிலிருந்த அம்மிக் கல் அருகே சென்றவன் காற்சட்டைப் பையிலிருந்த புளியங்காய்களை எடுத்தான்.