ச. சக்தி அழகு – கவிதைகள்

அம்மாவின் உருவத்தை
ஒரு பூச்செடியாய் வரைந்து பார்க்கிறேன்
உடல் முட்களான போதும் உழைப்பு
எனக்கான வறுமையை
போக்கும் பூத்து குலுங்கும் அதிசயப் பூ
நான் போகும் வழியெங்குமாய் நின்று பூச்செண்டாய் வழியனுப்பி வைக்கிறது
ஆணிவேராய் ஊன்றி
தழைத்திருக்கும் அம்மாவின் நிழல்


அவ்வளவு கூட்டத்திற்கு
மத்தியிலும் எளிதாய்
என்னை கண்டுபிடித்துவிட்டாய் நீ.
பிறகு எதாவது எனக்காக வைத்திருக்கிறாயா
உன் மன சோலைக்குள்,
அகல விரியும்
இந்த இரவுக்குள்
நீயும் நானும்
ஒன்றோடு ஒன்றாய் பின்னிப்பிணைந்திடவே வேண்டுகிறேன் கடவுளிடம்
இன்னும் கொஞ்சம்
மிச்சம் மீதியாக
என் வசம் கையிலிருக்கிறது விடியற்காலை
பூக்க காத்திருக்கும் சூரியனின்
ஒளிக்கதிர்களாய் உன் முகம் ‌


அரசமர நிழல்
தனிமையில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையின் நிழல்
ஆசைகளற்ற ஒரு புத்தனின் சாயல்


கோடைக்காலத்தில்
ஓர் மரம் உதிரும்
சில சருகுகளைப் போல
உதிர்ந்து கிடக்கிறது
உனது பேரன்பு
ஆம் வாசனையற்று கிடக்கிறது
என் வழிக்கான‌
உனது பாதைகள்
நீ இல்லாத
வாழ்க்கையெனும்
போர் வழியில்



Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.